Friday, December 31, 2010

தலைப்பில்லை



எழுதுவதற்கு ஏதுமில்லாதபோது எழுதாமல் இருப்பதே நல்லது.. அல்லது நாம் நீர்த்துவிடுவதற்கு முன்பே எழுதுவதை நிறுத்திவிடுவது சிறப்பு என்கிற கோட்பாட்டில் உறுதியாக இருப்பவன் நான். நிறைய பயணக் கட்டுரைகளைக் கூட எழுதாமல் தவிர்த்ததன் காரணம் இதுவாகக் கூட இருக்கலாம். ஆனால் நான் என் பதிவில் முன்னமே எழுதியிருப்பது போல் எழுத்துகளோடு நான் கொஞ்சம் பகடியாட்டம் ஆடிப் பார்க்கிறேன். இதில் நான் தோற்றாலும், வென்றாலும் இந்தப் பகடியாட்டம் எனக்கு ஒருவித பிரமிப்பை, கிளர்ச்சியை தருவதால் தொடர்ந்து நான் அதில் என்னை ஈடுப்படுத்திக் கொள்கிறேன். எனவே இனியாவது தொடர்ந்து கொஞ்சம் எழுதலாம் என்று நினைக்கிறேன்.

தமிழ் ஸ்டுடியோவில் வெளிவரும் கதை சொல்லிப் பகுதிக்காக தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் கதைசொல்லிகளை தேடித் திரிந்தபோது நான் முதலில் சென்ற ஊர் தஞ்சை. தஞ்சை பிரகாசின் சீடர்கள் பத்துப் பெரும் இன்றளவும் அந்தப் பகுதிகளில் கதை சொல்லி நிகழ்வை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் மிக முக்கியப் பங்காற்றி வருகிறார்கள். அது சார்ந்து ஒரு பயண அனுபவம் எழுதாமலேயே எனக்குள் மறைந்துவிட்டது. அவர்களைப் பற்றி நிச்சயம் இன்னொரு பதிவில் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். இதுப் போன்ற எண்ணற்றப் பயணங்கள்.. இலக்கில்லாமல் நான் சுற்றித் திரிந்த தமிழகத்தின் நிறையப் பகுதிகள்..தகிக்கும் வெய்யிலில், சிலிர்க்கும் குளிரில் என நான் பயணப் பட்டது பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. இங்கே அந்த அனுபவம் எல்லாம் சுயப் புலம்பல்களாக, சுய அறிவித்தலாக இல்லாமல் முடிந்த வரை இயல்பாக பகிர்ந்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இருந்தாலும் இயல்பாக இருத்தலே கட்டுடைக்கப்பட்ட பின்னர் எல்லாம் மாயையாக நம்மை சுற்றி படர்ந்திருக்கும் நிலையில் எப்படி இயல்பாக இருக்க முடியும் என்கிற ஒரு கேள்வி எழும் நிலையில், மாயையை நோக்கிய பயணத்தை இயல்பை நோக்கி நகர்த்தும் வல்லமை எல்லோருக்கும் வாய்க்கப்படுவதில்லை. அந்த வல்லமையை எனக்கு தாராயோ சிவசக்தி என்று நான் நம்பாத கடவுளை நோக்கி கையேந்தவும் இயலாத சூழலில் என் மொழியோடு, என் மொழியின் கூறுகளோடு விளையாடிப் பார்ப்பதே சிறந்த வழி என்று நினைக்கிறேன்.

ஒரு பயணக் கட்டுரையை நேர்த்தியாகவும், சிறப்பாகவும் எழுத முதல் தேவை, சில மறத்தல்களும், சில நினைவுகளும் தான். எதை மறக்க வேண்டும், எதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும் என்கிற தெளிவு இருக்குமாயின் அந்தக் கட்டுரை தன்னுடைய அதிகபட்ச தரத்தை எட்டிவிட்டதாகவே கருதிக்கொள்ளலாம்.

மார்கழிக் குளிரில் பற்களெல்லாம் தந்தி அடித்து வெயிலைக் கூப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒரு அழகான மாலை நேரத்தை மேலும் அழகாக்கிக் கொண்டிருந்தது. மனுஷ்யபுத்திரனின் கவிதை வெளியீட்டுவிழா. இந்த விழாவை முடித்துக் கொண்டு அன்று இரவே ஈரோட்டில் நடக்கும் ஒரு நிகழ்வில் குறும்படங்கள் தொடர்பாக பேசுவதற்காக செல்ல வேண்டியிருந்தது.

மனுஷ்யபுத்திரனின் கவிதை வெளியீட்டு விழா நான் பார்த்த வரையில் வந்திருந்த அனைத்து சிறப்பு அழைப்பாளர்களும் அந்த விழாவின் மைய சரடாகிய கவிதை புத்தகம் குறித்தே பேசிய விழா. பொதுவாக டிசம்பரில் நடக்கும் எல்லா புத்தக விழாவிலும் அழைக்கப்படும் சிறப்பு அழைப்பாளர்களில் சிலர் அந்த விழாவின் நோக்கம் என்ன, எந்த விழாவிற்கு வந்திருக்கிறோம் என்றே தெரியாமல் பேசிவிட்டு செல்வதையே மரபாக வைத்திருப்பவர்கள். அதிலும் திரைப்படத் துறையில் இருந்து வரும் சிறப்பு அழைப்பாளர்கள் "நான் இந்தப் புத்தகத்தை இன்னும் படிக்க வில்லை" என்று சொல்லியே தன் பேச்சை ஆரம்பிப்பதை ஒரு பெரிய கௌரவமாகவே கருதுகிறார்கள். சாப்பிடப் போனவர்கள் வேறெதையோ செய்து விட்டு வந்தக் கதைதான் நினைவுக்கு வருகிறது.
இதில் அவர்களை சொல்லி குற்றம் இல்லை. தமிழ் சமூகமே அப்படிப் பட்ட மேதாவித் தனத்தைத்தான் தொடர்ந்துக் கொண்டிருகிறது. பாப்கார்ன் சாப்பிடுவதற்காகவே திரைப்படம் பார்க்க செல்லும் கூட்டங்கள் நிறைந்த சூழலில் பேச வந்தப் பொருளை விடுத்து பேசாப்பொருளை பேசும் மடந்தைகளை நாம் என்ன செய்துவிட முடியும்.

அப்படி இல்லாமல் மனுஷ்யப்புத்திரனின் கவிதை புத்தக வெளியீட்டு விழா முழுவதும் அனைவரும் பேசுப் பொருளையே பேசியது கொஞ்சம் மன நிறைவைத் தந்தது. அதிலும் கூட நெருடலாக இருந்தது, அனைவருமே மீண்டும் மீண்டும் சொன்னக் கருத்தையே சொல்லிக் கொண்டிருந்தது. இந்தப் புத்தகத்தில் எந்த கவிதையைப் படிப்பது எதை விடுப்பது என்றே தெரியவில்லை என்கிற வரியை அநேகமாக அனைத்து சிறப்பு அழைப்பாளர்களும் சொல்லி விட்டுத்தான் இருக்கையை நோக்கிய நகர்ந்தனர். நானும் அந்தக் கவிதைப் புத்தகத்தை வாங்கி வந்தேன். கொடுத்த காசிற்கு பங்கம் இல்லை என்றாலும், எல்லோரும் சொன்னது போல் இல்லை.

ஏ!
எந்திர மனிதா!
இன்று முதல்
சிரிக்கப் பழகு
கண்ணீர் சுண்டிக்
கடலில் எறி!

எரிமலைக் குழம்பா?
இரும்பு காய்ச்சு!

பூகம்பமா?
பூச்செடிகளை மாற்றி நடு!

இதுப் போன்ற கவிதைகளுக்கு தமிழ் கவிதை சூழலில் மனுஷ் போன்றவர்களின் கவிதைகள்தான் இந்த சூழலை அதன் தன்மை மாறாமல் அதன் அடையாளக் குறிகளோடு வைத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. (மேற்சொன்ன கவிதை யாருடைய கவிதை என்பதை முடிந்தால் நீங்களே கண்டுப் பிடித்துக் கொள்ளுங்கள்).

