Monday, March 7, 2011

தற்குறி



இருவருக்கும் இடையேயான மௌனம் எப்போது கலையும் என அலைகள் வந்து வந்து பார்த்து சென்றன. அவள் விரல்களால் மணல்பரப்பில் உருவங்களற்ற அரூபங்களை, சித்திரமாக வரைந்துக் கொண்டிருந்தாள். அவன் அவள் அழகில் லயித்துப் போனவனாய், ஒழுங்கற்ற வீதியில் பறந்து செல்லும் தட்டான் பூச்சி போல அவள் அழகை ஒழுங்கற்ற பார்வையால் பருகிக் கொண்டிருந்தான். எல்லா ஓவியர்களின் கையெழுத்தும் அழகாய் இருப்பது போல், காதலிக்கப்படும் எல்லா பெண்களும் அழகாகத்தான் இருக்கிறார்கள் என்று உள்மருவிக் கொண்டான். அவளின் அங்கங்களை அணு அணுவாய் ரசித்தப் பின்னர்தான் அவள் விழிகளில் கசிந்த கண்ணீர் அவனுக்குக் காணக் கிடைத்தது. புல்வெளியில் பட்டு, அதன் பரப்பில் தெறிக்கும் பனித்துளியைப் போல தனக்கும் அவள் கண்ணீருக்கும் எந்த நேர்க்கோட்டு தொடர்பும் இல்லை என்பதாக அவன் பார்வையை திருப்பிக் கொண்டான். அவளின் கண்ணீர்த் துளி மணலில் அவள் வரைந்த அரூபமான சித்திரத்தின் மீது பட்டு சித்திரத்தின் கண் போல் உருபெற்றது. அடுத்த கண்ணீர்த்துளி வழிந்தோடி சித்திரமே அழுவது போல் மாயையை உண்டு பண்ணிற்று.

கட்டுண்டு கிடக்கும் இந்த சமூகத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்ள அவளுக்கு மனமில்லை. மானம் என்கிற ஒற்றை சொலவடை ஒரு சமூகத்தை, அதன் கூறுகளை, தர்க்க ரீதியான நியாயங்களை, இடையீடுகளை, எப்படியெல்லாம் காயப் படுத்துகின்றன என்று அவள் மனம் தனக்குள் கதைத்துக் கொண்டிருந்தது. பருவம் அடைந்த ஒரு பெண் தனக்கான ஒரு துணையை தேடிக் கொள்ள, அவள் குடும்பமே சம்மதித்தாலும், மானம் என்கிற ஒற்றை சொல்லும், சமூகம் என்கிற கட்டுக்கோப்பு கேந்திரமும் அந்த சம்மதத்தை அசம்மதமாக மாற்றிவிடுகிறது. இன்னமும் அவன் அவளை உதாசீனப்படுத்திக் கொண்டிருந்தான். அவள் தனக்கான நியாயங்களை உருவாக்கிக் கொள்ளும் வார்த்தைகளுடன் போரிட்டுக் கொண்டிருந்தாள். அவன் மெல்ல திரும்பி அவளைப் பார்த்தான்.

"இப்ப என்னதான் சொல்ற, வர முடியுமா, முடியாதா?"

அவன் வார்த்தைகள் முற்றுப் பெறுமுன்னர் அவள் கண்ணீர் வேகமெடுக்க ஆரம்பித்தது. சப்தமில்லாமல் அழுத அவள் இப்போது தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தால். தன்னை தேற்றுவதற்கு இவன் ஒரு வார்த்தை சொல்லி விட மாட்டானா என்கிற பெண்ணின் தவிப்பு ஒருபோதும் எந்த ஆணுக்கும் புரியப்போவதில்லை என்கிற உள்மன உளறலையும் பொருட்படுத்தாமல்.

அவன் கோபம் இன்னும் அதிகமாயிற்று. அவர்களின் அமர்ந்திருந்த தூரம் சற்றே அதிகமாயிற்று. அவள் கொஞ்சம் திரும்பிப் பார்த்துவிட்டு கண்ணீரை துடைத்துக் கொண்டால். இனி அழுவதனால் ஆய பயன் என்ன என்கொல் என்பதாக..

