Tuesday, May 26, 2009

என் சகோதரன் (சக உதிரன்)



மரணம். மாறாத ரணத்தை எற்படுத்துவதாலேயே அதற்கு மரணம் என்று பெயர் வந்ததோ என்னவோ. ஒரு சில மரணங்கள் ஒரு சிலரது வாழ்க்கையை அப்படியேப் புரட்டிப்போடும் வல்லமை கொண்டது. ஆதிகாலத்தில் மரணம் குறித்த பயம் இருந்ததாக கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இன்றுள்ள குடும்பப் பிணைப்பு அன்று இருந்திருக்க வாய்ப்பில்லை. இந்த உறவுகள்தான், இந்த அன்புதான் நம்மை நிலைகுலைய செய்கின்றன. 

அது, நான் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த காலம். எங்கள் சொந்த வீட்டை விற்று பல வருடங்கள் கழித்து தற்போதுள்ள தரமணியில் 1400 சதுர அடி இடத்தை விலைக்கு வாங்கி சொந்தமாக குடிசைக் கட்டிக்கொண்டு குடியமர்ந்தோம். அன்றைய நாளில் எனக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத சுகம் ஏற்பட்டது. மீண்டும் சொந்த வீடு. மிக அழகான இடத்தில். நல்லக் காற்று, பக்கத்தில் கல்லுக்குட்டை எனப்படும் ஆறு, மிக ரம்மியமாக இடம். முதல் வேளையாக ஒரு செடியை வைத்து அதை வளர்க்கும் முயற்சியில் இறங்கினேன். அங்கு அப்போது தண்ணீர் வேண்டுமென்றால் அவரவர் இடத்தில் கிணறு தோன்டிக்கொள்ள வேண்டும். நாங்களும் எங்கள் வீட்டில் பின்புறத்தில் கிணறு தோண்ட ஆயத்தப்பட்டோம். என் ஆசைக்காக முன்னும் பின்னும் கொஞ்சம் இடம் விட்டு வைத்திருந்தார்கள். நான் செடி வளர்ப்பதற்காக அந்த இடத்தை விட்டு வைக்க சொன்னேன். நிறைய செடிகள் நட்டு வைத்து பக்கத்து கிணற்றில் இருந்து தண்ணீர் பாய்ச்சினேன். எங்கள் கிணறு தோண்டும் பணி பாதி நிறைவடைந்தது. அப்போது எனக்கு தெரியாது கிணறுத் தோண்டும் பணி இதோடு நின்று விடும் என்று. 

தரமணியில் இடம் வாங்கிவிட்டு குடிசைக்கட்ட அப்போது என் தந்தை ஒருவரிடம் ஐந்நூறு ரூபாய் கடன் வாங்கி இருந்தார். சில நாட்கள் கழித்து கடன் கொடுத்தவர் வந்து என் அம்மாவிடம் கடனை திருப்பி செலுத்துமாறு சத்தம் போட்டி விட்டு சென்றார். இதனை கண்ட என் மூத்த அண்ணன் எப்படியாவது அந்தக் கடனை அடைக்க வேண்டும் என்று ஒரு பெயிண்டிங் வேலைக்கு சென்றார். முதலில் சொன்னது போல் என் மூத்த அண்ணனுக்கு திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்கிற லட்சியம் இருந்தது. அதனால் அவரை யாரும் வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்தியது இல்லை. ஆனால் நிலைமையை உணர்ந்து அவரே அந்த வேலைக்கு சென்றார். 

நானும் பள்ளிக்கூடம் செல்வதற்காக கிளம்பினேன். . அதுவரை மகிழ்ச்சியாக இருந்த மனம் அன்று கொஞ்சம் துவண்டது. காரணம் எங்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து செல்ல சுமார் இரண்டு மணி நேரங்கள் ஆகும். மிக நீண்ட தொலைவு. நடந்து வரும் வழி ஒரு காடு. அங்கு மக்கள் நடமாட்டமும் குறைவு. ஒருவித பயம் என்னை ஆட்க்கொண்டிருந்தது. நடந்து நடந்து கால்கள் வலிக்க பள்ளிக்கூடம் வந்து சேர்ந்தேன். மீண்டும் சாயங்காலம் இதே தொலைவு நடக்க வேண்டுமே என்கிற பயம் என் மனது முழுதும் நிறைந்திருந்தது. ஆனால் அந்த இடத்திற்கு மீண்டும் நான் செல்ல மாட்டேன் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. 

பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு வரை எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. அன்று மதிய உணவு இடைவேளையில் சாப்பிட்டு முடித்து விட்டு நானு என் நண்பர்களும் விளையாடிக்கொண்டு இருந்தோம். கொஞ்சம் அயர்ந்த நான் பள்ளிக்கூட திண்ணையில் போய் அமர்ந்தேன். அந்த சமயம் சாலையில் சைக்கிளில் வந்த ஒருவர் (முன்னரே சொன்னது போல் பள்ளிக்கூடம் சாலைக்கு மிக அருகில் அமைந்திருந்தது.) 

"டேய் உன் பேரு அருண் தானே.. உங்க அண்ணன் பேரு வேலு தானே என்றார். ஆமாம்" என்றேன்.

உடனே என்கூட வாடா என்றார். ஸ்கூல் இருக்கு இப்ப வர முடியாது என்று சொன்னேன். அவரின் கண்கள் கலங்கியது. "டேய் உங்க அண்ணன் செத்துக் கிடக்கிறான் டா என்றார். வார்த்தைகளை சரியாக உள்வாங்காத நான் அப்படியா நான் ஸ்கூல் முடிஞ்சதும் வரேன்" என்று அப்பாவித் தனமாய் கூறி நின்ற கணம் எனக்குள் இன்றும் வலிக்கிறது. 

பிறகு அவரே என்னை சைக்கிளின் பின்புறம் உட்கார வைத்துக் கொண்டு என் அம்மாவை பார்க்க சென்றார். காரணம் புது இடம் அவருக்கு தெரியாது. எனவே நான் படிக்கும் பள்ளிக்கு வந்து என்னை எங்கள் புது வீட்டை காட்ட அழைத்துக் கொண்டு சென்றார். ஆனால் நாங்கள் முன்னர் வசித்த களத்து மேட்டுத் தெருவில் இருந்த மக்கள் என் அம்மாவிடம் விஷயத்தை சொல்ல சென்று விட்டார்கள். 

எனவே இறந்துப் போன என் அண்ணனை நான்தான் முதலில் பார்க்க சென்றேன். இன்றைய கந்தன்சாவடியில் உள்ள சுண்ணாம்புக் கால்வாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சுண்ணாம்பு அடிக்கும்போது லுங்கியை தூக்கிக் கட்ட கைகளை பின்னே எடுத்தபோது, அருகிலிருந்த மின்கம்பிகள் தாக்கி அவர் இறந்துபோனார் என்று தெரியவந்தது. ஆனால் அப்போதும் நான் ஒத்துக்கொள்ளவில்லை. இது எங்க அண்ணன் இல்லை. அவர் காலையில் ஷேவிங் செய்துக் கொள்ளவில்லை. முகத்தில் தாடி இருந்தது. என்று கேனைத்தனமாய் சொல்லிக்கொண்டிருந்தேன். பின்னர் தான் எனக்கு தெரியும் மின்சாரம் தாக்கி அவர் முகம் அவ்வாறானது என்று. 

சோகத்தின் சுவடுகள் என் நெஞ்சில் பதிய ஆரம்பித்த முதல் கணம் அது. அதுவரை பொருளாதார ரீதியில் மட்டுமே சரிவைக் கண்ட என் குடும்பம் முதன்முதலாய் ஒரு உயிரையும் இழந்து நின்றது. அண்ணனை அந்தக் கோலத்தில் கண்டதும் என் அம்மா கதறி அழுத நினைவுகள் இன்றும் என் நெஞ்சிலிருந்து அகல மறுக்கின்றன. 