பயணம் இங்கிருந்துதான் தொடங்கியது. எனவே கட்டுரையையும் இங்கிருந்தே தொடங்குகிறேன். அடுத்து ஈரோடு புறப்படுவோம்.


Wednesday, December 15, 2010

தேநீர் சாலை....



தேநீர் கோப்பைக்கும் மனிதர்களுக்குமான உறவு அலாதியானது. அர்த்தமற்றது. அது சில நேரங்களில் தன்னை தன்னகத்தே சிலிர்ப்படைய செய்கிறது. அல்லது தனக்கான கட்டுக்கோப்பை, கட்டுகள் அற்ற கட்டுப்பாட்டை உடைத்தெறிய விழைகிறது. கட்டுண்ட ஒரு சமூகத்தில் அதன் கட்டுப்பாட்டை உடைத்தெறிய நமக்கெல்லாம் ஏதோ ஒரு வகையில் தேநீர் கோப்பை தேவை என்றால் கேட்பதற்கு நாராசமாக இருக்கும். ஆனால் உண்மை அதுதான்.

தேநீர் என்பது, ஒரு நாகரீகத்தின் குறியீடாக, வறுமையின் குறியீடாக, அந்தஸ்தின் குறியீடாக, தனிமையின் குறியீடாக, போதையின் குறியீடாக, அவஸ்தையின் குறியீடாக எப்போதும் நமக்கு பயன்பட்டே வருகிறது. மிக சாதாரண மனிதன் தொடங்கி மாளிகை வாசி வரை ஏதோ ஒரு வகையில் தேநீரின் பரிசத்தை உணர்ந்தவனாகவே இருக்கிறான். தாயின் முலைப்பாலை குடித்த போது உணர்ந்த ஒரு கதகதப்பை, அன்பை, அரவணைப்பை தேநீர் பருகும்போதும் நாம் பெற்றுவிடுகிறோம். தாய்ப் பாலும், தேநீரும், ஒரேவித ஸ்பரிசத்தை கொடுத்தது என்று சொன்னால் தாய்ப் பாலின் புனிதத்தை கெடுத்து விட்டதாக கூறி உடனே ஒரு வித மனநோயாளியாக நம் மீது பாயும் இந்த சமூகம் ஏன் புரிந்துக் கொள்ள மறுக்கிறது, நாம் புனிதம் என்று நம்பும் எல்லாமே ஒரு அசிங்கத்தின் மறுபக்கம் என்று. இங்கே தேநீர் ஒரு குறியீடாகவே பயன்படுகிறது என்பதை நினைவில் கொள்க. தஸ்தாவோஸ்கிக்கும் தேநீருக்குமான உறவைப் பற்றி தெரிந்துக் கொண்டிருந்தால் ஒரு தேநீரில் ஒளிந்து இருக்கும் கலை ஆளுமைகளை இந்த சமூகம் சந்தித்திருக்கும். மாறாக அது தான் ஓடி ஒளிவதையே பொருட்டாக நினைக்காமல், தேநீர் கோப்பையில் கலை ஆளுமைகள் ஓடி ஒளிந்துக் கொள்வதாக நினைத்து பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த ஒரு உயிரும், பொருளும், கலையும் தன்னுடய இருத்தலுக்கான நியாயத்தை கற்பிதம் செய்ய வேண்டுமென்றால் அது நிச்சயம் ஏதோ ஒரு வகையில், சில நேரங்களில் தன்னை மறைத்துக் கொண்டே ஆக வேண்டும் என்பது ஆகம விதி. அந்த மறைத்துக் கொள்ளும் கால அளவு மிக முக்கியமானது.

மார்க் ட்வெயின் எனும் அமெரிக்காவின் முதல் அங்கத எழுத்தாளர் (இத்தனைக்கும் அமெரிக்காவில் அப்போது எழுத்தாளர்களுக்கு சுதந்திரம் மறுக்கப்பட்டு வந்த காலக்கட்டம்) தான் தேநீர் அருந்திய கடைகளை, தன் எழுத்தின் வளமையின் குறியீடாகவே கூறுகிறார். அவரது வாழ்நாளில் அவரை பெரிதாக கொண்டாட மறுத்த அமெரிக்க சமூகம் அவர் இறந்த பின்னர், அவர் தேநீர் அருந்திய கடைகளையெல்லாம் கண்டுபிடித்து அங்கெல்லாம், ட்வெயின் நினைவாக பல்வேறு இலக்கிய கூட்டங்கள் நடத்தியது வரலாறு. ட்வெயின் தன்னை, தன்னுடய இருத்தலை, தன்னுடய எழுத்துகளை அந்த தேநீர்க் கோப்பைக்குள் தான் மறைத்து வைத்திருந்தார். அது வெடித்துக் கிளம்பியதும், சமூகம் தன்னுடைய கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்கிறது. அல்லது தளர்த்திக் கொள்ள நிர்பந்திக்கப்படுகிறது.

வறுமையின் பிடியில் வதை படும்போது, அந்த வதையைக் கூட சுகமாக மாற்றுவது ஒரு கோப்பை தேநீர்தான். அதை உணர்ந்தவன் அறிவான். எத்தனையோ பஞ்ச பராதிகள், பரதேசிகள் தங்கள் வாழ்நாளை ஒரு கோப்பை தேநீருடனேயே கழிக்கிறார்கள் என்பது நமக்கு ஒரு செய்தி. ஒரு குறியீடு. ஆனால் அவர்களுக்கு அது ஒரு வாழ்க்கை. ஒரு வாழ்க்கையே ஒரு கோப்பையில் முடிந்து விடுமானால் அதுவும் சுகமாக அமையுமென்றால் அது தேநீர் கோப்பையில் மட்டுமே. மீண்டும் சொல்கிறேன் தேநீர் கோப்பை இங்கே ஒரு குறியீடு மட்டுமே.

சமூகம் கட்டமைக்கப்படுவதற்கு முன்னர் ஊரார்கள் ஒன்று கூடி ஒரு ஊர் என்பதை எப்படி வரையறை செய்யலாம் என்று விவாதித்தபோது, ஒரு தேநீர்க் கடை இருந்தால் அதையும் ஒரு ஊராக பாவிக்கலாம் என்று யாரோ விளையாட்டாக சொன்னது உண்மையாக மாறிவிட்டது. இரண்டு மூன்று வீடுகள் இருக்கும் தெருக்களில் கூட நான்கைந்து தேநீர் கடைகள் நல்ல லாபத்தோடு இயங்கிக் கொண்டிருப்பது, ஒரு சமுதாயத்தின் வறுமையை குறிக்கிறதா, அல்லது வளர்ச்சியைக் குறிக்கிறதா? இங்கே குறியீடு கொஞ்சம் குழம்பித் தான் போகும்.

தேநீரின் பிறப்பிடம் தென்கிழக்கு ஆசியாதான். இந்தியாவின் வடமேற்கு பகுதி, பர்மா தென்மேற்கு சீனா என்று தேயிலை வளர்ந்திருந்தாலும், அது பயன்பாட்டிற்கு வந்தது சீனாவில்தான். சீனாவின் பழங்குடி இன மக்கள் பருகும் தேநீர் கொப்பைகளுக்கான குறியீடுகள் மிக முக்கியமானவை. அங்கே வயது வந்த ஆண்கள் பெண் குறி போல் இருக்கும் கோப்பையையும், வயது வந்த பெண்கள் ஆண் குறிப் போல் இருக்கும் கோப்பையையும் பயன்படுத்துவது எதன் குறியீடு என்று ஆராய்ந்தோமானால் அவர்களுக்கு இளமையிலேயே சரியான பாலியல் கல்வி புகட்டுவதற்கான குறியீடாகவே படுகிறது.

