Sunday, June 28, 2009

தாஜ்மஹால்


புத்தகங்கள் படிப்பதும், ஏதாவது கலை சார்ந்த வேலைகள் செய்வதுமே எனது பள்ளி நாட்களில் பிரதான பொழுதுபோக்கு எனக்கு. எனது தந்தை கட்டிட ஒப்பந்தகாரர் என்பதால் இயல்பாகவே எனக்கும் கட்டிடக் கலை மீது அதிக ஈடுபாடு உண்டு. பள்ளிக்கூட நோட்டில் உள்ள அட்டைகளை பிரித்தெடுத்து அவற்றில் இருந்து வித விதமாக பல புகழ் பெற்ற கோவில்கள், கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள் என்று செய்துக் கொண்டிருப்பேன். அப்படி நான் இறுதியாக செய்தது தாஜ்மஹால்.

அப்போது நாங்கள் பாலவாக்கத்தில் இருந்த ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்தோம். நான் ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். வடக் கிழக்கு பருவ மழை காலமது. மழையை பொதுவாக ரசிக்கும் நான் அதனை வெறுத்த காலமும் இதுதான். காரணம் இறுதியில். மேலும் அது அரையாண்டு தேர்வுகள் முடிந்து வீட்டில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த நேரம். அப்போது தாஜ்மகாலின் வடிவம் மீது எனக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. தாஜ்மகாலைக் கட்டுவது மிகவும் சவால் நிறைந்தது. அதுவும் அப்போது எனக்கு இருந்த வசதி வாய்ப்புகள் மிகக் குறைவு. சோற்றுப் பருக்கைகள், நோட்டின் அட்டைகள் (பைண்டிங் சீட்), நோட்டில் உள்ள வெள்ளைத் தாள்கள், ஒரு கத்தரிக்கோல் இவைதான் எனது மூலதனம். எனவே தாஜ்மஹால் போன்ற கட்டிடங்களைக் கட்டுவது அப்போது எனக்கு மிகவும் சவால் நிறைந்த பணியாகவே பட்டது.

ஆனால் பார்த்து பார்த்து (Reference image) செய்வதற்கு என்னிடம் தாஜ்மகாலின் புகைப்படம் இல்லை. எனவே ஐம்பது பைசாவிற்கு ஒரு தீப்பெட்டி வாங்கி அதன் பின்புறம் இருந்த தாஜ்மகாலின் புகைப்படத்தை reference ஆக வைத்துக் கொண்டேன். மிக சிறிய அளவில் இருந்த அந்தப் புகைப்படம் எனக்கு பல விபரங்களை துல்லியமாக தரவில்லை. இருந்தாலும் கிடைத்த விபரங்களை வைத்து தாஜ்மஹால் கட்டும் பணியைத் தொடங்கினேன். கிட்டத் தட்ட மிகப் பெரிய கட்டிடங்கள் கட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் திட்டங்கள் போல் நானும் பல திட்டங்கள் தீட்டி கட்டுமானப் பணியை தொடங்கினேன். ஆனால் அதற்கு சிறு சிறு செலவுகள் ஆகும். எனவே எனக்கு என் பெற்றோர் கொடுக்கும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்களை முதலீடாக வைத்து திட்டம் தீட்டினேன்.

எனது நோட்டுகளில் இருந்த அட்டைகள் ஏற்கனவே தீர்ந்து போய் விட்டது. எனவே முதலில் நோட்டு அட்டைகளை சேகரிக்கத் தொடங்கினேன். குப்பைத் தொட்டிகள், சாலையோரங்கள் என கண்ணில்படும் இடங்களில் எல்லாம் நோட்டு அட்டைகளைத் தேடினேன். இந்த விஷயத்தில் எனக்கு குப்பைத் தொட்டிகள்தான் பெரிதும் உதவின. "உங்கப் பையன் குப்பை தொட்டியிலேல்லாம் குப்பை பொறுக்கிக்கிட்டு இருக்கான்" என்று யாரோ என் தந்தையிடம் சொல்லி வைக்க, நான் ஏதோ குப்பைகளைப் பொருக்கி அவற்றைக் கடையில் போட்டு தின்பண்டங்கள் வாங்கி சாப்பிடுவதாக நினைத்துக் கொண்ட என் தந்தை என்னை பின்னி எடுத்துவிடார். இருந்தாலும் சளைக்காமல் நோட்டு அட்டைகளைத் தேடினேன்.

