Tuesday, March 15, 2011

அஞ்சல் பெட்டி - சிறுகதை


ஒற்றை மார்பை மறைக்கும் மேல்துண்டு, வத்திப்போன வயிற்றை கொடிமலர் போல சுற்றிக் கொண்டிருக்கும் அரைஞான் கயிறு, அதுப் பிடித்துக் கொண்டிருக்கும் அரை முழ வேட்டி என வாழ்வாங்கு வாழ்பவர் தாத்தா.

ஈரைந்துப் பருவத்தின் சுட்டித் தனம், வெள்ளைநிற மேலாடை, பட்டில்லாத ஆனால் பட்டுப் போகாத, பட்டு மாதிரியான ஒரு பாவாடை கட்டி, தன் பருவத்தின் சுமையை சுமை என்றே தெரியாமல் பருகும் யாழினி. தாத்தாக் கைப்பிடித்து நடக்கையில் அவரது வேகத்துக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் தடுமாறினாலும், ஒரு நாளும் "மெதுவாப் போ" தாத்தா என்று கூக்குரல் எழுப்பாதவள். எப்படியாவது ஒரு நாளாவது தன் தாத்தாவின் வேகத்திற்கு ஈடுக்கொடுத்து நடந்துவிட வேண்டும் என்று அவள் மனம் முழுக்க ஆசைகளை ஆர்த்துக் கொண்டாலும் ஒவ்வொரு முறையும் தோற்றுக் கொண்டே இருப்பாள். அந்த நேரத்தில் எதுப் பற்றியும் கவலைப் படாமல் வேகமாக நடக்கும் தன் தாத்தாவின் முகம் பார்த்து தன் நேரிழையை சரி செய்துக் கொண்டு மீண்டும் வேகமாக நடக்க முயர்ச்சிப்பாள்.

அவள் எப்போதும் தன் தாத்தாவின் எல்லா குறைகளையும் நிறையாகவே பார்த்து பழக்கப்பட்டவள். கன்னங்கள் ஒட்டிப் போய், ஜீவனற்று கிடக்கும் அந்த முகம், துருத்திக் கொண்டிருக்கும் அந்த பற்கள், மதர்த்து எழும் அந்த வயிறு என தாத்தாவின் அந்திமக் கால அழகு அவளுக்கு ஏதோ ஒரு புத்துணர்ச்சியை கொடுப்பதாக உணர்ந்திருக்கிறாள். ஒவ்வொரு இரவும், தன் தாத்தா சொல்லும் கதைகளை கேட்டுக் கொண்டே அந்த கதையின் உலகத்திற்குள் சென்று உறங்கி விட்டாலும், மறுநாள் அவளுக்கு வேறொரு கதை தேவைப்படும். பேய்க் கதைகளை சொல்லும்போது இருளின் குரூரத்தில் தாத்தாவின் ஒற்றைப் பல் கொடுக்கும் பயம் அவளை இருண்மையின் அகலாத பக்கங்களுக்கு கொண்டு சென்றாலும், ஆற்றவொண்ணா வலியை ஏற்படுத்தினாலும், அவளுக்கு மீண்டும் அதைவிட குரூரமான பேய்க் கதை தேவைப்படும்.

"அண்ட சராசரமே அடங்கி நிற்க... மரம், பறவை, எல்லாம் ஒடுங்கிப் போக... டக்...டக்..டக்.. நு ஒரு சத்தம்..அப்படியே ஒரு பெரிய அமைதி... உஸ்... உஸ்ஸ்.. காத்து மெதுவா அடிக்க ஆரம்பிக்குது.. திடீர்னு கதவு மூடுது. சன்னலெல்லாம் அடிச்சி அடிச்சி சாத்துது. மறுபடியும் அப்படியே ஒரு பெரிய அமைதி.. அஞ்சு நிமிஷம் எதுவும் ஆடாம அசையாம நிக்குது. அடுத்த நொடியில பேய் உள்ள வந்து.. வந்து.. என்று தாத்தா தன் நீண்ட விரல்களை யாழினியிடம் கொண்டு செல்வதற்குள் அவள் பயத்தில் அலற மறுநாள் காய்ச்சலே வந்துவிடும். அதற்கு தாத்தா வேறொரு கதை சொல்லி காய்ச்சலை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும் வித்தையையும் கற்று வைத்திருந்தார். மலைமேல் அமைந்துள்ள குடிசையில் உண்ணுவதையும், உறங்குவதையும் தவிர தாத்தாவுக்கு ஒரு பெரிய வேலை உண்டு. ஒவ்வொரு முறையும் கடிதம் வரும்போது தாத்தா யாழிணியைக் கூட்டிக் கொண்டே மலை முகட்டில் இறங்கி தினையூர் கிராமத்து கணக்கு வாத்தியார் சிவதாணுப் பிள்ளையிடம் சென்று பணம் வாங்கி வருவார். அடுத்த ஒரு மாதத்திற்கு அதுதான் அவர்களுக்கு உணவளிக்கும் காருண்யம்.