விவரம் தெரியாத நான் இது அண்ணனாக இருக்கக் கூடாது என்று இறைவனை வேண்டி நின்றேன். நெஞ்சம் தேம்பி தேம்பி அழ நினைத்தாலும் கண்கள் வறண்டுப் போனதால் பிரமை பிடித்து மரம் போல் நின்றுக் கொண்டிருந்தார் என் தந்தை. சரியாக அண்ணனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய வயது. அவரது லட்சியத்தை அடைந்த பின்னர் திருமணப் பேச்சு எடுக்கலாம் என்று அம்மாவும் அப்பாவும் காத்திருந்தனர். என் காளான் காத்திருக்கவில்லை. ஒரு அனாதை விடுதியில் உள்ள பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும். அந்த பெண்ணிற்கு தான் அம்மா அப்பா பாசம் தெரியும். அப்போதுதான் வீட்டில் சண்டை சச்சரவுகள் வராது என்று என் அம்மாவிடம் அடிக்கடி சொல்வார். அவர் ஆசைப்படியே அனாதை விடுதியிலேயே பெண் பார்க்கலாம் என்று அவர்களும் நினைத்திருந்தனர். நான் விவரம் தெரிந்து என் மூத்த அண்ணனுடன் வாழ்ந்தக் காலங்கள் கொஞ்சம் தான். என் அவர்தான் எனது ரோல் மாடெல். அவர் உயரியதை மட்டுமே சிந்தித்தார். எறும்புக் கடித்தால் அதைக்கூட சாகடிக்காமல் அதற்கும் வலிக்காமல் தன் உடம்பிலிருந்து அதை அழகாக தூக்கி எறிவார். 

அவரது விழிகள் மாசுபட்டு நான் பார்த்ததே இல்லை. எப்போது ஒரு ஒளி அவரின் விழியில் குடிக்கொண்டிருக்கும். கடவுள் நல்லவர்களை மிக சீக்கிரமே தன்னுடன் இணைத்துக் கொள்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். (அப்போது எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. இப்போதும் உண்டு. ஆனால் மூட நம்பிக்கைகள் கிடையாது.)

"நீ இருந்து எனக்கு கொள்ளை வச்சி, காரியம் செய்யணும். ஆனால் நீ இறந்து உனக்கு என்ன கொல்லி வைக்க வச்சிட்டேயேடா".. என்று இறுதியில் என் தந்தை கதறி அழுத அந்த காட்சி என் மனதுக்குள் பந்தல் போட்டு குடியேறிவிட்டன. 

மிக சந்தோஷமாய் நண்பர்கள் போல் வாழ்ந்துக் கொண்டு இருந்த எங்களுக்குள் அப்போதிருந்து ஒரு இடைவெளி விழ ஆரம்பித்தது. அப்பா பேசுவதே அரிதானது. அதன் பின்னர் தரமணி வீடு என்ன ஆனது என்று எங்களுக்கு தெரியாது. ஐந்நூறு ரூபாய் கடன் கொடுத்தவர் அந்த வீட்டை எடுத்துக்கொண்டார் என்று பின்னர் கேள்விப்பட்டேன். அம்மாவும் அப்பாவும் அதை அப்படியே விட்டது விட்டார்கள் ராசியில்லாத வீடு என்று. 

இதை எழுதும் இந்த நொடியிலும் கண்களில் நீர் கசிகிறது. 

Sunday, May 10, 2009

சுதா என்கிற மந்திரச் சொல்..


ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் பெண்ணின் பங்கு மிக இன்றியமையாதது. எனது வாழ்விலும் மூன்று பெண்கள் மிக முக்கியமானவர்கள். ஒன்று எனது தாய். அடுத்து என் ஆசிரியர். மற்றோவர் என் அக்கா. இந்த மூவரையும் பற்றி பார்க்குமுன்.. நான்காவதாக ஒரு பெண் என் வாழ்வின் திசையை சற்றே மாற்றியமைத்த பெருமைக்குரியவர் அவர் திருமதி சுதா. என் அம்மா, ஆசிரியர், அக்கா போன்றோர்கள் என் வாழ்வில் வெகு தூரம் என்னோடு பயணித்து வந்தவர்கள். ஆனால் திருமதி சுதாவோ நொடிப் பொழுதில் தோன்றி மறையும் மின்னல் போன்று என் வாழ்வில் தோன்றி மறைந்தவர். ஆனால் மின்னலின் வீரியம் போன்றே அவரும் வீரியம் மிக்கவர். எந்தவித குறிக்கோளும் இன்றி மிக சாதாரணமாக சுற்றித் திரிந்த என்னை ஒரு திசை நோக்கி செலுத்தியவர். என்னை ஒருங்குப்படுத்தியவர். மிகப் பெரிய அளவில் நான் ஒன்றும் சாதித்தவன் இல்லையென்றாலும், மிக மோசமாய் வாழும் நிலையில் இருந்து என்னை மீட்டெடுத்தவர்கள் பற்றி நான் எழுத வேண்டும் என்று நினைத்ததன் விளைவே இந்தப் பதிவு. 

