Monday, June 29, 2009

இன்னும் என்ன செய்யப் போகிறாய். (கல்லறை சுவடுகள்)



"எந்த ஒருப் பொருளையும் இழக்கும் வரை அதன் அருமை நமக்கு தெரியாது"
---ஆத்தங்கரையோரம் நாவலில் திரு. வெ. இறையன்பு அவர்கள்

அது டிசம்பர் மாதம். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என அனைத்து பாட ஆசிரியர்களும் எங்களை வாட்டியெடுத்த காலமது. ஒன்பதாம் வகுப்பின் காலாண்டுப் பரிட்சையில் நான் முதல் ரேங்க் எடுத்தேன். அதன் பிறகு அந்த இடத்தை வேறு யாருக்கும் விட்டுக் கொடுத்ததே இல்லை. பத்தாம் வகுப்பில் எல்லா மாணவர்களின் முகமும் ஏதோ ஒரு வித சோகத்தை வெளிப்படுத்தியவாறே இருக்கும். எப்போதும் எந்த விஷயத்திலும் மூன்று நிலைகள் உண்டு. ஒன்று முழுதும் தெரிந்தது. ஒன்று கொஞ்சம் தெரிந்தது. ஒன்று ஒண்ணுமே தெரியாதது. இதில் எல்லாம் தெரிந்தவர்களும், ஒண்ணுமே தெரியாதவர்களும் எதற்கும் கவலைப் பட மாட்டார்கள். ஆனால் கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பவர்கள்தான் எப்போதும் கவலைப் பட்டுக் கொண்டே இருப்பார்கள்.


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும் அப்படித்தான். ஆனால் பிரச்சனை என்னவென்றால் இங்கே யாருக்கும் எந்த ஒன்றும் முழுமையாக தெரியாது. அதனால்தான் எப்போதும் எதிலும் பதட்டம். சில மாணவர்கள் எதற்கும் கவலைப்படாமல் எப்போதும் போல் பெண்களை கேலி செய்துக் கொண்டு இருப்பார்கள். இவர்கள் மூன்றாவது வகை. இதே போல் தான் எனதுப் பள்ளியிலும் ஒரு சில மாணவர்களைத் தவிர மற்ற எல்லா மாணவர்களும் மிகவும் பதட்டத்தோடு படித்துக் கொண்டிருந்தார்கள். அரையாண்டுப் பரீட்சை முடிந்து மூன்றாம் இடைப் பருவத் தேர்வு என்று ஒன்று வைப்பார்கள். இந்தத் தேர்வுதான் என்னால் எப்போதும் மறக்க முடியாத தேர்வு... இந்தக் காலக் கட்டத்தில்தான் எனது குடும்பம் மிகவும் வறுமையான சூழ்நிலையில் வாழ்ந்துக் கொண்டிருந்தது.


ஆனால் எனது அக்கா திருமண வயதில் இருந்ததால் அவருக்கு கல்யாணம் செய்து வைக்க ஒரு பெரும் தொகை தேவை. எனவே அந்தத் தொகைக்காக என் தாய் நாள் தோறும் ஒவ்வொரு சொந்தக்காரரிடத்திலும், தெரிந்தவரிடத்திலும் பணம் கேட்டு அலைந்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் எனக்கு அது பற்றியெல்லாம் பெரியக் கவலை இல்லை. காரணம் என் கவனம் முழுதும் படிப்பின் மீதே இருந்தது. முதல் ரேங்க் என்கிற அந்த இடத்தை விட்டுக் கொடுக்க என் மனம் மறுத்தது. எனவே குடும்ப விசயங்களில் நான் அதிகமாக தலையிடுவது இல்லை. எனக்கு அந்த அளவுக்கு விவரமும் கிடையாது.


