Monday, September 16, 2013

பேசாமொழி 10வது இதழ் (செப்டம்பர்) வெளிவந்துவிட்டது..

பேசாமொழி 10வது இதழ் (செப்டம்பர்) வெளிவந்துவிட்டது..

படிக்க: http://pesaamoli.com/index_content_10.html

நண்பர்களே நல்ல சினிமாவிற்காக மாதந்தோறும் வெளிவரும் பேசாமொழி இணைய இதழ் செப்டம்பர் மாத இதழ் வெளிவந்துவிட்டது. இது 10வது இதழ். ட்ராட்ஸ்கி மருதுவின் அனிமேசன் பற்றிய தொடர், யமுனா ராஜேந்திரனின் திராவிட சினிமா பற்றிய கட்டுரை, தியடோர் பாஸ்கரனின் மீதி வெள்ளித் திரை நூலில் இருந்து ஒரு கட்டுரை, லெனின் விருது நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் பேசியதன் சென்ற மாத தொடர்ச்சி, தமிழ் ஸ்டுடியோவின் 57வது குறும்பட வட்டம் பற்றிய பதிவு, செவ்வகம் இதழில் வெளிவந்த கோவா திரைப்பட திருவிழா பற்றிய கார்த்தியின் கட்டுரை, மலையாள மௌனப்படமான மார்த்தாண்ட வர்மா பற்றிய குறிப்புகள் என இந்த மாதம் அருமையான கட்டுரைகளுடன் பேசாமொழி வெளிவந்திருக்கிறது.

பேசாமொழி இணையத்தில் வெளியாகும் மாதம் இதழ். இந்த இதழை இணையத்தில் இலவசமாக படிக்கலாம்.

படிக்க: http://pesaamoli.com/index_content_10.html

Wednesday, July 17, 2013

முகனூலில் நான் எழுதும் கட்டுரைகளின் இணைப்பு.

முகனூலில் (Facebook) தொடர்ந்து நான் எழுதி வரும் சினிமா தொடர்பான எனது கட்டுரைகளை நண்பர் உகேந்திரன் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறார். கீழ்க்காணும் இந்த தளத்தில் நண்பர்கள் என்னுடைய சினிமா தொடர்பான கட்டுரையை படிக்கலாம்.

http://thamizhstudioarunfbpostsarchive.wordpress.com/

பேசாமொழி 8வது இதழ் வெளிவந்துவிட்டது.

பேசாமொழி 8வது இதழ் வெளிவந்துவிட்டது.



பேசாமொழி 8வது இதழ்: http://pesaamoli.com/index_content_8.html

நண்பர்களே பேசாமொழி 8வது இதழ் வெளியாகியுள்ளது. பேசாமொழி முழுக்க முழுக்க இணையத்தில் இலவசமாக படிக்க கிடைக்கிறது. தமிழில் நல்ல சினிமாவுக்கான மாத இணைய இதழ் பேசாமொழி. இந்த இதழில், மணிவண்ணன் பற்றி மருதுவின் நினைவுகள், யமுனா ராஜேந்திரனின் விஸ்வரூப விமர்சன விமர்சனங்கள், ராஜேஷின் ஷாட் பை ஷாட் மொழியாக்கம், செழியனின் பேசும்படம் குறித்த தினேஷின் திறனாய்வு, ஜெயச்சந்திர ஹஸ்மியின் ராமையாவின் குடிசை ஆவணப்படம் பற்றிய கட்டுரை, ஆவணப்பட இயக்குனர் அமுதனின் நேர்காணல், நல்ல சினிமா எது என்பது குறித்த தியடோர் பாஸ்கரனின் உரை, பந்தய புரவிகள் படம் குறித்த வருணன் விமர்சனம், ரிஷானின் சிங்களப் படம் குறித்த கட்டுரை, பிச்சைக்காரனின் கன்னடப் பட விமர்சனம், தமிழ் ஸ்டுடியோவின் 55 வது குறும்பட வட்டத்தில் நிகழ்ந்தவை என முழுக்கு முழுக்க நல்ல சினிமாவுக்கான அடித்தளமாகவே இருக்கிறது.

அவசியம் படியுங்கள்: http://pesaamoli.com/index_content_8.html

பேசாமொழி முழுக்க முழுக்க இணையத்தில் (internet) இலவசமாக படிக்க கிடைக்கிறது.

Monday, May 27, 2013

பேசாமொழி - முள்ளும் மலரும் சிறப்பிதழ்....


பேசாமொழி - முள்ளும் மலரும் சிறப்பிதழ்....
நண்பர்களே பேசாமொழி இணைய மாத இதழ் (ஆறாவது இதழ்) வெளிவந்துவிட்டது. இந்த இதழ் முள்ளும் மலரும் திரைப்படத்திற்கான சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. 

படிக்க: http://pesaamoli.com/index_content_6.html

படித்துவிட்டு நண்பர்கள் தங்கள் கருத்துகளை பதியவும். இது முழுக்க முழுக்க, இணையத்தில் வெளிவரும் இலவச இதழ். அச்சு வடிவில் வெளிவருவதாக நினைத்துக் கொண்டு நிறைய நண்பர்கள் படிக்காமல் விட்டுவிடுகிறார்கள். மேலே உள்ளே இணைப்பை சொடுக்குங்கள். நீங்கள் இதழை இலவசமாக படிக்கலாம்.

மகேந்திரனின் ஓவியத்தை மிக சிறப்பாக வரைந்துக் கொடுத்த ஓவியர் சீனிவாசனுக்கு பேசாமொழியின் நன்றிகள் பல.

Wednesday, May 22, 2013

பேசாமொழி - முள்ளும் மலரும் சிறப்பிதழ்....

நண்பர்களே பேசாமொழி இணைய மாத இதழ் (ஆறாவது இதழ்) வெளிவந்துவிட்டது. இந்த இதழ் முள்ளும் மலரும் திரைப்படத்திற்கான சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.

படிக்க: http://pesaamoli.com/index_content_6.html

படித்துவிட்டு நண்பர்கள் தங்கள் கருத்துகளை பதியவும். இது முழுக்க முழுக்க, இணையத்தில் வெளிவரும் இலவச இதழ். அச்சு வடிவில் வெளிவருவதாக நினைத்துக் கொண்டு நிறைய நண்பர்கள் படிக்காமல் விட்டுவிடுகிறார்கள். மேலே உள்ளே இணைப்பை சொடுக்குங்கள். நீங்கள் இதழை இலவசமாக படிக்கலாம்.

மகேந்திரனின் ஓவியத்தை மிக சிறப்பாக வரைந்துக் கொடுத்த ஓவியர் சீனிவாசனுக்கு பேசாமொழியின் நன்றிகள் பல.


Monday, April 22, 2013

பேசாமொழி 5 வது இதழ் வெளிவந்துவிட்டது....

பேசாமொழி 5 வது இதழ் வெளிவந்துவிட்டது....



நண்பர்களே மாற்று சினிமாவுக்கான மாத, இணைய இதழான பேசாமொழி ஏப்ரல் மாத இதழ் (இணையத்தில்) வெளிவந்துள்ளது. மிக முக்கியமான பல கட்டுரைகளை அடங்கியுள்ளது. நண்பர்கள் அனைவரும் அவசியம் படித்துவிட்டு தங்கள் கருத்தை பகிரவும். 





Friday, April 12, 2013

வலி - சிறுகதை



"இப்ப எனக்கு வேண்டாம்"...

"அதான் ஏன் னு கேக்குறேன் ப்ரியா"..

"எல்லாத்துக்கும் காரணம் கேட்காத கார்த்திக்", இப்ப எனக்கு வேண்டாம் நா வேண்டாம்..விட்டுடேன்"..

உதடுகள் இரண்டும் இடதுபக்கம் மேலேறி துடிக்க, வெற்றுப் பார்வை ஒன்றை வீசிவிட்டு நகர்ந்தான், கார்த்திக்.

வலதுபக்கம் ஒருக்களித்து, வலது கையை தலைக்கு அணையாக வைத்து, கால்கள் இரண்டையும் நெஞ்சான்கூட்டிற்கு அருகில் மடக்கிவைத்து படுக்கையின் ஒருமூலையில் ஒதுங்கிக் கிடந்தான்.

அவன் படுத்துக் கிடப்பது, குழந்தை கருவாக, கருப்பையில் ஒடுங்கி இருப்பது போல இருந்தது அவளுக்கு.

அவனருகில் வந்து, தலையை கோதி பின்னந்தலையில் முத்தமிட்டு, படுக்கையின் இன்னொரு மூலையில் அமர்ந்துக் கொண்டாள்.

நேற்றைய இரவு, இன்று போல் அவளுக்கு இல்லை. அவனுக்கு அவளும், அவளுக்கு அவனுமாக வாழ்வின் பின்னிரவு ரகசியங்களை கடந்து பொழுது விடிவது கூட தெரியாமல் கொஞ்சிப் பேசிக்கொண்டிருந்த உதடுகள், உறங்காத விழிகள் இரவின் உஸ்ணத்தில் கூட சிவக்காமல் கதை பேசிய அந்த இரவு, இன்று அவளுக்கு மிச்சம் விட்டு சென்றிருப்பது அழுகையை மட்டுமே.

பெண்களின் அழுகைக்கு மட்டும் எப்போதும் சில விசேஷ குணங்கள் உண்டு. அழுவது யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்து அவர்கள் அழுவது போல் இருந்தாலும், அழுகையின் அந்த மெல்லிய சப்தம், எந்த ஆணையும் உறங்கவிடாது.

"ப்ரியா, எதுக்கு இப்ப அழுதுக்கிட்டு இருக்க", அரைத்தூக்கத்தில் தட்டுத் தடுமாறி அவர்களுக்கு இடையேயான தூரத்தை கடக்கிறது, அவனது வார்த்தைகள்.

மெல்லிய அந்த சப்தத்தத்தை நிறுத்திவிட்டு, பட்டும்படாமல் அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, இடதுபக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

கண்களை அகலவிரித்து, மூச்சை முழுவதுமாக உள்ளே இழுத்து, அடுத்து நொடியில் வெளியேற்றினான். மூச்சு வெளி ஏறுவதற்குள், அவர்களுக்கிடையேயான தூரத்தைக் கடந்திருந்தான் கார்த்திக்.

"ப்ரியா... ப்ரியா".... அடுத்த முறை நிறுத்தி அழுத்தம் கொடுத்தான், 'ப்ரியா',

வலது கையை மட்டுமே லேசாக அசைத்தாள். திரும்ப மாட்டேன், நீ பேசு, அதை கேட்கிறேன் என்பதாக இருந்தது அவளது அந்த அசைவு.

"இதென்ன ப்ரியா, சின்ன புள்ள மாதிரி, கல்யாணம் ஆனா எல்லாருக்கும் நடக்கிறதுதானே, நாம என்னவோ பெரிய தப்பு பண்ணிட்டா மாதிரி"...

அவன் முடிப்பதற்குள், எழுந்து தன் கால்களை மடக்கி, தலைக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.

"இங்க பார் ப்ரியா, வேனுங்க்ரதுக்கு நான் ஆயிரம் காரணம் சொல்லிட்டேன், உனக்கு ஏன் வேண்டாம்  னு ஒரு காரணம் சொல்லு, அப்புறம் நாம் அத பத்தி டிஸ்கஸ் பண்ணலாம், இல்ல நா ஒழுங்கா வாய மூடிட்டு படு"..

அவன் மடிக்குள் தலை புதைத்து, உடைந்து அழுதாள் ப்ரியா.

"ப்ளீஸ், என்ன புரிஞ்சிக்கோ கார்த்திக்..எனக்கு இப்ப வேண்டாம்",

அக்ஷயா அக்க டெலிவரி அப்ப நான் கூடவே இருந்தேன்.... அவங்களோட அந்த வலி, இன்னமும் என் கண்ணுல இருக்குது கார்த்திக், வலி தாங்காம பல்லக் கடிச்சி, பல்லும் உடைந்து, ரத்த ரத்தமா, வலியால உயிர் போற அளவுக்கு துடிச்சதும், கதறி அழுததும், என்னால இன்னமும் மறக்க முடியல கார்த்திக், கடைசியா அவங்க செத்துப் போய்ட்டாங்க தெரியுமா?

"அடச்சீ, லூசு, நான் கூட ஏதோ பெரிய பிரச்சனை னு நினைச்சு பயந்துப் போயிட்டேன், இவ்ளோதானா?, இந்த உலகத்துல அக்ஷய அக்கா மட்டும்தான் புள்ளப் பெத்துக்கிட்டாங்களா?, போன வாரம்தான, என்னோட ப்ரெண்ட் ரவிக்கு குழந்த பொறந்தாச்சி.. நீயும், நானும் போய் பாத்துட்டுதான வந்தோம்", இந்த உலகத்துல, நிமிசத்துக்கு லட்சக்கணக்கான பெண்களுக்கு குழந்த பொறந்துக்கிட்டே தான் இருக்கு, அவங்க எல்லாம் என்ன உன்ன மாதிரி பயந்துக்கிட்டா இருக்காங்க... அக்ஷய அக்கா லட்சத்துல ஒன்னு, லட்சம் பேர்ல ஒருத்தவங்களுக்குதான் அப்படியெல்லாம் நடக்கும்",

"நான் அந்த லட்சத்துல ஒருத்தியா இருந்தா", அவன் முடிப்பதற்குள் அவள் இடைமறித்தாள்..

"ப்ரியா..., உன்கிட்ட பேசி பிரயோஜனம் இல்ல, எனக்கு குழந்த வேணும்..அவ்ளோதான். நாளைக்கி டாக்டர்கிட்ட செக்-அப் க்கு போறோம்",

படுக்கையின் அதே இடத்துக்கு மீண்டும் அவன் தாவினான். அவள் அவன் மீது வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள் . பெரிய கல்லில் சிக்குண்ட சின்ன எறும்பின் தலைபோல், அவள் மனம் வதைப்பட்டுக் கொண்டிருந்தது.

இந்த சமூகத்தில் பிள்ளை பெறாத ஆண் மகனுக்கு இருக்கும் இடம் அத்தகைய சுவாரசியமானது அல்ல, அது அறுவறுக்கத்தக்க ஒரு இடம். இந்த உலகில் ஆண்களை அவமானப்படுத்த, அவனை நிர்கதியாக்க எல்லாருக்கும் ஒற்றை சொல் போதும், அது, "நீயெல்லாம் ஒரு ஆம்பிள்ளையா".

அந்த ஒற்றை சொல் எங்கே தன்னை நோக்கி திரும்பிவிடுமோ என்கிற பதற்றமும், இப்போது கலைத்துவிட்டால், மீண்டும் அவளுக்கு கருத்தரிக்குமோ, இல்லையோ என்கிற கேள்வியும் சேர்ந்து கார்த்திக்கின் மனதுக்குள் உறுத்திக் கொண்டிருந்தது.

கல்யாணமாகி ஏற்கனவே ஒரு வருடம் கடந்துவிட்டது....

"அப்புறம், ஏதாவது நல்ல சேதி உண்டா", என்கிற கேள்வியே சென்ற வாரம் வரை அவனை சுற்றி சுழன்றடித்துக் கொண்டிருந்தது. இன்னும் இல்லை என்று சொல்லும் அந்த கணத்தில், அடுத்த முனையில், எழும் கேள்விகளை விட, அவர்களின் மனதில் எழும் கேள்விகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்கிற நினைப்புதான் அதுவரை அவனை வாட்டிக் கொண்டிருந்தது.

சென்ற வாரம்தான், அத்தகைய கேள்விகளில் இருந்து விடுபட்டு, ஒரு சுதந்திரப் பறவையாக, அவன் தன்னை உணரத் தொடங்கினான். ஆனால் இப்போது ப்ரியாவின் இந்த பிடிவாதம், அவனுக்குள் ஏற்படுத்தியிருக்கும் பதற்றத்தை, அவள் பயத்தில் இருக்கும் நியாயத்தை அவன் உணர்ந்துக் கொள்ளவோ, அதுப் பற்றி விவாதிக்கவோ தயாராக இல்லை.

கல்யாணம் ஆன புது மனத் தம்பதிகளை நோக்கி சமூக அங்கங்களில் இருந்து எழும் கேள்விகள் மிக மொன்னையானவை. அது நெஞ்சை குத்து குத்தி கிழிப்பதற்குள், உயிரை விட்டு விடலாம் போலிருக்கும். கூர்மையான கேள்விகளாக இருந்தால் கூட, அது செலுத்தப்பட்ட அடுத்த கணத்தில் நெஞ்சை கிழித்து, உயிரை பிரித்து நமக்கு சுதந்திரம் கொடுக்கும். ஆனால் இந்த மொன்னையான கேள்விகள், வாழ்நாள் முழுக்க, ஒவ்வொரு கணமும் நமது நெஞ்சைக் கிழித்துக் கொண்டே இருக்கும். அந்த ரணம் ஒருநாளும் ஆறாது.

ஆனால் பெண்கள் எப்போதும், தங்களுக்கு விருப்பமானவைகளை தெரிவு செய்ய கடைசி வரை போராட நினைக்கிறார்கள். தங்கள் அக உலகில் யாரையும் அனுமதிக்காமல், அதன் புனிதத்தை இறுதி வரை அவர்கள் அரண் போல் காத்து நிற்கிறார்கள். ஆனால் சமூகத்தில் ஆண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இடம், வசதி, சுந்ததிரம் எல்லாம் அந்த உறுதியான அரனை கூட சில நொடிகளில் அழித்து, பெண்களின் அக உலகில் நுழைந்து அவர்களை நிலைகுழைய செய்கிறார்கள்.

இப்போது கார்த்திக் செய்திருப்பதும் அதைதான். ப்ரியா தன்னுடைய அக உலகின் ரகசியங்களை, அழகை, புனிதத்தை சமூக விழுமியங்களுக்காக இழக்கப்போகிறாள். இழப்பதை காட்டிலும் கொடுமையானது, இழந்து விடுவோமோ என்கிற பயம். இப்போது அவள் முழுக்க முழுக்க பயத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறாள்.

நான்குக்கு நான்கு என்கிற வரிசையில் போடப்பட்டிருக்கும் நாற்காலியில் இரண்டாவது வரிசையின் முதல் ஆளாக கார்த்திக் உட்கார்ந்திருந்தான். மிஸ்டர் செந்தில், மிச்செஸ் ரேவதி என்று அவனுக்கு முந்தைய வரிசையில் காத்திருப்பவர்களை நர்ஸ் அழைத்துக் கொண்டிருக்கும்போது, அவன் உதடுகளை பிதுக்கி இன்னும் எவ்வளவு நேரம் ஆகுமோ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, ப்ரியாவை பார்த்தான்.

அவள் வார்த்தைகள் அற்றவளாய், எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளிடம் பேசுவதற்கு அவனுக்கும் ஒன்றுமில்லை, தன்னுடைய செல்போனை நோண்டிக் கொண்டிருந்தான்.

தன் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட பின்னர் குறைந்தபட்சம், தனக்கு ஆதரவாக ஒரு வார்த்தையாவது பேசுவானா என்று ப்ரியா, அவனை அடிக்கடி திரும்பிப் பார்த்ததை அவன் மட்டுமல்ல, மருத்துவமனை கேமராவும் கூட கவனித்திருக்க முடியாது. அத்தனை மெல்லிய பார்வை அது.

"மிஸ்டர் கார்த்திக்"..,நர்சின் குரலுக்காகவே காத்திருந்தவன் போல் சட்டென நகர்ந்தான்.

"குட் மார்னிங் டாக்டர்",

"எஸ்.. கார்த்திக்",

"ஹவ் இஸ் லைப் கோயிங் ஆன்",

ஃபைன் டாக்டர், ஆனா ப்ரியா தான் எதை எதையோ மனசுல போட்டு குழப்பிக்கிட்டு, என்னையும் குழப்பிட்டிருக்கா,

என்ன ஆச்சு ப்ரியா,

இனி நான் பேச ஒன்றும் இல்லை, நீயே சொல், என்பது போல கார்த்திக்கை பார்த்தாள், ப்ரியா.

ஒன்னும் இல்ல டாக்டர், என்று அவளின் பயம் குறித்து பேசிக்கொண்டிருந்தான். டாக்டர் உமா, அவன் பேச்சின் சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்ற அவனுடைய குடும்ப / சமூக கேள்விகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு ப்ரியாவையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அவன் முடித்தான்.

நீங்க கொஞ்ச நேரம் வெளியில இருங்க, கார்த்திக்....நான் ப்ரியா கிட்ட பேசிக்கிறேன்..

நல்லா சொல்லுங்க டாக்டர், வெளியில் செல்லும் ஒரு நொடிக்குள் ஒரு வார்த்தையை உதிர்த்துவிட்டு சென்றான்.

"ப்ரியா, உன்னோட பயம் எனக்கு புரியுது", என்கிற ஒற்றை வார்த்தையில் அவள் தலை நிமிர்ந்து டாக்டரை பார்த்தாள்.

அவள் பயத்தின் மீது தெளிக்கப்பட்ட மாய வார்த்தை இது. என்னை புரிந்துக் கொள்ளவும் ஒரு ஜீவன் இருக்கிறது, என்கிற அகந்தையில் தோன்றிய வசீகரப் பார்வை அது.

"ஆனால் இந்த சமூகமும், ஆண்களும் ஒருநாளும் பெண்களின் வலியை புரிந்து கொள்ளவே மாட்டார்கள், உனக்கு வலித்தாலும், வலிக்க வில்லை என்று சொல்வதைத்தான் எல்லா ஆண்களும் விரும்புவார்கள். உன்னுடைய ஆற்றமையையோ, அழுகையையோ வெளிப்படுத்த இந்த உலகத்தில் உனக்கு எவ்வித சுதந்திரமும் இல்லை, ஆண்கள் எப்போது அதற்கான வெளியை உனக்கு உருவாக்கி கொடுக்கிறார்களோ, அப்போதுதான் நீ அழ வேண்டும்... உன் வலியை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்"..... நிற்காமல் தொடர்ந்தது டாக்டரின் பேச்சு.

சார், என்று சிஸ்டர் முடிப்பதற்குள் கார்த்திக் உள்ளே நுழைந்துவிட்டான்.

"என்ன டாக்டர், எல்லாம் ஓகே வா?",

டாக்டர் ப்ரியாவை பார்த்தார், அவள் முகத்தில் பயத்தின் சுவடு கொஞ்சம் அகன்று இருந்தது. அது பயம் அழிக்கப்பட்டதின், அவளது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதின் வெளிப்பாடு அல்ல, இனி இதையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்கிற, இயலாமையின், திணிக்கப்பட்ட நம்பிக்கையின் வெளிப்பாடு.

ரொம்ப தேங்க்ஸ், டாக்டர்....

கார்த்திக்கும், ப்ரியாவும் அந்த அறையில் இருந்து வெளியேறினார்கள்.

"கார்த்திக், ஒரு நிமிஷம்",

சொல்லுங்க டாக்டர் என்பது போல், திரும்பிப் பார்த்தான்.

"ப்ரியாவோட டெலிவரி அப்ப நீங்க, அவங்க கூட இருக்கணும்".

Sure, டாக்டர். அதுல என்ன இருக்கு?

கார்த்திக், கட்டைவிரலை தூக்கி நன்றி தெரிவித்தான். டாக்டர் அவனைப் பார்த்து சிரித்தார்.

அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை, அந்த சிரிப்பின் மறைந்திருக்கும் அர்த்தம் என்னவென்று...

டாக்டர் உமாவைப் பார்த்து, இருகண்களையும், ஒரு நொடியின் பாதியில் மூடி திறந்து புன்னகைத்தார். அதுதான், நான் உயிர்த்திருப்பேன் என்கிற ப்ரியாவின் நம்பிக்கைக்கான ஒளிக்கீற்று.

ஆண்களுக்கு மட்டுமின்றி, குழந்தைகள், பெண்கள் என எல்லாருக்குமே, தங்கள் எண்ணம் நிறைவேறிய பின்னர், அதை அதுவரை மறுத்து, பின்னர் ஏற்றுக் கொண்டவர்கள் மீது அலாதியான காதல் உருவாகி விடும். காதலை எதிர்த்து, பின்னர் சரி என்று சொல்லும், எல்லா பெற்றோர்கள் மீதும், பிள்ளைகள் கடைசி வரை காதலோடுதான் இருப்பார்கள்.

பிரியா, மறுத்து பின் ஏற்றுக் கொண்டதால், அவள் மீதான கார்த்திக்கின் காதல் அமாவாசைக்கு பின்னர் தோன்றும் நிலா போல் வளர்ந்துக் கொண்டே போனது. தன்னுடைய ஆண்மைக்கான அடையாளம் தரப்போகிறவள், சமூக கேள்விக் கணைகளில் இருந்து தனக்கு விடுதலை தரப் போகிறவள், எல்லாத்தையும் தாண்டி, ஒரு உயிரை எனக்காக ஈன்று எடுக்கப்போகிறவள் என்கிற எண்ணங்கள் அவனை தினசரி வாழ்வைத் தாண்டி, ஒருவித மகோன்னத நிலைக்கு தள்ளிக் கொண்டே சென்றது.

குழந்தை அவள் வயிற்றுக்குள் வளர்ந்துக் கொண்டே இருந்தது. அவள் பயம் குழந்தையை விட வேகமாக வளர்ந்தது. ஆனால் இனி ஒன்றும் செய்வதற்கு இல்லை, தன் மரணம் இன்னொரு உயிரை கொடுக்கப்போகிறது என்கிற நம்பிக்கை மட்டுமே அவளுக்கு இப்போதைக்கு ஒரே ஆறுதல்.

இன்னும் பத்து நாளில் டெலிவரி ஆகிடும்...என்கிற டாக்டரின் வார்த்தை, அடுத்த நாளே, பொய்க்கப் போகிறது என்பதை டாக்டர் உட்பட யாருமே அறிந்திருக்கவில்லை.

அம்.................மாஆஆஆ என்று அலறித் துடித்தாள், ப்ரியா...

எத்தனையோ பேர், எத்தனையோ விதமான தங்களின் உடல் பிரச்சனைகளுக்கு அங்கே கூடி இருந்தாலும், அவர்கள் யாரும் கார்த்திக்கின் கண்களுக்கு தெரியவில்லை. மருத்துவமனை முழுவதிலும் அவன் மனைவிக்காக மட்டுமே எல்லாரும் உடனடியாக செயல்படவேண்டும் என்கிற அளவுக்கு அவன் பதறிக் கொண்டிருந்தான்.

அவள் அலறல் மருத்துவமனை எங்கிலும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. பிரசவ அறையில் இருந்த கார்த்திக், அவள் அலறல் சப்தம் தாங்காமல் வெளியேற முற்பட்டான்.

"கார்த்திக், எங்க போறீங்க.. உள்ளேயே இருங்க", லேசாக அதட்டினார் டாக்டர்,

"இல்ல டாக்டர், என்னால தாங்க முடியல, அதான்"....

நீங்க உள்ளதான் இருக்கணும், என்று உத்தரவிடுவது போல் இருந்தது டாக்டரின் பார்வை.

அவன் கால்கள் நகர்வதை நிறுத்தின. அவள் அலறல் அவன் இதயத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டே இருந்தது.

பற்களை கடித்து, வயிற்றை கீழ் நோக்கி தள்ளி, முகத்தை திருப்பி, ஐயோ, அம்ம்ம்மாஆஆஆ.... என அவள் அலறிக் கொண்டிருந்தாள். டாக்டர் மட்டுமே அவளுக்கு ஏதோ தகவலை கொடுத்துக் கொண்டே இருந்தார். ப்ரியாவின் வலியில் அவளால் எதையும் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை என்றாலும், டாக்டரின் இருப்பு, அவளுக்கு எங்கேயோ நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருந்தது.

"ப்ரியா, இன்னும் கொஞ்சம் அழுத்தி தள்ளுமா.... உன்னால முடியும்..."

"முடியல டாக்டர்.. தயவு செய்து ஏதாவது பண்ணுங்க.. எனக்கு உயிரே போயிடும் போலிருக்கு" தெளிவில்லாமல் இருந்து ப்ரியாவின் பேச்சு, இருந்தாலும் உயிரே போயிடும் போலிருக்கு என்கிற வார்த்தைகள் மட்டும் கார்த்திக்கின் காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்தது.