தள்ளி சென்று அவன் தோல் மீது தலை சாய்ந்து 'சரி' என்றாள். கூட்டுக்குள் இருந்து எட்டிப் பார்க்கும் குஞ்சு போல் அவன் இதழில் இருந்து சிரிப்பு எட்டிப் பார்த்தது. அவள் கூந்தலை தடவி கொடுத்தான். அதுவரை வளைந்து நெளிந்து செல்லும் பாம்பு போல் இருந்த அவன் உடல்மொழி இப்போது பறந்து சீறிப் பாயும் சிங்கம் போல் ஆனது.


"சரி அடுத்த மாதம் ரெண்டு பெரும் சேர்ந்து தேனியில இருக்கிற என்னோட பிரெண்ட் ரவி வீட்டுக்கு போய்டுவோம். அங்க போய் ஒரு கோவில்ல கல்யாணம் பண்ணிக்கிடுவோம். அப்புறம் நாம நமக்காக வாழ்வோம்" என்றான்.

அவள் அவன் விழிகளுக்குள் ஊர்ந்து செல்லும் தன்னை நோக்கினாள். அவன் முகம் எங்கும் புன்னகைப் பூ பூத்துக் குலுங்கியது. பார்வை பரிபாஷை நடந்துக் கொண்டிருந்தது. அவன் அவள் விரல்களை கொஞ்சம் மெதுவாய் தடவினான். அவள் சிணுங்கினாள். குலுங்கினால். கடற்கரை மணலுக்குள் புதைந்துக் கொண்ட அவள் கால் விரல்களை எடுத்து நீவி பரிகாசம் செய்தான். அவள் அவன் கேசக் கூட்டுக்குள் விரல் நுழைத்து வீணை மீட்டினால். காற்று வந்து அனைத்து செல்லும் நெற்கதிர்கள் பணிந்து எழுவது போல் அவள் விரல் பட்ட அவன் கேசம் முழுவதும் படர்ந்து விரிந்தது. கடல் காற்றையும் தாண்டி அனலடிக்கும் அவன் மூச்சுக்காற்று அவளின் மேனியில் மெழுகாய் பரவியது. அவள் கொஞ்சம் கொஞ்சமாய் பின்னோக்கிப் போனாள். அவன் நண்டைத் தேடி செல்லும் சிறுவன் போல அவளை இதழை தேடி சென்றான். அவள் பட்டும் படாமல் ஓரிடத்தில் நின்றுவிட்டால். நரம்புகள் கூட இல்லாத அவள் இதழில் அவன் வயலின் வாசித்துக் கொண்டிருந்தான்.


அந்த இசை அவர்களின் காதல் உலகம் எங்கும் பரவி, நீக்கமற வியாபித்து காற்றில் பறக்கும் மெத்தை போல் விரிந்தது. அதில் அவனும் அவளும். இரண்டு விரல்களால் அவள் இதழை குவித்து, குவிந்த அவள் இதழை தன் பால் பற்களால் கடித்துக் கரைந்தான். அவள் கண்கள் திறந்துக் கொண்டே இருந்தன. காற்றில் பரந்த அவளின் கேசக் காடுகளை தன் கைகளால் ஒருங்கிணைத்து, அள்ளி வாரி, அவள் கழுத்துப் பரப்பில் சுகமாய் பிடித்துக் கொண்டான். கடல் பரப்பில் சுற்றிக் கொண்டிருக்கும் கூட்டமெல்லாம், காற்றுப் பட்டுக் கரைந்துப் போனதுப் போலாகவும், எப்போதும் கரைந்துக் கொண்டிருந்த காற்று அவர்களை பாதுகாப்பதுப் போலவும் நினைத்துக் கொண்ட அவர்கள் பதித்த தங்கள் இதழ்களை மீண்டும் பிரிக்கவே இல்லை.



அவள் இதழ் கொடுத்த மது அவனுக்கு போதையாக அடுத்து அவன் கைகள் கொஞ்சம் கொஞ்சமாய் அவள் மார்பகங்கள் நோக்கி நகர்ந்தன. உருண்டு திரண்ட அவள் மார்பகங்களை மறைத்திருந்த மேதகு துணியை விளக்க விரல்கள் பெருமார்வம் கொண்டன. விரல் ஒவ்வொன்றாய் மார்பகம் நோக்கி நகர, அவள் திடுக்குற்று விலகினாள்.

