Monday, April 1, 2013

ஒற்றை சாளரம் - 1

சில நேரங்களில் எழுதுவதற்கு நிறைய கருத்துகள் இருக்கும்போது, தனி தனி பதிவாக எழுதாமல், ஒரே பதிவில் எழுதிவிடலாம் என்று நினைக்கிறேன். அவைகள் எல்லாம் ஒற்றை சாளரம் என்கிற பெயரில் வெளிவரும்.
இன்றைய ஒற்றை சாளரத்தின் பதிவுகள்:
------------------------------------------------------
1. முத்துலிங்கத்தின் கடிதம்.
2. தமிழின் உலகப் படங்கள்..
3. நாடகம்.
------------------------------------------------------
முத்துலிங்கத்தின் கடிதம்.

என்னுடைய செயல்பாடுகள் முழுவதும், சென்னை, தமிழ்நாட்டில் மட்டுமே. ஆனால் ஒருபோதும் தமிழ்நாட்டில் இருந்து எந்த பெரிய எழுத்தாளர்களிடமிருந்தும், எனக்கு தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் வெளிவந்தது கிடையாது (ஒரு சிலர் விதிவிலக்கு). என் செயல்பாடுகளை விமர்சித்து கூட. ஆனால் என்னுடைய எல்லா செயல்பாடுகளுக்கும், கனடாவில் இருந்து ஒரு மாமனிதர் தொடர்ந்து மின்னஞ்சல் அனுப்பி ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். அவர் எழுத்தாளர் அ.முத்துலிங்கம். என்னுடைய சமீப சிறுகதையான, "மாநகரம்" பற்றிய தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

அன்புள்ள அருண்,
வணக்கம்.நலம்தானே

நீங்கள் தேர்ந்த எழுத்தாளர் ஆகிவிட்டீர்கள்.

1. நிறைய சொற்பிழைகள் உள்ளன. அவற்றை திருத்திவிடுங்கள்.

2. சாமிநாதனை சில இடங்களில் அவன் என்றும் சில இடங்களில் அவர் என்றும் அழைக்கிறீர்கள். முதியவர் என்பதால் அவர் என அழைத்து மரியாதை செய்யலாம்.

3. வர்ணித்துக்கொண்டு போகும்போதே சாமிநாதன் விபத்தில் சாகப்போகிறார் என எல்லோரும் எதிர்பார்த்திருப்பார்கள். அவர்களை ஏமாற்றியது உங்கள் வெற்றி.

4. 10 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்திருந்தபோது எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டது. சாலையை கடக்கவே முடியவில்லை. கடைசியில் ஆட்டோ பிடித்து மறுபக்கம் போய்ச்சேர்ந்தேன்.

5. கிழவர் சாலையை கடக்கும் இடம் தத்ரூபமாக வர்ணிக்கப்பட்டிருந்தது. நான் என்ன அனுபவித்தேனோ அது அப்படியே எழுத்தில் வந்திருந்தது. வாசகருடைய முழுக்கவனத்தையும் அங்கே கவர்ந்துவிட்டீர்கள். அது வெற்றி.

6. கடைசி வசனம் மிக மிக முக்கியமானது. இதை மகத்தான கதை ஆக்கக்கூடியது. ஆனால் கடைசி வசனம் அப்படி அமையவில்லை. இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் அப்படி ஆக்கியிருக்கமுடியும்.

அன்புடன்
அ.மு.

இதுவரை அந்த கதையை படிக்காத நண்பர்களுக்காக, என் கதையின் இணைப்பு: http://chuttiarun.blogspot.in/2013/03/blog-post.html
------------------------------------------------------------------------------------------
தமிழின் உலகப் படங்கள்..

இன்று அதிகாலை வரவு எட்டணா, செலவு பத்தணா திரைப்படத்தை பார்த்தேன். எனக்கு தெரிந்து, தமிழில் சட்டென்று பார்க்கும்போது அட என வியக்கவைக்கும் சில திரைப்படங்கள் இருக்கின்றன. உடனடியாக என் நினைவில் இருந்து எழுதுகிறேன். வரவு எட்டணா, செலவு பத்தணா, ஆஹா, எம் மகன் (ஆனால் எம்டன் மகன் என்பதே இதற்கு சரியாக தலைப்பு) ஆகிய மூன்று திரைப்படங்களையும் மீண்டும் ஒருமுறை பாருங்கள். தமிழ் சினிமாவின் Making எனப்படும் உருவாக்குதலை உலக தரத்திற்கு இந்த படங்கள் கொண்டு செல்லவில்லை என்றாலும், சமூக அவலங்களை சாடவில்லை என்றாலும், தமிழர்களின் அன்றாட குடும்ப நிகழ்வுகளையும், நடுத்தர வர்க்கத்தின் பொதுப் புத்தியையும் சித்தரித்த வகையில் இந்த மூன்று படங்களும் முக்கியமானதாகவே எனக்கு படுகிறது. வன்முறையோ, பறந்து பறந்து அடிக்கும் பெரிய சண்டைக் காட்சிகளோ இல்லையென்றாலும், இந்த மூன்று படங்களும் வெற்றிப் படங்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த மாதிரியான வெகுஜனப் படங்களை நான் பெரிதும் மதிக்கிறேன்.
------------------------------------------------------------------------------------------
நாடகம்.

