Tuesday, April 21, 2009

பகுதி 5 - உருண்டை சோறு



இளமையில் வறுமை கொடிது... என்றார் அவ்வையார். இளமையை எட்டிப்பார்க்காத வயதில் வறுமை கொடிதினும் கொடிது... 

அதுவரை செல்வசெழிப்பாக வாழ்ந்த எங்கள் குடும்பம் வறுமையின் கோரதாண்டவத்தை பார்க்க நேர்ந்தது. வாழ்ந்து கெட்டவன் கதையானது எங்கள் குடும்பக் கதை. தந்தையின் தொழிலில் ஏற்பட்ட நட்டம் காரணமாக எங்களுக்கு இருந்த நிலங்கள், வீடு என அனைத்தையும் விற்று கடனை அடைத்துவிட்டு, எங்கள் வீட்டின் வாசலில் என் தாயின் சேலையைப் பற்றிக்கொண்டு என்ன நடக்கிறது என்று கூட அறியாமல் நான் நின்ற அந்தக் கணங்கள் இன்றும் நெஞ்சில் கணக்கிறது. 

இருக்கும் பொருட்கள் அணைத்தையும் கையில் எடுத்துக்கொண்டு போகும் வழித் தெரியாமல், வாடகை வீட்டுக்கு போகக் கூட நாதியின்றி நிர்கதியாய் நின்ற எங்களுக்கு அந்நேரத்தில் தனது இடத்தைக் கொடுத்து உதவியது, வேறு யாருமல்ல.. தனது இரண்டு கிரவுன்ட் நிலத்தை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கிக்கொள்ள பணித்த என் தந்தையின் நண்பர்தான். அந்த நிலத்தை வாங்காததன் பலனை இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். 

அடிமேல் அடியாக கொட்டிவாக்கத்தில் ஒரு தனியார் பள்ளியின் கட்டிட வேளையில் ஈடுப்பட்ட என் தந்தை மேல் தளத்திருந்து கீழே விழுந்து விட கால் முறிந்து போனது. மருத்துவ செலவு, குடும்பத்தின் குறைந்த பட்ச உணவு செலவு என அனைத்துக்கும் மாற்று நபர் இல்லாமல் திண்டாடியது என் குடும்பம். என் பெரிய அண்ணன் படிப்பை விடுத்து கொட்டிவாக்கத்தில் இருந்த ஒரு பட்டறையில் வேலைக்கு சேர்ந்தார். சின்ன அண்ணன் பத்து வயதிலேயே கார் மெக்கானிக் செட்டில் வேலைக்கு சேர்ந்து விட்டார். இன்னொரு அண்ணன் சினிமா ஆர்வத்தில் கதை எழுதிக் கொண்டிருந்தார். எனவே அவரது ஆர்வத்தை கெடுக்க என் பெற்றோர்கள் நினைக்கவில்லை. ஆனால் வருமானம் போதாதக் காரணத்தால் என் அம்மாவும், அருகிலுள்ள சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். 

அந்நாளில் இரவு நேரத்தில் மட்டுமே எங்களுக்கு ஒரு கை சோறு கிடைக்கும். பகல் நேரத்தில் ஒரே ஒரு வாழைப்பழம் மட்டுமே. வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சமைத்து பெரிய தட்டில் சோற்றை போட்டு அதில் குழம்பை குழைத்து சிறிய உருண்டையாக உருட்டி எங்கள் அனைவருக்கும் ஒரு கை கொடுத்துவிட்டு, ஒரு வாழைப்பழத்தையும் கொடுத்துவிட்டு, இறுதியாக இருக்கும் கொஞ்சம் சோற்றை மட்டுமே என் அம்மா உண்பார். நிலவு வெளிச்சத்தில், தாயின் அன்பில் நல்ல வேப்ப மரக் காற்றில், எனக்கு கிடைத்த அந்த ஒரு கை சோற்றின் சுகம் எத்துனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது. ஆனால் இந்த அருமை அப்போது தெரியவில்லை. வறுமையில் எங்கே அருமை தெரிவது. 

கடைக்குட்டி என்பதால் எனக்கு மட்டும் சில வசதிகள் எப்போதும் உண்டு. வீட்டில் யாருக்கும் உணவு இல்லையென்றாலும், எனக்கு மட்டுமே அருகில் உள்ளவர்களிடம் கேட்டு வாங்கிக்கொடுப்பார்கள். பசி எடுத்தால், தட்டை கையில் எடுத்துக்கொண்டு, ஓங்கி மணி அடிப்பது போல் அடித்துக் கொண்டிருப்பேன். திட்டிக்கொண்டே பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சாப்பாடு வாங்கிக்கொண்டு வந்து கொடுப்பார்கள். சில நாள் எனக்கு என்று சொல்லி வாங்கி வரும் சாப்பாடே எங்கள் அணைவருக்கும் ஒரு கை உருண்டை சோறாக அமைந்துவிடும். 

மறு நாள் ஆண்டு விடுமுறை முடிந்து பள்ளித் திறக்கும் நாள். அரசாங்கப் பள்ளிதான் என்றாலும் அடிப்படை செலவுகளுக்கு கூட பணம் இல்லாததால் என் படிப்பும், அக்காவின் படிப்பும் கேள்விக்குறியானது. ஆனால் அந்த ஆறாம் வகுப்பின் முதல் நாள், முதல் வகுப்பில் நான் சந்திக்கும் ஒரு நபர்தான் என் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துவார் என்பது அப்போது எனக்குத் தெரியாது. நல்லார் ஒருவர் உளரே.. அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை.. எனக்கு 
மட்டுமே பெய்யாமால் போய்விடுமா என்ன?

தொடரும்...


1 comment: