Thursday, April 4, 2013

எதிர்வினை! - சிறுகதை



சித்ரா.....

தலையை துவட்டிக் கொண்டிருந்தவள், அப்படியே ஈரத்துணியில் அள்ளி சூடிக் கொண்டு ஓடினாள்.

காலையில் சீக்கிரம் டிபன் ரெடி பண்ண சொல்லி இருக்கேன் ல..

அவன் சொல்லி முடிப்பதற்குள், ஒவ்வொரு இட்லியாக அவன் தட்டில் அடுக்கி கொண்டிருந்தாள் சித்ரா.

போதும்...போதும்.. நான்கு இட்லியோடு நிறுத்திக் கொண்டான்.

அவன் இட்லியை லாவகமாக, விண்டு விண்டு உள்ளேத் தள்ளிக் கொண்டிருந்தான். மூன்று இட்லி காலியானது.

லேசாக வலதுபக்கம் சாய்ந்து, இடது புட்டத்தை கொஞ்சமாக மேல் நோக்கி தள்ளினான்.

அவள் உடனே உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வருவது போல் பாவனை செய்து ஓடினாள்.

கீச்ச்ச்ச்...என்கிற சப்தம், அப்படியும் அவள் காதுகளை எட்டியது. காலியான வயிறு என்பதால், வாயு கொஞ்சமாக வெளியேறியது போல, என்று அவன் தனக்குள் நினைத்துக் கொண்டான்.

அவள் ஏதும் அறியாதது போல், கோப்பையில் தண்ணீரை ஊற்றிவிட்டு நகர்ந்தாள்.

சித்ரா, நாளைக்கு உங்கம்மா வீட்டுக்கு போகணும் ல..

ஆம் என்பது போல் தலையசைத்தாள்.

அந்த ஒரு பவுண் மோதிரத்த போடத்தான் கூப்பிட்டு இருப்பாங்க னு நினைக்கிறேன். காலையில ரெடியா இரு போயிட்டு வந்துரலாம்.

போ..நீ போய்,  சீக்கிரம் சாப்பிட்டு விடு.. என்று சொல்லிக் கொண்டே, அலுவலகத்துக்கு தயாராக உள்ளே  சென்றான்.

இரண்டு இட்லியை எடுத்து வைத்துக் கொண்டாள். நடுவிரலையும், கட்டைவிரலையும் எடுத்து, இட்லியை லேசாக விண்டு, அதன் நுனி மட்டும் சட்னியில் படுமாறு நனைத்து உள்ளே தள்ளினாள்.

சரி..போயிட்டு வரேன்... சொல்லிக்கொண்டே அவளை தாண்டி சென்றான்.

டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... என்கிற சப்தம் கீழே தரையை இரண்டாக பிளக்கும்படி கேட்டது. பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அவன் சென்றுவிட்டான்.

குப்பை கிடங்கை கிளறிவிட்டது போல், நாற்றம் அவள் மூக்கை துளைத்தது. இரண்டு இட்லியை கூட முழுவதுமாக உண்ணாமல், அப்படியே கையைக் கழுவிக் கொண்டு எழுந்தாள். அவனுடன் கல்யாணமாகி இந்த இரண்டு வாரத்தில், ஒரு நாள் கூட முழுமையாக அவள் தன்னுடைய உணவை எடுத்துக் கொண்டதில்லை. அவனோடு உட்கார்ந்தாலும், அவன் சாப்பிட்டுவிட்டு சென்றாலும், அவள் சாப்பிடும்போது அந்த நாற்றத்தோடுதான் உறவாட வேண்டி இருக்கிறது.

அடுத்த நாள் காலை,

வாங்க மாப்ள, சாரதா........ என்று மனைவியை அழைத்தார், சித்ராவின் தந்தை, சித்ராவின் அம்மா வந்து இருவரையும் வரவேற்றாள்.

வாங்க மாப்ள, சவுக்கியமா? சிரிப்பையே அதற்கான பதிலாக சொல்லிவிட்டு நகர்ந்தான்.

சித்ரா, அம்மாவோடு உள்ளே சென்றுவிட்டாள்.