அன்று... அக்கா கல்யாணத்துக்காக அண்ணன் வேலை செய்யும் கம்பெனி முதலாளியிடம் கடன் கேட்க சென்று இருந்தார் என் அம்மா. எனக்கோ அன்றுதான் மூன்றாம் இடைப் பருவத் தேர்வு விடைத் தாள் கொடுக்கும் நாள். தேர்வில் நான் பெற்ற மதிப்பெண்களை அறிந்துக் கொள்ளும் ஆவலுடன் பள்ளிக்கு விரைந்து சென்றேன். எதிர்பார்த்தது போலவே எல்லா பாடங்களிலும் நான் தான் முதல் மதிப்பெண் பெற்றிருந்தேன். ஆனால் சமூக அறிவியல் பாடத்தில் நான் பெற்ற மதிப்பெண்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. காரணம் என் ஆசிரியர் எனக்குக் கொடுத்து இருந்த மதிப்பெண்கள் நூத்துக்கு நூறு. எப்போதும் எனது சமூக அறிவியல் ஆசிரியர் நாங்கள் தேர்வில் எடுத்து இருக்கும் மதிப்பெண்களுடன் பத்து மதிப்பெண்கள் அதிகமாக கொடுப்பார். அதற்காக நாம் தேர்வின் அனைத்துக் கேள்விகளுக்கும் வீட்டில் பதில் எழுதிக் கொண்டு வர வேண்டும்.


இந்த முறை நான் நூத்துக்கு நூறு மதிப்பெண் பெற்றதனால் எனக்கு அந்த மதிப்பெண் கிடைக்காது என்று சக மாணவர்கள் என்னை வெறுப்பேற்றினார்கள். மிகவும் கஷ்டப்பட்டு அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுதி வந்திருந்தேன். எனவே ஆசிரியரிடம் சென்று முறையிட்டேன். அவரோ "அதுக்கு ஏண்டா கவலைப் படறே.." அதுக்கு என்ன இப்போ.. அந்தப் பத்து மார்க்கையும் உனக்கு போட்டுடறேன் என்று கூறி நூத்துக்கு நூத்திப் பத்து மதிப்பெண் போட்டுக் கொடுத்தார். இந்த சாதனை மதிப்பெண்களுக்காக எல்லா மாணவர்களும் எழுந்து நின்று எனக்காக கைத் தட்டி என்னை உற்சாகப்படுத்த வேண்டும் என் ஆசிரியர் கேட்டுக் கொண்டார். எல்லோரும் எழுந்து நின்று கைத் தட்டி என்னை வாழ்த்தினார்கள்.


அந்த சமயம்... எனது சத்துணவு ஆசிரியர் உள்ளே வந்தார். எனது சமூக அறிவியல் ஆசிரியரிடம் ஏதோ பேசிவிட்டு "அருண் கொஞ்சம் வீட்டுக்கு போயிட்டு வா என்றார்". எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏன்.. எதற்கு என்று கேள்விகள் கேட்டுக் கொண்டு இருந்தேன். என் சமூக அறிவியல் ஆசிரியர் வீட்டுக்கு போய் எனக்கு கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா என்றார். (அப்போது எங்கள் வீட்டுத் தண்ணீர் மிகவும் ருசியாக இருக்கும். எனவே எல்லா ஆசிரியர்களும் எங்கள் வீட்டுத் தண்ணீர்தான் வாங்கிக் குடிப்பார்கள்.)


நானும் ஒன்றும் புரியாமல் வீட்டுக்கு சென்றேன். பள்ளியில் அனைத்து மாணவர்களும் என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டு அவர்களுக்காகவே ஏதோ பேசிக்கொண்டார்கள். என் வீட்டுக்கு போகும் வழியெங்கும் ஒரேக் கூட்டம். எல்லோரும் ஏதோதோ பேசிக்கொண்டிருந்தார்கள். என் உடல் ஏனோ கொஞ்சம் கொஞ்சமாக நடுங்கத் தொடங்கியது.