தேவையான நோட்டு அட்டைகள் கிடைத்த உடன், அவற்றை தேவையான வடிவங்களில் கத்தரித்து சோற்றுப் பருக்கைகள் கொண்டு ஓட்டினேன். ஆனால் தாஜ்மகாலின் ஒரு சில இடங்களில் கண்ணாடி கதவுகள் இருக்கும். இவற்றை எப்படி செய்வது என்று விழி பிதுங்கி நின்றேன். சிலக் கண்ணாடித் துண்டுகளை பொருக்கி வந்து அவற்றையும் கத்திரிக்கோலால் நறுக்கி என் கைகள் முழுவது இரத்தக் கரை படிந்த நினைவுகள் இன்று இனிக்கிறதே தவிர வலிக்கவில்லை. ஆனால் அன்று வலிப் பொறுக்க முடியாமல் கதறினேன். என் கைகளில் இரத்தத்தைப் பார்த்துவிட்டு கோபத்தில் என் தந்தை அதுவரை நான் செய்து வைத்திருந்த அத்தனையும் தூக்கி எரிந்து விட்டார். மிகவும் கஷ்டப்பட்டு நான் செய்து வைத்த அந்த தாஜ்மகாலின் பாகங்கள் மீண்டும் குப்பைத் தொட்டிக்கே போனது. மனசு கேட்கவில்லை. மீண்டும் இருந்த அட்டைகளைக் கொண்டு தாஜ்மகால் செய்யத் தொடங்கினேன். இப்போது கண்ணாடி கதவுகளுக்கு மாற்றுக் கண்டுபிடித்தேன். எங்கள் வீட்டில் அப்போது டேப் ரெக்கார்டர் இருந்தது. கேசட் மூலம் பாட்டுக் கேட்கும் வழக்கமும் இருந்தது. அந்தக் கேசட் இருக்கும் பெட்டி கண்ணாடி போன்ற பிளாஸ்டிக்கால் ஆனது. ப்ளாஸ்டிக்கை சுலபமாக கத்தரிக்கோலால் வெட்ட முடிந்தது. அதுவும் தேவையான வடிவத்தில். யாருக்கும் தெரியாமல் சிலப் பல கேசட்டுகளை எடுத்து அவற்றின் பெட்டிகளை எடுத்து கத்தரித்து வைத்துக் கொண்டேன்.

முன் பகுதி, பின் பகுதி, தேவையான சுவர்கள் என அனைத்தும் தயார். ஆனால் அதன் மேற்புறம் இருக்கும் அந்தக் குண்டு வடிவம் மட்டும் நான் எவ்வளவோ முயன்றும் என்னால் செய்ய முடியவில்லை. இதற்கு மட்டுமே நான் அப்போது ஐந்து நாட்கள் சிந்தித்துக் கொண்டிருந்தேன். சரியாக சாப்பிடாமல், யாரிடமும் சரியாக பேசாமல் ஐந்து நாட்களும் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

ஆறாவது நாள் என மனதில் உதித்தது அந்த யோசனை. சிகரட் அட்டைகள் தான் அப்போது எனக்கு உதவியது. காரணம் அவைதான் எப்படியும் வளையும். பின்னர் மிக தத்ரூபமாக அந்தக் குண்டு வடிவத்தை செய்து முடித்தேன். தாஜ்மகாலின் நான்குப் புறமும் இருக்கும் அந்தத் தூண்களையும் சிகரட் அட்டைகளை வைத்துக் கொண்டே செய்து முடித்தேன்.