அவன் இதயம் வலுவிழக்க ஆரம்பித்தது,

"ஐயோ, டாக்டர் ப்ளீஸ், ஏதாவது பண்ணுங்க", ப்ளீஸ் டாக்டர்.. ப்ளீஸ் டாக்டர்.. அவள் அலறலைக் காட்டிலும் கார்த்திக்கின் அலறல் அதிகமானது.

அவனிடம் வார்த்தைகள் வற்றிப் போய், கண்கள் கண்ணீரால் உணர்வுகளை வெளிப்படுத்த ஆரம்பித்தது.

ஆஅ....அம்ம்மா...ஐயோ.. டாக்டர்... என அலறிய அவள் உதடுகள், அடுத்தடுத்து தன் வலியைக் கூட வெளிப்படுத்த முடியாமல், சோர்ந்து போக தொடங்கியது.. பிரசவ அறை முழுவதும் வலி, வலி, வழியால் மட்டுமே நிறைந்திருந்தது.

அவன் ஏதோ பெரும்பாவம் செய்தது போல், திக்கற்று நின்றுக் கொண்டிருந்தான்.

"வேண்டாம் கார்த்திக்", எனக்கு பயமா இருக்கு", என்று அவள் எப்போதோ சொன்ன வார்த்தைகள், அவன் மனம் முழுக்க இடைவெளியில்லாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது.

அவள் கேட்டுக்கொண்டபடி, குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்டிருக்கலாமோ என்று மனம் இன்னொரு திசை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. "இந்த சமூகம் என்ன பெரிய இதுவா?", என்னோட ப்ரியாவுக்கு ஏதாவது ஆச்சுனா, திரும்ப இந்த சமூகம் அவள எனக்கு திருப்பிக் கொடுக்குமா?", என்கிற கேள்விகளையும் தாண்டி, அவன் கண்கள் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

அழுத்திப் பிடித்துக் கொடிருந்த நர்ஸ்களின் கைகளை மீறி, அவள் உடல் திமிறிக் கொண்டிருந்தது.

"கொலைகாரப் பாவி", உனக்கு என்னடா துரோகம் பண்ணேன்", அப்பவே வேண்டாம் னு சொன்னேன் ல, என்று கேட்பது போல், அந்த அலறலும், திமிறலும் அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது. அவளின் இந்த பார்வைக்கு, சமூகத்தின் அந்த மொண்ணை கேள்விகளையே ஏற்றுக் கொண்டிருக்கலாம் போல் இருந்தது அவனுக்கு.

எத்தனை அன்பான மனைவி இவள், ஒருநாளும் அவள் இல்லாத வாழ்வை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. எனக்கு அவள் மட்டுமே போதும், கடவுளே, என் மனைவியை எப்படியாவது எனக்கு திருப்பிக் கொடு" என்று அவன் உள்ளம் முழுவதும், ஏதோ ஒரு நம்பிக்கையை நோக்கி கையேந்திக் கொண்டிருந்தது.

வலி...வலி...வலி.. அவள் கைகளை இறுகப் பற்றிக் கொண்டிருந்த, நர்ஸ்களின் முகமும், மாறிக் கொண்டே இருந்தது. அவர்களின் கண்கள் டாக்டரை நோக்கி திரும்பியது. இப்போதும், டாக்டர் அவளுக்கான தகவல்களை கொடுத்தக் கொண்டே குழந்தை வெளியே தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டே இருந்தார்.

எல்லா வலிமையான பிடிகளையும் மீறி, அவள் உடல் திமிறிக் கொண்டிருந்தது. தூக்கி தூக்கி அடித்தது, அவளின் சரீரம்.

முதல் முறையாக டாக்டரின் முகத்தில், ஒருவித பதற்றத்தை பார்த்தான், கார்த்திக்.

சின்ன பிள்ளை போல், உதடுகளை துருத்தி, முகத்தை இறுக்கி, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆ  என அழத் தொடங்கினான்...

ஆஆஆஆஅ..... ஐயோ, டாக்டர் என ஒப்பாரி வைப்பது போல், தேம்பி தேம்பி அழுதுக் கொண்டிருந்தான்.

ஐயோ, ஐயோ, நின்று Sustain செய்து, அழுவதற்கு கூட திராணியற்றவனாக குறுகிப் போய் ஒடிந்துப் போனான்.

கார்த்திக்... கார்த்திக்... டாக்டரின் எந்த வார்த்தைகளையும் கவனிக்காதவனாய் அழுதுக் கொண்டே இருந்தான்.

கார்.....திக்..... உறுதியான குரலில், அதட்டல் தொனியில் அழைத்தார் டாக்டர்..

Keep Quite...Control yourself... கண்களை சிமிட்டி, சில நொடிகள் அவனையே உற்றுப் பார்த்தார். அவன் சுயத்திற்கு திரும்பியது போல் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டான்.

ஆனாலும், அவனின் அழுகை சன்னமாக கேட்டுக் கொண்டே இருந்தது.

"நர்ஸ்.. நல்லா அழுத்திப் பிடிங்க", டாக்டரின் அடுத்த அதட்டல் நர்சை நோக்கி பாய்ந்தது. நர்ஸ்கள் அவளை இறுக அணைத்து, பிடி தளராமல் அவளை பற்றிக் கொண்டார்கள்.

"கம் ஆன்", ப்ரியா இன்னும் கொஞ்சம்தான்.. டாக்டர் மட்டுமே நம்பிக்கையோடு அவளிடம் பேசிக் கொண்டிருந்தார்.

ப்ரியாவின் அலறல் அவனை துரத்திக் கொண்டே இருந்தது... இரண்டு மார்புக்கு மத்தியில், நெருஞ்சி முள்ளை வைத்து அழுத்தி, கத்தியால் கீறுவது போல் இருந்தது, அவனுக்கு.

தூமை என்கிற வார்த்தையை அதுவரை கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதை பார்க்கும் வாய்ப்பை என்று பெற்றிருந்தான், அதுதான் தூமை என்று அறியாமலேயே...

டாக்டர் கை முழுக்க ரத்தம்....

"ப்ரியா...ப்ரியா... மயக்க நிலைக்கு சென்றுவிடக்கூடாது என்று அவளை நிகழ்கால சூழலில் வைத்திருக்க டாக்டர் தொடர்ந்து அவளை அதட்டும் தொனியில் கத்திக் கொண்டே இருந்தார்.

இழுத்துப் பிடித்து, அடுத்த நொடியில், அலறிய அவளின் சப்தம், மருத்துவமனை தாண்டி, உலகம் முழுக்கவே எதிரொலித்திருக்கும் போல் இருந்தது....

அந்த அலறல் கொடுத்த அதிர்வில், பித்துப் பிடித்தவன் போல், ஒ' வென கதை கதறி அழ ஆரம்பித்தான். ஐயோ, ப்ரியா, ப்ரியா.... ஐயோ...ஐயோ... அவன் அழுகை, ஓயாது.. அது ஓயவே ஓயாது...

சுயமிழந்து பைத்தியக்காரன் போல், நின்ற இடத்திலேயே சுற்றி சுற்றி கதறிக் கொண்டிருந்தான்.

ஆஆஆஆஆஆஅ.......ப்ரியாவின் இறுதிக் கட்ட அலறில், ஒடிந்து விழுந்தான் கார்த்திக்...

கதறல், கதறல், கதறல்... இயலாமை, இயலாமை என அந்த அறை முழுவதையும் அவன் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தான்.

ஒ' வென மருத்துவமனையே அதிரும் அளவிற்கு தொடர்ந்த அழுகையும், ஓலமும் ஓயாமல் தொடர்ந்தது.

துடித்தான்... துடித்தான்..துடி துடித்துப் போனான். அழுதான்..அழுதான்..அழுதுக் கொண்டே இருந்தான்.

ப்ரியாவின் அலறல் சப்தம் ஓய்ந்து சில நிமிடங்கள் இருக்கும். ஆனால் இன்னமும் அவன் அலறல் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

டாக்டர் கையில், தூமை கழித்து, அழகான குழந்தை ஒன்று வெளியேறிக் கொண்டிருந்தது. மயக்கமும் இல்லாமல், தெளிவும் இல்லாமல், இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் ப்ரியா, கார்த்திக்கை பார்த்தாள். தெளிவற்ற உருவம் ஒன்று கதறிக் கொண்டிருந்தது.

டாக்டர் லேசாக புன்னகைத்தார். குழந்தை முழுவதுமாக வெளியே வந்திருந்தது.

ப்ரியா... இங்க பார்... என்பது போல், குழந்தையைக் காட்டி, மெலிதாக புன்னகைத்தார் டாக்டர்.

ப்ரியா தன் குழந்தையை பார்த்து வலியின் கதகதப்பு ஓய்ந்துவிட்ட பெருமிதத்தில் லேசாக சிரித்தாள் ப்ரியா.

டாக்டர் இப்போது கார்த்திகைப் பார்த்து, எதுவும் பேசாமல், ஆனால் அவனைப் பார்த்துக் கொண்டே நகர்ந்தார்.

இப்போது குழந்தையின் கீச்...அழுகை அறை முழுவதிலும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

குழந்தையின் ஊடாக கார்த்திக்கைப் பார்த்தாள் ப்ரியா...

இன்னமும் அவன் கண்களில் தெரிந்தது அவளின் வலி...

Thursday, April 4, 2013

எதிர்வினை! - சிறுகதை



சித்ரா.....

தலையை துவட்டிக் கொண்டிருந்தவள், அப்படியே ஈரத்துணியில் அள்ளி சூடிக் கொண்டு ஓடினாள்.

காலையில் சீக்கிரம் டிபன் ரெடி பண்ண சொல்லி இருக்கேன் ல..

அவன் சொல்லி முடிப்பதற்குள், ஒவ்வொரு இட்லியாக அவன் தட்டில் அடுக்கி கொண்டிருந்தாள் சித்ரா.

போதும்...போதும்.. நான்கு இட்லியோடு நிறுத்திக் கொண்டான்.

அவன் இட்லியை லாவகமாக, விண்டு விண்டு உள்ளேத் தள்ளிக் கொண்டிருந்தான். மூன்று இட்லி காலியானது.

லேசாக வலதுபக்கம் சாய்ந்து, இடது புட்டத்தை கொஞ்சமாக மேல் நோக்கி தள்ளினான்.

அவள் உடனே உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வருவது போல் பாவனை செய்து ஓடினாள்.

கீச்ச்ச்ச்...என்கிற சப்தம், அப்படியும் அவள் காதுகளை எட்டியது. காலியான வயிறு என்பதால், வாயு கொஞ்சமாக வெளியேறியது போல, என்று அவன் தனக்குள் நினைத்துக் கொண்டான்.

அவள் ஏதும் அறியாதது போல், கோப்பையில் தண்ணீரை ஊற்றிவிட்டு நகர்ந்தாள்.

சித்ரா, நாளைக்கு உங்கம்மா வீட்டுக்கு போகணும் ல..

ஆம் என்பது போல் தலையசைத்தாள்.

அந்த ஒரு பவுண் மோதிரத்த போடத்தான் கூப்பிட்டு இருப்பாங்க னு நினைக்கிறேன். காலையில ரெடியா இரு போயிட்டு வந்துரலாம்.

போ..நீ போய்,  சீக்கிரம் சாப்பிட்டு விடு.. என்று சொல்லிக் கொண்டே, அலுவலகத்துக்கு தயாராக உள்ளே  சென்றான்.

இரண்டு இட்லியை எடுத்து வைத்துக் கொண்டாள். நடுவிரலையும், கட்டைவிரலையும் எடுத்து, இட்லியை லேசாக விண்டு, அதன் நுனி மட்டும் சட்னியில் படுமாறு நனைத்து உள்ளே தள்ளினாள்.

சரி..போயிட்டு வரேன்... சொல்லிக்கொண்டே அவளை தாண்டி சென்றான்.

டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... என்கிற சப்தம் கீழே தரையை இரண்டாக பிளக்கும்படி கேட்டது. பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அவன் சென்றுவிட்டான்.

குப்பை கிடங்கை கிளறிவிட்டது போல், நாற்றம் அவள் மூக்கை துளைத்தது. இரண்டு இட்லியை கூட முழுவதுமாக உண்ணாமல், அப்படியே கையைக் கழுவிக் கொண்டு எழுந்தாள். அவனுடன் கல்யாணமாகி இந்த இரண்டு வாரத்தில், ஒரு நாள் கூட முழுமையாக அவள் தன்னுடைய உணவை எடுத்துக் கொண்டதில்லை. அவனோடு உட்கார்ந்தாலும், அவன் சாப்பிட்டுவிட்டு சென்றாலும், அவள் சாப்பிடும்போது அந்த நாற்றத்தோடுதான் உறவாட வேண்டி இருக்கிறது.

அடுத்த நாள் காலை,

வாங்க மாப்ள, சாரதா........ என்று மனைவியை அழைத்தார், சித்ராவின் தந்தை, சித்ராவின் அம்மா வந்து இருவரையும் வரவேற்றாள்.

வாங்க மாப்ள, சவுக்கியமா? சிரிப்பையே அதற்கான பதிலாக சொல்லிவிட்டு நகர்ந்தான்.

சித்ரா, அம்மாவோடு உள்ளே சென்றுவிட்டாள்.

வழக்கமான அம்மாபோலவே, கணவனுடனான இல்லற வாழ்க்கை பற்றி அக்கறையாக விசாரித்துக் கொண்டிருந்தாள். அவளும் வழக்கமான மகள் போலவே, சம்பிரதாயமான பதிலை சொல்லிவிட்டு நகர்ந்துக் கொண்டிருந்தாள்.

காப்பி போட்டு அப்பாவுக்கும், கணவனுக்கும் கொடுத்துவிட்டு, அம்மாவோடு கொஞ்சம் தள்ளி அமர்ந்துக் கொண்டாள்.

சித்ராவின் அப்பா பேசிக் கொண்டிருக்கும்போது, அவளது கணவன் இடதுபக்கமாக சாய்ந்தான்.

புஷ்ஷ்ஷ்ஷ்...பெருவெள்ளத்தை அடிக்கி வைத்து, சின்ன துளை வழியாக வெளியே விட்டால், எப்படி பீச்சிக்கொண்டு அடிக்குமோ, அப்படி வெளியேறியது அவனது பெருங்குடல் வாயு..