இந்தியாவில் தேநீர் அறிமுகமானது வெள்ளையர்கள் ஆட்சியில்தான். அதனை ஒரு வியாபாரப் பொருளாக, செல்வத்தின் குறியீடாக நினைத்த வெள்ளையர்கள் முதலில் மக்களுக்கு இலவசமாகவே அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள். பின்னர் மக்கள் அதன் சுவைக்கு தங்கள் நாவை அடிமைப்படுத்திவிட்டனர். அதன் பின்னர் வெள்ளையர்கள் நினைத்தது போலவே தேயிலை பல அடிமைகளை வடிவமைக்க, அவர்களுக்கு ஒரு குறியீடாகவே பயன்பட்டுள்ளது.

எது எப்படியென்றாலும், இந்தியாவை பொறுத்தவரை அது அடிமைகளின் குறியீடு என்றாலும், அதற்காக கட்டுக்கோப்பான இந்த சமூகம் ஒரு போது கவலைக் கொண்டது இல்லை. காரணம் அடிமைத் தனமே தனக்கான கட்டுக்கோப்புதான் என்று திண்ணமாக நம்பும் ஒரு கட்டுண்ட சமூகம், எப்படி கட்டுடைத்தலான தேநீர் கோப்பை வெளியேற்ற இயக்கத்தை நடத்த விழையும். இன்று தெரிந்தோ தெரியாமலோ, எல்லோரின் இரத்தத்திலும் தேநீரின் சுவை கரை படிந்திருக்கும். அது யாரோ ஒருவர் தேநீருக்காக சிந்திய ரத்தக் கறையாக இருக்கலாம். அல்லது ஒரு சமூகமே தனது இருத்தலின் ரகசியத்தை விட்டெறிந்து பொய்யான வேறு உலகை அடைந்ததால் ஏற்பட்ட பயணக் கறையாக இருக்கலாம். கறை எதுவாக இருந்தால் நமக்கென்ன? நமக்கு தேநீர் ருசியாக இருந்தால் போதாதா என்ன? இங்கே தேநீர் அடிமை உணர்ச்சியின் குறியீடாக பார்க்கப்பட்டாலும், அந்த அடிமை சங்கிலியை உடைத்தெறிய பயன்படும் விவேக வித்தாகவும் தேநீர் கோப்பை இருந்திருக்கலாம். இருந்திருக்கலாம் என்பதில் அடிக்கோடிடுக..

உலகிலேயே மிக அதிகமாக தேநீர் பருகும் சமூகம் இந்திய சமூகம், இங்கே தேநீர் என்பது அதிகார வர்க்கமும், அடிமை வர்க்கமும், இணைந்தே ஏற்படுத்திய மாய பிம்பத்தின் மிச்ச எச்சங்கள் என்றால் அதை குறியீடாக பயன்படுத்த அனுமதித்தது எது?

பார்ப்போம்.


Friday, November 5, 2010

நூலகம்


எட்டாம் வகுப்பின் இறுதி தினங்களை எண்ணிக்கொண்டிருந்த காலக்கட்டமது.. அண்ணனின் மரணம், வீட்டின் வறுமை என சகல வித துன்பங்களும் சூழ்ந்துக் கொண்டிருக்க நண்பர்களின் அரட்டைப் பேச்சிலோ, விளையாட்டிலோ (அதுவரை எங்கள் தெரு கிரிக்கெட் விளையாட்டில் சிறுவர்கள் பிரிவில் நான்தான் கேப்டன், பம்பரம் விடுதலில் பெற்ற வெற்றிகளுக்கு சான்றாக எங்கள் வீடு முழுவதும் நிரம்பிக் கிடந்த பம்பரங்களே சாட்சி, இப்படியாக பல விளையாட்டுகளில் தனித்திருந்தேன்) கவனத்தை திருப்ப முடியாமல் ஒரு மாற்றத்தை மனம் விரும்பிக் கொண்டிருந்த நேரம். அந்த சமயத்தில் எனது பள்ளியின் விளையாட்டுக் கல்வி ஆசிரியர் எல்லோரும் நூலகம் செல்ல வேண்டும், தினசரிகள் படிக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தார். நூலகம் என்கிற வார்த்தையில் ஏதோ ஒருவித மயக்கம் ஏற்பட்டு, அதில் எப்படி சேர்வது என்று ஆசிரியரிடம் வினவினேன். அவரோ, "அருகில் எங்காவது நூலகம் இருக்கும், போய் விசாரித்துப் பார்" என்றார்..

கொட்டிவாக்கத்திர்கடுத்து முன்னும் பின்னும் என்னென்ன கிராமங்கள் இருக்கிறதென்றே அறியாத நான், அருகில் இருக்கும் நூலகத்தை தேடி அலைந்தேன். அப்போதுதான், திருவான்மியூரில் மருந்தீஸ்வரர் கோவில் அருகே ஒரு கிளை நூலகம் இருப்பதாக எனது பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார். உடனே திருவான்மியூர் எப்படி போகவேண்டும்,என்று விசாரித்து ஒரு நாள் பேருந்தில் அங்கே போய் சேர்ந்தேன். ஆனால் நூலகத்திற்குள்ளே எத்தனையோ பெரியவர்கள் உட்கார்ந்துக் கொண்டு மிக அமைதியாக படித்துக் கொண்டிருந்தனர். எனவே இங்கே சிறுவர்கள் செல்லக்கூடாது என்று நினைத்துக் கொண்டு மீண்டும், வீட்டிற்கு திரும்பினேன்.

நூலகம் என்கிற வார்த்தையைக் கூட பல சிறுவர்கள் கேள்விப் பட்டு இருக்கமாட்டார்கள். நமது பள்ளிக் கல்வி அந்த வகையில் தான் மாணவர்களை வழி நடத்துகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் நூலகத்திற்கென்று கொடுக்கப்படும் பல புத்தகங்கள் அந்தப் பள்ளியில் ஏதோ ஒரு மூலையில் சப்தமற்று சராசரி தாள்களாய் உறங்கிக் கொண்டிருக்கின்றன. நூலக வாசல் வரை சென்ற எனக்கு நூலத்தின் உள்ளே நுழைய போதிய தைரியமில்லைஎன்றால் இங்கே மாணவர்களுக்கு நூலகம் பற்றிய பொது அறிவை போதிப்பது யார்?

இருந்தாலும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மற்றொரு நாள் சனிக்கிழமை என்று நினைக்கிறேன், நூலகத்தின் உள்ளே சென்றேன். அங்கே சிதறிக் கிடக்கும் தினசரிகள், வாராந்தரிகள், மாத இதழ்கள் என்று ஒவ்வொன்றாக ஒரு பக்கம் விடாமல் படிக்கத் தொடங்கினேன். நான் கீழ் தளத்தில் படித்துக் கொண்டிருக்கும்போதே பலரும் மேல்தளத்திற்கு சென்றுக் கொண்டிருந்தனர். போகும்போதும், வரும்போதும் அவர்கள் கையில் புத்தகங்கள் இருப்பதை பார்த்தேன். அப்படி எங்கே போகிறார்கள் என்று மேலே போய் பார்த்தபோது அங்கே ஒரு கண்ணாடிக் கதவு மூடப்பட்டு (அப்போதுதான் நான் முதன்முதலாக கண்ணாடிக் கதவினை பார்த்ததாக நினைவு) அருகில் ஒருவர் உட்கார்ந்துக் கொண்டு, ஏதோ பதிவு செய்துவிட்டு எல்லோருக்கும் புத்தகங்களை கொடுத்துக் கொண்டிருந்தார்.

எப்படியும் நாம் உள்ளே போக முடியாது, உள்ளே சென்றால் கதவருகில் இருப்பவர் நம்மை வெளியே துரத்தி விடுவார் என்று பயந்துக் கொண்டு மீண்டும் கீழ் தளத்திற்கு வந்து படிக்கத் தொடங்கினேன்.

மறு நாள் என் ஆசிரியரிடம் நேற்று நூலகம் சென்று வந்ததை பற்றி சிலாகித்து சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் மேல் தளத்தில் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை பெற முடியாது போலிருக்கிறது என்று கவலை தோய்ந்த முகத்தோடு அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவரோ, "அப்படி இல்லை, நீ அந்த புத்தகங்களை படிக்கலாம், அங்கே லைப்ரரியன் என்று ஒருவர் இருப்பார் அவரிடம் போய் கேள் என்றார்".