கிளிங்...கிளிங்..மணியோசை சப்தத்தோடு 'போஸ்ட்'... என்று கூறிக் கொண்டே தாத்தா வருமுன்னரே தூக்கி எறிந்துவிட்டு அனாயசமாக பறந்து சென்றுவிட்டார் போஸ்ட்மேன். வயதான காலத்தில் தட்டு தடுமாறி ஓடி வருவதற்குள் அவர் முகத்தில் பட்டு கீழே விழுந்த காகித பட்சிகள் அவரை ஏளனம் செய்வது போல் சிரித்து நின்றன.

"படுக்காளிப் பய தண்ணியில தூக்கி எறிஞ்சிட்டுப் போறான் பாரு" என்று உதடுகள் வார்த்தையை உதிர்க்கும் முன்னரே அவர் கரங்கள் கடிதத்தைப் பொருக்கி எடுத்துவிட்டன. ஒவ்வொரு முறையும் தபால்காரர் தூக்கி எறிவதும், தாத்தா பொருக்கி எடுப்பதுமாக இருப்பதை யாழினி தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கிறாள். ஒரு வேலை போஸ்ட்மேன் மாமாவுக்கும், தாத்தாவுக்கும் ஏதோ சண்டையாக இருக்குமோ என்று அவள் மனதுக்கு சமாதானம் சொன்னாலும், அந்த சின்ன அறிவு சனாதானமாய் அந்த கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

தாத்தா தினையூர் நோக்கி புறப்பட்டார். பேத்தியின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு அவர் நடக்கும் அழகே தனி. இறங்கி செல்லும் சாலைகளில் பேத்தி சறுக்கி விழுந்துவிடுவாலோ என்று தன உள்ளங்கைக்குள் அவள் விரல்களைப் பதித்துக் கொண்டு முகட்டில் அவர் இறங்கி செல்வதை மற்றவர்கள் எப்போதும் கேலிப் பேசிக் கொண்டே இருப்பார்கள்.

"பாரு கிழவன் பேத்திய மாட்ட இழுத்துப் போரதுப் போல் இழுத்துட்டுப் போறான்"

அன்று தினையூர் நோக்கி செல்கையில் தான் யாழினி அந்தக் காட்சியைப் பார்த்தாள். எப்போதும் அவள் வீட்டில் கடிதத்தை தூக்கி எரிந்து விட்டு செல்லும் போஸ்ட்மேன், கோந்து மாமா (எப்போதும், யாரிடம் பேசினாலும் கோந்து போல் ஒட்டிக் கொண்டிவிடுவதால் கிராமத்தில் அவருக்கு அந்த பெயர், ஊரில்) வீட்டில் மட்டும் வண்டியை விட்டு இறங்கி ஒரு பெட்டியில் போட்டுவிட்டு போவத்தைப் பார்த்தாள். அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள ஒன்றும் இல்லையென்றாலும், மீண்டும் ஒரு முறை தாத்தாவின் கை இடுக்கையில் இருந்து திரும்ப முடியாமல் மெதுவாக திரும்பி பார்த்தாள். மெதுவாய்.. மெதுவாய்.. இன்னும் மெதுவாய்..கால்கள் தட்டுதடுமாறி முன்னோக்கி சென்றன.

மறுநாள் குப்பைகளில் இருந்து நிறைய காகித அட்டைகளை அவள் பொருக்கி எடுத்துக் கொண்டு இருப்பதை பார்த்த தாத்தா "ஏ ஆத்தா என்ன பண்ற அங்க.. அங்கன எல்லாம் போகக் கூடாது வா இங்கன" என்றார்.

தாத்தாவின் அழைப்பை நிராகரித்தவளாய் மீண்டும் அட்டைகளை தேடிக் கொண்டிருந்தாள். முக்குக்கு சென்று கோந்து மாமா வீட்டில் இருந்த அஞ்சல் பெட்டியை ஒரு முறை நன்றாக உற்றுப் பார்த்தாள். மீண்டும் வீட்டிற்கு ஓடி வந்து அட்டைகளை பல்வேறு அளவுகளில், வடிவங்களில் வெட்டி வைத்துக் கொண்டாள். பிஞ்சுக் கைகளில் கத்தரிக் கூட பிடிக்க இயலாமல் காய்கறி வெட்டும் கத்தியில் அட்டைகளை கத்தரித்தாள். ஒரே ஒரு அட்டையில் துளையிடும்போது கையில் கத்திப் பட்டு ரத்தம் வர ஆரம்பித்தது. ஆனால் அதனை பெரிய விடயமாக பாவிக்காத அவள் காரியமே கண்ணாய் இருந்தாள். வெட்டிய அட்டைகளை ஒவ்வொன்றாக இணைக்க பசை தேவைப்பட்டது. ஆனால் பசை வாங்க தாத்தாவை காசு கேட்டால் திட்டுவார் என்று அவளாகவே யூகித்துக் கொண்டு, சோற்றுப் பருக்கைகள் கொண்டு அட்டைகளை ஒட்டினாள். இருந்தாலும் அவை சரியாக ஒட்டிக் கொள்ளவில்லை. பூவில் வந்தமரும் பட்டாம்பூச்சி தேனெடுக்க பல்வேறு கோணங்களில் அமர்ந்துப் பார்த்தப் பின்னர் ஒரு நிலையை தேர்ந்தெடுத்து அமருவது போல் அட்டைகளை ஒட்ட பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்டு, இறுதியாக வெள்ளைத்தாள்களை இணைப்பானாக பயன்படுத்தினாள்.

