Sunday, April 19, 2009

பகுதி 4 - எங்கள் வீடு


பள்ளி நினைவுகள்தான் களம் என்றாலும் அதன் ஊடாக நான் தொட்டு செல்ல நினைக்கும் நினைவுகளில் முக்கியமானவை ஒரு சில.. அவற்றில் ஒன்று எங்கள் கொட்டிவாக்கம் வீடு.

காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை அடையாறுக்கும், அடையாரில் இருந்து கொட்டிவாக்கதிற்கும் குடிபெயர்ந்ததை முன்னரே பகிர்ந்து இருந்தேன். கொட்டிவாக்கத்தில் சுமார் 2400 சதுர அடியில் (ஒரு கிரவுன்ட்) இடம் வாங்கிக்கொண்டு மிக அழகாக ஒரு வீடும் கட்டிக்கொண்டு அங்கே குடிபெயர்ந்தோம். எங்களுக்கு ஒரு வீடும் வாடகைக்கு விட மூன்று வீடுகளும் கட்டி இருந்தார்கள். மிக அழகாக பூந்தோட்டம், சிறிய அளவிலான கோழிப் பண்ணை, அப்பா, அம்மா, அண்ணன்கள், அக்கா, நான் என மிக அழகானதொரு குடும்பமாக குடியேறினோம். 

சில நாட்கள் கழித்து தோட்டத்தில் ஒரு வெண்டைக்காய் செடி வைத்து விட்டு அது முளைத்து வெளியில் வரும் வரை, தோட்டம்தான் நன் கண் முழிக்கும் இடம். சில நாட்கள் கழித்து முளை விட்டு வெளியில் வந்தது நான் விதைத்த விதை. ஏதோ சாதித்த விட்டது போன்ற ஒரு பிரம்மிப்பு. ஓ என்று கத்திக்கொண்டே வீட்டிற்குள் வந்தேன். பளார் என்றொரு அரை விட்டார் என் தந்தை. (அதிகாலை நேரம், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் தந்தை நான் கத்தியது கண்டு பயந்து, அந்தக் கோபத்தில் தான் என்னை அறைந்தார் என்பதை இப்போதுதான் உணர்கிறேன்). உலகையே மறந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்து போன நான், தந்தை விட்ட அறையில் நொடிந்துப் போய் நின்றேன். பின்னர் அம்மா வந்து சமாதானப்படுத்தி அழைத்து சென்றார். 

அதன் பின்னர் பல் துலக்குவது, சாப்பிடுவது என பல நேரங்களை என் வெண்டைக்காய் செடியுடன்தான் கழித்தேன். விதை முளைத்து, செடியாகி, வெண்டை காய்த்து அதை பலமுறை நான் வெறும் வாயிலே தின்று இருக்கிறேன். வெண்டைக்காய் தின்றால் மூளை நன்றாக வேலை செய்யும் என்று அம்மா சொல்லுமுன்னரே, பச்சை வெண்டைக்காயை தின்னப் பழக்கப்பட்டிருந்தேன் நான். நினைவு தெரிந்து நான் முதல் முதலாக விதைத்து, நன்றாக வளர்ந்து வந்த வெண்டைக்காய் செடியின் வளர்ச்சியை அணு அணுவாக ரசித்தேன். 

தோட்டம், கோழிப் பண்ணை என மிக அழகாக நகர்ந்த நாட்களின் கவர்ச்சி இன்னும் குறையாமல் என் மனதை ஆட்டுவிக்கின்றன. அந்நாளில் கொட்டிவாக்கம் பகுதியில் எங்கள் வீடு மட்டுமே மெத்தை வீடு. பக்கத்திலேயே தென்னை தோப்பு, அதனருகில் அழகிய ஒரு குட்டை (சிறிய நீர்நிலை). அதில் தண்ணீர் குறைந்து நான் பார்த்தது இல்லை. அந்நாளில் அந்த தெருவில் அதிக வீடுகளும் இல்லை. நாங்கள் வருவதற்கு முன்னர் அந்தத் தெருவில் விவசாயம் கூட நடைபெற்றதாக கேள்விப்பட்டேன். அந்த தெருவின் பெயரே களத்து மேட்டுத் தெரு. இவ்வளவு பெருமைகளும் வாய்க்கப்பெற்ற அந்தத் தெருவின் இன்றைய நிலையைப் பார்த்தால் நெஞ்சம் ஏனோ கணக்கிறது. மக்கள் தொகைப் பெருக்கம் ஒருத் தெருவையோ இந்த அளவு பாதிக்கும்போது நாடு என்ன ஆவது? இயற்கை னா என்னமா? என்று வருங்காலக் குழந்தைகள் கேள்வி கேட்காமல் இருந்தால் சரி.