நான் வீட்டில் உள்ளே நுழையும்போது யாரோ ஒருவர் "ஐயோ அருணே" என்று கதறி அழுதுக் கொண்டு என்னை கட்டிப் பிடித்துக் கொண்டார். அந்தக் கதறல் அவரின் அடித் தொண்டையில் இருந்து வந்தது. இதேப் போன்றுக் கதறலை நான் இதற்கு முன்னும் கேட்டு இருக்கிறேன். அது என் அண்ணனின் மரணத்தில். இப்போதும் கேட்கிறேன். என்ன ஆனது என்றே எனக்கு தெரியவில்லை. இதயம் பட படக்க கண்கள் எனக்கும் தெரியாமல் கண்ணீர் வடிக்கத் தொடங்கியது. வீட்டின் உள்ளே சென்றேன். ஏதோ ஒரு சப்தம் ஐயோ.. எரியுதே.. ஐயோ எரியுதே..என்று எனக்கு முகம் சரியாகத் தெரியவில்லை. உற்று நோக்கினேன். தீயில் கருகிய என் அக்காதான் அந்த சப்தத்திற்கு சொந்தக்காரி.


திடுக்கென என் இதயமே நின்றுப் போய் விட்டது போன்று இருந்தது எனக்கு. காலையில் தான் என் அக்கா கையால் சாப்பாடு வாங்கித் தின்று விட்டு பள்ளிக்கு சென்றேன். இரண்டு மணி நேரத்திற்குள் என் அக்காவை இந்தக் கோலத்தில் பார்ப்பேன் என்று நான் நினைக்கவில்லை. என்ன செய்வது எனக்கு தெரியவில்லை. அப்போது என் அம்மா, அப்பா, அண்ணன்கள் யாரும் வீட்டில் இல்லை. அண்ணன் கம்பனிக்கு சென்று இருந்த அம்மாவை அழைத்து வரும்படி அருகில் இருந்தவர்கள் என்னை அனுப்பினார்கள். என் அம்மா ஹார்ட் பேசன்ட் என்பதால் விஷயத்தை நேரடியாக அவரிடம் சொல்லக் கூடாது என்று நானே எனக்குள் நினைத்துக் கொண்டேன். அண்ணன் கம்பனிக்கு சென்றேன்.


எண்ணப் பார்த்ததும் என் அம்மா இந்த நேரத்தில் இங்கே ஏண்டா வந்த.. ஏன் ஸ்கூல் இல்லையா? என்றார். நான் இல்லமா வீட்டுக்கு வா.. என்றேன். ஏன் என்றார். வீட்டுக்கு வா சொல்றேன். என்னடா ஆச்சு சின்ன அண்ணன் யாருக் கூடவாவது சண்டப் போட்டுட்டு வந்திருக்கானா என்றார். இல்ல மா நீ வீட்டுக்கு வா என்று கையைப் பிடித்து அவரை அழைத்து சென்று ஆட்டோவில் உட்கார வைத்துவிட்டு என் அண்ணனிடம் நீயும் வீட்டுக்கு வா என்றேன். ஏண்டா என்றார். "அடித்தொண்டையில் இருந்து வார்த்தை வந்தது.. தேவி செத்துப் போச்சு அண்ணா" என்றுக் கதறி, தலையில் கை வைத்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்துக் கொண்டேன்.


அண்ணனும் ஒன்னும் புரியாமல் என்னைத் தேற்றி வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தார். வீட்டில் ஆட்டோ நுழையும் முன்னரே கூட்டத்தைப் பார்த்த என் அம்மா வீட்டில் ஏதோ நடந்து விட்டது என்று அறிந்துக் கொண்டார். என் சட்டையைப் பிடித்துக் கேட்டார். என்னடா ஆச்சு.. சொல்லுடா என்றார். என் கண்கள் தாரை தாரையாய் நீர் வடித்து. வார்த்தைகள் நெஞ்சுக் குழிக்குள்ளேயே அடைத்துக் கொண்டது. ஆட்டோவை விட்டு விழுந்து அடித்துக் கொண்டு என் அம்மா உள்ளே சென்றார்.


