Wednesday, April 15, 2009

பகுதி 1 - காஞ்சியிலிருந்து சென்னைக்கு



பள்ளியில் படித்த காலங்கள்.. அது கடற்கரையில் பதிந்த சுவடுகள் அல்ல..நீர் பட்டதும் அழிந்துப் போக.. அது இதயத்தை இடம் மாற்றி வைத்த அற்புத நிகழ்வு.. இதயத் துடிப்பு நிற்கும் வரை நம் நினைவுகளை விட்டு நீங்குவதில்லை. ஐந்து வயதுக்கு மேல் நாம் பார்த்த, கேட்ட சம்பவங்கள் மட்டுமே நம் நினைவில் நிற்கும் என்கிறது மருத்துவம். கொஞ்சம் முன் பின் இருக்கலாம். அதாவது நான்கு வயதில் பார்த்த நிகழ்வுகளும் நினைவிருக்கலாம். ஆனால் நினைத்து பாருங்கள் உங்கள் ஒரு வயது, இரண்டு வயது நிகழ்வுகள் ஏதேனும் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்த மறதி இறைவன் நமக்கு கொடுத்த வரம். ஏன்? நீங்களே சிந்தித்து பாருங்கள்..

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து எனது பள்ளியில் நான் அனுபவித்த அந்த நிமிடங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். இது சுயசரிதம் அல்ல.. சுயத்தை அறிந்துக் கொள்ள நினைக்கும் முயற்சி. 

வரலாற்று சிறப்பு வாய்ந்த காஞ்சி மாவட்டத்தில் இருந்து சிறு வயதிலேயே தந்தையின் பிழைப்பு நிமித்தம் சென்னை மாநகருக்கு வந்து விட்டதாக தாய் சொல்லக் கேட்டு அறிகிறேன். அடையாறு பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கம் பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்த நிகழ்வு எனக்கு நினைவில்லை. ஆனால் அந்த அற்புதத் தருணங்களை என் தாய் சொல்லக் கேட்டு அறிந்துக் கொண்டேன். 2000 ஆம் ஆண்டின் தொடக்கம் வரைக் கூட கிழக்கு கடற்கரை சாலை ஒரு கிராமமாகவே இருந்தது. நாங்கள் அங்குக் குடியேறிய நாட்களில் காஞ்சி மாவட்டக் கிராமங்களுக்கும் கிழக்கு கடற்கரை சாலை கிராமங்களுக்கும் வேறுபாடுகள் ஏதுமில்லை. அதனால் தான் என்னவோ எங்கள் கிராமத்தை விட்டு இடம் பெயந்து வந்த சோகம் எங்களுக்கு அவ்வளவாக இல்லை.ஆனால் இன்று அடுக்கு மாடிக் குடியிருப்புகளாலும், தொழிற்சாலைகளாலும் நிறைந்திருக்கும் கொட்டிவாக்கம் பகுதி அன்று பெரும் நீர் நிலைகளாலும், தென்னைமர தோப்புகளாலும் நிறைந்து இருந்தது.  

இன்று அனைவராலும் போற்றிப் புகழப்படும் கிழக்கு கடற்கரை சாலையின் சாலைகள் அன்று மணலாலும், மாட்டுச் சானத்தாலும் நிரப்பப்பட்டிருந்தாக கேள்விப் பட்டிருக்கிறேன். அடையாறுப் பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் பாலவாக்கத்தில் உள்ள அரசாங்க பள்ளியில் படிப்பதற்காக கொட்டிவாக்கம் பகுதிக்கு நாங்கள் குடிபெர்யாந்த நிகழ்வு என் நினைவில் இன்றும் மாறாமல் உள்ளது. 1989 ஆம் வருடம் எனக்கு ஐந்து வயது நிரம்பிய காலக்கட்டம் அது. எனக்கு சரியாக நினைவில் இருக்கும் இந்தப் பகுதியில் இருந்துத் தொடருவோம். பள்ளிக்கூட நினைவுகள் மட்டுமின்றி அதன் ஊடாக நான் சந்தித்து வந்த நிகழ்வுகளையும் சேர்த்து உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். 

தந்தை கட்டிட ஒப்பந்தக்காரராக இருத்தால் கொட்டிவாக்கம் கிராமத்தில் ஒரு நல்ல இடத்தை விலைக்கு வாங்கிக்கொண்டு இடம் மாற்றலானோம். முதல் நாள் பாலவாக்கம் பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க என்னையும், மற்ற வகுப்புகளில் சேர்க்க என் அண்ணன்கள், அக்காவையும் என் தாய் அழைத்து சென்றார். வலதுக் கையை தலை மீது வைத்து இடதுக் காதை தொடு என்று ஆசிரியர் ஒருவர் பணித்தார். எட்டவில்லை. எனவே பிறப்பு சான்றிதலைக் கேட்டனர். நான்கு வயதில் பள்ளியில் சேர்க்க மாட்டார்கள். எனவே 84 ஆம் வருடம் 83 ஆக மாற்றப்பட்டு நான் பள்ளியில் சேர்ந்துவிட்டேன். (இந்த சம்பவம் எனக்கு நினவில்லில்லை. என் தாய் பின்னர் சொல்லக்கேட்டு தெரிந்துக் கொண்டேன்.) முதல் நாளே பள்ளியில் எங்களை விட்டு விட்டு என் தாய் சென்று விட்டார். அது வரை தாயின் சேலையே கதி என்று கிடந்தவன் திடீர் என்று மாற்று முகங்கள் கண்டதும் அழுதுப் புரண்டேன். பயனில்லை. 

ஆனால் இந்தப் பள்ளிதான் என் வாழ்க்கையை தீர்மானிக்கும் முக்கியக் காரணி என்பதை அன்று நானறியேன். வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட பல நிகழ்வுகள் ஒருங்கே நடந்தேறிய மாய வலை இந்தப் பள்ளி. 

தொடரும்...

No comments:

Post a Comment