காப்பி குடித்துக் கொண்டிருக்கும்போது, நாற்றம் குடலைப் பிடுங்கி எடுத்தது, சித்ராவின் தந்தைக்கு. ஆனால் எப்படி அதை வெளியேக் காட்டுவது என்று தெரியாமல், வெளிக்காட்டினால் மாப்பிள்ளை தவறாக நினைத்துக் கொள்வாரோ என்று நினைத்து மூச்சை அடக்கிக் கொண்டு எதுவும் நடக்காததுபோல் பேசிக் கொண்டிருந்தார் சித்ராவின் அப்பா. சித்ராவும், அவளது அம்மாவும், அடுப்படியில் ஏதோ வேலை இருப்பது போல் அங்கிருந்து அவசர அவசரமாக நகர்ந்து சென்றனர்.

என்னதான் சமாளித்தாலும், சித்ராவின் அப்பாவால், நாற்றத்தை பொறுத்துக் கொள்ள முடியவில்லை, கையை மூக்கின் மேல் வைத்து, மூக்கை தடவிக்கொடுத்தும், இரு விரல்களால் மூக்கு துவாரங்களை மூடி மூடி திறந்தும், நாற்றத்தை விரட்டிக் கொண்டே இருந்தார். அசட்டு சிரிப்பும், நமுட்டுக் கோபமும், மாறி மாறி அவர் முகத்தில் எதிரொலித்தது. கண்களை உருட்டி, முகத்தை சுருக்கி, விரித்து நவரச பாவங்களையும் காட்டிக் கொண்டிருந்தார்.

நகைச்சுவையை தூண்டும் எந்தவித உரையாடல்களும் அங்கே நடக்காதபோதும், ஆஅ..ஹா.. ஆஆ.. ஹா. என விழுந்து சிரித்துப் பேசினார் சித்ராவின் அப்பா. அப்போதாவது நாற்றம் குறையாதா என்கிற நப்பாசையில்..

ஆனால் சித்ராவின் கணவன் ஒன்றுமே நடக்காதது போல, கொஞ்சமாக மூச்சை மட்டுமே துரத்திவிட்டு, தொடர்ந்து காப்பியை பருகிக் கொண்டிருந்தான். இந்த நாற்றமெல்லாம் அவனுக்கு ஒன்றுமே இல்லை. எப்போதும் ஒன்றை உருவாக்குபவனுக்கு அதன் மூலம் பெரிய ஆபத்து வந்துவிடாது என்கிற புராண சித்தாந்தங்களை அவன் நினைவுப்படுத்திக் கொண்டே இருந்தான்.

ஏன் மாமனார், கொஞ்சம் அசாதாரணமாக நடந்துக் கொள்கிறார், ஏன் மனைவியும், மாமியாரும் அவசர அவசரமாக உள்ளே சென்றார்கள் என்கிற எந்த கேள்விகளும் அவனுக்குள் எழாதது போல, அவன் தொடர்ந்து காப்பியின் இறுதி சொட்டு வரை பருகிக் கொண்டிருந்தான்.

உவ்வே....உவ்வே.. குடலே வெளியில் வந்து விழுந்தது போல, யாரோ வாந்தி எடுக்கும் குரல் கேட்டு, சித்ராவின் அப்பா சமையல் அரை நோக்கி ஓடினார். என்னம்மா என்ன ஆச்சு? பொண்ணு, மாசமா இருக்காளா? என்று உள்ளே எட்டிப் பார்த்தார். அவரது மனைவி வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். என்ன ஆச்சு சாரதா?

கடு கடு என ஒற்றைப் பார்வையை வீசிவிட்டு, மூக்கைப் பொத்திக்கொண்டு, நீங்க போய் அந்த குசுவினி மாப்பிளை கூட பேசிக்கிட்டு இருங்க.. நாங்க மதிய சாப்பாடு தயார் பண்றோம் என்று சொல்லிவிட்டு வேலையை தொடர்ந்தாள். நான் அப்பவே சொன்னேன், இந்த குசுவினி மாப்ள வேண்டாம்  னு, கேட்டீங்களா நீங்க, என்று அவள் தொடர்ந்து முனகிக் கொண்டே இருந்தாள்.

தலையை குனிந்துக் கொண்டே சித்ராவின் அப்பா, மெதுவாக வெளியே செல்ல எத்தனித்தார். மெது மெதுவாக வெளியே செல்வதற்குள், லேசாக நிமிர்ந்து ஓரப் பார்வையில் தன் மகளைப் பார்த்தார். அவள் அப்பாவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது சித்ராவுக்கு பதினான்கு வயது.

அன்றுதான் அவளுக்கு மஞ்சள் நீராட்டு விழா... என்னக்கா குசுவினிப் பொண்ணு வயசுக்கு வேற வந்துட்டாளா என்று அக்கம் பக்கத்துக்கு வீட்டுப் பெண்கள் விசாரித்துக் கொண்டே அவள் முகத்தில் சந்தனத்தை அப்பினார்கள். கோபமும், இயலாமையும் சாரதாவை ஒன்றும் பேசவிடாமல் செய்தது. இருந்தாலும், உதட்டில் சிரிப்போடு எல்லாரிடமும் உரையாடிக் கொண்டிருந்தாள்.

எல்லா களேபரங்களும் முடிந்து, வீடு கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் மூன்று பேருக்குமானது.

ஏங்க, உங்கப் பொண்ணுக்கு இன்னும் நாலைஞ்சு வருசத்துல கல்யாணம் பண்ணனும்..

அதுக்கு என்னடி இப்ப,

என்ன இப்படி கேக்குறீங்க, காலையில் இருந்து எனக்கு ஒரே அவமானமா போச்சு, வரவங்க, போறவங்களாம், குசுவினிப் பொன்னு, குசுவினிப் பொண்ணு னு அவள கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்காங்க, இப்படியே இருந்தா அவளுக்கு எப்படி கல்யாணம் ஆகும்? எவன் கட்டிக்குவான்..

இதெல்லாம் ரொம்ப சாதரணமான விஷயம் சாரதா?

என்னங்க இப்படி சொல்றீங்க, இத இப்படியே விட்டா, நிச்சயம் அவளுக்கு கல்யாணம் ஆகாது?

சாரதாவின் கணவன், சித்ராவின் அப்பாவாக யோசிக்க ஆரம்பித்தான். யாரு இருக்கிறார்கள், என்ன இடம் என்கிற எந்தவித பிரக்ஞையும் இல்லாமல், சித்ரா உடலில் இருந்து கெட்ட வாயுவை வெளியேற்றுவதில் இருக்கும் சிக்கலை அவர் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துக் கொள்ள விழைந்தார்.

சித்ரா அவர்களின் இந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் வேண்டுமென்றே அப்படி செய்வதில்லை. எப்படி அடக்க நினைத்தாலும், அவளால் வாயு வெளியேற்றத்தை அடக்கவே முடியவில்லை. நான் என்ன வேண்டுமென்றா செய்கிறேன், என்கிற கழிவிரக்கமும், எதிர்கால பயமும்தான் அவளுக்கு தோன்றியதே தவிர, இந்த சமூகத்தில் குசு விடக் கூட பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா என்கிற எண்ணம் எங்கேயும் எட்டிக் கூடப் பார்க்கவில்லை.

எல்லாருக்கும் தெரிந்த வைத்திய முறைகள் அவர்கள் வீட்டில் அமலுக்கு வந்தது. இனி உருளைக் கிழங்கு இல்லை, எல்லா உணவுகளிலும் கட்டாயம் பெருங்காயமும், இஞ்சியும் சேர்க்கப்பட வேண்டும் என்கிற எல்லா முடிவுகளும், சித்ராவின் அனுமதி இல்லாமலே எடுக்கப்பட்டுவிட்டது.

அவளுக்கு கொஞ்சம் கூட பிடிக்காத பெருங்காய வாசனையும், இஞ்சியின் காரமும் அவளது தினசரி உணவாக மாறியது. ஆனால் அவளுக்கு மிகப்பிடித்த உருளைக் கிழங்கும், பொறித்த உணவுப் பண்டங்களும் அவளுக்கு மறுக்கப்பட்டது.

இரண்டு மூன்று மாதங்கள் கழிந்தும், அவளிடம் எந்தவித முன்னேற்றமும் இல்லை. எப்போதும் போல் அவள் இயல்பு மாறாமலேயே இருந்தது. உருளைக் கிழங்கின் மீதான அவளின் பாசம் மட்டும் கூடிக் கொண்டே போனது. தொடர்ந்து மறுக்கப்படும் தன்னுடைய உரிமைகள் பற்றி பெரிதாக அவள் அக்கறை கொள்ளவில்லை, ஆனால் இந்த வாயுப் பிரச்சனை தனது வாழ்க்கையை கெடுத்துவிடுமோ என்கிற அச்சம், அவளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

சாரதாவின் ஓயாத புலம்பலும், சித்ராவின் கட்டுக்கடங்காத வாயுப் பிரச்சனையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. வேறு வழியில்லாமல் நல்ல டாக்டரிடம் சென்று மருத்துவம் பார்க்க சித்ராவின் அப்பா தயாரானார்.

இதெல்லாம் இன்னைக்கு ஒரு பெரிய பிரச்சனையே இல்லை, இங்க பாருமா ஒரு நாளைக்கு எத்தனை தடவை உனக்கு இந்த பிரச்சனை வருது?, சித்ராவிடம் கேட்டார் டாக்டர்.

ஒரு பத்து தடவை இருக்கும் சார்.. தந்தையிடம் இருந்து பதில் வந்தது.. நீங்க அமைதியா இருந்தா போதும் என்பது போல், டாக்டர் அவரை லேசாக மிரட்டும் தொனியில் பார்த்தார்.

ஒரு நாளைக்கு 10 முறை கூட உங்க உடலில் இருந்து வாயு பிரியலனா அதுதான் பிரச்சனையே தவிர, இது அல்ல. நீங்க நார்மலாதான் இருக்கீங்க.. என்று டாக்டர் சொல்லி முடிப்பதற்குள், கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என பெரும் சப்தம் எழுந்தது.

டாக்டரின் முகத்தில் அஷ்ட கோணங்களும் தாண்டவமாடியது. முகத்தை சுளித்தார், மூக்கை சுருக்கி, எதையோ தேடினார்..மூச்சை மூக்கில் இருந்து உதறிக் கொண்டே இருந்தார்...

நர்ஸ்...என்று பிளிறினார்...

உள்ளே நர்ஸ் ஓடிவந்ததும், அய்யய்யோ,, என்று மீண்டும் வெளியே ஓடினாள்...

மீண்டும் பிளிறினார் டாக்டர்,

முகத்தில் பெரிய திரையுடன் உள்ளே வந்தார் நர்ஸ்.. எங்கம்மா அந்த ரூம் ஸ்ப்ரே..

என்ன ஆச்சு டாக்டர், இந்த நாத்தம் நாறுது, என்று நர்ஸ் கேட்டு முடிப்பதற்குள், மீண்டும் சித்ரா வலது பக்கம் லேசாக சாய்ந்தாள்...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆக மாறியது...

நர்ஸ் மயக்கம் அடித்து கீழே விழுந்தார்.. நான் அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிட்டேன் என்பது போல், சித்ரா நர்சை முறைத்துப் பார்த்தாள்...

சார் நீங்க இன்னைக்கு போயிட்டு நாளைக்கு வெறும் வயித்தோடு அவங்கள கூட்டிட்டு வாங்க, என்று சொல்லி இரவுக்கு சில மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்.

நர்ஸ் முகத்தில் ஸ்ப்ரே அடித்து எழுப்பினார், டாக்டர்..

டாக்டர், அமுக்கி விட்ற குசுதானே நாறும் னு சொல்வாங்க, இந்த பொண்ணு இவ்ளோ சத்தமா விட்டும் எப்படி இந்த நாத்தம் நாறுது டாக்டர்...

கோப நரம்புகள் டாக்டரின் முகத்தில், பரவிக் கொண்டிருந்தது. ஒரே ஒரு பார்வைதான் அவளுக்கு பதிலாக கிடைத்தது.

ஒண்ணுமே நடக்காதது போல், நர்ஸ் சட்டென்று வெளியேறி சென்றாள்.

அன்றைய இரவு டாக்டரின் அறை முழுவதும், புத்தகங்களால் நிரம்பி இருந்தது. டாக்டர், ஹென்றி ஜே.ஜோசப்பின் "Solution for Our body gas" புத்தகத்தை புரட்டிக் கொண்டே  இருந்தார்.

மறுநாள் காலை, சித்ராவையும், அவளது தந்தையையும் கனிவோடு வரவேற்று, அமர சொன்னார்.

அவளது உணவுப் பழக்க வழக்கம், Antibiotics, ஏதாவது சாப்பிடுகிறாரா, இந்த பிரச்சனை எந்த வயதில் இருந்து இருக்கிறது, என்கிற எல்லா கேள்விகளையும் கேட்டுக் கொண்டிருந்தார்.

உன்னால இத அடக்க முடியலையா சித்ரா,

இல்ல டாக்டர், நானும் எவ்ளவோ ட்ரை பண்றேன், ஆனா, ரொம்ப அடக்க முயற்சி பண்ணா, மூளை நரம்புகள் வெடிக்கிறது மாதிரி, தலை வலிக்குது, என்னால அந்த வலியை தாங்கவே முடியல, நான் வேணும் னு செய்யறதே இல்ல டாக்டர்...

சித்ராவின் பதிலில், டாக்டர் இதை சரி செய்துவிடுவார் என்கிற நம்பிக்கையும், அவளது ஆற்றாமையும் சேர்ந்தே வெளிப்பட்டது.

நோயின் தன்மையை டாக்டர் புரிந்துக் கொண்ட நிம்மதி அவரது முகத்தில் வெளிப்பட்டது. என்னென்ன சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும், மாத்திரைகள் எந்த அளவு சாப்பிட வேண்டும் என்கிற முறைகளை விவரித்துக் கொண்டிருந்தார். சித்ராவின் தந்தை நம்பிக்கையோடு டாக்டருக்கு நன்றி சொன்னார்.

சித்ராவின் தோள்களை தட்டிக் கொடுத்து, கவலைப் படாதமா எல்லாம் சரியாயிடும் என்று சொல்வது போல் சிரித்தார். நன்றிப் புன்னகை செலுத்தி நகர்ந்தாள் சித்ரா.