ஐயோ தேவி அம்மா.. உன் பொண்ணு நம்மள எல்லாம் விட்டுப் போய்ட்டாளே.. என்று எல்லோரும் அம்மாவை பிடித்துக் கொண்டு அழுதனர். உள்ளே சென்று அக்காவை அந்தக் கோலத்தில் பார்த்த அம்மா................................................. மேலே சொல்லுவதற்கு எனக்கு தெம்பில்லை. நானும் மனிதன் தானே... ஒரு தீ விபத்தில் என் அக்கா சிக்கிக் கொண்டார். வீட்டில் யாரும் இல்லாததால், பக்கத்து வீட்டுக் காரர்கள் வரும் முன்னரே அவள் முற்றிலும் எரிந்துப் போய் விட்டால். ஆனால் உயிர் மட்டும் இன்னமும் இருந்தது. அது தெரியாமல் எல்லோரும் அவள் செத்து விட்டதாக எண்ணி அழுதுக் கொண்டு இருந்தார்கள். ஆனால் யாரோ ஒருவர் மட்டுமே ஆம்புலன்சிற்கு போன் பண்ணி வரச் செய்தார்.


எங்கள் நேரம் போன் செய்தவர் தீ விபத்து என்று கூறிவிட்டதால் ஆம்புலன்சிற்கு பதிலாக பையர் எஞ்சின் வந்து விட்டது. ஊரே எங்கள் வீட்டின் முன் கூடி விட்டது. பையர் என்ஜினில் என் அக்காவைத் தூக்கிக் கொண்டு நானும் என் அண்ணனும் மட்டுமே சென்றோம். செல்லும் வழியில்தான் என் பள்ளி. என் ஆசிரியர் முதற்கொண்டு மாணவர்கள் அனைவரும் என்னையே பார்த்து அழுதுக் கொண்டு இருந்தார்கள். சென்னைக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனியில் கொண்டு சேர்த்தார்கள். அங்கே தீக்காயப் பிரிவுக்கு அழைத்து செல்ல வந்திருந்த ஒரு நபர் எவ்ளோ பணம் இருக்குப்பா என்று என் அண்ணனை கேட்டார். என் அண்ணன் ஒன்றும் புரியாமல் முதலில் ஹாஸ்பிட்டலில் சேர்த்துக்குங்க.. பணம் கொண்டு வந்துடறோம்.. என்றார். ஹாஸ்பிட்டலில் சேர்க்க பணம் தேவை இல்ல தம்பி.. என்ன முதல்ல கவனி.. நூறு ருபாய் இருக்கா என்றார். என் காதுகளில் என் அக்காவின் முனகல் சப்தம் கேட்டது. நொடிந்துப் போய் நானும் என் அண்ணனும் அங்கே உட்கார்ந்துக் கொண்டோம்.


அதற்குள் எங்கள் சொந்தங்கள், ஊர் மக்கள் என அனைவரும் அங்கே வந்து விட்டனர். நூறு ரூபாய்க் கொடுத்தப் பின்னர் மட்டுமே அந்த நபர் சேர்க்கைக்கு அனுப்பினார். எந்த நோய்க்காக அரசாங்க ஆஸ்பத்திரிக்கு சென்றாலும் முதலில் க்ளுக்கோஸ் தான் ஏற்றுவார்கள். தீக்காயத்திற்கும் அப்படிதான். நாங்கள் தான் பரபரப்பாக கண்ணீரோடு அங்கும் அங்கும் அலைந்துக் கொண்டிருந்தோம். இரண்டு மணி நேரம் கழித்து ஒரு டாக்டர் வந்து பார்த்து விட்டு சென்றார். வழக்கம்போல் சிகிச்சை பலனின்றி அன்று மாலை அக்கா இறந்து விட்டாள்.