மறு நாள் நூலகத்தின் மேல் தளத்திற்கு சென்று லைப்ரரியன் பற்றி விசாரித்தேன். கதவருகே இருந்தவர் "அது நான்தான்., உனக்கென்ன வேண்டும்" என்றார். எனக்கு நேரடியாக பேச பயமாக இருந்ததால், "நான் பாலவாக்கம் ஸ்கூல்ல இருந்து வரேன், எங்க ஸ்போர்ட்ஸ் சார் இந்த புத்தகங்களை படிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு வர சொன்னார்" என்றேன்.

அவர் மெலிதாக ஒரு புன்னகையை வீசிவிட்டு, ஒரு அட்டையை எடுக்க கையில் கொடுத்தார். "இந்த அட்டையை ஃபில் பண்ணிட்டு ஒரு கஜட்டேட் ஆபீசர் கிட்ட கையெழுத்து" வாங்கிக்கிட்டு வா என்றார். கஜட்டேட் ஆபீசர் என்றால் யார் என்று எனக்கு தெரியாது, ஆனால் அவரிடம் கேட்க பயமாக இருந்தது, என் தயக்கத்தை மிக சரியாக புரிந்துக் கொண்ட அவர் "அருகில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் கிட்ட கையெழுத்து வாங்கிக்கிட்டு வா" என்றார்.

ஏதோ ஒரு பெரிய சாதனையை செய்து விட்டதாக மனம் பெருமிதம் கொண்டது. முதல் முறையாக ஒரு போலீஸ்காரரை நேரடியாக சந்திப்பதற்கு என்னிடத்தில் தைரியம் இல்லை என்றாலும், சுதாரித்துக் கொண்டு திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் பின்பக்கம் உள்ள போலீஸ் ஸ்டேசன் சென்று இன்ஸ்பெக்டரை பார்க்க வேண்டும் என்றேன். ஒரு போலீஸ்காரர், "என்ன விஷயம் னு, சொல்லு" என்று வார்த்தையால் மிரட்டி என்னை திகிலுற செய்தார். பிறகு நூலகம் விபரங்களை பற்றி சொன்னப் பிறகு "போய் ஒரு பேனா வாங்கிட்டு வா" என்றார், அவர் மேசையில் நான்கைந்து பேனாக்கள் இருந்த்துக் கண்டு,அவர் அதனை கவனிக்காமல் நம்மிடம் கேட்கிறாரோ என்று நினைத்துக் கொண்டு "இதோ இருக்கு சார்" என்று அப்பாவியாய் சிரித்துக் கொண்டு நின்றேன். அவரோ ஒரு முறைப்பை வெகுமதியாய் கொடுத்துவிட்டு "கையெழுத்து வேண்டுமா வேண்டாமா" என்றார். ஏதும் பேசாமல் பேனா வாங்க புறப்பட்டேன், அவரே மீண்டும் அழைத்து "டேய், நாலு பேனா, ஒரு லாங் சைஸ் நோட், ஒரு பெரிய ஸ்கேல், இதெல்லாம் சேர்த்து வாங்கிட்டு வா என்றார். நான் என்னிடம் அவ்வளவு பைசா இல்லை என்று சொன்னதற்கு, அப்பா நாளைக்கு வா என்று வழியனுப்பி வைத்தார்.

ஒரு வழியாக அப்பாவிடம், நூறு ருபாய் (லைப்ரரி உறுப்பினர் சேர்க்கைக்கு அறுபது ரூபாயும், பேனா நோட்டு எல்லாம் வாங்க ஐம்பது ரூபாயும் சேர்த்து) வாங்கிக் கொண்டேன். பேனா, நோட்டு, ஸ்கேலோடு அவரை சந்திக்க சென்றேன். அவர் முகத்தைப் பார்க்காமல் "அங்க வச்சிட்டு, அந்த ரெண்டாவது ரூம்ல போய் பாரு" என்றார். ரெண்டாவது ரூமில், ஒரு அதிகாரி யாரையோ விசாரித்துக் கொண்டிருந்தார். அவரை எங்கோ பார்த்ததாக நினைவிருந்ததால் யோசித்தேன். திரைப்படங்களில் பயில்வானாக வரும் ரங்கசாமி அவர். அவர் ஏதோ நில விவகாரத்தில் மாட்டிக் கொண்டதால் இன்ஸ்பெக்டர் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்து விட்டு, "என்னைப் பார்த்து உள்ளே வா" என்றார். எந்த வித கேள்வியும் கேட்காமல் "இதுல எல்லாம் நான் கையெழுத்துப் போடா முடியாது பா, போயிட்டு வா" என்றார். அவரிடம் மேற்கொண்டு எந்த வார்த்தையும் பேசுமளவுக்கு எனக்கு தைரியமில்லை. அந்த வயதில் எனக்கு மிக பெரிய தோல்வியாக பட்டது. மிகப் பெரிய மன வருத்தத்தோடு நேராக நூலகரிடம் வந்து நடந்ததைக் கூறினேன். அவர் ஒரு அரசாங்க மருத்துவரை அடையாளம் காட்டி அவரிடம் கையெழுத்துப் பெற்று வா என்றார். மறு நாள் மருத்துவரை பார்க்க சென்றேன். வெளியில் உட்கார்ந்திருந்த ஒருவர் விசயத்தைக் கேட்டு விட்டு ஐம்பது ரூபாய் ஆகும் என்றார். ஒன்றும் பேசாமல் வீட்டிற்கு வந்து அப்பாவிடம் கூறி மேலும் ஐம்பது ரூபாய் வாங்கி சென்றேன். மருத்துவர் எந்தக் கேள்வியும் கேட்காமல் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். அவர் என் முகத்தைக் கூட பார்த்திருக்கவில்லை என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் அதுதான் உண்மை.

அடுத்த நாள் நூலகத்தில் உறுப்பினராகிவிட்டேன். ஏதோ இனம்புரியாத மகிழ்ச்சி.. உறுப்பினராகி விட்டாலும் அங்கிருக்கும் அவ்வளவு புத்தகங்களையும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டு ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து அங்கேயே படித்து முடித்தேன். புத்தகங்களை வீட்டிற்கு கொண்டு வரலாம் என்பது எனக்கு அப்போது தெரியாது. நான்கைந்து நாட்கள் தொடர்ந்து நூலகம் சென்று அங்கேயே புத்தகங்களை படித்துவிட்டு வந்தேன். அப்படி நான் படித்த முதல் புத்தகம் "போரும் அமைதியும்" என்ன ஏதேன்றே தெரியாமல் ஏதோ கைக்கு வந்த புத்தகத்தை தொடர்ந்து இருபத்தைந்து நாட்கள் படித்து முடித்தேன்.

ஒரு நாள் நூலகரே, "புக்க இங்கேயே படிக்கனம்னு அவசியம் இல்லை. வீட்டுக்கு கொண்டு போயும் படிக்கலாம். பதினைந்து நாள்ல திருக் கொடுத்துட்டு இன்னொரு புக் எடுத்துட்டுப் போலாம் னு சொன்னார்". வகுப்பில் ஒருநாள் என் ஆசிரியரிடம் இது பற்றியெல்லாம் விவாதிக் கொண்டிருந்தேன். பின்னர் தான் தெரிந்தது. அவருக்கே இப்போதுதான் லைப்ரரி புத்தகங்களை வீட்டிற்கு கொண்டு வரலாம் என்பது தெரியும் என்று. ஏதோ ஆசியருக்கு நாம் ஒன்றை சொல்லிக் கொடுத்துவிட்டோம் என்று மிதப்பு கொஞ்சம் தலைக் காட்டியது.

பின்னர் தொடர்ந்து நான் நூலகத்தில் அசுர வேகத்தில் படிப்பதைக் கண்ட நூலகர் தினமும் எனக்கு லைப்ரரி புத்தங்கள் பற்றியும், லைப்ரரிக்கு புத்தகங்கள் வரும் முறை பற்றியும், அதில் ஏற்றப்படும் பதிவேன் பற்றியும் நிறைய சொல்லிக் கொடுத்தார். தினமும் அவருடன் எனக்கும் சேர்த்தே டீயும், பிஸ்கட்டும் ஆர்டர் செய்தார். நான் படிப்பதை எனக்கே தெரியாமல் மறைமுகமாக ஊக்குவித்தார் அந்த நூலகர். ஒரு நாள் சிலப்பதிகாரம் நூலுக்கு உரைப் படிக்கும்போதுதான் அவர் தனது பெயரையே எனக்கு சொன்னார். வேறு என்ன இளங்கோ தான்!...