வழக்கமான அம்மாபோலவே, கணவனுடனான இல்லற வாழ்க்கை பற்றி அக்கறையாக விசாரித்துக் கொண்டிருந்தாள். அவளும் வழக்கமான மகள் போலவே, சம்பிரதாயமான பதிலை சொல்லிவிட்டு நகர்ந்துக் கொண்டிருந்தாள்.

காப்பி போட்டு அப்பாவுக்கும், கணவனுக்கும் கொடுத்துவிட்டு, அம்மாவோடு கொஞ்சம் தள்ளி அமர்ந்துக் கொண்டாள்.

சித்ராவின் அப்பா பேசிக் கொண்டிருக்கும்போது, அவளது கணவன் இடதுபக்கமாக சாய்ந்தான்.

புஷ்ஷ்ஷ்ஷ்...பெருவெள்ளத்தை அடிக்கி வைத்து, சின்ன துளை வழியாக வெளியே விட்டால், எப்படி பீச்சிக்கொண்டு அடிக்குமோ, அப்படி வெளியேறியது அவனது பெருங்குடல் வாயு..

காப்பி குடித்துக் கொண்டிருக்கும்போது, நாற்றம் குடலைப் பிடுங்கி எடுத்தது, சித்ராவின் தந்தைக்கு. ஆனால் எப்படி அதை வெளியேக் காட்டுவது என்று தெரியாமல், வெளிக்காட்டினால் மாப்பிள்ளை தவறாக நினைத்துக் கொள்வாரோ என்று நினைத்து மூச்சை அடக்கிக் கொண்டு எதுவும் நடக்காததுபோல் பேசிக் கொண்டிருந்தார் சித்ராவின் அப்பா. சித்ராவும், அவளது அம்மாவும், அடுப்படியில் ஏதோ வேலை இருப்பது போல் அங்கிருந்து அவசர அவசரமாக நகர்ந்து சென்றனர்.

என்னதான் சமாளித்தாலும், சித்ராவின் அப்பாவால், நாற்றத்தை பொறுத்துக் கொள்ள முடியவில்லை, கையை மூக்கின் மேல் வைத்து, மூக்கை தடவிக்கொடுத்தும், இரு விரல்களால் மூக்கு துவாரங்களை மூடி மூடி திறந்தும், நாற்றத்தை விரட்டிக் கொண்டே இருந்தார். அசட்டு சிரிப்பும், நமுட்டுக் கோபமும், மாறி மாறி அவர் முகத்தில் எதிரொலித்தது. கண்களை உருட்டி, முகத்தை சுருக்கி, விரித்து நவரச பாவங்களையும் காட்டிக் கொண்டிருந்தார்.

நகைச்சுவையை தூண்டும் எந்தவித உரையாடல்களும் அங்கே நடக்காதபோதும், ஆஅ..ஹா.. ஆஆ.. ஹா. என விழுந்து சிரித்துப் பேசினார் சித்ராவின் அப்பா. அப்போதாவது நாற்றம் குறையாதா என்கிற நப்பாசையில்..

ஆனால் சித்ராவின் கணவன் ஒன்றுமே நடக்காதது போல, கொஞ்சமாக மூச்சை மட்டுமே துரத்திவிட்டு, தொடர்ந்து காப்பியை பருகிக் கொண்டிருந்தான். இந்த நாற்றமெல்லாம் அவனுக்கு ஒன்றுமே இல்லை. எப்போதும் ஒன்றை உருவாக்குபவனுக்கு அதன் மூலம் பெரிய ஆபத்து வந்துவிடாது என்கிற புராண சித்தாந்தங்களை அவன் நினைவுப்படுத்திக் கொண்டே இருந்தான்.

ஏன் மாமனார், கொஞ்சம் அசாதாரணமாக நடந்துக் கொள்கிறார், ஏன் மனைவியும், மாமியாரும் அவசர அவசரமாக உள்ளே சென்றார்கள் என்கிற எந்த கேள்விகளும் அவனுக்குள் எழாதது போல, அவன் தொடர்ந்து காப்பியின் இறுதி சொட்டு வரை பருகிக் கொண்டிருந்தான்.

உவ்வே....உவ்வே.. குடலே வெளியில் வந்து விழுந்தது போல, யாரோ வாந்தி எடுக்கும் குரல் கேட்டு, சித்ராவின் அப்பா சமையல் அரை நோக்கி ஓடினார். என்னம்மா என்ன ஆச்சு? பொண்ணு, மாசமா இருக்காளா? என்று உள்ளே எட்டிப் பார்த்தார். அவரது மனைவி வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். என்ன ஆச்சு சாரதா?