அவை, அட்டைகளை ஒரு வழியாக இணைத்தது. இன்னும் அவள் நினைத்த வடிவத்தில் அந்த அட்டைகள் அமரவில்லை. அதற்கு இன்னும் அட்டைகள் தேவைப்படவே, தனது பள்ளிக்கூட நோட்டிலிருந்து சில அட்டைகளை கிழித்து பயன்படுத்தினாள். பேத்தி விளையாடக் கூட செல்லாமல் ஏதோ அட்டைகளை வைத்து செய்வதை பார்த்த தாத்தா முதலில் வையத்தான் செய்தார். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு அது ஒரு வடிவத்திற்கு வருவதைப் பார்த்ததும், அமைதியானார். அன்று அவள் நினைத்த உருவத்திற்கு கொண்டு வந்துவிட்டாள். உண்ண வைத்திருந்த சோற்றுப் பருக்கைகளையும் சேர்த்து இதற்காக பயன்படுத்தினாள். இப்போது பேத்திக்கும், தாத்தாவுக்கும் இடையே ஒரு சின்ன புன்னகை மட்டுமே பூத்திருந்தது. ஒற்றைப் பல்லை துருத்திக் கொண்டு தாத்தா சிரிக்க, வெட்கப் பட்டுக் கீழே குனிந்துக் கொண்டு பேத்தி சிரிக்க மீட்டப்படாத வீணை ஒன்று மீட்டப்பட்டது போல் ஒரு உணர்வில் தத்தா கொக்கரித்தார்.

இப்போது மீண்டும் முக்கில் இருக்கும் கோந்து மாமா வீட்டிற்கு சென்று அஞ்சல் பெட்டியைப் பார்த்து வந்தாள். அவளுக்கு இப்போது தேவை சிகப்பு வண்ண தாள்கள். அதற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். தாத்தா தானாகவே கடைக்கு சென்று சிகப்பு வண்ணத் தாள்களை வாங்கிக் கொண்டு வந்து பேத்தியின் அருகே வைத்து விட்டு ஒன்றும் பேசாமல் சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்து சிரித்தார். அவளுக்கு சிரிக்க நேரம் இல்லை போலும், தாத்தாவை மேற்கொண்டு பார்க்காமல் வேலையைத் தொடங்கினாள். மிக நேர்த்தியாக கோந்து மாமா வீட்டில் இருப்பதைப் போன்ற ஒரு அஞ்சல் பெட்டியை அவளும் செய்து விட்டாள்.

ஆனால் அதை இப்போது எங்கே வைப்பது என்று யோசித்தால். நாயக்கர் மாமா வீட்டில் இருப்பது போன்ற அகன்ற கதவு இல்லை. அவளுக்கு தெரியவில்லை, முதலில் அவர்களுக்கு இருப்பது போன்ற வீடே நமக்கு இல்லை என்று. ஆனால் அவளுக்கு கதவு இருந்தால் அதுவே போதுமானதாக இருந்தது. இப்போது அந்த அஞ்சல் பெட்டியை எங்கே தொங்கவிடுவது?.. வாசலருகே பதின்பருவ பெண் போல் வளர்ந்திருந்த வேப்பம் மரத்தில் ஒரு ஆணி அடித்து அதில் தொங்கவிட்டாள். அது போஸ்ட்மேன் மாமா வண்டி ஓட்டிட்டு வர ரோட்டுக்கு மிக அருகாமையிலேயே இருந்தது அவளுக்கு மகிழ்ச்சி.
கரு தரித்த பெண் பிறக்கப் போகும் குழந்தைக்காக காத்திருப்பது போல் போஸ்ட்மேன் மாமா எப்போது வருவார் என்ற ஆவலுடன் யாழினி காத்திருந்தாள்.

அன்று காலை, வாசலின், வேப்பமரத்து நிழலில் தன் தோழிகளுடன் பாண்டியாட்டம் ஆடிக் கொண்டிருந்தாள். ஒற்றைக் காலில் மீனுக்காக தவமிருக்கும் கொக்கு போல் மிக லாவகமாக பாண்டியாட்டத்தில் ஒற்றைக் காலில் அவள் ஆடும் அழகை வச்சக் கண் வாங்காமல் தாத்தா மட்டுமின்றி அந்த கிராமமே பார்த்து லயிக்கும். கைகளால் பாவாடையை முழங்கால் வரைத் தூக்கிக் கொண்டு, கழுத்தை மேல் நோக்கி வைத்துக் கொண்டு, சிறிய கல்லை இடது காலின் பெருவிரலில் பொருத்திக் கொண்டு, கல் கீழே விழாமல் அடுத்தப் பகுதிக்கு அவள் சென்று முடிக்கும் வரை பார்ப்பவர்களுக்கு நெஞ்சு பட படவென்று இருக்கும். பாருக்கும் எல்லோரையும் வயது வித்தியாசமின்றி தனது ஆட்ட நேர்த்தியால், உள்ளே இழுத்து சொக்க வைக்கும் பெருந்திராணி பெற்றவள் அவள்.