"வேண்டாம் டா..ப்ளீஸ்"..கொஞ்சும் குமரி கெஞ்சுவதை பார்ப்பது, கொஞ்சுவதை விட அழகு. ஆனால் போதை தலைக்கேறிய அவன் அவள் வார்த்தைகளை கேட்டவனாக தெரியவில்லை. "ஏய்.. ஒரே ஒரு முறை.. ப்ளீஸ்.. இன்னும் ஒரு மாசம்தானே.. ப்ளீஸ்.. ப்ளீஸ்"..



"இல்லை..இல்லை.. வேண்டாம்.. நீ தள்ளிப் போ.. நெருங்க விடாமல் நெருப்பாய் தகித்தாள்.

பெருமூச்சு வாங்கிக் கொண்டான். "இப்ப என்னடி ஆச்சு.. பேய்க்காற்றை கிழித்துக் கொண்டு கம்பீரமாய் கேட்டது அவன் குரல்.. சுற்றிலும் நான்கைந்து பேர் திரும்பிப் பார்த்தனர். ஆனால் அவர்கள் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டதால் இந்த குரலை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. நகர வாழ்க்கையில் கடற்கரைதானே ஆண்மைக்கு நிவாரணம். மூச்சுக் காற்றுப் பட்டால் ஒடிந்து விடுவதைப் போல் இருந்த ஒருவன் மட்டும் வெள்ளந்தியாய் சிரித்துக் கொண்டிருந்தான். இவன். "என்னடா, என்ன வேணும்" என்றதும் அந்த வார்த்தைகளால் விழுந்து காற்றில் காணாமல் போனான்.

அவனுக்கு இன்னும் கோபம் தணியவில்லை. "ப்ளீஸ் டீ..ஒரே ஒரு முறை"..

"முடியாது டா. ப்ளீஸ் லீவ் இட்.. அவள் குரலில் கோபம் தெறித்தது".

"அப்பறம் என்ன மயித்துக்குடி அவ்ளோ நேரம் வாயில வாய வச்சி உறிஞ்சிக்கிட்டு இருந்த.. "

"தயா ப்ளீஸ் டா.. மைன்ட் யுவர் வோர்ட்ஸ்"..

"சும்மா உங்களுக்கு அரிப்பெடுத்தா சொறிஞ்சி விட ஒருத்தன் வேணும்".. அவன் முடிப்பதற்குள்..

ஐயோ...... தயா, ப்ளீஸ்.. வில் யு ஸ்டாப் திஸ் நான் சென்ஸ்..

"முத்தம் கொடுக்கறது அன்ப பரிமாறிக்க.. ஆனால் அதுக்கப்புறம் நீ செஞ்ச வேல எத பரிமாறிக்க".. "அதுக்கு இன்னும் காலம் இருக்கு".

என்னடி பெரிய காலம், இதுக்கு முன்னாடி அப்ப எத்தன பேர்கிட்ட இந்த மாதிரி அன்ப பரிமாறிக்கிட்ட.

"ஷிட்.. உன்ன போய் நம்பி எல்லாத்தையும் விட்டுட்டு உன் கூட வரேன் னு சொனேன் பாரு.. உனக்கு என்னடா வேணும். என் அன்ப விட இந்த சத தான் முக்கியமா?"

"ஆமாம் டீ.. எனக்கு அதுதான் முக்கியம்..

அப்ப அதுக்கு இங்க நிறைய பேர் சுத்திக்கிட்டு இருப்பாளுங்க.. நீ அங்க போ"

"அப்படி நினைச்சு தாண்டி உன்கிட்ட வந்தேன்"..

அவன் சொல்லி முடிப்பதற்குள் அவள் கதறி கதறி அழத் தொடங்கினாள்.

"இனிமே என் மூஞ்சிலே முழிக்காத டா.. இங்க இருந்து போய்டு", அவள் சொல்லி முடிப்பதற்குள் அவன் அங்கிருந்து சென்றுவிட்டான். கடற்கரை முழுக்க ஒரே நிசப்தம். அவள் லேசாய் திரும்பி அவனைப் பார்த்தாள். அவன் அவளை திரும்பிப் பார்க்க விருப்பம் இல்லாதவனாய் விடுக்கென்று மறைந்தான்.