நான் எட்டாம் வகுப்புப் படிக்கும்போது இதேப் போன்று தான் பள்ளியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அண்ணனின் நண்பர் வந்து உங்கள் அண்ணன் செத்துப் போயட்டாண்டா என்று என்னை அழைத்துக் கொண்டுப் போனார். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது இதேப் போன்றுதான் என் சின்ன அண்ணன் வந்து சித்தப்பா செத்துப் போய்ட்டார் என்று என்னை அழைத்துக் கொண்டுப் போனார். நான் பத்தாம் வகுப்புப் படிக்கும்போது யாரோ ஒருவர் வந்து என் அக்கா செத்துவிட்டார் என்று என்னை அழைத்துக் கொண்டுப் போனார். வறுமை கூட என்னை சிதைக்கவில்லை. ஆனால் தொடர் மரணங்கள் என்னை நிலை குழைய செய்தது.


என்ன நடக்கிறது என்றே தெரியாமல் மூன்று வருடங்களும் தொடர்ந்து ஒவ்வொருவராக அதுவும் டிசம்பர் மாதத்தில் தான் இறந்துப் போனார்கள். இன்றும் கூட எனக்கு குடும்ப நண்பர்களோ, அல்லது தெரியாத எண்ணில் இருந்தோ யாரவது போன் செய்தால் என் இதயம் பட படக்கும். கைகள் நடுங்கும். காரணம் ஏதாவது இறப்பு செய்தியாக இருக்குமே என்று. அந்த மூன்று மரணங்களும் என்னை மனதளவில் மிகவும் பாதித்தது.


ஆனால் என் அக்காவின் மரணம் என்னை நிலை குழைய செய்தது. எனக்கு முன்னர் பிறந்தவள் என் அக்கா. அவள் இறந்த முன் தினம் அவளது பிறந்த நாள் கொண்டாடி என் குடும்பமே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தது. தொடர்ந்து ஆண் குழந்தைகள் மட்டுமே பிறந்து வந்த எங்கள் குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை என் அக்கா. பாசத்தை கொட்டி வளர்த்தார்கள். நான் மட்டும்தான் அவளிடம் எந்நேரமும் சண்டைப் போட்டுக் கொண்டிருப்பேன். ஆனால் அவள் இறப்பதற்கு முந்தைய நாள் அவளுடன் சண்டையே போடாமல் இரவு முழுதும் நானும் அவளும் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தோம். மறு நாள் இரவோ நான் மட்டும் கதறி கதறி அழுதுக் கொண்டிருதேன். இப்போதும் தொடர்ந்து சிரிக்க நேர்ந்தால் என்னையும் அறியாமல் என் மனம் என் சிரிப்பைக் கட்டுப்படுத்தும். காரணம் இன்னொரு மரணத்தை தாங்கிக் கொள்ளும் சக்தி என் மனதிற்கு இல்லை.


வறுமை சுற்றி சுற்றி அடித்தாலும் என் அக்கா கேட்டப் பொருட்களை மட்டும் மறுக்காமல் வாங்கிக் கொடுத்து அவள் மீது உயிரையே வைத்திருந்த என் தந்தை அன்று நொடிந்துப் போனார். அன்று முதல் அவர் யாரிடமும் பேசுவதே இல்லை. ஏதாவது தேவை என்றால் மட்டுமே பேசுவார். அதுவரை நண்பர்களாக இருந்த அண்ணன் தம்பிகள் அனைவரும் சரியாகப் பேசிக் கொள்வதுக் கூட இல்லை. இப்போது தான் ஏதோக் கொஞ்சம் நிலைமை மாறி அனைவரும் சரியாகப் பேசிக் கொள்கிறோம்.

ஒரு மரணம் பல மனிதர்களின் வாழ்வையே புரட்டிப் போட்டு விடுகிறது.


No comments:

Post a Comment