அவள் ஆட்டம் முடிந்ததும், போஸ்ட் மேன் மாமா தூர வருவதை பார்த்துவிட்டாள். பேத்தியாட்டம் முடிந்ததும், தாத்தா உள்ளே சென்றுவிட்டார். எல்லா சப்தங்களும், நின்றுப் போய், எல்லா அசை பொருட்களும் அசைவற்றுப் போய் ஒட்டுமொத்தமாக போஸ்ட் மேன் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்த்தவாறே இருந்தது. அவள் போஸ்ட் மேனை பார்க்காமல் திரும்பிக் கொண்டிருந்தாள். போஸ்ட்மேன் அவளைத் தாண்டியதும், மெதுவாய் தலைத் திருப்பிப் பார்த்தால். போஸ்ட்மேன் வேப்ப மரத்தினருகே வந்துவிட்டார். டக்.டக்.. ட..ட..என்று இதயத் துடிப்பும் மிக மெதுவானது.... விழிகளோ இமை இருப்பதையே மறந்துப் போனது.

இந்த முறை அவள் வீட்டிற்கு கடிதம் வரவில்லை.. போஸ்ட்மேன் வேகமாக சென்றுவிட்டார். முகத்தை அஷ்டக் கோணலாக்கி, ச்ச... என்று வாயை சுழித்திக் கொண்டாள். உள்ளே ஓடிப் போய் "ஏன் தாத்தா இந்த மாசம் நமக்கு கடிதாசி வரல" என்றாள். எனக்கு எப்படிமா தெரியும். நாளைக்கு வருமோ என்னவோ? அதெல்லாம் வந்தா ஆச்சி.. இல்லனா ஒன்னும் பண்ண முடியாது மா",

"அப்போ நாம இந்த மாசம் தினையூர் போக மாட்டோமா", என்றாள்.

இந்த வாரம் முழுக்க கடிதாசி வரலானா, அடுத்த வாரம் நேர்ல போய் பார்க்கலாம் மா"

ஆசை ஆசையாய் செய்த அஞ்சல் பெட்டிக்கு என்றாவது ஒரு நாள் போஸ்ட்மேன் மாமா கடிதாசி கொண்டுவார் என்று அவள் காத்திருந்தார். ஆனால் பல மாதங்கள் கடந்தும் அவர்களுக்கு கடிதாசி வரவில்லை. போஸ்ட் மேன் அவ்வழியே செல்லும்போதெல்லாம் ஓடி வந்து அவர் கடிதாசியை அஞ்சல் பெட்டியில் போடுவாரா, என்று பார்த்து, ஏமாந்து முகத்தை கீழே புதைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிடுவாள்.

அந்த அஞ்சல் பெட்டி செய்ய அவள் செலுத்திய உழைப்பைக் காட்டிலும், அதனை தனது தாத்தாவுக்கான பெரிய அடையாளமாக அவள் கருதினாள். இனி தாத்தாவும் ஓடோடி சென்று கடிதாசி வாங்க வேண்டாம். போஸ்ட் மேன் மாமாவும் கடிதாசியை தூக்கிப் போடா வேண்டாம். கடிதாசியும் ஒரு போதும் ஈரத்தில் விழாது என்றும் அவள் மனதுக்குள் மத்தாப்பூ பூத்து, நொடிக்குள் அடங்கி போனது போல் ஆனது. என்றாவது கடிதாசி வருமென்று அவள் காத்திருந்தாள்.

ஒரு மழைக்காலத்தில் அட்டையாலான அஞ்சல் பெட்டி முழுக்க நைந்துப் போனது. பல மாதங்களாய் கடிதாசியும் வரவில்லை. இனி அஞ்சல் பெட்டி எதற்கு என்று அவளும் அதை அப்படியே தூக்கி எரிந்து விட்டு குடிசைக்குள் செல்கையில்.. "பெரியவரே போஸ்ட்" என்று கடிதாசியை வீட்டுக்குள் தூக்கி போட்டுவிட்டு போஸ்ட்மேன் சென்றுவிட்டார். மழையின் ஈரத்தை உள்வாங்கி இருந்த தரையில் பட்ட கடுதாசியில் ஈரம் ஒட்டிக் கொண்டிருந்தது. தாத்தா ஓடி வந்தார்.

"படுக்காளிப் பய தண்ணியில தூக்கி எறிஞ்சிட்டுப் போறான் பாரு" என்று உதடுகள் வார்த்தையை உதிர்க்கும் முன்னரே அவர் கரங்கள் கடிதத்தைப் பொருக்கி எடுத்துவிட்டன.