எங்கள் வீட்டின் முன்புறம் கொஞ்சம் வளர்ந்திருந்த ஒரு வேப்ப மரமும் இருந்தது. அந்த அருமையான நிழலில் ஊஞ்சல் கட்டி ஆடியப் பொழுதுகளை களவாடிய காலத்தின் மீது கொஞ்சம் கோபம் வரத்தான் செய்கிறது. அந்த தெரு வழியேப் போகும் பலருக்கு இளைப்பாறும் இடமாக இருந்தது அந்த மரம். 

மரமும் நீர்நிலைகளும் சூழ்ந்த அந்த இடத்தில் அன்று வாடகைக்கு வரவே ஆள் இல்லை. பின்னர் மதுரையிலிருந்து எங்களைப் போன்றே புலம் பெயர்ந்த ஒரு குடும்பம், எங்கள் வீட்டில் வாடகைக்கு வந்தனர். அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் படிப்புக்காக ஒரு அறையை ஒதுக்கி கொடுத்தார் என் தந்தை. தமிழில் க ங் ச ந கூட தெரியாமல் இருந்த என்னை என் மூத்த அண்ணன் செதுக்கிய இடம் அந்த அறை. இரவு முழுவதும் கண் விழித்து என்னைப் படிக்க வைத்து என்னை மெருகேற்றிய இடம் அது. அந்நாட்களில் என் மூத்த அண்ணன் மீது எனக்கு ஏகக் கோபம் இருந்தது. விழுந்த அடி அப்படி. இன்று உணர்கிறேன் அந்த இரவுப் பொழுதுகளின் அருமையை. என் அண்ணனின் தியாகத்தை. ஆனால் அவரின் தியாகத்தை உணரும் இந்நாளில் அவர் எங்களுடன் இல்லை. 

இருந்தாலும் தமிழில் கொஞ்சம் தேறிய எனக்கு ஆங்கிலம் அடிபணியவில்லை. ஐந்தாம் வகுப்பு தேர்வில் ஆங்கிலத் தேர்வில் ஒருத் தாளைக் கொடுத்து கேள்விகளுக்கு பதிலை குறிக்க சொல்வார்கள். ஆங்கிலத் தேர்வு முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். மற்றத் தேர்வுகளுக்கு விடைத்தாள், வினாத்தாள் வேறு வேறாக இருக்கும். ஆங்கிலத் தேர்வில் இரண்டுமே ஒன்றுதான். விடையைக் குறிக்க வேண்டும் அவ்வளவுதான். சத்தியாமாக சொல்கிறேன். ஒரு வினாவிற்கு கூட எனக்கு விடைத் தெரியாது. முழு ஆண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை விட்டாச்சு. 

இதற்கு இடையில் அங்கு கிட்டத்தட்ட இரண்டு கிரவுண்டு நிலத்தை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கிக்கொள்ளுமாறு என் தந்தையை அவர் நண்பர் கேட்டுக் கொண்டார். என்ன காரணமோ என் தந்தை அதை வாங்காமல் இருந்து விட்டார். இதன் விளைவை பின்னாளில் அனுபவித்தோம். 

இப்போது இருக்கும் வீட்டில் இருந்து நடுத்தெருவுக்கு வருவோம் என்றோ, கறியும் மீனும் சாப்பிட்டு சுகமாய் வாழ்ந்த நாங்கள் ஒரு நாளுக்கு ஒரே ஒரு வேலை ஒரே ஒரு கை சாம்பார் சாதம் தின்று ஒரு வாழைப் பழத்துடன் சில மாதங்களை கழிப்போம் என்றோ அப்போது கனவிலும் நினைக்கவில்லை. காலம் சுழலும் வேகத்தில் யார் எங்கே தூக்கி எறியப்படுவார்களோ யார் அறிவது. விதி வலியது. என் தாய் அடிக்கடி சொல்லும் வார்த்தை அது. 

தொடரும்....


2 comments:

  1. ஆதவன் நாஸ்டலஜியாஸ்

    ReplyDelete
  2. வீடும் குடும்பமும் வாழ்வில் மறக்க முடியாதவைகள்..
    தொடருங்கள் ஆதவன்.

    நட்புடன்
    சுரேஷ் குமார்

    ReplyDelete