அவள் மனம் ஆறுதல் வார்த்தைகளை தேடி அலைந்தது. "நீ கொஞ்சம் விட்டுக் கொடுத்துட்டுப் போய் இருக்கலாம்டி".. என்னடி சொல்ற.. அவன் என்ன வார்த்த கேட்டான் பார்த்தியா.." அவள் மூளை எங்கும் வார்த்தைகளும், எதிர்வார்த்தைகளும், அலைந்துக் திரிந்துக் கொண்டிருந்தன. கண்ணீர் தீரும் வரை அழுதாள். மணல் பரப்பில் கட்டுண்டுக் கிடந்த கூட்டம் கலைய ஆரம்பித்தது. சிதறிக் கிடந்த ஒன்றிரண்டு மனிதர்களும் களைந்து சென்றனர். நேரம் இரவின் பின் பகுதியை நோக்கி நகர்ந்தது. இன்னமும் அவள் மனம் அமைதியை தேடிக் கண்டு அடையவில்லை. அதற்காக காத்திருந்தால். அவள் உள் மனம் சொல்லிற்று "அவன் வருவான்.. மண்டியிடுவான். எனக்காக தன் கோபத்தை களவுக் கொடுப்பான் என்று. அங்கே அலைகளின் சப்தமும், காற்றின் கரைச்சலும், அவளையும் தவிர வேறு யாருமில்லை.

அவள் கால்களை குத்தவச்சு, முகம் மறைத்து அழுத்துக் கொண்டிருந்தாள். முதுகின் பின்பக்கம், வலது தோலின் மேற்பக்கம், அந்த அன்புக் கரங்கள் தீண்டின. அடைத்து வைத்திருந்த ஆற்று நீர் திறந்து விட்டதும் பெருக்கெடுத்து ஓடுவது போல் அவன் திரும்பி வந்து விட்டான்.. என்று பேரானந்தத்தில், சிரிப்பும், அழுகையுமாய் சேர்ந்து அவள் திரும்பி... தயா.........................

"யாரு நீங்க..." விழிகளில் பயம்..தேக்கி வைத்திருந்த வார்த்தைகளை திருப்பி தர மறுத்த மூளை. அவள் வார்த்தைகள் அற்றவளாய்" சனதானமாய் கிடந்தாள்.

ஹி..ஹி.. ஹி...முகம் முழுக்க பற்களாய் தெரிந்தன.

விடிந்தது. தயா விழித்ததும், இரவு கீழ் தனமாய் நடந்துக் கொண்டதற்காக அழுதான். இனி அவள் முகத்தில் எப்படி விழிப்பது என்று ஏங்கித் தவித்தான். கோபத்தில் உதிர்ர்த்த வார்த்தைகளை திருப்பி எப்படி பெறுவது, என்று மனதுக்குள் யுத்தம் செய்துக் கொண்டிருந்தான். மனதை தேற்றிக் கொண்டு அவளை அழைத்தான் அலைபேசியில்..

"நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதால் சிறிது நேரம் கழித்து கால் செய்யவும்".. ஓயாமல் ஒலித்தது கணினி குரல்.

"தவறுக்கு அவளிடம் மன்னிப்பு கேட்டு அவள் காலடியில் விழுந்திடலாம்.. அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது"..

தயா அவளின் வீடு நோக்கி புறப்பட்டான்.

வீடு பூட்டி இருந்தது.

அக்கம் பக்கம் யாருமில்லை விசாரிக்க.. மனம் வெறுமையை உணர்ந்தது. உடனடியாக அவளைப் பார்க்க விழிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டன.