இன்று ஏதோ கொஞ்சமாவது உலக இலக்கியங்களும், உள்ளூர் இலக்கியங்களையும் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு அந்த நூலகர் இளங்கோவும் ஒரு முக்கியக் காரணம். கல்லூரிக்கு சென்ற பின்னர் சொந்த நிலம் கை மாறிய பின்னர் பழைய மாமல்லபுர சாலையில் குடியேறியதும், அந்த நூலகருக்கும், எனக்குமான தொடர்பு முற்றிலும், அறுந்துப் போய் விட்டது. யாரையாவது நான் மீண்டும் சந்திக்க விரும்பினால் அதில் முதலிடம், இளங்கோவனுக்குதான்.


Friday, October 29, 2010

பட்டாம்பூச்சி - சிறுகதை




இடதுபக்க வாய் ஒரு ஓரமாய் இழுத்துக்கொண்டும், எப்போதும் தாடைகளை அசைத்துக் கொண்டும், கீழுதட்டில் ஒழுகும் எச்சில் நீரை கவனிக்காமல் எல்லோரிடமும் எப்போதும் சிரித்துப் பேசும் ஏகலைவன் சந்துரு. நமது பாஷையில் சொன்னால் பைத்தியக்காரன். கொஞ்சம் படித்தவர்கள் எனும் போர்வையில் இருப்பவர்கள் பாஷையில் மனநிலை பாதிக்கப்பட்டவன். "யார் விட்டா சாபமோ, அந்தக் குடும்பத்தில இப்படி ஒரு புள்ள வந்துப் பொறந்து தொலைச்சிருக்கான்" என்று சம்மந்தமே இல்லாமல் அண்டை வீட்டார் பலர் இப்படிதான் சொல்லிக்கொண்டு இருப்பார்கள். ஏதோ சத்தில்லாத ஒரு விந்தணு அல்லது நோய் வாய்ப்பட்ட நிலையில் ஏற்பட்ட உடலுறவில் பிறந்திருக்கலாம், அல்லது சொந்தத்தில் திருமணம் செய்ததால், மரபு வழியாக இப்படி நேர்ந்திருக்கலாம் என்று ஏதோ ஒரு காரணம் சொல்ல வேண்டுமே என்று மருத்துவர்களும் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் இதெல்லாம் பாழாய்ப் போன அந்தத் தாய் உள்ளத்திற்கு எங்கேத் தெரியப்போகிறது. மற்றப் பிள்ளைப் போல் இவன் இல்லையே என்கிற ஏக்கமும், நரம்பில்லா நாக்கில் நாயனம் வாசிக்கும் சுற்ற சமூகத்தாரின் பேச்சும் மட்டுமே அவளை தினமும் வாட்டி வதைத்தன. இருபத்திரண்டு வயதில் இன்னமும் குண்டியை மறைக்கும் சுரணை உணர்வு கூட இல்லாமல், எல்லோர் மீதும் எச்சிலை பன்னீராய்த் தெளித்துக் கொண்டும் வீதி சிறுவர்கள் சிண்டு முடிந்து விளையாடும் விளையாட்டுப் பொருளாய் தன் மகன் ஆகிவிட்டானே என்று அவள் தினமும் வருந்துவதை தவிர வேறென்ன செய்து விட முடியும்.

சந்திரன் சந்துருவுக்கு இளையவன். பார்ப்பதற்கு அந்த சந்திரன் போன்றே பால் முகமாய் இருப்பவன். எதிரிகள் கூட அவன் அழகில் கொஞ்சம் அடிபட்டுத்தான் போவார்கள். ஆனால் தன் அண்ணன் நிலை பற்றி அவனுக்கு இருக்கும் வருத்தத்தை விட இவன் தனக்கு அண்ணனாக பிறந்து விட்டானே என்கிற கோபம்தான் அதிகம். சுற்றி இருக்கும் அண்டை வீடும், புண்டை மவன்களும் சேர்ந்து உன் அண்ணன் ஒரு பைத்தியம், குண்டிக்காட்டி என்று ஏகத்துக்கும் வசனம் பேசிக்கொண்டிருக்கும் ஒரு சராசரி தமிழ் சினிமா ரசிகர்களாக இருப்பதால் சந்திரன் முகத்தில் எப்போதும் ஏதோ ஒருவித நெருடலும், சோகமும் கலந்தே இருக்கும்.

இப்படிதான் ஒரு சமயம் எதிர் வீட்டு பாலுவின் சித்தப்பா மகன், சந்த்ருவுடன் விளையாடுகிறேன் என்று சொல்லிவிட்டு, அவன் புட்டத்தில் கண், காது, மூக்கெல்லாம் வரைந்து எதிரியை சுடுவது போல் தீபாவளி துப்பாக்கியால் சுட்டு விளையாடிக் கொண்டிருந்தான். பாலுவின் சித்தப்பா குடும்பம் சென்னை நகரில் செட்டிலாகி சிறு தொழில் தொடங்கி, இன்று சென்னையின் முக்கியப் புள்ளிகளில் ஒருவர்.. இயல்பாகவே பாலுவின் சித்தப்பா மகனுக்கு இதுப் போன்ற வர்க்க திமிர் அதிகம். அதுவும் சந்துரு போன்ற அப்பாவிகளிடம் அவன் சேட்டைகள் அளவுக் கடந்து போகும்.

அவனது இந்த விளையாட்டை தூரத்தில் இருந்து வந்துக் கொண்டிருந்த சந்திரன் கவனித்துவிட்டான். விடுக்கென்று ஓடோடி வந்து பாலு அண்ணனின் நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டான். வேண்டாம்.. வேண்டாம் என்பது போல் சந்துரு கையைக் காட்டிக் கொண்டே சிரித்தான்..விழவும் செய்யாமல், அப்படியே நிற்கவும் செய்யாமல் இடையில் ஏதோ பாவ்லா செய்த பாலுவின் அண்ணன், பின்னர் சுதாரித்து சந்திரன் கன்னத்தில் பளார் என்று ஒரு அறைவிட்டு "ங்கோத்தா... சூத்தக் காட்டிக்கிட்டு திரிஞ்சா என்ன பம்பரம் விட்டா விளையாடுவாங்க.. இப்படிதான் சுட்டு விளையாடுவாங்க.. என்று முடிக்குமுன்னர் அவனது கைத்தடிகள் எதற்கு வம்பென்று கொஞ்சம் சிரித்து வைத்தனர். முன்னொரு முறை இவன் யாரோ ஒருவரை கலாய்த்துக் கொண்டிருக்கும்போது அருகில் இருந்த யாரும் சிரிக்காததால் வாங்கிய அறையை இன்னும் அவர்கள் மறக்கவில்லை. அடிபொடிகள் சிரிப்பதை பார்த்த சந்துரு சந்திராவின் கன்னத்தை தடவி விட்டுக் கொண்டே விசுக்கு விசுக்கு என்று அவனும் சிரித்தான். தன்னை ஏதோ ஒரு நாதாரி நாய் அடித்துவிட்டதே என்கிற கவலையை விட இந்த லூசுப் பயன், தம்பி அடி வாங்கினதுக்கு சிரிக்கிறானே என்று அவனுக்கு கோபம் பீறிட்டது.

ஆட்கொண்ட கோபத்தை அடக்க முனையாமல் ஓங்கி ஒரு அறை விட்டான் சந்திரன். பாலுவின் அண்ணனை அல்ல.. அவனுடைய அண்ணனை..