யாழினியின் கண்கள் குப்பையில் தூக்கி எறியப்பட்ட அட்டையாலான அஞ்சல் பெட்டியை பார்த்துக் கொண்டிருந்தது. உதடுகளை சுழித்துக் கொண்டு மீண்டும்
தன் நோட்டுப் புத்தகங்களை எடுக்க விரைந்தாள். நாளை மற்றுமொரு நாளே..

Monday, March 7, 2011

தற்குறி



இருவருக்கும் இடையேயான மௌனம் எப்போது கலையும் என அலைகள் வந்து வந்து பார்த்து சென்றன. அவள் விரல்களால் மணல்பரப்பில் உருவங்களற்ற அரூபங்களை, சித்திரமாக வரைந்துக் கொண்டிருந்தாள். அவன் அவள் அழகில் லயித்துப் போனவனாய், ஒழுங்கற்ற வீதியில் பறந்து செல்லும் தட்டான் பூச்சி போல அவள் அழகை ஒழுங்கற்ற பார்வையால் பருகிக் கொண்டிருந்தான். எல்லா ஓவியர்களின் கையெழுத்தும் அழகாய் இருப்பது போல், காதலிக்கப்படும் எல்லா பெண்களும் அழகாகத்தான் இருக்கிறார்கள் என்று உள்மருவிக் கொண்டான். அவளின் அங்கங்களை அணு அணுவாய் ரசித்தப் பின்னர்தான் அவள் விழிகளில் கசிந்த கண்ணீர் அவனுக்குக் காணக் கிடைத்தது. புல்வெளியில் பட்டு, அதன் பரப்பில் தெறிக்கும் பனித்துளியைப் போல தனக்கும் அவள் கண்ணீருக்கும் எந்த நேர்க்கோட்டு தொடர்பும் இல்லை என்பதாக அவன் பார்வையை திருப்பிக் கொண்டான். அவளின் கண்ணீர்த் துளி மணலில் அவள் வரைந்த அரூபமான சித்திரத்தின் மீது பட்டு சித்திரத்தின் கண் போல் உருபெற்றது. அடுத்த கண்ணீர்த்துளி வழிந்தோடி சித்திரமே அழுவது போல் மாயையை உண்டு பண்ணிற்று.

கட்டுண்டு கிடக்கும் இந்த சமூகத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்ள அவளுக்கு மனமில்லை. மானம் என்கிற ஒற்றை சொலவடை ஒரு சமூகத்தை, அதன் கூறுகளை, தர்க்க ரீதியான நியாயங்களை, இடையீடுகளை, எப்படியெல்லாம் காயப் படுத்துகின்றன என்று அவள் மனம் தனக்குள் கதைத்துக் கொண்டிருந்தது. பருவம் அடைந்த ஒரு பெண் தனக்கான ஒரு துணையை தேடிக் கொள்ள, அவள் குடும்பமே சம்மதித்தாலும், மானம் என்கிற ஒற்றை சொல்லும், சமூகம் என்கிற கட்டுக்கோப்பு கேந்திரமும் அந்த சம்மதத்தை அசம்மதமாக மாற்றிவிடுகிறது. இன்னமும் அவன் அவளை உதாசீனப்படுத்திக் கொண்டிருந்தான். அவள் தனக்கான நியாயங்களை உருவாக்கிக் கொள்ளும் வார்த்தைகளுடன் போரிட்டுக் கொண்டிருந்தாள். அவன் மெல்ல திரும்பி அவளைப் பார்த்தான்.

"இப்ப என்னதான் சொல்ற, வர முடியுமா, முடியாதா?"

அவன் வார்த்தைகள் முற்றுப் பெறுமுன்னர் அவள் கண்ணீர் வேகமெடுக்க ஆரம்பித்தது. சப்தமில்லாமல் அழுத அவள் இப்போது தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தால். தன்னை தேற்றுவதற்கு இவன் ஒரு வார்த்தை சொல்லி விட மாட்டானா என்கிற பெண்ணின் தவிப்பு ஒருபோதும் எந்த ஆணுக்கும் புரியப்போவதில்லை என்கிற உள்மன உளறலையும் பொருட்படுத்தாமல்.

அவன் கோபம் இன்னும் அதிகமாயிற்று. அவர்களின் அமர்ந்திருந்த தூரம் சற்றே அதிகமாயிற்று. அவள் கொஞ்சம் திரும்பிப் பார்த்துவிட்டு கண்ணீரை துடைத்துக் கொண்டால். இனி அழுவதனால் ஆய பயன் என்ன என்கொல் என்பதாக..

தள்ளி சென்று அவன் தோல் மீது தலை சாய்ந்து 'சரி' என்றாள். கூட்டுக்குள் இருந்து எட்டிப் பார்க்கும் குஞ்சு போல் அவன் இதழில் இருந்து சிரிப்பு எட்டிப் பார்த்தது. அவள் கூந்தலை தடவி கொடுத்தான். அதுவரை வளைந்து நெளிந்து செல்லும் பாம்பு போல் இருந்த அவன் உடல்மொழி இப்போது பறந்து சீறிப் பாயும் சிங்கம் போல் ஆனது.