"நேத்து அவள தனியா பீச் ல விட்டுட்டு வந்தோமே.. அங்கேயே இருப்பாளே.. மனம் நிலைக் கொள்ளவில்லை. கடற்கரை நோக்கி விரைந்தான். கடற்கரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் கற்களின் ஒவ்வொன்றின் மீதும் ஒரு கால் வைத்து நடந்தான். கற்கள் முடியும்போது இரண்டு கால்களுக்கும் சேர்ந்து சம அளவில் கற்கள் கிடைத்திருந்தால் அவளுக்கு ஒன்றும் ஆகியிருக்காது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொரு காலாய் மெதுவாக அடியெடுத்து வைத்தான். இறுதியில் இடது காலுக்கு, வலது காலுக்கு கிடைத்ததை விட ஒரு கல் குறைவாகக் கிடைத்தது. என்ன செய்வது என்று யோசித்தான். கடைசி கல்லில் இரண்டு கால்களையும் சேர்ந்தே வைத்தான். இருந்தாலும், அதில் அவள் மனை நிறைவு பெறவில்லை. கடற்கரையில் எந்த 'பூ' மரமும் இல்லை. எனவே இங்கே ஏதாவது பூ கிடைத்தால் போதும்.. அவளுக்கு ஒன்றும் நடந்திருக்காது என்று நினைத்துக் கொண்டான். கடற்கரை முழுதும் பூவைத் தேடி அலைந்தான். ஓரிடத்தில் ஒரே ஒரு மல்லிப் பூ உதிர்ந்துக் கிடந்தது. மனம் முழுக்க சந்தோசமாய் பூவை எடுத்துக் கொண்டு நிமிர்ந்துப் பார்த்தான். சிறிது தூரத்தில் அதே போல் இன்னொரு மல்லிப் பூ கிடந்தது. இன்னும் மகிழ்ச்சி கூடிற்று. 'பூ'வை கையில் வைத்துக் கொண்டே அவளை தேடினான். எங்கும் அவளில்லை. அனலடிக்கும் மணற்பரப்பில் ஆங்காங்கே கண்களுக்கு குளிர்ச்சியாய் காதல் ஜோடிகள். அவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். ஒருவன் மட்டுமே வெள்ளந்தியாய் சிரித்துக் கொண்டு அவனைப் பார்த்து கண்களை விரித்தான். "இவன எங்கேயோ பார்த்திருக்கோமே?".. அவன் மனம் நினைப்பதற்கு முன்னாள்.. ஆமாம் இப்ப இது ரொம்ப முக்கியம்" என்று நினைத்துக் கொண்டு.. வேகமாக நடந்தான்.

"ஐயோ.. பாக்கவே பயங்கரமா இருந்தது டா.. காலங்கார்த்தால, யப்பா.. இன்னும் ரெண்டு நாள் சோறு தண்ணி உள்ள இறங்காது. எவ்ளோ கொடூரமா இருந்தது தெரியுமா? அப்படியே என் கை கால் எல்லாம் நடுங்கிக்கிட்டே இருந்தது. அப்புறம் போலீஸ் வந்தப்புறம் தான் ஆம்புலன்சே வந்து எல்லாத்தையும் சேர்த்து அள்ளிக்கிட்டுப் போச்சு.. இப்ப பாரு இந்த பீச்ச ஒன்னும் நடக்காத மாதிரி கிடக்குது".

இரண்டு வாலிபர்கள் பேசிக்கொண்டே நகர்ந்து சென்றார்கள். காகங்களும், கழுகுகளும் ரத்தம் படிந்த அந்த கடற்கரையின் மணல் வெளியை சுற்றியே வட்டமடித்துக் கொண்டிருந்தன. அவன் இவை எதையும் காணாதவனாய், வேகமாக அவள் வீடு நோக்கி நடந்தான், அவளின் நினைவுகளுடன்.


2 comments:

  1. ஏன் da ஏன் இப்பிடி: Women’s day அதுவுமா ஒரு women'னோட பொழுத இப்படி தான் படிக்கணுமா என்ன?
    ஆரம்பம் என்னமோ நல்லாத்தான் இருந்துது...Finishing kills MAN...ஆனாலும் ஊர் உலகத்துல நடக்கிறது தான...this story also a lesson for those who walking the way u mentioned in plot..
    Beach பக்கம் போனவே அவ அவனுக்கு பித்தம் கூடி பெனாத்துவான்..அது இந்த வர்ணனையோட விழக்கம் வேற..பீச்ல உள்ள பல மணல் நோண்டிகள் experience போலவே இருக்கே..imm Nice reading..

    ReplyDelete
  2. மீண்டும் அவளை தேடி வரும்பொழுது கற்களை எண்ணியபடி காலடி வைத்து வருவது
    அவன் மனகுழப்பத்தை,பதற்றத்தை சரியாக காட்டுகிறது.இப்படி எல்லாம் கூட நடக்குமா என்ற கேள்வி எழுந்தாலும் ., நடந்து கொண்டுதான் இருக்கிறது என்கிறது டீ கடை பேப்பர் .

    ReplyDelete