அடிபட்ட கன்னத்தை அவனே தடவிக்கொண்டு மீண்டும் விசுக்கு விசுக்கு என்று சிரிக்க ஆரம்பித்தான். அவன் சிரிப்பின் ஆழமறியாத சந்துரு வீடு நோக்கி விரைந்தான். மீண்டும் பாலுவின் அண்ணனுடன் விளையாட ஆயத்தமானான் சந்துரு. மீண்டும் அதே புட்டம், அதே கண், காது, மூக்கு..விளையாட்டு ஆரம்பம்.

பாலுவின் அண்ணன், அடிபொடிகள் எல்லாம் புட்டத்தில் சுட்டு மகிழ்ந்து காரணமே இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்தார்கள். தமிழ் சினிமா ஹீரோயின் போல...

ஏசுநாதர் போல இப்போதும் சிரித்துக் கொண்டே இருந்தான் சந்துரு.

பாலுவின் அண்ணன் தான் இப்படி...அப்ப பாலு எப்படி?

அதப்பத்தி உங்களுக்கு என்ன அக்கறை? அவன் ஜட்டிப் போட்டாப் போடுறான்.. இல்லனாப் போறான்.. அதுக்காக ஏன் அவன அந்த இடத்தில் சுட்டு விளையாடினீங்க.. ஏன் நா அவனப் போய் இப்படி பண்ணீங்க.. பாருங்க.. சந்திரன் என்கிட்டே பேசாம போய்ட்டான்.. என்று தன் சித்தப்பா மகன்கிட்ட சண்டைப் போட்டுக்கிட்டு அவனிடமிருந்து மறு வார்த்தையை எதிர்பார்க்காமல் நேராக சந்திரனின் வீட்டுக்கு போய் அவனை சமாதானப்படுத்தினான்.

ங்கப் பாரு.. போய்க்கிட்டே இரு.. உங்க அண்ணன் மேல கொல வெறியில இருக்கேன்.. பெரிய புடுங்கியாடா அவன்.. மெட்ராஸ் ல பெரிய இவன் நா.. அத அங்கப் போய் வெச்சிக்க சொல்லு..இங்க வந்து ஆட்டினா அறுத்து கிழக்கால போட்டுடுவேன்..போய் சொல்லு..பேசிக்கொண்டிருக்கும்போதே விடுக்கென நடக்கலானான். ஆமாம்.. ஆமாம்.. சொன்னாங்க.. கன்னத்தில வாங்கின அறையப் பார்த்தாதான் தெரியுதே.. என்று தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டே..

டேய் சந்திரா.. அதுக்கு நான் என்னடாப் பண்ணுவேன்.. நீ வேணும்னா போய் அவன ரெண்டு அடிச்சிக்கோ.. நான் எதுவும் கேட்க மாட்டேன்..என்று முகத்தை திருப்பிக் கொண்டான்..

எப்போதும் அவர்கள் ஊரில் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னர் விளையாட்டுப் போட்டிகள் வைத்து பரிசுகள் கொடுப்பது வழக்கம்.

இந்த ஆண்டும் அதற்கான அறிவிப்பு தாள்களை ஒவ்வொரு வீட்டுக்கும் கொடுத்துக் கொண்டே வந்தனர். இதனைக் கண்ட இருவரும் சண்டையை மறந்து என்னென்ன விளையாட்டுக்கள் இருக்கின்றன என்று பட்டியலை நோட்டமிட்டனர். பல விளையாட்டுக்கள் இருந்தன. ஏதோ எல்லா விளையாட்டிலும் கலந்துக் கொள்வது போல் பல மணி நேரம் பேசி பின்னர் எப்போதும் போல் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளலாம் என முடிவு செய்தனர். இப்படி பலமுறை இருவரும் சண்டைப் போட்டுக் கொண்டாலும், நட்பில் இவர்கள் நரகாசுரன் அண்ட் தீபாவளிப் போல.. பிரிவது போல் இருக்கும்.. ஆனால் பிரிய மாட்டார்கள்..

கடந்துப் போன மூன்று வருசமும் ரெண்டு பேருமே பஸ்ட் தான் வந்தாங்க..அதனால இந்த முறை ரெண்டு பெரும் ரொம்பவே மெனக்கெட்டு ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருந்தாங்க.. இந்த ஆண்டு புது முயற்சியா மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் அறிவிப்பு தாளில் இருந்தது.. அதைப் பற்றி இவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

சனிக்கிழமை ஆங்காங்கே சிறு சிறு தூரல்களாய் மழை தூறிக் கொண்டே இருந்தது.. எல்லா விளையாட்டுகளும் நடந்துக் கொண்டே இருந்தன. இறுதியாக ஓட்டப் பந்தயம்.

எல்லைக்கோட்டுக்கு அந்தப் புறம் ஏதோ போர் வீரர்கள் போல அனைவரும் அணிவகுத்து இருந்தனர். ஒரு ஒழுங்கு முறை ஏதுமின்றி சிலர் வலதுகாலை தரையில் படுக்கப்போட்டுக் கொண்டும், சிலர் இடது காலை தரையில் படுக்கப்போட்டுக் கொண்டும், ஒரு சிலர் இரண்டு கைகளுக்குப் பதிலாக ஒரு கையை தரையில் வைத்துக்கொண்டு ஓரப்பார்வையில் குமாரிகளை திருமதிகளாக்கும் முயற்சியிலும் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தனர். போட்டி நடுவர் ஒவ்வொருவராக சரிசெய்துக் கொண்டே வந்தார். கூட்டத்தில் இருந்த ஒருவன் விசிலடித்ததால் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர். அவர்களை மறித்து மீண்டும் வரிசையில் உட்கார வைப்பதற்குள் நடுவருக்கு படு திண்டாட்டமாய் போய்விட்டது.. டேய் எவன்டா அவன், நாங்க என்ன மசிருக்கு இங்க நின்னுக் கிடக்கோம்.. வக்காளி தைரியம் இருந்த விசிலடிச்சவன் நேர்ல வாடா பாப்போம்.. என எகிறிக் கொண்டிருந்தார். விசிலடிச்சவன் வந்தக் காரியம் முடிந்ததால் எப்போதே இங்கிருந்துக் கிளம்பி விட்டான். நடுவர் அங்கிருந்த பிக்காளிப் பயல்களைஎல்லாம் டேய் நீதானா அது.. என்று வருத்திக் கொண்டிருந்தார்.

ஏய்.., பொறம்போக்கு.. இப்ப விசிலடிக்கிரியா இல்லையாடா.. ங்கோத்தா கல்லுத் தரையில உக்காந்து உக்காந்து டவ்சர் கிழியுது.. இவன் இப்பதான் விசாரணை பண்ணிக்கிட்டு இருக்கான். போட்டிக்கு வந்த எவனோ ஒருத்தன் தரையைப் பாத்துக்கிட்டு பிட்டக் கொளுத்திப்போட நடுவர் ஏகத்துக்கும் கடுப்பானார். சந்திரன் திரும்பிப் பார்த்தான்.. அவனுக்கு நான்கு பேர் தள்ளி, பாலுவோட அண்ணன் கால்களைத் தடவிக்கொண்டிருந்தான்.

நடுவர் இப்போது விசிலடிக்க தயாரானார். விசிலெடுத்து வாயில் வைத்ததும், நாலைந்து பேர் ஓடத் தொடங்கினர்..

டேய்.. தே பயல்வளா.. ஏண்டா படுத்துறீங்க.... என்று சொல்லி முடிக்குமுன்னர் கூட்டத்திலிருந்து வந்த ஒரு கல் அவர் மீது படுவோமா, வேண்டாமா என்று யோசித்துக்கொண்டே சற்றுத் தள்ளி விழுந்தது.. என்னடி மாப்ள.. யார தேப் பசங்க னு சொல்றீரு.. அடி வயித்துல அசராம அடிப்போமிடி.. என்று எவனோ ஒருத்தன் சொல்லிக்கொண்டே நகர்ந்து சென்றான்.

செய்வதறியாமல் திகைத்த நடுவர்.. வக்காளி. தாயோழி பசங்க. என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே விசிலடிக்க ஆயத்தமானார்..