கடு கடு என ஒற்றைப் பார்வையை வீசிவிட்டு, மூக்கைப் பொத்திக்கொண்டு, நீங்க போய் அந்த குசுவினி மாப்பிளை கூட பேசிக்கிட்டு இருங்க.. நாங்க மதிய சாப்பாடு தயார் பண்றோம் என்று சொல்லிவிட்டு வேலையை தொடர்ந்தாள். நான் அப்பவே சொன்னேன், இந்த குசுவினி மாப்ள வேண்டாம்  னு, கேட்டீங்களா நீங்க, என்று அவள் தொடர்ந்து முனகிக் கொண்டே இருந்தாள்.

தலையை குனிந்துக் கொண்டே சித்ராவின் அப்பா, மெதுவாக வெளியே செல்ல எத்தனித்தார். மெது மெதுவாக வெளியே செல்வதற்குள், லேசாக நிமிர்ந்து ஓரப் பார்வையில் தன் மகளைப் பார்த்தார். அவள் அப்பாவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது சித்ராவுக்கு பதினான்கு வயது.

அன்றுதான் அவளுக்கு மஞ்சள் நீராட்டு விழா... என்னக்கா குசுவினிப் பொண்ணு வயசுக்கு வேற வந்துட்டாளா என்று அக்கம் பக்கத்துக்கு வீட்டுப் பெண்கள் விசாரித்துக் கொண்டே அவள் முகத்தில் சந்தனத்தை அப்பினார்கள். கோபமும், இயலாமையும் சாரதாவை ஒன்றும் பேசவிடாமல் செய்தது. இருந்தாலும், உதட்டில் சிரிப்போடு எல்லாரிடமும் உரையாடிக் கொண்டிருந்தாள்.

எல்லா களேபரங்களும் முடிந்து, வீடு கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் மூன்று பேருக்குமானது.

ஏங்க, உங்கப் பொண்ணுக்கு இன்னும் நாலைஞ்சு வருசத்துல கல்யாணம் பண்ணனும்..

அதுக்கு என்னடி இப்ப,

என்ன இப்படி கேக்குறீங்க, காலையில் இருந்து எனக்கு ஒரே அவமானமா போச்சு, வரவங்க, போறவங்களாம், குசுவினிப் பொன்னு, குசுவினிப் பொண்ணு னு அவள கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்காங்க, இப்படியே இருந்தா அவளுக்கு எப்படி கல்யாணம் ஆகும்? எவன் கட்டிக்குவான்..

இதெல்லாம் ரொம்ப சாதரணமான விஷயம் சாரதா?

என்னங்க இப்படி சொல்றீங்க, இத இப்படியே விட்டா, நிச்சயம் அவளுக்கு கல்யாணம் ஆகாது?

சாரதாவின் கணவன், சித்ராவின் அப்பாவாக யோசிக்க ஆரம்பித்தான். யாரு இருக்கிறார்கள், என்ன இடம் என்கிற எந்தவித பிரக்ஞையும் இல்லாமல், சித்ரா உடலில் இருந்து கெட்ட வாயுவை வெளியேற்றுவதில் இருக்கும் சிக்கலை அவர் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துக் கொள்ள விழைந்தார்.

சித்ரா அவர்களின் இந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் வேண்டுமென்றே அப்படி செய்வதில்லை. எப்படி அடக்க நினைத்தாலும், அவளால் வாயு வெளியேற்றத்தை அடக்கவே முடியவில்லை. நான் என்ன வேண்டுமென்றா செய்கிறேன், என்கிற கழிவிரக்கமும், எதிர்கால பயமும்தான் அவளுக்கு தோன்றியதே தவிர, இந்த சமூகத்தில் குசு விடக் கூட பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா என்கிற எண்ணம் எங்கேயும் எட்டிக் கூடப் பார்க்கவில்லை.