தனது அத்தனை ஆசைகளையும் ஒதுக்கிவிட்டு, மிக கடுமையான உணவுப் பத்தியங்களோடு அவள் தன் பிரச்சனையை கொஞ்சம் கொஞ்சமாக தீர்த்துக் கொண்டிருந்தாள்.

அன்று அவளுக்கு திருமணம் நிச்சயிக்க மாப்பிள்ளை வீட்டார் வந்திருந்தார்கள்.

எல்லா சடங்குகளும் முடிந்து, எல்லா பேச்சு வார்த்தைகளும் முடிவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. சாரதாவிற்கும், சித்ராவின் தந்தைக்கும், சித்ராவின் மீதே முழு கவனமும் நங்கூரம் போல நிலைக் கொண்டிருந்தது.

ஆனால் அவள் நம்பிக்கை பெருமிதத்தோடு, பெற்றோர்களை பார்த்து, கண்களை அசைத்து அவர்களுக்கும் நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்தாள். ஆனால் கூட்டத்தில் திடீரென டர்ர்ர்ர்ர்ர். என்கிற சப்தம் எழுந்தது.

அத்தனை குளிர்ச்சியான அறையிலும் சித்ராவின் பெற்றோர்களுக்கு வியர்த்தது, அடிப்பாவி, என்பது போல், சாரதா அவளை பார்த்தாள், தந்தை தலை குனிந்து, நிலைகுலைந்து போய் நின்றார்.

ஆனால் எதுவும் நடக்காதது போல், மாப்பிள்ளை வீட்டார் சரி, சரி, கல்யாணத்தை இன்ன தேதியில் வச்சிக்கலாம் என்றனர்.

திக்கித்துப் போய், தலை நிமிர்ந்தார் சித்ராவின் தந்தை...

எல்லாம் முடிந்து, எல்லாரும் வெளியேறிக் கொண்டிருந்தனர். இறுதியாக மாப்பிள்ளை வீட்டார், சித்ராவிடம் போயிட்டு வரோம்மா என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்கள். சாரதாவும், அவள் கணவனும் மாப்பிள்ளை வீட்டார்களை வழியனுப்பி வைக்க சென்றார்கள். மாப்பிள்ளையின் அம்மா, அவனது காதில் ஓதிக் கொண்டிருந்தார்,

ஏண்டா, கொஞ்சம் நேரம் உன்னால அடக்கி வைக்க முடியாதா?

அன்று இரவு சித்ராவின் வீடு முழுக்க ஒரே சிரிப்பு சப்தம்.. ஐயோ,, ஐயோ,, நான் கூட கொஞ்சம் நேரத்துல பயந்து போயிட்டேன் மா.. சிரிப்பு சப்தமும், கும்மாளமும் தொடர்ந்தது.

அடப்பாவிகளா, ஒரு பெண்ணுக்கு இந்த மாதிரி பிரச்சனை இருந்தால், குடும்பமே ஏதோ இழவு விழுந்த வீடு போல் மாறுகிறது? அவள் கல்யாணம் குறித்து கவலை கொள்கிறது, ஆனால் ஆணுக்கு இந்த மாதிரி பிரச்சனை இருந்தால், அது குறித்து எவ்வித பிரச்சனையும் இன்றி, இப்படி சிரித்துக் கொண்டிருக்கிறார்களோ, என்று சித்ராவின் மனதில் ஏதோ ஒரு மூலையில் ஒரு கேள்வி உதித்துக் கொண்டிருந்தது.

மீண்டும் சமையற்கட்டில்..

என்னங்க...

ஏன் இப்படியே நிக்கிறீங்க, மாப்பிள்ளை தப்பா நினைச்சுக்கப் போறார், போய் அவர்கிட்ட பேசிக்கிட்டு இருங்க... மகளைப் பார்த்துக் கொண்டிருந்த, தந்தை பெருமூச்சோடு நகர்ந்தார்.

சித்ரா முகத்தில் எவ்வித உணர்வுகளும் இன்றி, எந்த சலனமும் இன்றி அவள் தந்தையை பார்த்துக் கொண்டிருந்தாள். அவருக்கு அந்த பார்வை ஈட்டியால் குத்துவது போல் இருந்தது, சட்டென்று பார்வையை விலக்கி வெளியே சென்றார்.

இரவு சித்ரா கணவனோடு வீட்டில் பேசிக் கொண்டிருந்தாள். அவள் மனதுக்குள் எப்போதும் இந்த கேள்வியை கேட்டுவிடலாம் என்கிற எண்ணம் எழுந்துக் கொண்டே இருந்தாலும்,

அந்த மாதிரி ஒருநாளும் பண்ணிடாதமா என்கிற அம்மாவின் குரல் அவள் காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்தது.

ஆனால் அவள் மனதுக்குள் கேள்விகள், எதிர்கேள்விகள் இரண்டும் மாறி, மாறி எழுந்துக் கொண்டே இருந்தது.

இதை எப்படி ஒரு பிரச்சனையாக சொல்ல முடியும்?

அதெப்படி, இதே பிரச்சனை எனக்கிருந்தபோது, என் குடும்பம் என்ன பாடுபட்டது? இழவு வீடு போலல்லவா இருந்தது..

கல்யாணம் ஆகிவிட்டது, இனி என்னதான் செய்துவிட முடியும்?

அதற்காக காலம் முழுக்கவே இப்படி ஒரு நாற்றம் பிடித்த மனுசனோடு வாழ்ந்துக் கொண்டிருக்க முடியுமா?

தனக்கு வைத்தியம் பார்த்த டாக்டரிடமே, கணவனுக்கும் வைத்தியம் பார்த்தல் என்ன? என்கிற கேள்வி எழுந்து ஒருநாள் அதை அவனிடம் சித்ரா கேட்கவும் செய்தாள்...

ஆனால் தன்னிடம் அப்படி ஒரு குறையே இல்லாதது போல், அவன் அவள் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாதது போல் நகர்ந்துவிட்டான்.

அதெப்படி, ஆம்பிள்ளைங்களுக்கு, இதுக்கு எல்லாம் வைத்தியம் பாக்கணும் சொன்னா கவுரவம் பொறுக்குமா? வறட்டு கௌரவம் புடிச்ச ஆம்பளைங்க....

வேறென்ன செய்வது, பேசாமல் விவாகரத்து வாங்கி விடலாமா? அய்யய்யோ, அம்மாவும், அப்பாவும் செத்தே போய்விடுவார்களே? தவிர, இதற்கெல்லாம் போய் யாராவது விவாகரத்து செய்வார்களா? கோர்ட்டில் போய் இதை எப்படி நிரூபிப்பது? அப்படியே நிரூபித்தாலும், கோர்ட் இதை ஏற்றுக் கொள்ளுமா? பதில் ஆம் என்று இருந்தாலும், அவள் தன்னுடைய எந்த கேள்விகளுக்கும் பதிலே இல்லாதது போல், அடுத்தடுத்த கேள்விகளை மட்டுமே எழுப்பிக் கொண்டிருந்தாள். ஒரு குடும்பத்துப் பெண் வேறென்ன செய்து விட முடியும், என்பது மட்டுமே அவளுக்கு பிடித்த பதிலாக இருந்தது.

சித்ராவுக்கு ஏனோ அன்றைக்கு மீண்டும் அந்த ஆசை வந்துவிட்டது. இத்தனை நாட்களாக சாப்பிடாமல், ஒதுக்கி வைத்திருந்த உருளைக் கிழங்கை, நீள நீளமாக அறுத்து, எண்ணெயில் பொரித்து, அணு அணுவாக சுவைத்து கொண்டிருந்தாள். மதிய உணவே உருளைக் கிழங்கு வறுவலாக இருந்தது.

இரவு உணவுக்கும், உருளைக் கிழங்கே பிரதானமாக இருந்தது. மொச்சக் கொட்டை காரக் குழம்பும், உருளைக் கிழங்கு பொரியலும் அன்றைக்கு இரவு உணவாக இருந்தது. கணவனுக்கு பரிமாறிவிட்டு, அவளும் முதல்முறையாக அவனோடு சாப்பிட உட்கார்ந்தாள். அவனுக்கு அதில் ஆச்சர்யம் இருந்தது போல் அவனது முகம் காட்டிக் கொள்ளவில்லை. எப்போதும் போல், கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு அவள் எழுந்துக் கொண்டாள். அவன் இன்னமும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். கொஞ்சமாக வலது பக்கம் சாய்ந்தான். டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சப்தம் எழுந்தது.. சித்ரா அவனைத் தாண்டி நகர்ந்து சென்றுக் கொண்டிருந்தாள். அவன் வாயில் சோற்றோடு, லேசாக வாயைத் திறந்துக் கொண்டு, அவளை ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். வலது பக்கம் லேசாக சாய்ந்தவாறே..

அவனுக்கு தெரிந்தது, இது அவனுடையது அல்ல, அவளுடையது.

Monday, April 1, 2013

ஒற்றை சாளரம் - 1

சில நேரங்களில் எழுதுவதற்கு நிறைய கருத்துகள் இருக்கும்போது, தனி தனி பதிவாக எழுதாமல், ஒரே பதிவில் எழுதிவிடலாம் என்று நினைக்கிறேன். அவைகள் எல்லாம் ஒற்றை சாளரம் என்கிற பெயரில் வெளிவரும்.
இன்றைய ஒற்றை சாளரத்தின் பதிவுகள்:
------------------------------------------------------
1. முத்துலிங்கத்தின் கடிதம்.
2. தமிழின் உலகப் படங்கள்..
3. நாடகம்.
------------------------------------------------------
முத்துலிங்கத்தின் கடிதம்.

என்னுடைய செயல்பாடுகள் முழுவதும், சென்னை, தமிழ்நாட்டில் மட்டுமே. ஆனால் ஒருபோதும் தமிழ்நாட்டில் இருந்து எந்த பெரிய எழுத்தாளர்களிடமிருந்தும், எனக்கு தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் வெளிவந்தது கிடையாது (ஒரு சிலர் விதிவிலக்கு). என் செயல்பாடுகளை விமர்சித்து கூட. ஆனால் என்னுடைய எல்லா செயல்பாடுகளுக்கும், கனடாவில் இருந்து ஒரு மாமனிதர் தொடர்ந்து மின்னஞ்சல் அனுப்பி ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். அவர் எழுத்தாளர் அ.முத்துலிங்கம். என்னுடைய சமீப சிறுகதையான, "மாநகரம்" பற்றிய தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

அன்புள்ள அருண்,
வணக்கம்.நலம்தானே

நீங்கள் தேர்ந்த எழுத்தாளர் ஆகிவிட்டீர்கள்.

1. நிறைய சொற்பிழைகள் உள்ளன. அவற்றை திருத்திவிடுங்கள்.

2. சாமிநாதனை சில இடங்களில் அவன் என்றும் சில இடங்களில் அவர் என்றும் அழைக்கிறீர்கள். முதியவர் என்பதால் அவர் என அழைத்து மரியாதை செய்யலாம்.

3. வர்ணித்துக்கொண்டு போகும்போதே சாமிநாதன் விபத்தில் சாகப்போகிறார் என எல்லோரும் எதிர்பார்த்திருப்பார்கள். அவர்களை ஏமாற்றியது உங்கள் வெற்றி.

4. 10 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்திருந்தபோது எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டது. சாலையை கடக்கவே முடியவில்லை. கடைசியில் ஆட்டோ பிடித்து மறுபக்கம் போய்ச்சேர்ந்தேன்.

5. கிழவர் சாலையை கடக்கும் இடம் தத்ரூபமாக வர்ணிக்கப்பட்டிருந்தது. நான் என்ன அனுபவித்தேனோ அது அப்படியே எழுத்தில் வந்திருந்தது. வாசகருடைய முழுக்கவனத்தையும் அங்கே கவர்ந்துவிட்டீர்கள். அது வெற்றி.

6. கடைசி வசனம் மிக மிக முக்கியமானது. இதை மகத்தான கதை ஆக்கக்கூடியது. ஆனால் கடைசி வசனம் அப்படி அமையவில்லை. இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் அப்படி ஆக்கியிருக்கமுடியும்.

அன்புடன்
அ.மு.

இதுவரை அந்த கதையை படிக்காத நண்பர்களுக்காக, என் கதையின் இணைப்பு: http://chuttiarun.blogspot.in/2013/03/blog-post.html
------------------------------------------------------------------------------------------
தமிழின் உலகப் படங்கள்..

இன்று அதிகாலை வரவு எட்டணா, செலவு பத்தணா திரைப்படத்தை பார்த்தேன். எனக்கு தெரிந்து, தமிழில் சட்டென்று பார்க்கும்போது அட என வியக்கவைக்கும் சில திரைப்படங்கள் இருக்கின்றன. உடனடியாக என் நினைவில் இருந்து எழுதுகிறேன். வரவு எட்டணா, செலவு பத்தணா, ஆஹா, எம் மகன் (ஆனால் எம்டன் மகன் என்பதே இதற்கு சரியாக தலைப்பு) ஆகிய மூன்று திரைப்படங்களையும் மீண்டும் ஒருமுறை பாருங்கள். தமிழ் சினிமாவின் Making எனப்படும் உருவாக்குதலை உலக தரத்திற்கு இந்த படங்கள் கொண்டு செல்லவில்லை என்றாலும், சமூக அவலங்களை சாடவில்லை என்றாலும், தமிழர்களின் அன்றாட குடும்ப நிகழ்வுகளையும், நடுத்தர வர்க்கத்தின் பொதுப் புத்தியையும் சித்தரித்த வகையில் இந்த மூன்று படங்களும் முக்கியமானதாகவே எனக்கு படுகிறது. வன்முறையோ, பறந்து பறந்து அடிக்கும் பெரிய சண்டைக் காட்சிகளோ இல்லையென்றாலும், இந்த மூன்று படங்களும் வெற்றிப் படங்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த மாதிரியான வெகுஜனப் படங்களை நான் பெரிதும் மதிக்கிறேன்.
------------------------------------------------------------------------------------------
நாடகம்.