"சரி அடுத்த மாதம் ரெண்டு பெரும் சேர்ந்து தேனியில இருக்கிற என்னோட பிரெண்ட் ரவி வீட்டுக்கு போய்டுவோம். அங்க போய் ஒரு கோவில்ல கல்யாணம் பண்ணிக்கிடுவோம். அப்புறம் நாம நமக்காக வாழ்வோம்" என்றான்.

அவள் அவன் விழிகளுக்குள் ஊர்ந்து செல்லும் தன்னை நோக்கினாள். அவன் முகம் எங்கும் புன்னகைப் பூ பூத்துக் குலுங்கியது. பார்வை பரிபாஷை நடந்துக் கொண்டிருந்தது. அவன் அவள் விரல்களை கொஞ்சம் மெதுவாய் தடவினான். அவள் சிணுங்கினாள். குலுங்கினால். கடற்கரை மணலுக்குள் புதைந்துக் கொண்ட அவள் கால் விரல்களை எடுத்து நீவி பரிகாசம் செய்தான். அவள் அவன் கேசக் கூட்டுக்குள் விரல் நுழைத்து வீணை மீட்டினால். காற்று வந்து அனைத்து செல்லும் நெற்கதிர்கள் பணிந்து எழுவது போல் அவள் விரல் பட்ட அவன் கேசம் முழுவதும் படர்ந்து விரிந்தது. கடல் காற்றையும் தாண்டி அனலடிக்கும் அவன் மூச்சுக்காற்று அவளின் மேனியில் மெழுகாய் பரவியது. அவள் கொஞ்சம் கொஞ்சமாய் பின்னோக்கிப் போனாள். அவன் நண்டைத் தேடி செல்லும் சிறுவன் போல அவளை இதழை தேடி சென்றான். அவள் பட்டும் படாமல் ஓரிடத்தில் நின்றுவிட்டால். நரம்புகள் கூட இல்லாத அவள் இதழில் அவன் வயலின் வாசித்துக் கொண்டிருந்தான்.


அந்த இசை அவர்களின் காதல் உலகம் எங்கும் பரவி, நீக்கமற வியாபித்து காற்றில் பறக்கும் மெத்தை போல் விரிந்தது. அதில் அவனும் அவளும். இரண்டு விரல்களால் அவள் இதழை குவித்து, குவிந்த அவள் இதழை தன் பால் பற்களால் கடித்துக் கரைந்தான். அவள் கண்கள் திறந்துக் கொண்டே இருந்தன. காற்றில் பரந்த அவளின் கேசக் காடுகளை தன் கைகளால் ஒருங்கிணைத்து, அள்ளி வாரி, அவள் கழுத்துப் பரப்பில் சுகமாய் பிடித்துக் கொண்டான். கடல் பரப்பில் சுற்றிக் கொண்டிருக்கும் கூட்டமெல்லாம், காற்றுப் பட்டுக் கரைந்துப் போனதுப் போலாகவும், எப்போதும் கரைந்துக் கொண்டிருந்த காற்று அவர்களை பாதுகாப்பதுப் போலவும் நினைத்துக் கொண்ட அவர்கள் பதித்த தங்கள் இதழ்களை மீண்டும் பிரிக்கவே இல்லை.



அவள் இதழ் கொடுத்த மது அவனுக்கு போதையாக அடுத்து அவன் கைகள் கொஞ்சம் கொஞ்சமாய் அவள் மார்பகங்கள் நோக்கி நகர்ந்தன. உருண்டு திரண்ட அவள் மார்பகங்களை மறைத்திருந்த மேதகு துணியை விளக்க விரல்கள் பெருமார்வம் கொண்டன. விரல் ஒவ்வொன்றாய் மார்பகம் நோக்கி நகர, அவள் திடுக்குற்று விலகினாள்.

"வேண்டாம் டா..ப்ளீஸ்"..கொஞ்சும் குமரி கெஞ்சுவதை பார்ப்பது, கொஞ்சுவதை விட அழகு. ஆனால் போதை தலைக்கேறிய அவன் அவள் வார்த்தைகளை கேட்டவனாக தெரியவில்லை. "ஏய்.. ஒரே ஒரு முறை.. ப்ளீஸ்.. இன்னும் ஒரு மாசம்தானே.. ப்ளீஸ்.. ப்ளீஸ்"..



"இல்லை..இல்லை.. வேண்டாம்.. நீ தள்ளிப் போ.. நெருங்க விடாமல் நெருப்பாய் தகித்தாள்.

பெருமூச்சு வாங்கிக் கொண்டான். "இப்ப என்னடி ஆச்சு.. பேய்க்காற்றை கிழித்துக் கொண்டு கம்பீரமாய் கேட்டது அவன் குரல்.. சுற்றிலும் நான்கைந்து பேர் திரும்பிப் பார்த்தனர். ஆனால் அவர்கள் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டதால் இந்த குரலை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. நகர வாழ்க்கையில் கடற்கரைதானே ஆண்மைக்கு நிவாரணம். மூச்சுக் காற்றுப் பட்டால் ஒடிந்து விடுவதைப் போல் இருந்த ஒருவன் மட்டும் வெள்ளந்தியாய் சிரித்துக் கொண்டிருந்தான். இவன். "என்னடா, என்ன வேணும்" என்றதும் அந்த வார்த்தைகளால் விழுந்து காற்றில் காணாமல் போனான்.