எல்லாருக்கும் தெரிந்த வைத்திய முறைகள் அவர்கள் வீட்டில் அமலுக்கு வந்தது. இனி உருளைக் கிழங்கு இல்லை, எல்லா உணவுகளிலும் கட்டாயம் பெருங்காயமும், இஞ்சியும் சேர்க்கப்பட வேண்டும் என்கிற எல்லா முடிவுகளும், சித்ராவின் அனுமதி இல்லாமலே எடுக்கப்பட்டுவிட்டது.

அவளுக்கு கொஞ்சம் கூட பிடிக்காத பெருங்காய வாசனையும், இஞ்சியின் காரமும் அவளது தினசரி உணவாக மாறியது. ஆனால் அவளுக்கு மிகப்பிடித்த உருளைக் கிழங்கும், பொறித்த உணவுப் பண்டங்களும் அவளுக்கு மறுக்கப்பட்டது.

இரண்டு மூன்று மாதங்கள் கழிந்தும், அவளிடம் எந்தவித முன்னேற்றமும் இல்லை. எப்போதும் போல் அவள் இயல்பு மாறாமலேயே இருந்தது. உருளைக் கிழங்கின் மீதான அவளின் பாசம் மட்டும் கூடிக் கொண்டே போனது. தொடர்ந்து மறுக்கப்படும் தன்னுடைய உரிமைகள் பற்றி பெரிதாக அவள் அக்கறை கொள்ளவில்லை, ஆனால் இந்த வாயுப் பிரச்சனை தனது வாழ்க்கையை கெடுத்துவிடுமோ என்கிற அச்சம், அவளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

சாரதாவின் ஓயாத புலம்பலும், சித்ராவின் கட்டுக்கடங்காத வாயுப் பிரச்சனையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. வேறு வழியில்லாமல் நல்ல டாக்டரிடம் சென்று மருத்துவம் பார்க்க சித்ராவின் அப்பா தயாரானார்.

இதெல்லாம் இன்னைக்கு ஒரு பெரிய பிரச்சனையே இல்லை, இங்க பாருமா ஒரு நாளைக்கு எத்தனை தடவை உனக்கு இந்த பிரச்சனை வருது?, சித்ராவிடம் கேட்டார் டாக்டர்.

ஒரு பத்து தடவை இருக்கும் சார்.. தந்தையிடம் இருந்து பதில் வந்தது.. நீங்க அமைதியா இருந்தா போதும் என்பது போல், டாக்டர் அவரை லேசாக மிரட்டும் தொனியில் பார்த்தார்.

ஒரு நாளைக்கு 10 முறை கூட உங்க உடலில் இருந்து வாயு பிரியலனா அதுதான் பிரச்சனையே தவிர, இது அல்ல. நீங்க நார்மலாதான் இருக்கீங்க.. என்று டாக்டர் சொல்லி முடிப்பதற்குள், கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என பெரும் சப்தம் எழுந்தது.

டாக்டரின் முகத்தில் அஷ்ட கோணங்களும் தாண்டவமாடியது. முகத்தை சுளித்தார், மூக்கை சுருக்கி, எதையோ தேடினார்..மூச்சை மூக்கில் இருந்து உதறிக் கொண்டே இருந்தார்...

நர்ஸ்...என்று பிளிறினார்...

உள்ளே நர்ஸ் ஓடிவந்ததும், அய்யய்யோ,, என்று மீண்டும் வெளியே ஓடினாள்...

மீண்டும் பிளிறினார் டாக்டர்,

முகத்தில் பெரிய திரையுடன் உள்ளே வந்தார் நர்ஸ்.. எங்கம்மா அந்த ரூம் ஸ்ப்ரே..

என்ன ஆச்சு டாக்டர், இந்த நாத்தம் நாறுது, என்று நர்ஸ் கேட்டு முடிப்பதற்குள், மீண்டும் சித்ரா வலது பக்கம் லேசாக சாய்ந்தாள்...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆக மாறியது...

நர்ஸ் மயக்கம் அடித்து கீழே விழுந்தார்.. நான் அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிட்டேன் என்பது போல், சித்ரா நர்சை முறைத்துப் பார்த்தாள்...

சார் நீங்க இன்னைக்கு போயிட்டு நாளைக்கு வெறும் வயித்தோடு அவங்கள கூட்டிட்டு வாங்க, என்று சொல்லி இரவுக்கு சில மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்.