கண்ணை மூடிக் கொண்டு எல்லாக் கோபத்தையும் கொட்டித் தீர்ப்பது போல் ஒரு நிமிடம் விசிலடித்து முடித்தார்..கண்ணை திறந்துப் பார்த்தால் யாரும் ஓடவே இல்லை..யோவ் விசிலடிச்சு தொலையா.. என்று மீண்டும் குரல் எழுந்தது.. அவர் மீது படாமல் நகர்ந்து சென்ற கல் விசில் மேல் கொண்ட காதலால் அதை மட்டும் தன்னுடன் இட்டு சென்றது.. இதறியாமல் நடுவர் விசிலடித்துக் கொண்டிருந்தார்.. பின்னர் ஒரு வழியாக விசிலை எடுத்து மண்ணை ஊதி புறந்தள்ளி விசிலடித்தார்.

ஓட்டப்பந்தயம் சூடுப்பிடித்தது.. சிலர் மூச்சு வாங்கி ஆங்காங்கே நின்றுக் கொண்டனர். பாலு, சித்தப்பா பயன், சந்திரன் என எட்டு பேர் மட்டும் தொடர்ந்து ஓடினர். பாலு தெரியாமல் சந்திரனின் காலை மிதித்து விட கடுப்பான சந்திரன் அவனை ஒருத் தள்ளு தள்ளிவிட்டு ஓடத் தொடங்கினான். டேய்.. நாயே. என்று கத்திக் கொண்டே எழுந்து ஓடிய பாலு ஒரு கிக்கடித்து அவனை கீழேத் தள்ளிவிட்டான்.. ஓட்டப்பந்தயம் நடப்பதை மறந்து இருவரும் அடித்துக் கொண்டனர். இங்கே இருவருக்கும் சண்டை நடந்துக் கொண்டிருக்கும்போதே அங்கே பலத்த கைத்தட்டல்கள் கேட்டன. இருவரும் திரும்பிப் பார்த்தால் பாலுவின் சித்தப்பாவின் பையன் முதலாவதாக வந்திருந்தான்.. பாலுவின் முகத்தைப் பார்க்காமல் சந்திரன் அலுத்துக் கொண்டே திரும்பி வந்தான். முதல் முறையாக தான் தோற்றதை எண்ணி அவன் மனம் பிறழ்ந்து அழுகையை அடக்க முடியாமல் தேம்பி தேம்பி அழுதான்.

டேய் இங்கப் பார்ரா..குண்டிக்காட்டி ஒடப்போரானாம்.. என ஆளாளுக்கு ஏதோப் பேசிக்கொண்டிருப்பதை கேட்டு அழுகையை நிறுத்தி திரும்பிப் பார்த்தான் சந்துரு. மனநிலை சரியில்லாதவர்களின் ஓட்டப்பந்தயம் தொடங்கவிருந்தது. சந்துருவை எல்லோரும் கேலிப் பேசிக்கொண்டே இருந்தாலும் அவன் சிரிப்பு மாறவில்லை. மற்ற மனநிலை சரியில்லாதவர்கள் அனைவரும் காப்பகத்தில் இருந்து வந்ததால் அவர்களை யாரும் கிண்டல் செய்யவில்லை.

கோட்டுக்கு அந்தப் புறம் அனைவரும் ஓர் ஒழுங்கில் இடதுக் காலை தரையில் படுக்க வைத்துக் கொண்டு, இரண்டு உள்ளங்கைகளையும் தரையில் வைத்துக் கொண்டு போட்டிக்கு தயாராயினர். சந்துரு வாயில் எச்சில் ஒழுகிக் கொண்டே இருக்க அவன் தனது சிரிப்பை தொடர்ந்தான். அருகில் இருந்தவன் ஏதோதோ பேசிக்கொண்டே இருந்தான்..இன்னொருவன்.. உற்ர்ரர்ர்ர்.. உறர்ர்ர்ரர்ர்ர்ர்..... என உறுமிக் கொண்டிருந்தான். சிறிய தலையில் பெரிய கண்கள், பெரிய மூக்கு, என பார்ப்பதற்கே வித்தியாசமாய் இருந்தான். கடைசியில் உட்கார்ந்து இருந்தவன் வயிறு பெருத்து, இடது கை பெருவிரலை மூக்கில் வைத்துக் கொண்டு அடிக்கடி கூட்டத்தையும், நடுவரையும் திரும்பிப் பார்த்தான்.

விசில் சத்தம் பறந்தது..

ஒவ்வொருவரும் ஒரு விதமாய் ஓடத்தொடங்கினர்.. ஒருவன் துள்ளிக் குதித்து ஓடினான்.. ஒருவன் முன் பக்கமாய் ஓடுவதற்கு பதில் பின் பக்கமாய் ஓடினான்.. இன்னொருவன் உட்கார்ந்த இடத்தில் அப்படியே உட்கார்ந்து இருந்தான். இன்னொருவன் இரண்டு கைகளை ஊனிக்கொண்டு நான்கு கால்களால் ஓடினான். உறர்ர்ர்ர் உற்ர்ர்ரர்ர்ர்ர் என்றிருந்தவன், கூட்டத்தின் இடையில் புகுந்து ஒவ்வொருவன் கையையும் இழுத்து உறர்ர்ர்ரர்ர்ர்ர் உற்ர்ர்ரர்ர்ர்ர் என்றான்.. இன்னொருவன் மல்லாக்கப் படுத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான். பின்னல் ஓடியவன் ஏதோ எல்லாம் புரிந்தவன் மீண்டும் முன்னோக்கி வந்து மல்லாக்கப் படுத்திருந்தவன் முகத்தில் ஒரு குத்து குத்திவிட்டு மீண்டும் மிக சரியாக பின்னோக்கி ஓடினான்.

நடுவர் போட்டி ஏற்பாட்டாளர்களின் முகத்தை திரும்பிப் பார்த்தார். போட்டி ஏற்பாட்டாளர்கள் கண்களை மேலுயர்த்தி, முன் பக்கம் முகத்தை அசைத்து புருவத்தை உயர்த்தினர்.. நடுவர் முகத்தில் புன்னகை ஒளி வீசியது.. ஐந்து பேர் மட்டும் சரியாக ஓடிக் கொண்டிருந்தனர்.

சிறிது தூரத்தில், கால் பிசகி ஒருவன் கீழே விழுந்து ஆஅ...ஆஅ..... என்று முனங்கிக் கொண்டிருந்தான். மற்ற நான்கு பேரும் மேற்கொண்டு ஓடாமல் நின்ற இடத்திலேயே நின்றுக் கொண்டிருந்தனர். சந்துரு மீண்டும் பின்னோக்கி ஓடி வந்து அவன் கால்களை உற்று நோக்கினான் அவன் சிரிப்பு மாறாமல்.. உடனே கீழே விழுந்தவனும் சிரித்து வைத்தான். கீழே விழுந்தவனை ஒரு கையைப் பிடித்து தரையிலேயே சர்ர்.... என்று இழுத்துக் கொண்டு ஓடினான் சந்துரு.. அவன் வழிப் பொறுக்காமல் அலறவே..நின்று தனது இரு கைகளாலும் தூக்கிக் கொண்டு ஓடிவந்தான். கூட்டம் ஒரு நிமிடம் மயான அமைதியில் உறைந்துப் போனது. நடுவர் அருகே வந்து அவனை இறக்கி விட்டு திரும்பி நடந்தான். தோள்களை குலுக்கிக் கொண்டு, ஹ..ஹ..ஹ..என சிரித்துக் கொண்டே, தாங்கி தாங்கி நடந்து தலையை கீழேத் தொங்கப் போட்டுக்கொண்டு தாயை நோக்கி விரைந்தான்.

தூரத்தில் இருந்த பார்த்துக் கொண்டிருந்த சந்திரன் ஓட்டப் பந்தயத்தில் ஓடியதை விட மிக விரைவாக ஓடி வந்து சந்துருவை தூக்கி தோளில் வைத்துக் கொண்டு கம்பீரமாக நடந்தான். இப்போதும் சந்துரு சிரிப்பு மாறாமல் சந்திரனின் காதுகளை வருடிக் கொண்டே வந்தான்..ஒரு கம்பளிப் பூச்சி பட்டாம்பூச்சியாய் மாறும் கூட்டுப் புழு மாற்றம் எங்கோ ஒரு இடத்தில் நடந்துக் கொண்டிருந்தது.