அவனுக்கு இன்னும் கோபம் தணியவில்லை. "ப்ளீஸ் டீ..ஒரே ஒரு முறை"..

"முடியாது டா. ப்ளீஸ் லீவ் இட்.. அவள் குரலில் கோபம் தெறித்தது".

"அப்பறம் என்ன மயித்துக்குடி அவ்ளோ நேரம் வாயில வாய வச்சி உறிஞ்சிக்கிட்டு இருந்த.. "

"தயா ப்ளீஸ் டா.. மைன்ட் யுவர் வோர்ட்ஸ்"..

"சும்மா உங்களுக்கு அரிப்பெடுத்தா சொறிஞ்சி விட ஒருத்தன் வேணும்".. அவன் முடிப்பதற்குள்..

ஐயோ...... தயா, ப்ளீஸ்.. வில் யு ஸ்டாப் திஸ் நான் சென்ஸ்..

"முத்தம் கொடுக்கறது அன்ப பரிமாறிக்க.. ஆனால் அதுக்கப்புறம் நீ செஞ்ச வேல எத பரிமாறிக்க".. "அதுக்கு இன்னும் காலம் இருக்கு".

என்னடி பெரிய காலம், இதுக்கு முன்னாடி அப்ப எத்தன பேர்கிட்ட இந்த மாதிரி அன்ப பரிமாறிக்கிட்ட.

"ஷிட்.. உன்ன போய் நம்பி எல்லாத்தையும் விட்டுட்டு உன் கூட வரேன் னு சொனேன் பாரு.. உனக்கு என்னடா வேணும். என் அன்ப விட இந்த சத தான் முக்கியமா?"

"ஆமாம் டீ.. எனக்கு அதுதான் முக்கியம்..

அப்ப அதுக்கு இங்க நிறைய பேர் சுத்திக்கிட்டு இருப்பாளுங்க.. நீ அங்க போ"

"அப்படி நினைச்சு தாண்டி உன்கிட்ட வந்தேன்"..

அவன் சொல்லி முடிப்பதற்குள் அவள் கதறி கதறி அழத் தொடங்கினாள்.

"இனிமே என் மூஞ்சிலே முழிக்காத டா.. இங்க இருந்து போய்டு", அவள் சொல்லி முடிப்பதற்குள் அவன் அங்கிருந்து சென்றுவிட்டான். கடற்கரை முழுக்க ஒரே நிசப்தம். அவள் லேசாய் திரும்பி அவனைப் பார்த்தாள். அவன் அவளை திரும்பிப் பார்க்க விருப்பம் இல்லாதவனாய் விடுக்கென்று மறைந்தான்.

அவள் மனம் ஆறுதல் வார்த்தைகளை தேடி அலைந்தது. "நீ கொஞ்சம் விட்டுக் கொடுத்துட்டுப் போய் இருக்கலாம்டி".. என்னடி சொல்ற.. அவன் என்ன வார்த்த கேட்டான் பார்த்தியா.." அவள் மூளை எங்கும் வார்த்தைகளும், எதிர்வார்த்தைகளும், அலைந்துக் திரிந்துக் கொண்டிருந்தன. கண்ணீர் தீரும் வரை அழுதாள். மணல் பரப்பில் கட்டுண்டுக் கிடந்த கூட்டம் கலைய ஆரம்பித்தது. சிதறிக் கிடந்த ஒன்றிரண்டு மனிதர்களும் களைந்து சென்றனர். நேரம் இரவின் பின் பகுதியை நோக்கி நகர்ந்தது. இன்னமும் அவள் மனம் அமைதியை தேடிக் கண்டு அடையவில்லை. அதற்காக காத்திருந்தால். அவள் உள் மனம் சொல்லிற்று "அவன் வருவான்.. மண்டியிடுவான். எனக்காக தன் கோபத்தை களவுக் கொடுப்பான் என்று. அங்கே அலைகளின் சப்தமும், காற்றின் கரைச்சலும், அவளையும் தவிர வேறு யாருமில்லை.

அவள் கால்களை குத்தவச்சு, முகம் மறைத்து அழுத்துக் கொண்டிருந்தாள். முதுகின் பின்பக்கம், வலது தோலின் மேற்பக்கம், அந்த அன்புக் கரங்கள் தீண்டின. அடைத்து வைத்திருந்த ஆற்று நீர் திறந்து விட்டதும் பெருக்கெடுத்து ஓடுவது போல் அவன் திரும்பி வந்து விட்டான்.. என்று பேரானந்தத்தில், சிரிப்பும், அழுகையுமாய் சேர்ந்து அவள் திரும்பி... தயா.........................

"யாரு நீங்க..." விழிகளில் பயம்..தேக்கி வைத்திருந்த வார்த்தைகளை திருப்பி தர மறுத்த மூளை. அவள் வார்த்தைகள் அற்றவளாய்" சனதானமாய் கிடந்தாள்.

