Saturday, July 25, 2009

தேடி வந்தத் தலைமை



அண்மையில் பார்த்த பசங்க திரைப்படத்தில் ஒரு காட்சி. வகுப்புத் தலைவனை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கும். அப்போது சில மாணவர்கள் கள்ள ஓட்டுப் போட்டு விடுவார்கள். கள்ள ஓட்டுக்கள் சில சமயம் சிலர் வாழ்க்கையின் திசையைக் கூட மாற்றி விடும். நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த கால கட்டம் அது. அதுவரை எனது ஆசிரியர் புஷ்பராணி அவர்களை தவிர்த்து என்னை யாரும் அவ்வளாவாக கண்டு கொள்ள மாட்டார்கள்.


ஒரு சராசரி மாணவனாகவே பள்ளி வாழ்க்கை நகர்ந்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் எட்டாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வுகள் முடிந்து அதில் வெற்றிப் பெற்று ஒன்பதாம் வகுப்புக்கு சென்றோம். மூன்று நாட்கள் கழித்து வகுப்பு மாணவத் தலைவனை தேர்வு செய்ய வகுப்பாசிரியர் தேர்தல் நடத்தினார். அப்போது பள்ளி முழுவதும் பரவலாக அறியப்பட்டிருந்த மாணவர்களான, ஆனந்த் மற்றும் அசின் எனும் மாணவர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இருவருக்கும் மாணவர்கள் மத்தியில் சம ஆதரவு உண்டு. இந்த இருவரும் உலக நடப்புகள் அறிந்தவர்கள். பார்ப்பதற்கு புத்திசாலி மாணவர்கள் போல் இருப்பார்கள். (உண்மையிலேயே இருவரும் புத்திசாலி மாணவர்கள்தான்.) என்னை விட இரண்டு மூன்று வயது பெரியவர்கள். அவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள். போட்டி தேர்தலில் மட்டுமே!!. யார் வென்றாலும் இருவரும் வென்றது போல்தான். அவர்களை எதிர்த்து வேறு யாரும் தேர்தலில் நிற்கவும் இல்லை.


வாக்குப் பதிவு சுறுசுறுப்பாக நடந்தது. வகுப்பு முழுவதும் ஒரே சப்தம். இறுதியில் வாக்குப் பதிவு முடிந்தவுடன் ஆசிரியர் வாக்குகளை எண்ணத் தொடங்கினார். கடைசி ஒட்டு சீட்டை எண்ணி முடித்தார். வகுப்பு மாணவர்களை எண்ணத் தொடங்கினார். வருகைப் பதிவேட்டை சரிபார்த்தார். மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 54. வருகைப் புரிந்தவர்கள் 52. பதிவான வாக்குகள் 57. கள்ள வோட்டுப் பதிவாகியுள்ளதை ஆசிரியர் கண்டுபிடித்து அனைத்து மாணவர்களையும் எச்சரிக்கை செய்தார். ஆனால் கள்ள வோட்டு போட்டது யார் என்று யாரும் சொல்லவில்லை. நானும் என் பங்குக்கு அனைத்து மாணவர்களையும் பார்த்து அடப்பாவிகளா. என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு சாலையை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினேன். மீண்டும் ஆசிரியர் தேர்தல் வைப்பார். வாக்கைப் பதிவு செய்ய வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டேன். ஆசிரியர் பேசத் தொடங்கினார். ஜனநாய முறைப்படி உங்களுக்கு ஒரு தலைவனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்துதான் தேர்தல் நடத்தினேன். மற்ற வகுப்புகளில் போய் பாருங்கள். வகுப்பாசிரியர்தான் மாணவத் தலைவனை தேர்ந்தெடுப்பார். இப்ப சொல்லுங்க எண்ணப் பண்ணலாம், என்றார்.


அனைவரும் சொன்னது மறுத் தேர்தல். ஆசிரியர் சொன்னார். உங்களுக்கு எல்லாம் ஜனநாயகம் சரிப்பட்டு வராது. இந்த வகுப்பு மாணவத் தலைவனை நானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன் என்றார். அனைவரையும் முறைத்துப் பார்த்தார். வகுப்பு முழுவதும் ஒரே நிசப்தம். ஒவ்வொரு மாணவரும் ஆசிரியரையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன நடக்கிறது என்றேத் தெரியாமல் நான் சாலையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆசிரியரின் கை என் பக்கம் நீண்டது. இவன் தாண்டா இனிமே உங்கள் வகுப்புத் தலைவன் என்றார். நான் யார் அது என்றுத் திரும்பிப் பார்த்தேன். அனைவரும் என்னையேப் பார்த்தனர். பின்னர் தான் தெரியும் வகுப்புத் தலைவன் நான்தான் என்று.


ஒன்றும் புரியாமல் ஆசிரியரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இங்க வாடா என்றார். இனிமே இவன்தான் வகுப்புத் தலைவன். எல்லாரும் அவன் சொல்ற மாதிரி கேட்டு நடந்துக்கணும் என்றார். அந்த வயதில் அதுதான் அனைத்து மாணவர்களுக்கும் பிரதமர் பதவி போன்றது. என் கண்கள் என்னையே நம்பவில்லை. அதுவரை நான் ஒரு அப்பாவி. யாராவது என்னைத் திட்டினால் கூட சிரித்து விட்டு வருவேன். innocent என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. தமிழில் அதற்கு சரியான வார்த்தை இளிச்ச வாயன். அந்த வயதில் நான் ஒரு இளிச்ச வாயன். ஆனால் என்ன நினைத்து என் ஆசிரியர் என்னை வகுப்புத் தலைவனாக தேர்ந்தெடுத்தார் என்று எனக்கு தெரியாது. போகிறப் போக்கில் அவர் விரல்கள் என்னை சுட்டிக் காட்டின. அதுவரையில் நான் வாழ்ந்த வாழ்க்கை சற்றே புறம் தள்ளப்பட்டு என்னை எனக்கே அறிமுகம் செய்து வைத்த நிகழ்வு அது. இன்று நான் சிறுவயதிலேயே பக்குவப்பட்டு இருப்பதாக மற்றவர்கள் சொல்லக் கேட்டதுண்டு. Run lola Run என்கிற திரைப்படத்தில் ஒவ்வொரு நொடியின் மதிப்பையும் மிக அழகாக பதிவு செய்து இருப்பார்கள். அப்படிதான் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நொடி அது. என் ஆசிரியரின் விரல்கள் வேறு யாரையாவது சுட்டிக் காட்டி இருந்தால் நான் இன்னமும் கிணற்றுத் தவளையாகவே இருந்து இருப்பேன். சிறகை விரித்து பறக்கும் பறவையாய் மாற்றி விண்ணை அளக்க வைத்த என் ஆசிரியர் திரு. பிலிப் அவர்கள் என்றும் என் நன்றிக்குரியவர்.


4 comments:

  1. ஆசிரியர் கொடுக்கும் அங்கீகாராம் பல மாணவர்களை
    தூக்கி விட்டுள்ளது..இது உண்மை நண்பரே..1

    ReplyDelete
  2. நல்ல ஆசிரியர்.. அதனால்தான் குருவுக்கு அடுத்து தெய்வம்!

    ReplyDelete
  3. ஆசிரியர் பணியில் பலரின் வாழ்க்கை மேம்பட்டிருக்கிறது

    ReplyDelete
  4. thanks for tamil venkat, kalaiyarasan, suresh kumar for encouragement.

    ReplyDelete