ஆரம்பத்தில் சொன்னது போன்று, நான் மிகப்பெரிய விஞ்ஞானியோ, தலைவனோ, ஒரு நிறுவனத்தை கட்டியாளும் மேதையோ அல்ல. மிகப் பெரிய அளவில் சாதித்தவனும் அல்ல. ஆனால் மிகப் பெரிய அளவில் சோதனைகளை சந்தித்தவன். தொடர் தோல்விகள், தொடர் துயரங்கள் என்று நான் பட்ட அவஸ்தைகள் சொல்லிமாளாது.  என்னைப் பற்றி சுயத்தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காக இந்தப் பதிவுகள் அல்ல. உங்கள் வாழ்க்கையிலும் இது போன்று துயரங்களோ, தோல்விகளோ நேர்ந்திருந்தால் அதை மறக்க செய்யும் ஆர்வமே இந்தப் பதிவு. துயரங்களோ, தோல்விகளோ ஒரு மனித வாழ்க்கையின் முடிவல்ல.. யாரோ ஒருவர் சொன்னது போல் "இதுவும் கடந்துப் போகும்" என்கிற வாசகம் எதற்கும் பொருந்தும். அளவற்ற மகிழ்ச்சியும், அளவற்ற துன்பமும் நிச்சயம் கடந்துப் போய் அடுத்த நிலைக்கு நம்மை இட்டு செல்லும். அதை நிரூபிக்கும் விதமாக நான் எழுதும் இந்தப் பதிவுகளை கருதுகிறேன். எனவே இவன் என்ன சாதித்துவிட்டான் இவன் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும் என்று எண்ணாமல், பதிவுகளில் உள்ள பாசிடிவ் அம்சங்களை மட்டுமே பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

மீண்டும் சுதாவைத் தொடர்வோம். கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு குடும்ப சூழ்நிலைக் கருதி கிடைக்கும் வேலையை செய்துக் கொண்டிருந்தேன். கொரியெர் கம்பெனி, பி. பி. ஒ. கம்பெனி, எப். எம். சி. ஜி. மார்கெடிங், என்று கிடைக்கும் வேளைகளில் எல்லாம் சில காலம் கழித்துவிட்டு, மனம் ஒன்றாமல் அனைத்து வேலைகளையும் உதறித் தள்ளிவிட்டு இறுதியாக பி.பி.ஒ தொழில் சில காலம் பணிபுரிந்தேன். திரைப்படத் துறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஏக்கக் கனவுகள் மட்டுமே என்னைத் துரத்திக் கொண்டிருந்தன. ஆனால் அதை விட குடும்ப சந்தோஷம் முக்கியம் எனக் கருதி, பணத்தேவைக்காக இது போன்ற வேலைகளை செய்துக் கொண்டிருந்தேன். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பி.பி.ஒ கம்பெனியில் வேலை செய்துக் கொண்டிருந்தக் காலமிது. மிக சாதாரணமான சம்பளம்தான். ஆனால் அதுதான் முதல் முறையாக நான் வாங்கிய மிகப் பெரிய சம்பளம். 2500/- ரூபாய். இரண்டாயிரம் ரூபாயை வீட்டில் கொடுத்து விட்டு ஐந்நூறு ரூபாயை மாதம் முழுவதும் கை செலவிற்கு வைத்துக் கொள்வேன்.

அந்தக் கம்பென்யில் நேர்காணலுக்கு சென்றபோது ஒரு பெண்மணி கையில் ஒரு பையுடன், பார்ப்பதற்கு ஒரு மத்திய வயதுப் பெண்மணியாய் காட்சியளித்தார். அப்போது நான் அவரை சரியாக கவனிக்கவில்லை. வயது அப்படி. இளம் பெண்ணாக இருந்தால் வச்சக் கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கலாம். அவரை எப்படிப் பார்ப்பது. ஆனால் சில நாட்கள் கழித்து அவரும் என் டீமில்தான் சேர்ந்தார். என்னோடுதான் பயிற்சியும் எடுத்துக்கொண்டார். திருமணமானப் பெண் என்பதனால் அவரிடம் அவ்வளவாக நான் பேசியதுக் கிடையாது. 