Monday, August 23, 2010

நாயகன்


ஒரு விழாவை, அதுவும் பொது விழாவை நடத்தி முடிப்பது எத்தகைய சிரமம் என்பதை அது தொடர்பானவர்கள் அறிந்திருப்பர். ஆனால் எனக்கு ஒரு விழாவை திறம்பட நடத்தி முடிப்பதில் எவ்வித சிரமும் இருப்பதில்லை. காரணம் மாதத்திற்கு இரண்டு மூன்று நிகழ்வை தொடர்ந்து இரண்டு வருடங்களாக நடத்துவதால் அதில் ஏற்படும், சங்கடங்கள், தடங்கல்கள் என அனைத்தையும் யூகித்தே அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வது வழக்கம். ஆனால் அதனையும் தாண்டி ஒரு சில குழப்பங்களும், சொதப்பல்களும் நேர்ந்து விடுவதை மறுப்பதற்கில்லை.


லெனின் எனும் ஒரு மாபெரும் சகாப்தத்தை சந்திக்கும் வரை குறும்படங்கள் மீதான பார்வையும், அவரை சந்தித்த பிறகான குறும்பட பார்வையும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசங்களைக் கொண்டது. புகழின் உச்சியில் இருந்த மனிதன், ஒரு படத்தின் வெற்றியையே தனது விரல் நுனியில் நிர்னைக்கும் திறமைமிக்க ஒரு படைப்பாளி எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு குறும்படத் துறை மீது தனது பார்வையை செலுத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. அது எல்லோராலும் முடிகிற காரியமுமல்ல. ஆனால் லெனின் என்கிற சகாப்தத்தால் மட்டுமே அது முடியும். அவர் இயக்கிய நாக் அவுட் என்கிற படமே தமிழின் திரைப்படக் கல்லூரி மாணவர் அல்லாத ஒருவர் இயக்கிய முதல் குறும்படம். இது சார்ந்து நிறைய சர்ச்சைகள் இருக்கின்றன. லெனின் முதலில் குறும்படம் எடுக்கவில்லை. முன்னரே யாரோ ஒருவர் எடுத்திருக்கிறார் என்று போகிற போக்கில் திரியைக் கொளுத்திப் போட்டு செல்லும் சில சோக்காளிகள் இந்த சர்ச்சையை கிளப்பி செல்கிறார்கள்.


ஒரு கல்யாண வீட்டில் யாரோ ஒருவர் மணப் பெண்ணை பார்த்து இந்தப் பெண்ணை இதற்கு முன் எங்கேயோ பார்த்து இருக்கிறேனோ என்று கூற அவர் பக்கத்தில் இருந்தவன், தன் நண்பரிடம் யோவ் இந்த பொண்ண இந்த ஆளு இதுக்கு முன்னாடி யாரோ ஒரு பயன் கூட பார்த்து இருக்கிறாராம் யா என்று ஊதிவிட்டு அந்தப் பெண்ணின் திருமணத்தையே நிறுத்திவிடும் வித்தை தெரிந்தவர்கள் இங்கே பலர். அப்படிதான் போகிற போக்கில் எந்த அடிப்படை வரலாறும் தெரியாமல் லெனின் எடுத்தது தமிழின் முதல் குறும்படம் அல்ல என்று சொல்வதும்.. அப்படி சொல்பவர்கள் அதற்கான ஆதாராத்தோடு வந்தால் அவர்களுக்கு நிச்சயம் தமிழ் ஸ்டுடியோவின் சார்பில் வெகுமதி உண்டு.


குறும்படத் துறையை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியதும், தமிழின் குறும்பட வளர்ச்சிக்காக தன்னுடைய தொழிலை உதறித் தள்ளிவிட்டு குறும்படங்களுக்கு இலவசமாக ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்றவற்றை செய்துக் கொடுப்பதையும், மும்பை, டெல்லி, திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் நடக்கும் குறும்பட விழாக்களுக்கு ஆர்வமுள்ளவர்களை தன் சொந்த செலவிலேயே அழைத்து சென்று ராஜ மரியாதை கொடுப்பதும் லெனின் அவர்களை தவிர வேறு யாரால் முடியும். குறும்படம் சார்ந்தே இயங்கும் நாங்கலல்லாமல் அவரை வேறு யார் சிறப்பிக்க முடியும். எவ்வித புகழையோ, பணத்தையோ, எதிர்பார்க்காமல் குறும்படம் சார்ந்த ஒரு விழாவிற்கு அழைத்தால் ஆட்டோ அல்லது பைக்கில் யாருடனோ ஒட்டிக் கொண்டு வரும் எளிமை வேறு யாரிடத்தில் நீங்கள் பார்த்துவிட முடியும். எல்லாமும் தாண்டி நல்லப் படங்கள் பற்றி இங்கே மணிக்கணக்கில் நீங்கள் விவாதிக்க வேண்டுமானால், நல்ல படங்கள் சார்ந்து ஒரு புரிதல் ஏற்பட வேண்டுமென்றால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் லெனின் அவர்கள் இல்லமே.


எனவே அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுப்பது என்றும், அடுத்த வருடம் அவர் பெயரிலான ஒரு விருதை குறும்படத் துறைக்காக பாடுபடும் ஒருவருக்கு கொடுப்பது என்றும் முடிவு செய்தோம். லெனின் இதனை விரும்பமாட்டார் முன்னரே அறிந்திருந்தோம். இருந்தும் அவர் விரும்பாததால் அவருக்கு நாங்கள் செய்ய வேண்டிய மரியாதையை எப்படி செய்யாமல் இருப்பது.. துணிந்து இறங்கினோம்.


எப்படியும் அவர் பற்றிய புரிதலை குறும்படத் துறையில் இயங்கும் ஆர்வலர்களுக்கு ஏற்படுத்திவிட வேண்டும். அவரின் நிறை குறை என எல்லாவற்றையும் துறை சார்ந்த கலைஞர்களுடன் விவாதிக்க வேண்டும். என எங்கள் நிகழ்ச்சியின் நோக்கம் நீண்டுக்கொண்டே போனது.


இறுதியாக தொடர்ந்து குறும்படங்களை ஏழு நாட்கள் வெவ்வேறு வகைப்பாட்டின் கீழ் ஒளிப்பரப்புவது, ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு விருந்தினருடன், குறும்படங்கள் சார்ந்தும், லெனின் அவர்களின் ஆளுமை சார்ந்தும் விவாதிப்பது, பின்னர் எட்டாவது நாள் விருது தொடக்க விழா, மற்றும் லெனின் அவர்களுக்கு விருது கொடுக்கும் விழாவை நடத்துவது என்று முடிவு செய்தோம்.


அதற்கு முன்னர் விருதிற்காக கொடுக்கப்படும் பண முடிப்பு பத்தாயிரம் ரூபாயை எவ்வாறு திரட்டுவது என்று சிந்தனையில் உதித்தது விழா நிர்வாகக் குழு சிந்தனை. இதன் படி தமிழ் ஸ்டுடியோவின் செயல்பாட்டில் ஆர்வம் செலுத்தும் பத்து நல்ல உள்ளங்களை இணைத்து லெனின் விருது விழாவின் விழா நிர்வாகக் குழுவின் அனைத்து அவர்கள் ஒவ்வொருவரிடமுமிருந்து ஆயிரம் ரூபாய் வாங்கி பத்தாயிரம் திரட்டுவது என்று முடிவானது. அதன்படி பத்துப் போரையும், பத்தாயிரம் ரூபாயையும் திரட்டினோம். மற்ற செலவுகளை நானும் குணாவும் செய்வது என்று முடிவானது.


எல்லாம் சரி விழாவை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று யோசித்தபோது லெனின் அவர்களின் பிறந்த நாளே இதற்கு சரியான நாள் என்று முடிவு செய்து அதற்கான ஆயத்த பணிகளை முடுக்கி விட்டோம்.


தொடரும்...