நர்ஸ் முகத்தில் ஸ்ப்ரே அடித்து எழுப்பினார், டாக்டர்..

டாக்டர், அமுக்கி விட்ற குசுதானே நாறும் னு சொல்வாங்க, இந்த பொண்ணு இவ்ளோ சத்தமா விட்டும் எப்படி இந்த நாத்தம் நாறுது டாக்டர்...

கோப நரம்புகள் டாக்டரின் முகத்தில், பரவிக் கொண்டிருந்தது. ஒரே ஒரு பார்வைதான் அவளுக்கு பதிலாக கிடைத்தது.

ஒண்ணுமே நடக்காதது போல், நர்ஸ் சட்டென்று வெளியேறி சென்றாள்.

அன்றைய இரவு டாக்டரின் அறை முழுவதும், புத்தகங்களால் நிரம்பி இருந்தது. டாக்டர், ஹென்றி ஜே.ஜோசப்பின் "Solution for Our body gas" புத்தகத்தை புரட்டிக் கொண்டே  இருந்தார்.

மறுநாள் காலை, சித்ராவையும், அவளது தந்தையையும் கனிவோடு வரவேற்று, அமர சொன்னார்.

அவளது உணவுப் பழக்க வழக்கம், Antibiotics, ஏதாவது சாப்பிடுகிறாரா, இந்த பிரச்சனை எந்த வயதில் இருந்து இருக்கிறது, என்கிற எல்லா கேள்விகளையும் கேட்டுக் கொண்டிருந்தார்.

உன்னால இத அடக்க முடியலையா சித்ரா,

இல்ல டாக்டர், நானும் எவ்ளவோ ட்ரை பண்றேன், ஆனா, ரொம்ப அடக்க முயற்சி பண்ணா, மூளை நரம்புகள் வெடிக்கிறது மாதிரி, தலை வலிக்குது, என்னால அந்த வலியை தாங்கவே முடியல, நான் வேணும் னு செய்யறதே இல்ல டாக்டர்...

சித்ராவின் பதிலில், டாக்டர் இதை சரி செய்துவிடுவார் என்கிற நம்பிக்கையும், அவளது ஆற்றாமையும் சேர்ந்தே வெளிப்பட்டது.

நோயின் தன்மையை டாக்டர் புரிந்துக் கொண்ட நிம்மதி அவரது முகத்தில் வெளிப்பட்டது. என்னென்ன சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும், மாத்திரைகள் எந்த அளவு சாப்பிட வேண்டும் என்கிற முறைகளை விவரித்துக் கொண்டிருந்தார். சித்ராவின் தந்தை நம்பிக்கையோடு டாக்டருக்கு நன்றி சொன்னார்.

சித்ராவின் தோள்களை தட்டிக் கொடுத்து, கவலைப் படாதமா எல்லாம் சரியாயிடும் என்று சொல்வது போல் சிரித்தார். நன்றிப் புன்னகை செலுத்தி நகர்ந்தாள் சித்ரா.

தனது அத்தனை ஆசைகளையும் ஒதுக்கிவிட்டு, மிக கடுமையான உணவுப் பத்தியங்களோடு அவள் தன் பிரச்சனையை கொஞ்சம் கொஞ்சமாக தீர்த்துக் கொண்டிருந்தாள்.

அன்று அவளுக்கு திருமணம் நிச்சயிக்க மாப்பிள்ளை வீட்டார் வந்திருந்தார்கள்.

எல்லா சடங்குகளும் முடிந்து, எல்லா பேச்சு வார்த்தைகளும் முடிவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. சாரதாவிற்கும், சித்ராவின் தந்தைக்கும், சித்ராவின் மீதே முழு கவனமும் நங்கூரம் போல நிலைக் கொண்டிருந்தது.

ஆனால் அவள் நம்பிக்கை பெருமிதத்தோடு, பெற்றோர்களை பார்த்து, கண்களை அசைத்து அவர்களுக்கும் நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்தாள். ஆனால் கூட்டத்தில் திடீரென டர்ர்ர்ர்ர்ர். என்கிற சப்தம் எழுந்தது.

அத்தனை குளிர்ச்சியான அறையிலும் சித்ராவின் பெற்றோர்களுக்கு வியர்த்தது, அடிப்பாவி, என்பது போல், சாரதா அவளை பார்த்தாள், தந்தை தலை குனிந்து, நிலைகுலைந்து போய் நின்றார்.

ஆனால் எதுவும் நடக்காதது போல், மாப்பிள்ளை வீட்டார் சரி, சரி, கல்யாணத்தை இன்ன தேதியில் வச்சிக்கலாம் என்றனர்.

திக்கித்துப் போய், தலை நிமிர்ந்தார் சித்ராவின் தந்தை...

எல்லாம் முடிந்து, எல்லாரும் வெளியேறிக் கொண்டிருந்தனர். இறுதியாக மாப்பிள்ளை வீட்டார், சித்ராவிடம் போயிட்டு வரோம்மா என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்கள். சாரதாவும், அவள் கணவனும் மாப்பிள்ளை வீட்டார்களை வழியனுப்பி வைக்க சென்றார்கள். மாப்பிள்ளையின் அம்மா, அவனது காதில் ஓதிக் கொண்டிருந்தார்,

ஏண்டா, கொஞ்சம் நேரம் உன்னால அடக்கி வைக்க முடியாதா?

அன்று இரவு சித்ராவின் வீடு முழுக்க ஒரே சிரிப்பு சப்தம்.. ஐயோ,, ஐயோ,, நான் கூட கொஞ்சம் நேரத்துல பயந்து போயிட்டேன் மா.. சிரிப்பு சப்தமும், கும்மாளமும் தொடர்ந்தது.

அடப்பாவிகளா, ஒரு பெண்ணுக்கு இந்த மாதிரி பிரச்சனை இருந்தால், குடும்பமே ஏதோ இழவு விழுந்த வீடு போல் மாறுகிறது? அவள் கல்யாணம் குறித்து கவலை கொள்கிறது, ஆனால் ஆணுக்கு இந்த மாதிரி பிரச்சனை இருந்தால், அது குறித்து எவ்வித பிரச்சனையும் இன்றி, இப்படி சிரித்துக் கொண்டிருக்கிறார்களோ, என்று சித்ராவின் மனதில் ஏதோ ஒரு மூலையில் ஒரு கேள்வி உதித்துக் கொண்டிருந்தது.

மீண்டும் சமையற்கட்டில்..

என்னங்க...

ஏன் இப்படியே நிக்கிறீங்க, மாப்பிள்ளை தப்பா நினைச்சுக்கப் போறார், போய் அவர்கிட்ட பேசிக்கிட்டு இருங்க... மகளைப் பார்த்துக் கொண்டிருந்த, தந்தை பெருமூச்சோடு நகர்ந்தார்.

சித்ரா முகத்தில் எவ்வித உணர்வுகளும் இன்றி, எந்த சலனமும் இன்றி அவள் தந்தையை பார்த்துக் கொண்டிருந்தாள். அவருக்கு அந்த பார்வை ஈட்டியால் குத்துவது போல் இருந்தது, சட்டென்று பார்வையை விலக்கி வெளியே சென்றார்.

இரவு சித்ரா கணவனோடு வீட்டில் பேசிக் கொண்டிருந்தாள். அவள் மனதுக்குள் எப்போதும் இந்த கேள்வியை கேட்டுவிடலாம் என்கிற எண்ணம் எழுந்துக் கொண்டே இருந்தாலும்,

அந்த மாதிரி ஒருநாளும் பண்ணிடாதமா என்கிற அம்மாவின் குரல் அவள் காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்தது.

ஆனால் அவள் மனதுக்குள் கேள்விகள், எதிர்கேள்விகள் இரண்டும் மாறி, மாறி எழுந்துக் கொண்டே இருந்தது.

இதை எப்படி ஒரு பிரச்சனையாக சொல்ல முடியும்?

அதெப்படி, இதே பிரச்சனை எனக்கிருந்தபோது, என் குடும்பம் என்ன பாடுபட்டது? இழவு வீடு போலல்லவா இருந்தது..

கல்யாணம் ஆகிவிட்டது, இனி என்னதான் செய்துவிட முடியும்?

அதற்காக காலம் முழுக்கவே இப்படி ஒரு நாற்றம் பிடித்த மனுசனோடு வாழ்ந்துக் கொண்டிருக்க முடியுமா?

தனக்கு வைத்தியம் பார்த்த டாக்டரிடமே, கணவனுக்கும் வைத்தியம் பார்த்தல் என்ன? என்கிற கேள்வி எழுந்து ஒருநாள் அதை அவனிடம் சித்ரா கேட்கவும் செய்தாள்...

ஆனால் தன்னிடம் அப்படி ஒரு குறையே இல்லாதது போல், அவன் அவள் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாதது போல் நகர்ந்துவிட்டான்.

அதெப்படி, ஆம்பிள்ளைங்களுக்கு, இதுக்கு எல்லாம் வைத்தியம் பாக்கணும் சொன்னா கவுரவம் பொறுக்குமா? வறட்டு கௌரவம் புடிச்ச ஆம்பளைங்க....

வேறென்ன செய்வது, பேசாமல் விவாகரத்து வாங்கி விடலாமா? அய்யய்யோ, அம்மாவும், அப்பாவும் செத்தே போய்விடுவார்களே? தவிர, இதற்கெல்லாம் போய் யாராவது விவாகரத்து செய்வார்களா? கோர்ட்டில் போய் இதை எப்படி நிரூபிப்பது? அப்படியே நிரூபித்தாலும், கோர்ட் இதை ஏற்றுக் கொள்ளுமா? பதில் ஆம் என்று இருந்தாலும், அவள் தன்னுடைய எந்த கேள்விகளுக்கும் பதிலே இல்லாதது போல், அடுத்தடுத்த கேள்விகளை மட்டுமே எழுப்பிக் கொண்டிருந்தாள். ஒரு குடும்பத்துப் பெண் வேறென்ன செய்து விட முடியும், என்பது மட்டுமே அவளுக்கு பிடித்த பதிலாக இருந்தது.

சித்ராவுக்கு ஏனோ அன்றைக்கு மீண்டும் அந்த ஆசை வந்துவிட்டது. இத்தனை நாட்களாக சாப்பிடாமல், ஒதுக்கி வைத்திருந்த உருளைக் கிழங்கை, நீள நீளமாக அறுத்து, எண்ணெயில் பொரித்து, அணு அணுவாக சுவைத்து கொண்டிருந்தாள். மதிய உணவே உருளைக் கிழங்கு வறுவலாக இருந்தது.

இரவு உணவுக்கும், உருளைக் கிழங்கே பிரதானமாக இருந்தது. மொச்சக் கொட்டை காரக் குழம்பும், உருளைக் கிழங்கு பொரியலும் அன்றைக்கு இரவு உணவாக இருந்தது. கணவனுக்கு பரிமாறிவிட்டு, அவளும் முதல்முறையாக அவனோடு சாப்பிட உட்கார்ந்தாள். அவனுக்கு அதில் ஆச்சர்யம் இருந்தது போல் அவனது முகம் காட்டிக் கொள்ளவில்லை. எப்போதும் போல், கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு அவள் எழுந்துக் கொண்டாள். அவன் இன்னமும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். கொஞ்சமாக வலது பக்கம் சாய்ந்தான். டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சப்தம் எழுந்தது.. சித்ரா அவனைத் தாண்டி நகர்ந்து சென்றுக் கொண்டிருந்தாள். அவன் வாயில் சோற்றோடு, லேசாக வாயைத் திறந்துக் கொண்டு, அவளை ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். வலது பக்கம் லேசாக சாய்ந்தவாறே..

அவனுக்கு தெரிந்தது, இது அவனுடையது அல்ல, அவளுடையது.

2 comments:

  1. மனிதனின் கெட்ட வாய்வு லிருந்து இவளவு பிரச்னை இருக்கிறது -*-=+ இது தான் எதிர்வினை .இதை குறும்படம் எடுத்தால் அழகாக இருக்கும்

    ReplyDelete
  2. "டாக்டரின் முகத்தில் அஷ்ட கோணங்களும் தாண்டவமாடியது. முகத்தை சுளித்தார், மூக்கை சுருக்கி, எதையோ தேடினார்..மூச்சை மூக்கில் இருந்து உதறிக் கொண்டே இருந்தார்..."

    படிக்கும் போதே சிரிப்பை அடக்க முடியவில்லை நல்ல நகைச்சுவை கதை அருமை...!!!


    ReplyDelete