பின்னர் வெள்ளைத் தாள்களை வைத்துக் கொண்டு தாஜ்மஹால் முழுவதும் வெள்ளைப் பூசினேன். அதாவது வெள்ளை தாள்களை ஓட்டினேன். சோற்றுப் பருக்கைகள் மூலம் ஓட்டும்போது அவை சுருங்கி சுருங்கியே இருக்கும். அந்த சுருக்கம் போக சில மணித்துளிகள் ஆகும். அதன் பின்னர் தான் அடுத்தப் பக்கத்திற்கு வெள்ளைத் தாள்கள் ஓட்ட முடியும். இவ்வாறாக ஒரு மாதம் முழுவதும் சரியாக உணவு உண்ணாமல், நண்பர்களை மறந்து, விளையாட்டை மறந்து, வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல், மிக நேர்த்தியாக அந்த தாஜ்மகாலை கட்டி முடித்தேன். அவ்வப்போது என்னை மிரட்டினாலும், அடித்தாலும் எனது ஆர்வம் கண்டு என் தந்தை என்னை அப்படியே விட்டுவிட்டார். தாஜ்மஹால் கட்டி முடித்ததும் அதை பார்த்து என் தந்தை ஒரு சிரிப்பு செய்தார். நானும் பதிலுக்கு சிரித்தேன்.

புன்னகை மூலம் மட்டுமே நாங்கள் இருவரும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்ட நேரமது. எங்கள் தெருவில் உள்ள அனைவருமே அந்த தாஜ்மகாலைப் பார்த்து என்னை பாராட்டி விட்டு சென்றனர். நான் மிக மகிழ்ச்சியாக இருந்த நேரமது.

அன்றைய இரவுப் பொழுது.

மழை பின்னி எடுத்துக் கொண்டிருந்து. எங்கள் குடிசை காற்றி பறந்து விடும் போல் இருந்தது. அவ்வளவு அசுரக் காற்று. மரங்கள் எல்லாம் முறிந்து விழுந்துக் கிடந்தது. ஆனால் இது எதுவும் தெரியாமல் நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன்.

மறுநாள் காலை.

நான் ஆசை ஆசையாய் செய்து வைத்து அழகுப் பார்த்துக் கொண்டிருந்த தாஜ்மஹால் காணாமல் போய்விட்டது. துடி துடித்துப் போனேன். கண்களில் நீர் வடிய தாஜ்மகாலைத் தேடிக்கொண்டிருந்தேன். இறுதியாக தாஜ்மஹால் தென்பட்டது, காகிதக் கூழாக. வெளுத்து வாங்கிய மழை, எடுத்துக் கொண்டுப் போனது என் சந்தோசத்தையும் சேர்த்துதான். சோற்றுப் பருக்கை, அட்டை, வெள்ளைத் தாள் என எதுவும் மழையை தாங்கவல்ல பொருட்கள் அல்ல. மழைக் காலத்தில் இந்த பணியை செய்யக் கூடாது என்று எனக்கு தெரியவில்லை. காகிதக் கூழைப் போன என் தாஜ்மகாலை தொட்டுப் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது என் விரல்களிளின் வீக்கம். இரத்தக கரை படிந்த என் கைகள். தாஜ்மஹால் செய்ய கண்ணாடியை வெட்டும்போது, என் விரல்கள் வெட்டுப்பட்ட அந்தக் காயம் ஆறும் முன்னர் என் மனதில் ஆறா காயம் ஏற்படுத்தியது அந்த மழை.


எத்துனை நாள் உழைப்பு, எத்துனை தியாகங்கள், எவ்வளவு அடி அதனையும் வீணாய்ப் போனதே என்று அப்போது நான் சிந்திக்கவில்லை. அந்த பருவத்தில் எனக்கு அந்த இழப்பு சில மணி நேரங்கள் மட்டுமே துக்கத்தை தந்தது. பின்னர் மீண்டும் சொந்தமாக திட்டம் தீட்டி (லே அவுட்) ஒரு வீடு (நோட்டு அட்டையில்) கட்டத் தொடங்கிவிட்டேன்.


No comments:

Post a Comment