Thursday, April 16, 2009

பகுதி 2 - பெரியப் பத்துக்காசும், கல்லாக்காயும்



ஒரு முறை பட்டுக்கோட்டையும் அவரது நண்பரும் சுடும் வெயிலில் நடந்து சென்றுக் கொண்டிருக்கையில் பட்டுக்கோட்டை அவர்களின் செருப்பு அறுந்துப் போய்விட்டதாம். உடனே அவரது நண்பர் என்ன இப்படி ஆகிவிட்டதே என்ன செய்வது என்று திகைத்துக் கொண்டிருந்தாராம். உடனே பட்டுக்கோட்டை 

"உறுப்பருந்து போனாலும் உள்ளம் கலங்கேன்
இந்த செருப்பறுந்து போனதற்காகவா சிந்தை கலங்குவேன்..
கொதிக்கும் தார் எனக்கு குளிர் நீர்.. என்று கூறிவிட்டு வேகமாக நடந்து சென்றாராம்.

இதுப் போன்ற மனப்பக்குவம் எப்போது ஒருவருக்கு வரும். உறுதியாக நிறைய கற்ற அறிஞர்களுக்கு மட்டுமே.. ஆனால் ஒன்றாம் வகுப்பு சேர்ந்து முதல் நாள் பள்ளிக்கு செல்கையில் சுடும் வெய்யிலில் காலில் செருப்பு இல்லாமல் நடந்து சென்றபோது வலி தாங்காமல் அம்மாவின் இடுப்பில் ஏறி உட்கார்ந்து கொண்டு அழுதுக் கொண்டே பள்ளிக்கு சென்ற நாட்களில் இது போன்ற மனப்பக்குவம் எனக்கு வரவில்லை. அதுதான் சொன்னனே நிறையக் கற்ற அறிஞர்களுக்கு மட்டுமே அல்லது வாழ்வில் அடிபட்டு, உதைபட்டு முன்னேறிய ஒரு சிலருக்கு மட்டுமே வரும்.. (பள்ளிக்கூட நினைவுகளை எழுதும் முன்னர் என் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்துக் கொண்ட ஒரு சில விசயங்களையும் சேர்த்தே இங்கு எழுதுகிறேன்.)

ஒற்றையடிப் பாதையாக வளைந்து நெளிந்து செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் மிக அருகிலேயே, சாலையோரமாகவே எங்கள் பள்ளி அமைந்திருந்தாலும் 90 களில் அந்தப் பகுதி நிறைய மரங்களாலும் நீர் நிலைகளாலும் நிரம்பி இருந்தது. குறிப்பாக எங்கள் பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு மரம் எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். காரணம் அதில் இருந்து தினமும் பழம் பறித்து உண்டு எங்கள் பொழுதுகளை கழித்தோம். அந்தப் பழத்தின் பெயர் எனக்கு சரி வர நினைவில் இல்லை. ஆனால் "மூக்கு சளிப் பழம்" என்று அந்நாளில் அந்தப் பழத்திற்கு நாங்கள் பெயர் வைத்திருந்தோம். பெயர் மட்டுமே அப்படி. பழம் மிக இனிப்பான பழம். 

அந்நாளில் பள்ளி வளாகங்களில் தின்பண்டங்கள் விற்கும் ஆயாக்களிடம் தினமும் பத்து பைசாவிற்கும் இருபது பைசாவிற்கும் நாங்கள் வாங்கித் தின்னும் இன்னொரு பழம் "கல்லாக்கா" இது தான் என் நினைவில் நிற்கும் பெயர். உண்மையான பெயர் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. இந்தப் பழம் இப்போது எங்காவது கிடைக்கிறதா என்று தெரியவில்லை. கருப்பு நிறத்தில் அல்லது அடர் சிகப்பு நிறத்தில் இருக்கும் இந்தப் பழங்கள் மிகவும் புளிப்பு சுவை நிறைந்த பழங்கள். பள்ளிக்கூட நாட்களில் இந்தப் பழத்தை தின்னாத நாட்களே இல்லை. 

அதற்காக அம்மாவிடம் பத்துக் காசு கேட்டு அடம் பிடித்து வாங்கி சென்று பள்ளியில் காலையிலேயே கல்லாக்கா சாப்பிட்ட பொழுதுகள் அருமையானவை. அந்தப் பொழுதுகளும் அந்தப் பழங்களும் இப்போது கிடைக்காதவை. வீட்டில் பத்துக் காசு கொடுக்கும்போது அதிலும் பெரியப் பத்துக் காசுதான் வேண்டும் என்று அடம் பிடித்து அழுதுப் புரண்ட நாட்களை நினைத்து இன்றும் சிலாகித்துக் கொள்கிறேன்.

ஒரு நாள் அண்ணனிடம் பெரியப் பத்துக் காசும், எனக்கு சின்னப் பத்துக் காசும் (சின்னப் பத்துக் காசு கொஞ்சம் வழ வழப்பாக இருக்கும். பெரிய பத்துக் காசு கொஞ்சம் சொர சொரப்பாக இருக்கும். இன்று பத்துக் காசுகள் புழக்கத்தில் இல்லை என்று நினைக்கிறேன்). கொடுத்து விட்டார்கள். ஆனால் மனம் கேட்க வில்லை. சின்னப் பத்துக் காசில் மனம் லயிக்கவில்லை. அழுதுப் புரண்டும் பயனில்லை. காரணம் அன்றுக் காசுக் கொடுத்தது என் தந்தை. என் தாயிடம் எனக்கு இருக்கும் அன்னியோன்யம் என் தந்தையிடம் இல்லை. பார்வையாலேயே மிரட்டும் தந்தையிடம் போய் எப்படி கேட்பது பெரிய பத்துக் காசை. அழுதுக் கொண்டே பள்ளிக்கூடம் சென்று விட்டேன். ஆயாவிடம் கொடுத்தால் நிச்சயம் இந்தக் காசிற்கும் அதே அளவு தின்பண்டம்தான் தருவாள். 

ஆனால் எனக்கு ஏனோ சின்னப் பத்துக் காசில் திருப்தி இல்லை. என் அண்ணனிடம் சண்டை போட்டு அதை வாங்க முயன்றேன். அண்ணன் எவ்வளவோ எடுத்து சொன்னான். ஆனால் அடம் நிக்கவில்லை. எதையோ இழந்தது போன்ற ஒரு மாயை. இன்று நினைத்துப் பார்த்தாலும் அதற்கான காரணங்களை அறிய முடியவில்லை. குழந்தைப் பருவம் எதையோ நமக்கு உணர்த்த முற்படுகிறது. ஆனால் நாம்தான் இறுதி வரை அதை அறிமுடியாமல் தவிக்கிறோம். இறுதியாக என் மீது பாவப்பட்டு என் அண்ணன் வந்து பெரியப் பத்துக் காசை என்னிடம் கொடுத்து விட்டு சென்றான். கண்ணில் நீரும், இதழில் சிரிப்பும் வர அடுத்த கணமே ஏதோ ஒரு வித மகிழ்ச்சி உடல் முழுதும் கலந்து உயிரை உருக்கி எடுத்த அந்தக் கணங்கள்... இறைவா மீண்டும் ஒரு முறை எனக்கு அந்த நாட்களை அளிக்க மாட்டாயா? 

தொடரும்...




3 comments:

  1. Nice article...It really brought the old memmories of School Days.No one missed such ever green memmories.Wishes

    ReplyDelete
  2. nanri rajkumar, ungal varugaikkum, vazhthukkum..

    ReplyDelete