உலக நாடக தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை கல்லூரி சாலையிலுள்ள அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் ஒரே நேரத்தில் 12 நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. சென்னையில் இத்தனை அழகானப் பெண்களும் எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்று ஒருகணம் மலைத்துப் போனேன். சின்ன அரங்கம்தான் என்றாலும், கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அதிலும், இளமைக் கொஞ்சும் பெண்களே அதிகம். என்னுடைய தோழி, வினோதினி இரண்டு நாடங்களை அரங்கேற்றினார். இரண்டிலும் சிறப்பாகவே நடிப்பை வெளிப்படுத்தினார். பார்த்த அத்தனை நாடகங்களும் சிறப்பாகவே இருந்தது. வெறும் சிறப்பு என்கிற வார்த்தை அவர்களின் உழைப்பை கொச்சைப்படுத்தும் என்றே நினைக்கிறேன். அத்தனை நேர்த்தி, உழைப்பு. ஒரு பத்து நிமிட நாடகத்திற்கு இந்த மெனக்கெடல் என்றால், மூன்று மணி நேரம் படத்திற்கு எத்தனை மெனக்கெட வேண்டும். சரி அதை விடுவோம்.

ஆறு நாடகங்களை பார்த்துவிட்டு கிளம்பிவிடுவோம் என்று நினைத்தேன். ஆனாலும், உடன் வந்திருந்த நண்பன் தினேஷ் விடவில்லை, எல்லா நாடகங்களையும் பார்த்துவிட்டு போகலாம் என்று சொன்னான். மேலும், ஒளிப்பதிவாளரிணி (பெண் ஒளிப்பதிவாளரை எப்படி சொல்வது) வைஷாலியும் உடன் வந்திருந்தார். அவரை சந்திப்பதே நேற்றுதான் முதல்முறை. ஆனாலும், பல வருட நண்பர்கள் போலவே பேசிக் கொண்டோம். அவரும் நாடகங்களை பார்ப்பதில் ஆர்வமாக இருந்ததால் நானும் 12 நாடகங்களையும் பார்த்துவிட்டுத்தான் வந்தேன். இத்தனைக்கும், உட்கார கூட இடமில்லாமல், யார் கால், யார் கை என்றே தெரியாமல் அங்கங்கே மிதிபட்டு, உதைபட்டே பார்க்க வேண்டி இருந்தது. இதற்குதான், எப்போதும் கலை ஆர்வலர்களை உடன் அழைத்து செல்ல வேண்டும் என்பது, எத்தனை சங்கடங்கள் இருந்தாலும், கலைப் படைப்புகளை பார்ப்பதில் இருந்து பாதியில் விடைபெறக் கூடாது. வேறு யாராவதாக இருந்தால், சரி போகலாம் என்றே சொல்லி இருப்பார்கள். நானும் அடுத்த 6 நாடகங்களை தவறவிட்டிருப்பேன்.

12 நாடகங்களில் ஒன்று மட்டுமே புரியவில்லை. காரணம் அதன் மொழி, ஹிந்தியில் அரங்கேற்றினார்கள். மற்ற அனைத்து நாடகங்களும் எனக்கு மிக பிடித்தது. தெளிவாக புரிந்தது. இத்தனைக்கும் நவீன நாடகம்தான். அத்தனை பேர் உடல்மொழியும், தமிழ்நாட்டில் இத்தனை சிறந்த நாடக கலைஞர்கள் (யாரும் தொலைகாட்சி நாடகங்களை நினைவுப்படுத்திக் கொள்ளாதீர்கள்) இருக்கிறார்களா என்கிற வியப்பை ஏற்படுத்தியது. Awesome என்றுதான் சொல்ல வேண்டும். பத்து நிமிடத்திற்குள், கதை, உடல்மொழி, கதாபாத்திரங்களுடன் பிணைப்பு அரங்க வேலைபாடுகள் போன்று பல விசயங்களை நேர்த்தியாக செய்திருந்தார்கள்.

நாடகத்தில் பங்கேற்ற அத்தனை நண்பர்களுக்கும் வாழ்த்துசொல்வதை வேறென்ன சொல்லிவிட முடியும் என்னால். குறிப்பாக வினோதினிக்கு (Vinodhini Vaidynathan). வாழ்த்துக்கள் வினோதினி. You are Rockinggggggggg....

Saturday, March 30, 2013

மாநகரம் - சிறுகதை

மாநகரம்...
--------------

"ப்பா... இப்ப நீங்க அவசியம் அங்க போய்தான் ஆகணுமா?"

"ஏன் அவங்களுக்கு தெரியாதா? போகனுமா வேணாமா னு? நீங்கள் என்ன பெரியவகளுக்கு கருத்து சொல்லிக்கிட்டு, போய் வேலையைப் பாருங்க"... சொல்லிவிட்டு எதுவும் நடக்காதது போல் அவனது மனைவி உள்ளே சென்றுவிட்டாள்.

சாமிநாதன் மகனை ஒருமுறை பார்த்தார்.

மகன்களை பெற்ற எல்லா தந்தைகளும், மனைவியை இழந்த பின்னர் அனாதைகளாகவே மாறிப்போவார்கள் என்பதை எப்போதும் போல், எல்லா தந்தைகளையும் போல் சாமிநாதனும் புரிந்துக் கொண்டார் என்பதற்கான பதில்தான் அந்த பார்வை. நீங்க அங்க போய்தான் ஆக வேண்டுமா என்று மகன் கேட்கும் கேள்விக்கு பதில், ஆம் என்பதே, ஆனால் இதில் ஆச்சர்யம் என்னவென்றால், கேள்வியையும் கேட்டுவிட்டு அதில் இந்த பதிலையும் ஒளித்து வைத்து விளையாடுவது எல்லாப் பிள்ளைகளுக்கு கைவந்த கலை.

இந்த ஆம் என்கிற பதில் மாறினால், பிள்ளைக்கு இல்லற வாழ்வில் எத்தகைய இழப்பு ஏற்படும் என்பதை அறிந்து வைத்திருக்கும் அப்பாக்களை போல், இதே ஆம் என்கிற பதிலால் அப்பாக்கள் படப்போகும் துயரங்களை எந்த மகனும் அறிந்து வைத்திருக்கவில்லை.

இடுங்கியக் கண்களும், ஒடுங்கிய தேகமும், ஒன்றோடு ஒன்றாய் ஓட்டிப் போயிருக்கும் தோலுமாய், ஒரே வேட்டியோடு, துண்டை மடித்து உடலில் சொருகிக் கொண்டு கிடக்கும் சாமிநாதன் அப்போதும் அந்த வீட்டில் எல்லாரையும் விட அதிகமாகவே உழைத்துக் கொண்டிருந்தார். ஆனாலும், எந்த மகனின் மனைவிமார்களும், மாமனாரை நார் நாராக கிழித்தெறியவே விரும்புகிறார்கள். மாமனார்கள் கிழிந்துக் கொண்டே இருக்கிறார்கள்.

துண்டை எடுத்து, இரண்டாய் மடித்து வலது கையில் பிடித்துக் கொண்டே சாமிநாதன் பேருந்து நிலையம் நோக்கி நடந்தார்.

ஒவ்வொரு பேருந்தாக உள்ளே வருவதும், அதே வழியில் வெளியே செல்ல இன்னும் பல பேருந்துகள் காத்திருப்பதும், வாழ்க்கையின் மிக முக்கியமான குறியீடாகவே சாமிநாதனுக்கு தோன்றியது. அப்போதும் கூட இதே பேருந்து நிலையத்தில் நாளை தன்னுடைய மகனும் ஏதோ ஒரு பேருந்துக்காக, வெளியில் சொல்லாத ஆம் என்கிற ஒற்றை பதிலின் காரணமாக காத்திருக்க நேரிடுமோ என்கிற அச்சத்தோடு அவர் ஒவ்வொரு பேருந்தையும் உற்றுநோக்கினார்.

யாருமே அவருக்காக ஒரு நொடி கூட காத்திருக்கவில்லை. பேருந்து நிலையம் முழுவதுமே ஏதோ போர்க்காலத்திற்கு பிந்தைய சூழலில் இருப்பது போல் பரபரப்பாக காணப்பட்டது. நொடிந்துப் போய் கிடக்கும் ஒருவனை தாண்டிதான் அத்தனை கால்களும் கடந்து போய்க்கொண்டிருக்கிறது, ஆனால் அவனுக்காக எந்த கால்களும் ஒருகணம் கூட நின்று செல்லவில்லை. அவன் யார், எங்கிருந்து வந்திருப்பான், அவனது பிள்ளைகள்தான் அவனை இப்படி நிர்கதியாக விட்டிருப்பார்களோ என்று சாமிநாதன் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் நொடிந்துப் போய், சவலைப் பிள்ளை போல், மரணத்தின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கும் அவரது கண்கள் அப்போதும் மனிதர்களின் ஆசுவாசத்தை வேண்டி நிற்கவில்லை. அந்த கண்களுக்கு தெரிந்தே இருக்கிறது, இந்த உலகம் ஸ்திரமானவர்களுக்கு மட்டுமே, நொடிந்து போனவர்களுக்கும், வயதானவர்களுக்கும், ஒருபோதும் உகந்தது அல்ல என்று.

சாமிநாதன் தனக்கான பேருந்தில் ஏறிக்கொண்டார். ஜன்னலோர இருக்கையில், வழியெங்கும் காத்திருக்கும், அத்தனை நிகழ்வுகளையும் அள்ளிப் பருக, அவரது கண்கள் எப்போதும் காத்துக் கொண்டே இருந்தது. அவர் அருகில் அமர்ந்த இளைஞன் வெள்ளை ஒயர் ஒன்றை காதில் சொருகிக் கொண்டார். பையை தூக்கி மேலேப் போட்டுவிட்டு, கைப்பேசியை தொட்டு தொட்டு ஏதோப் பேசிக்கொண்டிருந்தான். சாமிநாதனுக்கும், அந்த இளைஞனுக்கும் பேசிக்கொள்ள ஏதும் இல்லை. பொதுவாகவே, பெரியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பேசிக்கொள்ள ஏதுமில்லை என்கிற சூழலில்தான் பெரியவர்களும், இளைஞர்களும் ஒருவரையொருவர் ஏதோ வேற்று கிரக வாசிகள் போல் பாவித்து, மெல்லிய புன்னகையோடு அவர்களுக்கிடையேயான உரையாடலை முடித்துக் கொள்கிறார்கள். சாமிநாதனின் கண்கள் மீண்டும் ஜன்னலோர கம்பிகளின் வழியே சாலையின் ஏகாதிபத்திய கூண்டுக்குள் அடைந்துக் கொண்டது.

அகன்று விரிந்த சாலைகள், கிராமங்களை, பிரித்து, ஒவ்வொரு கிராமத்தையும் தனித் தனி தீவுகளாகவே மாற்றி வைத்திருந்தது. இந்தா வாரேன், என்று சொல்வதற்குள் ஓடிவரும் சொந்தங்கள் இனி ஓடி வருவதற்குள், அவர்களை தாண்டி பல நூறு வாகனங்கள் சென்றிருக்கும். ஒவ்வொரு கிராமத்தையும் பிரித்து, அதன் சமாதியில்தான் இந்த அகன்று விரிந்த பளிங்குக் கற்கள் போன்ற சாலை போடப்பட்டிருக்கிறது. நாம் இப்போதும் சமாதிகளின் மீதுதான் பயணிக்கிறோம். ஆனால் அதுப் பற்றிக் கூட பெரிதாக அலட்டிக் கொள்ள நமக்கு நேரமில்லாதபோது, இழந்து போன நமது கிராமத்து நினைவுகளை மீட்டெடுப்பதில் ஏன் அத்தனை சிரத்தை மேற்கொள்ள வேண்டும் என்கிற சிந்தனை மட்டுமே எல்லாரையும் ஆக்கிரமித்து கிடக்கிறது.

பேருந்து கிராமங்கள் தாண்டி, சென்னை மாநகரின் நுழைவாயிலான காட்டான்குளத்தூரை தாண்டி, பெருங்களத்தூரில் நின்றது.

‘பெரியவரே, இங்கிருந்து தாம்பரம் போய், அங்கிருந்து T51 பிடிச்சி, சோளிங்கநல்லூர்ல இறங்கி, மறுபடியும் 21H பிடிச்சி நீங்கள் செம்மஞ்சேரி போகலாம்.’

சாமிநாதனுக்கு இந்த தமிழ் கொஞ்சம் புதிதாக இருந்தாலும், அந்த ஆட்டோக்காரர் வழிகாட்டுவதில் எடுத்துக் கொண்ட அக்கறை கண்டு சிலாகித்தார்.

‘நல்லா இருய்யா,.. வரேன் யா..’

ஆட்டோக்காரர் சொன்னது போலவே சோளிங்கநல்லூர் வந்து சாமிநாதன் 21H பிடித்து செம்மஞ்சேரி போக ஆயத்தமானார்.

21H பிடித்து உள்ளே ஏரின் சென்றார் சாமிநாதன். வண்டி நகர்ந்தது. மிக நீண்ட விசில் சப்தம்..

‘பெரியவரே, உன்னையெல்லாம் யாரு வெளிய வர சொன்னது? எந்தப் பக்கம் நிக்கிறது னு கூட தெரியாதா? எங்கிருந்து வந்த? என்தாலிய அறுக்கிறதுக்குனே வந்தியா?’ என்கிற நடத்துனரின் வசவு சொற்கள் சாமிநாதனுக்கு புதிதாக மட்டுமின்றி, அருவருப்பாகவும் இருந்தது.

சாமிநாதன் மௌனத்தோடு கீழே இறங்கினார். நடத்துனரின் பேச்சைக் கேட்ட சக பயணி ஒருவர் கூட சாமிநாதனுக்காக பேசாமல் இருந்ததில் அவருக்கு பெரிய ஆச்சர்யம் இல்லை. ஆனால் மௌனம் என்பதன் வலியை அவர் அங்கேதான் உணர்ந்தார். மௌனம் எல்லா நேரங்களிலும், நமக்கு ஏதோ ஒன்றை உணர்த்திக் கொண்டே இருக்கிறது. விருப்பமின்மை, சோகம், காதல், தோல்வி, என மௌனம் உணர்த்தும் எல்லா உணர்வுகளும், உண்மையை என்பதை தாண்டியும், நமக்குள் ஏதோ ஒரு அதிர்வை உண்டுபண்ணுகிறது.

