Friday, December 31, 2010

தலைப்பில்லை



எழுதுவதற்கு ஏதுமில்லாதபோது எழுதாமல் இருப்பதே நல்லது.. அல்லது நாம் நீர்த்துவிடுவதற்கு முன்பே எழுதுவதை நிறுத்திவிடுவது சிறப்பு என்கிற கோட்பாட்டில் உறுதியாக இருப்பவன் நான். நிறைய பயணக் கட்டுரைகளைக் கூட எழுதாமல் தவிர்த்ததன் காரணம் இதுவாகக் கூட இருக்கலாம். ஆனால் நான் என் பதிவில் முன்னமே எழுதியிருப்பது போல் எழுத்துகளோடு நான் கொஞ்சம் பகடியாட்டம் ஆடிப் பார்க்கிறேன். இதில் நான் தோற்றாலும், வென்றாலும் இந்தப் பகடியாட்டம் எனக்கு ஒருவித பிரமிப்பை, கிளர்ச்சியை தருவதால் தொடர்ந்து நான் அதில் என்னை ஈடுப்படுத்திக் கொள்கிறேன். எனவே இனியாவது தொடர்ந்து கொஞ்சம் எழுதலாம் என்று நினைக்கிறேன்.

தமிழ் ஸ்டுடியோவில் வெளிவரும் கதை சொல்லிப் பகுதிக்காக தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் கதைசொல்லிகளை தேடித் திரிந்தபோது நான் முதலில் சென்ற ஊர் தஞ்சை. தஞ்சை பிரகாசின் சீடர்கள் பத்துப் பெரும் இன்றளவும் அந்தப் பகுதிகளில் கதை சொல்லி நிகழ்வை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் மிக முக்கியப் பங்காற்றி வருகிறார்கள். அது சார்ந்து ஒரு பயண அனுபவம் எழுதாமலேயே எனக்குள் மறைந்துவிட்டது. அவர்களைப் பற்றி நிச்சயம் இன்னொரு பதிவில் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். இதுப் போன்ற எண்ணற்றப் பயணங்கள்.. இலக்கில்லாமல் நான் சுற்றித் திரிந்த தமிழகத்தின் நிறையப் பகுதிகள்..தகிக்கும் வெய்யிலில், சிலிர்க்கும் குளிரில் என நான் பயணப் பட்டது பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. இங்கே அந்த அனுபவம் எல்லாம் சுயப் புலம்பல்களாக, சுய அறிவித்தலாக இல்லாமல் முடிந்த வரை இயல்பாக பகிர்ந்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இருந்தாலும் இயல்பாக இருத்தலே கட்டுடைக்கப்பட்ட பின்னர் எல்லாம் மாயையாக நம்மை சுற்றி படர்ந்திருக்கும் நிலையில் எப்படி இயல்பாக இருக்க முடியும் என்கிற ஒரு கேள்வி எழும் நிலையில், மாயையை நோக்கிய பயணத்தை இயல்பை நோக்கி நகர்த்தும் வல்லமை எல்லோருக்கும் வாய்க்கப்படுவதில்லை. அந்த வல்லமையை எனக்கு தாராயோ சிவசக்தி என்று நான் நம்பாத கடவுளை நோக்கி கையேந்தவும் இயலாத சூழலில் என் மொழியோடு, என் மொழியின் கூறுகளோடு விளையாடிப் பார்ப்பதே சிறந்த வழி என்று நினைக்கிறேன்.

ஒரு பயணக் கட்டுரையை நேர்த்தியாகவும், சிறப்பாகவும் எழுத முதல் தேவை, சில மறத்தல்களும், சில நினைவுகளும் தான். எதை மறக்க வேண்டும், எதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும் என்கிற தெளிவு இருக்குமாயின் அந்தக் கட்டுரை தன்னுடைய அதிகபட்ச தரத்தை எட்டிவிட்டதாகவே கருதிக்கொள்ளலாம்.

மார்கழிக் குளிரில் பற்களெல்லாம் தந்தி அடித்து வெயிலைக் கூப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒரு அழகான மாலை நேரத்தை மேலும் அழகாக்கிக் கொண்டிருந்தது. மனுஷ்யபுத்திரனின் கவிதை வெளியீட்டுவிழா. இந்த விழாவை முடித்துக் கொண்டு அன்று இரவே ஈரோட்டில் நடக்கும் ஒரு நிகழ்வில் குறும்படங்கள் தொடர்பாக பேசுவதற்காக செல்ல வேண்டியிருந்தது.

