Tuesday, January 22, 2013

அன்பாலே அழகான வீடு!!!

தேவக்கோட்டை பொங்கல் பயணம் பற்றி எழுத நினைத்து தினமும் தோற்றுக் கொண்டிருக்கிறேன். ஒரு பெரிய நிறுவனத்தில் வேளையில் இருக்கும்போது கூட இவ்வளவு பிசியாக இருந்ததில்லை. இப்போது எழுதவதற்கே நேரம் கிடைக்காமல் இருக்கிறேன்.

நீராதரமின்றியும் பசுமையாக இருக்கும் வயல்வெளிகள்

 ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவிற்கு ஏதாவது ஒரு கிராமத்திற்கு சென்று விடுவது என்பதை கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தொடர்ந்து கடைபிடிக்கிறேன். அதன்படி இந்த ஆண்டு நண்பன் தினேஷின் கிராமமான தேவகோட்டை திருவொற்றியூர் அருகே உள்ள நடியக்குடி என்கிற கிராமத்திற்கு சென்றோம். சுந்தர், தினேஷ், நவராஜும் கலந்துக் கொண்டார்கள். காரைக்குடியில் காலையில் தினேஷின் உறவினர் ஒருவர் வீட்டில் பொங்கல் வைத்து, காலை உணவை முடித்துக் கொண்டு தேவக்கொட்டைக்கு சென்றுக் கொண்டிருந்தோம். இடையில் நண்பர் பிரின்ஸ் அழைத்திருந்தார். காரைக்குடியில் தான் இருக்கிறேன் (காரைக்குடிதான் பிரின்சின் சொந்த ஊர்), வாங்க சாப்பிட்டுவிட்டுப் போவோம் என்றார். நேரம் கிடைத்தால் வருகிறேன் என்று சொல்லி இருந்தேன். ஆனால் கடைசி வரை பிரின்ஸ் வீட்டிற்கு செல்ல நேரம் கிடைக்கவில்லை.

ஐந்து கிலோமீட்டர் நடை...

மூன்று பேருந்துகள் மாறி, இறுதியாக திருவொற்றியூர் சென்று சேர்ந்தோம். இங்கிருந்து கொஞ்ச தூரம் நடக்க வேண்டும் என்று சொன்னான் தினேஷ். கிராமத்தில் நடக்க வலிக்கிறதா என்ன என்று சொல்லிக்கொண்டு நடக்க தொண்டங்கினோம். உண்மையாகவே வலிக்கத்தான் செய்தது. கொஞ்சம் தூரம் என்பது கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர்கள். வேறு வழியே இல்லை, பேருந்து வசதியோ, சேர் ஆட்டோ வசதியோ கிடையாது. வழியெங்கும் வயல்வெளிகள் பசுமை போர்வைகலாக காட்சியளித்துக் கொண்டிருந்தன.

மலையாள எழுத்தாளர் பால் சக்காரியா ஒருமுறை சொன்னது நினைவுக்கு வந்தது. கேரளா மக்கள் தங்கள் மாநிலத்தின் பசுமைப் பற்றியோ, அதன் விவசாய செழுமை பற்றியோ பேசுவதில் பெரிய சிலிர்ப்பு கொள்ளத் தேவை இல்லை. ஆனால், எந்தவித நீராதரமும் இல்லாத பல இடங்களில், எங்கிருந்தோ எல்லாம் நீரை எடுத்து வந்து சாகுபடி செய்யும், கடின உழைப்பாளிகள் நிறைந்த தமிழ்நாடு அதற்காக நிச்சயம் கர்வம் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று சொல்லி இருந்தார். அதனை தேவக்கொட்டையில் நேரில் பார்த்தேன். சிவகங்கை மாவட்டமே வரட்சியானதுதான். அவர்களுக்கு என்று சொல்லிக் கொள்ள பெரிய அளவில் நீராதாரங்கள் இல்லை. ஆனால் திருவெற்றியூரில் இருந்து நடியக்குடி கிராமத்திற்கு செல்லும் ஐந்து கிலோமீட்டருக்குமான தூரத்தில் நான் பார்த்த இடமெல்லாம் பசுமையாகவே இருந்தது. ஆனால் ஆங்காங்கே தென்படும் எந்த நீர்நிலைகளிலும் நீர் இருப்பு இல்லை. அவர்கள் மழையையும், தங்கள் உழைப்பையும் நம்பி மட்டுமே சாகுபடி செய்கிறார்கள். அத்தனை ஆயிரம் ஏக்கர்களில் நிச்சயம் சில ஆயிரம் ஏக்கர் பயிர்கள் இன்னும் கொஞ்சம் நாட்களில் கருகிவிடும் என்பது நிதர்சனமான உண்மை. இன்னும் ஒரு மழை வந்திருந்தால், அந்த பயிர்களும் தழைத்திருக்கும். கண் அதன் எல்லை தொடும் தூரம் வரை நான் கண்ட பச்சை போர்வைகள், நிச்சயம் அடுத்த சில மாதங்களில் வெறும் பொட்டல் காடாகத்தான் காட்சியளிக்கும்.