சாமிநாதன் சாலையைக் கடக்க வேகமாக நடந்தார். ஆனால் முழுக்க முழுக்க மென்பொருள் நிறுவனங்களுக்காகவே உருவாக்கப்பட்ட அந்த சாலையில், வேகமாக செல்ல தடையாக, இடையிடையே ஆடு மாடுகள் கடக்க கூடாது என்பதற்காக பெரிய பெரிய நடுசுவர்கள், சில கிலோ மீட்டர்களுக்கு கட்டப்பட்டிருந்தது. சாமிநாதன் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சாலையைக் கடக்க ஒரு சின்ன இடைவெளிக் கூட இல்லை. ஆனால் ஒரே ஒரு மேம்பாலம் மட்டும் இருந்தது. அதில் ஏறி சாலையைக் கடக்கும் தெம்பு அவருக்கு இல்லை.

மாநகரங்கள் மட்டுமின்றி, எந்த சக ஜீவிகளுக் கூட பெரியவர்கள், வறியவர்களின் வலியை ஒருபோதும் உணர்ந்துக் கொள்ள எத்தனித்தது இல்லை. எந்த இடத்திலும், பெரியவர்களுக்காகவோ, மாற்று திறனாளிகளுக்காகவோ, தனியார் நிறுவனங்களும், அரசும் எந்தவித புரிதல்ம் இன்றியே நகரின் கட்டுமானத்தை நிர்ணயிக்கிறார்கள். இங்கே உடல் முழு வலிமையோடு யாருக்கு இருக்கிறதோ, அவரே முழு கட்டுமான சுகங்களையும் அனுபவிக்க முடியும். மாநகர சாலைகள் கூட பெரியவர்களுக்காக வழிவிட தயாராக இல்லை.

சாமிநாதன் சாலையை கடக்கும் அந்த சின்ன இடைவெளிக்காக, நடந்துக் கொண்டே இருந்தார். இளைஞர்களும், உடல் வலிமையுள்ளவர்களும், நடுசுவரை தாண்டி, சாலையின் மறுபக்கத்தை அடைவதை அவர் கவனித்துக் கொண்டே நகர்ந்து கொண்டிருந்தார்.

நகர்தலில் எங்கோ பிழை இருப்பது போல் மனம் உணர்த்திக் கொண்டே வந்தது. எப்படியாவது அந்த நடுசுவரை தாண்டி விட வேண்டும் என்று சாமிநாதன் உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு மீண்டும் நடுசுவரை அடைவதற்கு எத்தனித்தார். ஆனால் அவர் நகரும் வேகத்திற்குள், பத்து இருபது வண்டிகள் வேக வேகமாக அவரைக் கடந்து சென்றது. இரும்புக் கூட்டங்கள் சாரை சாரையாக, புயல் வேகத்தில் கடந்து சென்றால் எப்படி இருக்குமோ அப்படி நகர்ந்தது அந்த சாலையில் வண்டிகள். சின்ன இடைவெளிக் கூட இல்லாமல், கல்லூரி பேருந்துகளும், அலுவலக பேருந்துகளும், நகர்ந்துக் கொண்டே இருந்தது.

இத்தனை பெரிய வண்டிகளை, ராட்சதன் போல் அசுர வேகத்தில் நகர்ந்து செல்லும் தொனியை சாமிநாதன் ஒருநாளும், அவரது கிராமத்தில் பார்த்தது இல்லை. கிராமத்தின் எத்தனை விதமான மனிதர்களை பார்த்தாலும், எத்தனை விதமான நயவஞ்சகத்தை கிராமத்து மனிதர்களிடம் சந்தித்தபோதும் ஏற்படாத வாழ்வைப் பற்றிய அச்சம், மாநகரின் சாலைகள் அவருக்கு கொடுத்தது. ஒவ்வொரு பேருந்தும், இடி இடிப்பது போல் அவனுக்குள் அதிர்வுகளை உண்டுபண்ணி மறைந்தது. இவர்கள் எல்லாரும் எங்கே செல்கிறார்கள், ஏன் இந்த மஞ்சள் நிற ராட்சத பேருந்துகள் ஒன்றை ஒன்று முந்த எத்தனித்துக் கொண்டே இருக்கிறது. பேருந்துகளுக்கு இடையில் எத்தனை ஸ்கூட்டர்கள் சென்றுக் கொண்டிருக்கிறது? ஆனாலும் தனக்கு அதில் நுழைய சிறு வழிக் கூட இல்லையே என்கிற ஏக்கப் பார்வை சாமிநாதனை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

வண்டிகள் நகர்கிறது. சூரியன் அதைவிட வேகமாக மேற்கு நோக்கி நகர்கிறது. உடலில் இருந்து வெளியில் செல்லும் நீர்க்குமிழிகள் உணர்த்துகிறது உடலின் நீர்த் தேவையை. சாமிநாதனுக்கு தாகம் என்பதை தாண்டியும், எப்படியாவது குறைந்தபட்சம் அந்த நடுசுவரையாவது அடைந்து விட வேண்டும் என்கிற ஆர்வமும், கோபமும் மட்டுமே அதிகமாக இருந்தது.

வலது கையின் நடுவில் துண்டை இறுகப் பற்றிக் கொண்டு எப்படியாவது, அடுத்து சாரை சாரையாய் வண்டிகள் வருவதற்குள் அந்த நடுசுவரை அடைந்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். வலதுபக்கம் திரும்பிப் பார்த்தார். கொஞ்சம் தூரத்தில் வண்டிகள் அசுர வேகத்தில் வருவதை உணர்ந்தார். மீண்டும் முன்னோக்கி நகர்ந்தார். நின்று வலதுபக்கம் பார்த்தார். வண்டிகளின் போக்கு குறைந்தது. வேக வேகமாக நடுசுவரை நோக்கி ஓடினார். சடாரென ப்ரேக் பிடித்து நின்றது ஒரு வண்டி..

எங்கிருந்து திடீரென அத்தனை வண்டிகள் வந்தது என்று நினைப்பதற்குள், வண்டிகள் அடித்து எழுப்பிய ஹாரன் ஒளியில் அதிர்ந்துப் போய் மீண்டும் இந்த பக்கமே ஓடி வந்தார் சாமிநாதன்.

அதிர்ச்சியில் கொஞ்சம் நேரம் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தார். யாரிடமாவது உதவி கேட்கலாமா என்கிற கேள்வியை மனது கேட்டு முடிப்பதற்குள், வாழ்க்கையின் எந்த கணத்திலும், வாழ்வின் அடுத்த நகர்த்துதலுக்காக கூட யாரிடமும் உதவி கேட்காதபோது, இந்த சாலையை கடக்கவா உதவி கேட்க வேண்டும் என்கிற உபகேள்வியையும் மனம் பிரசவித்தது. தவிர எப்போதும் கிராமத்துக்காரர்களுக்கே உரித்தான அதே வைராக்கியமும், கர்வமும் சாமிநாதனுக்கு இப்போதும் உடனிருக்கிறது. அது சாலையை கடக்கும்போது கூட அவருடன்தான் வருகிறது. சாலையில் கடக்கையில் வழியில் எங்காவது அந்த வைராக்கியமும், கர்வமும் தொலைந்துப் போகக் கூடாதா என்று உப கேள்வி எழுப்பாத மனம் சிந்தித்துக் கொண்டேதான் வருகிறது.

இந்த முறை கையில் இருந்த துண்டை எடுத்து உடலில் இறுகக் கட்டிக் கொண்டு, நடுசுவரை அடைய தயாராக நின்றார். வேக வேகமாக, மனித அசைவைக் கண்டதும் பறந்தோடும் சிட்டுக் குருவி போல, பறந்தோடி நடுசுவரை அடைந்தார். இனி எப்படியாவது அந்த சுவரை தாண்டி விட வேண்டும் என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, நடுசுவரை இறுகப் பற்றிக் கொண்டு, இடது காலை கொஞ்சமாக தூக்கினார். முடியவில்லை. இந்தமுறை திரும்பி நின்றுக் கொண்டு வலது காலை கொஞ்சம் தூக்கி நடுசுவற்றில் ஏறிவிடப் பார்த்தார். முடியவில்லை.

‘ஏ, கிழவா ஒனுக்கு கொஞ்சமாச்சி, எதாச்சும் கீதா? ஏ சச்சி. இன்னும் கொஞ்சம் தூரம் நடந்து போய், அப்பாலிக்க ரோட கிராஸ் பண்ணு... ’ என்று சொலிவிட்டு ஒரு ஆட்டோக்காரர் சென்றுவிட்டார். இயலாமையும், வைராக்கியமும், கர்வமும் ஒருசேர இணையும் இடத்தை இப்போதுதான் சாமிநாதனே சந்திக்கிறார். ‘இவ்வளவு பேசிவிட்டு போகிறானே, அந்த ஆட்டோ காலியாக தானே இருக்கிறது. அதில் ஏற்றிக் கொண்டு போய், சாலையை கடக்க உதவினால்தான் என்ன’ என்று, இயலாமை கேட்ட கேள்விக்கு, வைராக்கியம் மறுப்பேதும் சொல்லவில்லை. ஆனாலும் ஆமோதிக்கவில்லை.

இப்போது சாலையைக் கடக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, எப்படியாவது வந்த இடத்திற்கு மீண்டும் செல்ல வேண்டும். நடுசுவற்றை ஒட்டியே நடக்க முடியாது என்பதை சாமிநாதன் உணர்ந்திருந்தார். ஆனால் சாலையின் அடுத்த பக்கத்திற்கு செல்வதை காட்டிலும், வந்த இடத்திற்கு செல்வது அத்தனை எளிதாக இருக்கவில்லை அவருக்கும். நடுசுவரை ஒட்டியே நடந்தார்.

எழுபதாண்டுகளாக கிராமத்தில் சந்தித்த எந்த நிகழ்வுகளும், சம்பவங்களும் சாமிநாதனுக்கு இத்தனை பெரிய அயர்ச்சியை கொடுத்ததில்லை. ஆனால் மாநகரில் சாலையை கடப்பதற்குள் சாமிநாதன் நொடிந்துப் போய்விட்டார். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும், அவரது மனதிற்குள் நிறைய அதிர்வுகள் உருவாகிக் கொண்டே இருந்தது. இப்படியான சாலைகள் மனிதர்களிடம் இருக்கும் மனிதத்தை எப்படியெல்லாம் அழித்திருக்க கூடும், இங்கே மனிதர்கள் ஏன் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதில்லை. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு கேள்வி எழுந்துக் கொண்டே இருந்தது சாமிநாதன் மனதில். பதில்தான் அங்கே கிடைக்கவில்லை.

வியர்வை தாரை தாரையாக கொட்டிக் கொண்டிருந்தது. தண்ணீர் தாகம் எப்போதும் இல்லாது, இப்போது அதிகமாகிக் கொண்டே சென்றது. இன்னும், இன்னும் என்றும், கொஞ்சம் கொஞ்சம் என்றும், மனதையும், கால்களையும் கொஞ்சிக் கொண்டே நடந்துக் கொண்டிருந்தார்.

வழியும் வியர்வையில், பார்வை கொஞ்சம் மங்கினாலும், கொஞ்சம் மூச்சை இழுத்து விட்டார். அந்த ஒற்றை சப்தமே சாலையைக் கடக்க ஒரு சிறு வழி இருப்பதை அவரது மனதுக்கு உணர்த்தியது.

இப்போது சாலையின் அடுத்த பக்கத்திற்கு செல்ல தயாரானார். இந்த முனையில் வண்டிகளின் போக்கு குறைவாகவே இருப்பது போல் அவருக்கு தோன்றியது. காரணங்களை ஆராய மனத்திலும், உடலிலும் வலுவில்லை. உடனே சாலையை கடக்க, மொத்த வலுவையும் திரட்டி, ஓட முயன்றார்.

க்க்க்க்க்க்க்க்க்க்க்கீஈஈஈஈஈஈஈஈ.... காதையும் தாண்டி நெஞ்சைப் பிளக்கும் ஹாரன் சப்தம். பார்வையில் விழாத ஏதோ ஒரு பெரிய வண்டி சாலையில் வேகமாக வந்ததை சாமிநாதன் கவனிக்கவில்லை. ஆனாலும், சுதாரித்துக் கொண்டு சாலையின் அடுத்தப் பக்கத்தில் விழுந்தார். இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த மூச்சை வெளியிட்டார். உயிர் என்னிடமே இருக்கிறது என்று கர்வப்பட்டுக் கொண்டார். அதுவரை அவரது வாழ்க்கையில் கேட்டிராத வசவு சொற்களை ஓட்டுனர் அள்ளி வீசிக் கொண்டிருந்தார். எழுந்து நடந்த சாமிநாதன் அவரை பார்த்து ஒற்றை சிரிப்பை வீசிவிட்டு நகர்ந்தார்.

இப்போதும் சாமிநாதனுக்கு வாழ்வின் மீதும், சக மனிதர்கள் மீதும் எவ்வித புகார்களும் இல்லை.

Wednesday, January 23, 2013

பள்ளி / கல்லூரிகளில் திரைப்படக் கழகங்கள் தேவையா?



எனக்கு தெரிந்து தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக திருவண்ணாமலை SKP பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் திரைப்படக் கழகம் தொடங்கப்படவுள்ளது. இது ஒரு அசாதாரணமான முயற்சி. இப்படி ஒரு திரைப்பட கழகம் பற்றி பொறியியல் கல்லூரி நிர்வாகம் யோசிப்பதே பெரிய விஷயம். அதையெல்லாம் தாண்டி அதை சாத்தியப்படுத்தி இருக்கும் SKP கருணா அவர்களுக்கு நன்றி.

தமிழ்நாட்டில் பள்ளி / கல்லூரிகளில் திரைப்படம் சார்ந்த படிப்பும், திரைப்படக் கழகங்களும் தேவையா என்கிற விவாதமே தேவையற்றது. தமிழ்நாட்டில் எல்லாரும் படிக்க வேண்டுமா? பள்ளி / கல்லூரிகள் தேவையா? ஏன் அவரவர் குலத் தொழிலை மேற்கொள்ளக் கூடாது என்கிற வாதம் எப்படி புறந்தள்ளப் பட வேண்டியதோ அப்படிதான் திரைப்படக் கழகம் பற்றிய விவாதமும். நான் எப்போதும் சொல்வது போல் மற்ற நாடுகளையும், தமிழ்நாட்டையும், திரைப்பட விசயத்தில் நாம் ஒப்பிட முடியாது. மேலை நாடுகளுக்கு திரைப்படம் என்பது கலை, பொழுதுபோக்கு. தங்களை உயிர்த்திருக்க அவர்கள் மேற்கொள்ளும் கலைப் பயணம். ஆனால் தமிழ்நாட்டில் திரைப்படங்கள்தான் எல்லாமும். நடிகர்கள்தான் கடவுள். திரைப்பட நாயகர்களே தங்களை ஆள வேண்டும், என அவர்களை மன்னர்களாக, கடவுளாக, உலகின் பிணி நீக்கும் நாயகனாக பார்க்கும் நம் நாட்டில், திரைப்படங்களை அத்தனை எளிதாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது.