உலக நாடக தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை கல்லூரி சாலையிலுள்ள அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் ஒரே நேரத்தில் 12 நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. சென்னையில் இத்தனை அழகானப் பெண்களும் எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்று ஒருகணம் மலைத்துப் போனேன். சின்ன அரங்கம்தான் என்றாலும், கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அதிலும், இளமைக் கொஞ்சும் பெண்களே அதிகம். என்னுடைய தோழி, வினோதினி இரண்டு நாடங்களை அரங்கேற்றினார். இரண்டிலும் சிறப்பாகவே நடிப்பை வெளிப்படுத்தினார். பார்த்த அத்தனை நாடகங்களும் சிறப்பாகவே இருந்தது. வெறும் சிறப்பு என்கிற வார்த்தை அவர்களின் உழைப்பை கொச்சைப்படுத்தும் என்றே நினைக்கிறேன். அத்தனை நேர்த்தி, உழைப்பு. ஒரு பத்து நிமிட நாடகத்திற்கு இந்த மெனக்கெடல் என்றால், மூன்று மணி நேரம் படத்திற்கு எத்தனை மெனக்கெட வேண்டும். சரி அதை விடுவோம்.

ஆறு நாடகங்களை பார்த்துவிட்டு கிளம்பிவிடுவோம் என்று நினைத்தேன். ஆனாலும், உடன் வந்திருந்த நண்பன் தினேஷ் விடவில்லை, எல்லா நாடகங்களையும் பார்த்துவிட்டு போகலாம் என்று சொன்னான். மேலும், ஒளிப்பதிவாளரிணி (பெண் ஒளிப்பதிவாளரை எப்படி சொல்வது) வைஷாலியும் உடன் வந்திருந்தார். அவரை சந்திப்பதே நேற்றுதான் முதல்முறை. ஆனாலும், பல வருட நண்பர்கள் போலவே பேசிக் கொண்டோம். அவரும் நாடகங்களை பார்ப்பதில் ஆர்வமாக இருந்ததால் நானும் 12 நாடகங்களையும் பார்த்துவிட்டுத்தான் வந்தேன். இத்தனைக்கும், உட்கார கூட இடமில்லாமல், யார் கால், யார் கை என்றே தெரியாமல் அங்கங்கே மிதிபட்டு, உதைபட்டே பார்க்க வேண்டி இருந்தது. இதற்குதான், எப்போதும் கலை ஆர்வலர்களை உடன் அழைத்து செல்ல வேண்டும் என்பது, எத்தனை சங்கடங்கள் இருந்தாலும், கலைப் படைப்புகளை பார்ப்பதில் இருந்து பாதியில் விடைபெறக் கூடாது. வேறு யாராவதாக இருந்தால், சரி போகலாம் என்றே சொல்லி இருப்பார்கள். நானும் அடுத்த 6 நாடகங்களை தவறவிட்டிருப்பேன்.

12 நாடகங்களில் ஒன்று மட்டுமே புரியவில்லை. காரணம் அதன் மொழி, ஹிந்தியில் அரங்கேற்றினார்கள். மற்ற அனைத்து நாடகங்களும் எனக்கு மிக பிடித்தது. தெளிவாக புரிந்தது. இத்தனைக்கும் நவீன நாடகம்தான். அத்தனை பேர் உடல்மொழியும், தமிழ்நாட்டில் இத்தனை சிறந்த நாடக கலைஞர்கள் (யாரும் தொலைகாட்சி நாடகங்களை நினைவுப்படுத்திக் கொள்ளாதீர்கள்) இருக்கிறார்களா என்கிற வியப்பை ஏற்படுத்தியது. Awesome என்றுதான் சொல்ல வேண்டும். பத்து நிமிடத்திற்குள், கதை, உடல்மொழி, கதாபாத்திரங்களுடன் பிணைப்பு அரங்க வேலைபாடுகள் போன்று பல விசயங்களை நேர்த்தியாக செய்திருந்தார்கள்.

நாடகத்தில் பங்கேற்ற அத்தனை நண்பர்களுக்கும் வாழ்த்துசொல்வதை வேறென்ன சொல்லிவிட முடியும் என்னால். குறிப்பாக வினோதினிக்கு (Vinodhini Vaidynathan). வாழ்த்துக்கள் வினோதினி. You are Rockinggggggggg....

No comments:

Post a Comment