நாளடைவில் அவர்தான் நல்ல நட்பு ஏற்பட்டது. எப்போதும் ஏதோ புதிதாக செய்ய வேண்டும் என்கிற எனது எண்ணம் அவரை வெகுவாக ஈர்த்தது. எனக்கு ஒரு நல்ல ஆலோசகராய் மாறினார். ஒவ்வொரு நாளும் எனக்கு தன்னம்பிக்கை கதைகள் கூறியும், திசைகள் இன்றி சுற்றித் திரிந்த என் மனதை ஒரு குறிக்கோளை சுற்றித் திரிய விட்டதும் அவரது வார்த்தைகள்தான். சின்ன சின்ன விஷயங்கள்தான். ஆனால் என்னை அடுத்தக் கட்டத்துக்கு என்னை அழைத்து சென்ற நொடிப் பொழுதுகள் அவை. அவர் எனக்கு ஆதரவாய் பேசுகிறார் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் சொன்ன வார்த்தைகள் பின்னாளில் நிஜமாயின. 

நான் விரும்பியப் படிப்பை பல ஆயிரங்கள் தேவைப் பட்டது. அந்தப் படிப்பு எனக்கு ஒரு கனவாகவே இருந்தது. ஆனால் திருமதி. சுதா தொடர்ந்து எனக்கு நம்பிக்கையளித்தார். ஏதேதோ ஆலோசனைகள் கூறினார். இறுதியில் எனக்கு அந்தப் பணம் கிடைத்தது. சில வருடங்களுக்கு மின்சாரம் தாக்கி எனது மூத்த சகோதரர் இறந்துப் போனார். அதற்காக மின்சார வாரியம் கொடுத்த நஷ்ட ஈடுதான் என்னையும் என் குடும்பத்தையும் கொஞ்சம் தூக்கி நிறுத்தியது. நானும் விரும்பிய அந்தப் படிப்பை படித்தேன். முதல் முறையாக நான் கண்ட கனவு நிறைவேறியது. அதன் பின்னர் எனக்கு திருமதி சுதாவின் வார்த்தைகள் மீது பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. அவரது தம்பி, தங்கைகள் யாவரும் பெரிய மென்பொருள் கம்பெனியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். எனக்கு அடுத்து அந்தக் கம்பெனியில் வேலைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வமும் ஏற்பட்டது. தொடர்ந்து பல்வேறு சமயங்களில் என்னை ஊக்கப்படுத்தியது அவரது வார்த்தை. தொடர் தோல்விகளால் வெறுத்துப் போயிருந்த எனக்கு வாழ்வின் மீது ஒரு பிடிப்பு ஏற்பட்ட காலம் திருமதி. சுதா என்னோடு பழகியக் காலம். 

கடவும் நம்பிக்கை இல்லாவிட்டாலும் எஅன்க்குள் ஒரு மாய உணர்வு ஏற்பட்டது. தொடர் வெற்றிகள். தொடர் சந்தோசங்கள். யார் இவர் உண்மையில் எனது நாத்திகத்தை உடைக்க வந்த கடவுளா? அல்லது கடவுளின் தூதரா? குழப்பங்கள் எனக்குள் குடைப்பிடிக்கத் தொடங்கியது. வெற்றி மேல் வெற்றியாக நான் திக்குமுக்காடிப் போனேன். இறுதியாக ஆசைப்பாட்ட வண்டி, அழகிய வீடு சின்னதுதான் என்றாலும் சொந்த வீடு என்று தொட்டதெல்லாம் வெற்றியாகியது. இறுதியில் நான் ஆசைப்பட்ட அந்த பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் எனக்கும் வேலைக் கிடைத்தது. 

ஆனால் ஏனோ அவரின் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் எண்ணம் எனக்கு தோன்றவில்லை. அவரின் முகவரியோ, தொலைபேசி என்னோ நான் வாங்கிக் கொள்ளவில்லை. அவரைப் பற்றி தகல்வல்கள் எதுவுமே என்னிடம் இல்லை. ஆனால் இன்றும் சிந்திக்கிறேன்..ஏன் அவர் பற்றிய தகவல்கள் எதுவமே என்னிடம் இல்லை. உள்ளங்கைக்குள் உலகம் என்றாகிவிட்ட இந்த சூழலிலும் ஏன் என்னால் அவரைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை. தேடிக்கொண்டிருக்கிறேன் அந்த மாயத் தேவதையை..