இங்கே திரைப்படங்கள்தான் கலாச்சாரத்தை உருவாக்குகிறது. திரைப்படங்கள்தான் ஒரு மனிதனை மறுஉருவாக்கம் செய்கிறது. திரைப்படங்கள்தான் நமது மனநிலையை மாற்றுகிறது. திரைப்படம் ஒவ்வொரு தமிழனின் ரத்தத்திலும், நரம்பிலும் அனுஅனுவாக பதிந்துள்ளது. இங்கே வந்து திரைப்படம் சார்ந்தும், அதன் ரசனை சார்ந்தும் ஒரு பாடத்திட்டமோ, ரசனை வளர்ப்பு அமைப்புகளோ தேவையில்லை என்பவர்கள் என்னைப் பொறுத்தவரை மூடர்கள். திரைப்படங்கள்தான் இந்த சமூகத்தை சீரழிக்கிறது என்கிற வாதமும் காலம்காலமாக நடக்கிற ஒன்று. தெரிந்தோ தெரியாமலோ, அது உண்மையாக இருந்தாலும், இந்த சமூகத்தை சீர்படுத்தவும் திரைப்படங்களால் மட்டுமே முடியும். அதுதான் திரைப்படங்களின் அழகியல் முரண்பாடு.

நமது உண்மையான கலாச்சாரம் என்ன என்பது கூட இங்கே மறுபரிசீலனைக்குரியது. நாம் நமக்கான எல்லாவற்றையும் இழந்து வருகிறோம். நம்மை கேளிக்கைகளை வைத்தே, கேளிக்கைகள் மூலம் வந்த இந்த அரசுகள் முடக்க நினைக்கிறது.

தமிழ்நாட்டில் திரைப்படங்களை எடுக்க மட்டுமல்ல, சரியாக பார்க்கவும் சொல்லித் தரவேண்டிய அவசியம் இருக்கிறது.

நமது தாய்மொழியல்லாத வேறொரு மொழியை கற்றுக் கொள்ள நாம் விரும்பினால் அதற்கான நமது காத்திருத்தல் அவசியம். ஆனால் சினிமா என்கிற மொழியை மட்டுமே கேமராவை தூக்கிய யாருவேண்டுமானாலும் தெரிந்துக் கொள்ளலாம் என்பது எப்படி சரியாகும். திரைப்படத்தை ஒழுங்காக படிக்க வேண்டும். அல்லது அதற்கான மெனக்கெடல் வேண்டும். திரைப்படத் தொழில்நுட்பத்தை படித்தவர்கள் மட்டுமே திரைப்படம் எடுக்க வரவேண்டும் நான் சொல்லவில்லை. ஆனால் திரைப்படம் எடுக்க வேண்டும், அதுதான் நமது தொழில் என்று நீங்கள் உறுதியாக முடிவெடுத்துவிட்டால், நிச்சயம் அதற்கான மெனக்கெடல் மிக முக்கியம்.

கணிதம், வேதியியல், இயற்பியல், போன்ற பாடங்களை நாம் ஏன் படிக்க வேண்டும்? என்கிற கேள்விகளுக்கு இடமளிக்காத ஒரு சமூகம், விளையாட்டு, சினிமா போன்ற துறைகளுக்கு மட்டும் இந்த மாதிரியான கேள்விகளை முன்வைப்பது அபத்தமானது.

திரைப்படங்கள் உருவாக்கி வைத்திருக்கும் போலியான பல கட்டமைப்புகளை உடைத்தெறியவும், திரைப்படத் துறையில் குறைந்தபட்ச நேர்மை உருவாகவும் இது மாதிரியான திரைப்படக் கழகங்கள் அவசியம் தேவை என்பதை ஒருபோதும், யாரும் மறுக்க முடியாது.

SKP பொறியியல் கல்லூரியின் இந்த முயற்சி மகத்தானது. அதற்காக SKP கருணா அவர்களுக்கு மீண்டும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்வரும் வெள்ளி, மற்றும் சனிக்கிழமை SKP பொறியியல் கல்லூரியில் திரைப்படக் கழகம் தொடக்க விழா சிறப்பாக நடக்கவிருக்கிறது. அதற்கான அழைப்பிதழை அடுத்து இணைக்கிறேன். திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற நண்பர்கள் அவசியம் இந்த நிகழ்வில் கலந்துக் கொள்ளவும்.

இந்த திரைப்படக் கழகத்தின் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. செவ்வனே செய்து முடிக்க விழைகிறேன்.

அழைப்பிதழ்:




Tuesday, January 22, 2013

அன்பாலே அழகான வீடு!!!

தேவக்கோட்டை பொங்கல் பயணம் பற்றி எழுத நினைத்து தினமும் தோற்றுக் கொண்டிருக்கிறேன். ஒரு பெரிய நிறுவனத்தில் வேளையில் இருக்கும்போது கூட இவ்வளவு பிசியாக இருந்ததில்லை. இப்போது எழுதவதற்கே நேரம் கிடைக்காமல் இருக்கிறேன்.

நீராதரமின்றியும் பசுமையாக இருக்கும் வயல்வெளிகள்

 ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவிற்கு ஏதாவது ஒரு கிராமத்திற்கு சென்று விடுவது என்பதை கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தொடர்ந்து கடைபிடிக்கிறேன். அதன்படி இந்த ஆண்டு நண்பன் தினேஷின் கிராமமான தேவகோட்டை திருவொற்றியூர் அருகே உள்ள நடியக்குடி என்கிற கிராமத்திற்கு சென்றோம். சுந்தர், தினேஷ், நவராஜும் கலந்துக் கொண்டார்கள். காரைக்குடியில் காலையில் தினேஷின் உறவினர் ஒருவர் வீட்டில் பொங்கல் வைத்து, காலை உணவை முடித்துக் கொண்டு தேவக்கொட்டைக்கு சென்றுக் கொண்டிருந்தோம். இடையில் நண்பர் பிரின்ஸ் அழைத்திருந்தார். காரைக்குடியில் தான் இருக்கிறேன் (காரைக்குடிதான் பிரின்சின் சொந்த ஊர்), வாங்க சாப்பிட்டுவிட்டுப் போவோம் என்றார். நேரம் கிடைத்தால் வருகிறேன் என்று சொல்லி இருந்தேன். ஆனால் கடைசி வரை பிரின்ஸ் வீட்டிற்கு செல்ல நேரம் கிடைக்கவில்லை.

ஐந்து கிலோமீட்டர் நடை...

மூன்று பேருந்துகள் மாறி, இறுதியாக திருவொற்றியூர் சென்று சேர்ந்தோம். இங்கிருந்து கொஞ்ச தூரம் நடக்க வேண்டும் என்று சொன்னான் தினேஷ். கிராமத்தில் நடக்க வலிக்கிறதா என்ன என்று சொல்லிக்கொண்டு நடக்க தொண்டங்கினோம். உண்மையாகவே வலிக்கத்தான் செய்தது. கொஞ்சம் தூரம் என்பது கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர்கள். வேறு வழியே இல்லை, பேருந்து வசதியோ, சேர் ஆட்டோ வசதியோ கிடையாது. வழியெங்கும் வயல்வெளிகள் பசுமை போர்வைகலாக காட்சியளித்துக் கொண்டிருந்தன.

மலையாள எழுத்தாளர் பால் சக்காரியா ஒருமுறை சொன்னது நினைவுக்கு வந்தது. கேரளா மக்கள் தங்கள் மாநிலத்தின் பசுமைப் பற்றியோ, அதன் விவசாய செழுமை பற்றியோ பேசுவதில் பெரிய சிலிர்ப்பு கொள்ளத் தேவை இல்லை. ஆனால், எந்தவித நீராதரமும் இல்லாத பல இடங்களில், எங்கிருந்தோ எல்லாம் நீரை எடுத்து வந்து சாகுபடி செய்யும், கடின உழைப்பாளிகள் நிறைந்த தமிழ்நாடு அதற்காக நிச்சயம் கர்வம் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று சொல்லி இருந்தார். அதனை தேவக்கொட்டையில் நேரில் பார்த்தேன். சிவகங்கை மாவட்டமே வரட்சியானதுதான். அவர்களுக்கு என்று சொல்லிக் கொள்ள பெரிய அளவில் நீராதாரங்கள் இல்லை. ஆனால் திருவெற்றியூரில் இருந்து நடியக்குடி கிராமத்திற்கு செல்லும் ஐந்து கிலோமீட்டருக்குமான தூரத்தில் நான் பார்த்த இடமெல்லாம் பசுமையாகவே இருந்தது. ஆனால் ஆங்காங்கே தென்படும் எந்த நீர்நிலைகளிலும் நீர் இருப்பு இல்லை. அவர்கள் மழையையும், தங்கள் உழைப்பையும் நம்பி மட்டுமே சாகுபடி செய்கிறார்கள். அத்தனை ஆயிரம் ஏக்கர்களில் நிச்சயம் சில ஆயிரம் ஏக்கர் பயிர்கள் இன்னும் கொஞ்சம் நாட்களில் கருகிவிடும் என்பது நிதர்சனமான உண்மை. இன்னும் ஒரு மழை வந்திருந்தால், அந்த பயிர்களும் தழைத்திருக்கும். கண் அதன் எல்லை தொடும் தூரம் வரை நான் கண்ட பச்சை போர்வைகள், நிச்சயம் அடுத்த சில மாதங்களில் வெறும் பொட்டல் காடாகத்தான் காட்சியளிக்கும்.

களைப்பின் வலியறிந்து, ஆங்காங்கே ஆசுவாசப்படுத்திக் கொண்டே கிராமத்திற்கு சென்று சேர்ந்தோம்.



நான்கைந்து குடும்பங்கள் சேர்ந்த கூட்டுக் குடும்பம். தோராயமாக பத்து சிறுவர்கள். என தினேஷின் சித்தி சித்தப்பாக்கள் நிறைந்த அந்த வீடு முழுவதும் அன்பே பிரதானமாக நிறைந்து வழிந்தது. போய் சேர்ந்ததும், நிறைவான உணவை முடித்துக் கொண்டு, சிறிது நேரம் பேசிவிட்டு ஊரை சுற்றிப் பார்க்க கிளம்பினோம். 

நடந்து வந்த வழியிலேதான் மீண்டும் சென்றோம். இந்த முறை சிறுவர்களுடன் சைக்கிளில் பயணித்தோம். அந்த ஊரில் இருக்கும் மிக பழமையான, கொஞ்சம் பீதியைக் கிளப்பும் சிவன் கோவில். சுற்றி இருந்த மரங்களில் இருந்து மயில்கள் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தன. பயத்தின் பருமனை கூட்டுமளவிற்கு அதன் ஒலி தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. அதிகம் மக்கள் நடமாட்டம் இல்லாத கோவில் என்பது அதன் பராமரிப்பில் இருந்தே தெரிந்தது. அரசின் கட்டுப்பாட்டில்தான் கோவில் இருப்பதாக சொன்னார்கள். ஒரே ஒரு பூசாரி, பூசைகளை முடித்துக் கொண்டு சென்றுவிட்டது அங்கே எரிந்துக் கொண்ட அகர்பத்தியின் வாசத்திலேயே தெரிந்தது. தொலைகாட்சி சீரியல் நண்பர்கள் இந்த இடத்தை பார்த்தால் நிச்சயம் ஒரு மர்ம மெகா சீரியல் எடுத்து விடுவார்கள். 

எப்போதும் உடனிருந்த எங்களை வழிநடத்திய சிறுவர்கள்

கோவிலுக்கு உள்ளே நிறைய தடைகளை தாண்டி சென்று சிவலிங்கத்தை புகைப்படம் எடுத்துப் பார்த்தோம். புகைப்படம் நன்றாகவே தெரிந்தது. எனவே கொஞ்சம் பயம் விலகியது. ஆனால் அடுத்த நிமிடமே நவராஜ், இன்னொரு புகைப்படம் எடுத்து எல்லாரையும் பீதியடை செய்தார். நேரில் பார்க்கும்போது உடைந்திருந்த கோவில் கதவு, புகைப்படத்தில் உடைச்சல் இல்லாமல் இருந்தது. அடுத்த கணத்தில், நெஞ்சாங்கூட்டில் பெருச்சாளி ஓடுவது போல் இருந்தது. ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்ததில் உண்மை தெரிந்தது. உடைச்ச்சளுக்கு பின்புறம் இருந்த அதே நிறத்திலான சுவர் புகைப்படத்தில் உடைச்சலை மறைத்திருந்தது. பயம் தெளிந்தாலும், உள்மனதில் கொஞ்சம் பயம் மறைந்துக் கொண்டுதான் இருந்தது. இருட்டுவதற்குள் அங்கிருந்து கிளம்பி வெளியில் வந்து கொஞ்சம் நேரம் விளையாடிவிட்டு வீடு திரும்பினோம். மின்சாரம் பாதி நேரம் இல்லாமல்தான் இருந்தது. ஆனால் மின்சாரம் இல்லாத குறையே எங்களுக்கு தெரியவில்லை. சிறுவர்கள் இருக்கும் இடத்தில் ஒருபோதும் நமக்கு இந்த மாதிரியான செயற்கை பொழுதுபோக்கே தேவை இருக்காது. காலநிலையும் அருமையாகவே இருந்து. மிக குறிப்பாக நாங்கள் அங்கே தங்கி இருந்த இரண்டு நாட்களும் ஒரு கொசுவைக் கூட நான் பார்க்கவில்லை. கொசுக்கள் இல்லாத நிம்மதியான நிறைவான தூக்கம் அன்று இரவு சாத்தியப்பட்டது.


மர்மக்கோவில்

அடுத்த நாள் மாட்டுப் பொங்கல்.. நாங்களும் எங்கள் வரகரிசியில் பொங்கல் செய்ய தயாராக இருந்தோம்.

தொடரும்...