மனுஷ்யபுத்திரனின் கவிதை வெளியீட்டு விழா நான் பார்த்த வரையில் வந்திருந்த அனைத்து சிறப்பு அழைப்பாளர்களும் அந்த விழாவின் மைய சரடாகிய கவிதை புத்தகம் குறித்தே பேசிய விழா. பொதுவாக டிசம்பரில் நடக்கும் எல்லா புத்தக விழாவிலும் அழைக்கப்படும் சிறப்பு அழைப்பாளர்களில் சிலர் அந்த விழாவின் நோக்கம் என்ன, எந்த விழாவிற்கு வந்திருக்கிறோம் என்றே தெரியாமல் பேசிவிட்டு செல்வதையே மரபாக வைத்திருப்பவர்கள். அதிலும் திரைப்படத் துறையில் இருந்து வரும் சிறப்பு அழைப்பாளர்கள் "நான் இந்தப் புத்தகத்தை இன்னும் படிக்க வில்லை" என்று சொல்லியே தன் பேச்சை ஆரம்பிப்பதை ஒரு பெரிய கௌரவமாகவே கருதுகிறார்கள். சாப்பிடப் போனவர்கள் வேறெதையோ செய்து விட்டு வந்தக் கதைதான் நினைவுக்கு வருகிறது.
இதில் அவர்களை சொல்லி குற்றம் இல்லை. தமிழ் சமூகமே அப்படிப் பட்ட மேதாவித் தனத்தைத்தான் தொடர்ந்துக் கொண்டிருகிறது. பாப்கார்ன் சாப்பிடுவதற்காகவே திரைப்படம் பார்க்க செல்லும் கூட்டங்கள் நிறைந்த சூழலில் பேச வந்தப் பொருளை விடுத்து பேசாப்பொருளை பேசும் மடந்தைகளை நாம் என்ன செய்துவிட முடியும்.

அப்படி இல்லாமல் மனுஷ்யப்புத்திரனின் கவிதை புத்தக வெளியீட்டு விழா முழுவதும் அனைவரும் பேசுப் பொருளையே பேசியது கொஞ்சம் மன நிறைவைத் தந்தது. அதிலும் கூட நெருடலாக இருந்தது, அனைவருமே மீண்டும் மீண்டும் சொன்னக் கருத்தையே சொல்லிக் கொண்டிருந்தது. இந்தப் புத்தகத்தில் எந்த கவிதையைப் படிப்பது எதை விடுப்பது என்றே தெரியவில்லை என்கிற வரியை அநேகமாக அனைத்து சிறப்பு அழைப்பாளர்களும் சொல்லி விட்டுத்தான் இருக்கையை நோக்கிய நகர்ந்தனர். நானும் அந்தக் கவிதைப் புத்தகத்தை வாங்கி வந்தேன். கொடுத்த காசிற்கு பங்கம் இல்லை என்றாலும், எல்லோரும் சொன்னது போல் இல்லை.

ஏ!
எந்திர மனிதா!
இன்று முதல்
சிரிக்கப் பழகு
கண்ணீர் சுண்டிக்
கடலில் எறி!

எரிமலைக் குழம்பா?
இரும்பு காய்ச்சு!

பூகம்பமா?
பூச்செடிகளை மாற்றி நடு!

இதுப் போன்ற கவிதைகளுக்கு தமிழ் கவிதை சூழலில் மனுஷ் போன்றவர்களின் கவிதைகள்தான் இந்த சூழலை அதன் தன்மை மாறாமல் அதன் அடையாளக் குறிகளோடு வைத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. (மேற்சொன்ன கவிதை யாருடைய கவிதை என்பதை முடிந்தால் நீங்களே கண்டுப் பிடித்துக் கொள்ளுங்கள்).

பயணம் இங்கிருந்துதான் தொடங்கியது. எனவே கட்டுரையையும் இங்கிருந்தே தொடங்குகிறேன். அடுத்து ஈரோடு புறப்படுவோம்.


No comments:

Post a Comment