ஹி..ஹி.. ஹி...முகம் முழுக்க பற்களாய் தெரிந்தன.

விடிந்தது. தயா விழித்ததும், இரவு கீழ் தனமாய் நடந்துக் கொண்டதற்காக அழுதான். இனி அவள் முகத்தில் எப்படி விழிப்பது என்று ஏங்கித் தவித்தான். கோபத்தில் உதிர்ர்த்த வார்த்தைகளை திருப்பி எப்படி பெறுவது, என்று மனதுக்குள் யுத்தம் செய்துக் கொண்டிருந்தான். மனதை தேற்றிக் கொண்டு அவளை அழைத்தான் அலைபேசியில்..

"நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதால் சிறிது நேரம் கழித்து கால் செய்யவும்".. ஓயாமல் ஒலித்தது கணினி குரல்.

"தவறுக்கு அவளிடம் மன்னிப்பு கேட்டு அவள் காலடியில் விழுந்திடலாம்.. அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது"..

தயா அவளின் வீடு நோக்கி புறப்பட்டான்.

வீடு பூட்டி இருந்தது.

அக்கம் பக்கம் யாருமில்லை விசாரிக்க.. மனம் வெறுமையை உணர்ந்தது. உடனடியாக அவளைப் பார்க்க விழிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டன.

"நேத்து அவள தனியா பீச் ல விட்டுட்டு வந்தோமே.. அங்கேயே இருப்பாளே.. மனம் நிலைக் கொள்ளவில்லை. கடற்கரை நோக்கி விரைந்தான். கடற்கரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் கற்களின் ஒவ்வொன்றின் மீதும் ஒரு கால் வைத்து நடந்தான். கற்கள் முடியும்போது இரண்டு கால்களுக்கும் சேர்ந்து சம அளவில் கற்கள் கிடைத்திருந்தால் அவளுக்கு ஒன்றும் ஆகியிருக்காது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொரு காலாய் மெதுவாக அடியெடுத்து வைத்தான். இறுதியில் இடது காலுக்கு, வலது காலுக்கு கிடைத்ததை விட ஒரு கல் குறைவாகக் கிடைத்தது. என்ன செய்வது என்று யோசித்தான். கடைசி கல்லில் இரண்டு கால்களையும் சேர்ந்தே வைத்தான். இருந்தாலும், அதில் அவள் மனை நிறைவு பெறவில்லை. கடற்கரையில் எந்த 'பூ' மரமும் இல்லை. எனவே இங்கே ஏதாவது பூ கிடைத்தால் போதும்.. அவளுக்கு ஒன்றும் நடந்திருக்காது என்று நினைத்துக் கொண்டான். கடற்கரை முழுதும் பூவைத் தேடி அலைந்தான். ஓரிடத்தில் ஒரே ஒரு மல்லிப் பூ உதிர்ந்துக் கிடந்தது. மனம் முழுக்க சந்தோசமாய் பூவை எடுத்துக் கொண்டு நிமிர்ந்துப் பார்த்தான். சிறிது தூரத்தில் அதே போல் இன்னொரு மல்லிப் பூ கிடந்தது. இன்னும் மகிழ்ச்சி கூடிற்று. 'பூ'வை கையில் வைத்துக் கொண்டே அவளை தேடினான். எங்கும் அவளில்லை. அனலடிக்கும் மணற்பரப்பில் ஆங்காங்கே கண்களுக்கு குளிர்ச்சியாய் காதல் ஜோடிகள். அவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். ஒருவன் மட்டுமே வெள்ளந்தியாய் சிரித்துக் கொண்டு அவனைப் பார்த்து கண்களை விரித்தான். "இவன எங்கேயோ பார்த்திருக்கோமே?".. அவன் மனம் நினைப்பதற்கு முன்னாள்.. ஆமாம் இப்ப இது ரொம்ப முக்கியம்" என்று நினைத்துக் கொண்டு.. வேகமாக நடந்தான்.

"ஐயோ.. பாக்கவே பயங்கரமா இருந்தது டா.. காலங்கார்த்தால, யப்பா.. இன்னும் ரெண்டு நாள் சோறு தண்ணி உள்ள இறங்காது. எவ்ளோ கொடூரமா இருந்தது தெரியுமா? அப்படியே என் கை கால் எல்லாம் நடுங்கிக்கிட்டே இருந்தது. அப்புறம் போலீஸ் வந்தப்புறம் தான் ஆம்புலன்சே வந்து எல்லாத்தையும் சேர்த்து அள்ளிக்கிட்டுப் போச்சு.. இப்ப பாரு இந்த பீச்ச ஒன்னும் நடக்காத மாதிரி கிடக்குது".

இரண்டு வாலிபர்கள் பேசிக்கொண்டே நகர்ந்து சென்றார்கள். காகங்களும், கழுகுகளும் ரத்தம் படிந்த அந்த கடற்கரையின் மணல் வெளியை சுற்றியே வட்டமடித்துக் கொண்டிருந்தன. அவன் இவை எதையும் காணாதவனாய், வேகமாக அவள் வீடு நோக்கி நடந்தான், அவளின் நினைவுகளுடன்.