களைப்பின் வலியறிந்து, ஆங்காங்கே ஆசுவாசப்படுத்திக் கொண்டே கிராமத்திற்கு சென்று சேர்ந்தோம்.



நான்கைந்து குடும்பங்கள் சேர்ந்த கூட்டுக் குடும்பம். தோராயமாக பத்து சிறுவர்கள். என தினேஷின் சித்தி சித்தப்பாக்கள் நிறைந்த அந்த வீடு முழுவதும் அன்பே பிரதானமாக நிறைந்து வழிந்தது. போய் சேர்ந்ததும், நிறைவான உணவை முடித்துக் கொண்டு, சிறிது நேரம் பேசிவிட்டு ஊரை சுற்றிப் பார்க்க கிளம்பினோம். 

நடந்து வந்த வழியிலேதான் மீண்டும் சென்றோம். இந்த முறை சிறுவர்களுடன் சைக்கிளில் பயணித்தோம். அந்த ஊரில் இருக்கும் மிக பழமையான, கொஞ்சம் பீதியைக் கிளப்பும் சிவன் கோவில். சுற்றி இருந்த மரங்களில் இருந்து மயில்கள் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தன. பயத்தின் பருமனை கூட்டுமளவிற்கு அதன் ஒலி தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. அதிகம் மக்கள் நடமாட்டம் இல்லாத கோவில் என்பது அதன் பராமரிப்பில் இருந்தே தெரிந்தது. அரசின் கட்டுப்பாட்டில்தான் கோவில் இருப்பதாக சொன்னார்கள். ஒரே ஒரு பூசாரி, பூசைகளை முடித்துக் கொண்டு சென்றுவிட்டது அங்கே எரிந்துக் கொண்ட அகர்பத்தியின் வாசத்திலேயே தெரிந்தது. தொலைகாட்சி சீரியல் நண்பர்கள் இந்த இடத்தை பார்த்தால் நிச்சயம் ஒரு மர்ம மெகா சீரியல் எடுத்து விடுவார்கள். 

எப்போதும் உடனிருந்த எங்களை வழிநடத்திய சிறுவர்கள்

கோவிலுக்கு உள்ளே நிறைய தடைகளை தாண்டி சென்று சிவலிங்கத்தை புகைப்படம் எடுத்துப் பார்த்தோம். புகைப்படம் நன்றாகவே தெரிந்தது. எனவே கொஞ்சம் பயம் விலகியது. ஆனால் அடுத்த நிமிடமே நவராஜ், இன்னொரு புகைப்படம் எடுத்து எல்லாரையும் பீதியடை செய்தார். நேரில் பார்க்கும்போது உடைந்திருந்த கோவில் கதவு, புகைப்படத்தில் உடைச்சல் இல்லாமல் இருந்தது. அடுத்த கணத்தில், நெஞ்சாங்கூட்டில் பெருச்சாளி ஓடுவது போல் இருந்தது. ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்ததில் உண்மை தெரிந்தது. உடைச்ச்சளுக்கு பின்புறம் இருந்த அதே நிறத்திலான சுவர் புகைப்படத்தில் உடைச்சலை மறைத்திருந்தது. பயம் தெளிந்தாலும், உள்மனதில் கொஞ்சம் பயம் மறைந்துக் கொண்டுதான் இருந்தது. இருட்டுவதற்குள் அங்கிருந்து கிளம்பி வெளியில் வந்து கொஞ்சம் நேரம் விளையாடிவிட்டு வீடு திரும்பினோம். மின்சாரம் பாதி நேரம் இல்லாமல்தான் இருந்தது. ஆனால் மின்சாரம் இல்லாத குறையே எங்களுக்கு தெரியவில்லை. சிறுவர்கள் இருக்கும் இடத்தில் ஒருபோதும் நமக்கு இந்த மாதிரியான செயற்கை பொழுதுபோக்கே தேவை இருக்காது. காலநிலையும் அருமையாகவே இருந்து. மிக குறிப்பாக நாங்கள் அங்கே தங்கி இருந்த இரண்டு நாட்களும் ஒரு கொசுவைக் கூட நான் பார்க்கவில்லை. கொசுக்கள் இல்லாத நிம்மதியான நிறைவான தூக்கம் அன்று இரவு சாத்தியப்பட்டது.


மர்மக்கோவில்

அடுத்த நாள் மாட்டுப் பொங்கல்.. நாங்களும் எங்கள் வரகரிசியில் பொங்கல் செய்ய தயாராக இருந்தோம்.

தொடரும்...

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அவசியம் ஒரு திரையிடல் விழாவுக்கு உங்களை அழைத்து சிறப்பித்துவிடுகிறோம். நம்ம வீட்ல சாப்பிட்டு, கொஞ்சம் ஊரு சுத்திட்டுவருவோம்.

    ReplyDelete