Sunday, May 10, 2009

சுதா என்கிற மந்திரச் சொல்..


ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் பெண்ணின் பங்கு மிக இன்றியமையாதது. எனது வாழ்விலும் மூன்று பெண்கள் மிக முக்கியமானவர்கள். ஒன்று எனது தாய். அடுத்து என் ஆசிரியர். மற்றோவர் என் அக்கா. இந்த மூவரையும் பற்றி பார்க்குமுன்.. நான்காவதாக ஒரு பெண் என் வாழ்வின் திசையை சற்றே மாற்றியமைத்த பெருமைக்குரியவர் அவர் திருமதி சுதா. என் அம்மா, ஆசிரியர், அக்கா போன்றோர்கள் என் வாழ்வில் வெகு தூரம் என்னோடு பயணித்து வந்தவர்கள். ஆனால் திருமதி சுதாவோ நொடிப் பொழுதில் தோன்றி மறையும் மின்னல் போன்று என் வாழ்வில் தோன்றி மறைந்தவர். ஆனால் மின்னலின் வீரியம் போன்றே அவரும் வீரியம் மிக்கவர். எந்தவித குறிக்கோளும் இன்றி மிக சாதாரணமாக சுற்றித் திரிந்த என்னை ஒரு திசை நோக்கி செலுத்தியவர். என்னை ஒருங்குப்படுத்தியவர். மிகப் பெரிய அளவில் நான் ஒன்றும் சாதித்தவன் இல்லையென்றாலும், மிக மோசமாய் வாழும் நிலையில் இருந்து என்னை மீட்டெடுத்தவர்கள் பற்றி நான் எழுத வேண்டும் என்று நினைத்ததன் விளைவே இந்தப் பதிவு. 

ஆரம்பத்தில் சொன்னது போன்று, நான் மிகப்பெரிய விஞ்ஞானியோ, தலைவனோ, ஒரு நிறுவனத்தை கட்டியாளும் மேதையோ அல்ல. மிகப் பெரிய அளவில் சாதித்தவனும் அல்ல. ஆனால் மிகப் பெரிய அளவில் சோதனைகளை சந்தித்தவன். தொடர் தோல்விகள், தொடர் துயரங்கள் என்று நான் பட்ட அவஸ்தைகள் சொல்லிமாளாது.  என்னைப் பற்றி சுயத்தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காக இந்தப் பதிவுகள் அல்ல. உங்கள் வாழ்க்கையிலும் இது போன்று துயரங்களோ, தோல்விகளோ நேர்ந்திருந்தால் அதை மறக்க செய்யும் ஆர்வமே இந்தப் பதிவு. துயரங்களோ, தோல்விகளோ ஒரு மனித வாழ்க்கையின் முடிவல்ல.. யாரோ ஒருவர் சொன்னது போல் "இதுவும் கடந்துப் போகும்" என்கிற வாசகம் எதற்கும் பொருந்தும். அளவற்ற மகிழ்ச்சியும், அளவற்ற துன்பமும் நிச்சயம் கடந்துப் போய் அடுத்த நிலைக்கு நம்மை இட்டு செல்லும். அதை நிரூபிக்கும் விதமாக நான் எழுதும் இந்தப் பதிவுகளை கருதுகிறேன். எனவே இவன் என்ன சாதித்துவிட்டான் இவன் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும் என்று எண்ணாமல், பதிவுகளில் உள்ள பாசிடிவ் அம்சங்களை மட்டுமே பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

மீண்டும் சுதாவைத் தொடர்வோம். கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு குடும்ப சூழ்நிலைக் கருதி கிடைக்கும் வேலையை செய்துக் கொண்டிருந்தேன். கொரியெர் கம்பெனி, பி. பி. ஒ. கம்பெனி, எப். எம். சி. ஜி. மார்கெடிங், என்று கிடைக்கும் வேளைகளில் எல்லாம் சில காலம் கழித்துவிட்டு, மனம் ஒன்றாமல் அனைத்து வேலைகளையும் உதறித் தள்ளிவிட்டு இறுதியாக பி.பி.ஒ தொழில் சில காலம் பணிபுரிந்தேன். திரைப்படத் துறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஏக்கக் கனவுகள் மட்டுமே என்னைத் துரத்திக் கொண்டிருந்தன. ஆனால் அதை விட குடும்ப சந்தோஷம் முக்கியம் எனக் கருதி, பணத்தேவைக்காக இது போன்ற வேலைகளை செய்துக் கொண்டிருந்தேன். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பி.பி.ஒ கம்பெனியில் வேலை செய்துக் கொண்டிருந்தக் காலமிது. மிக சாதாரணமான சம்பளம்தான். ஆனால் அதுதான் முதல் முறையாக நான் வாங்கிய மிகப் பெரிய சம்பளம். 2500/- ரூபாய். இரண்டாயிரம் ரூபாயை வீட்டில் கொடுத்து விட்டு ஐந்நூறு ரூபாயை மாதம் முழுவதும் கை செலவிற்கு வைத்துக் கொள்வேன்.

அந்தக் கம்பென்யில் நேர்காணலுக்கு சென்றபோது ஒரு பெண்மணி கையில் ஒரு பையுடன், பார்ப்பதற்கு ஒரு மத்திய வயதுப் பெண்மணியாய் காட்சியளித்தார். அப்போது நான் அவரை சரியாக கவனிக்கவில்லை. வயது அப்படி. இளம் பெண்ணாக இருந்தால் வச்சக் கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கலாம். அவரை எப்படிப் பார்ப்பது. ஆனால் சில நாட்கள் கழித்து அவரும் என் டீமில்தான் சேர்ந்தார். என்னோடுதான் பயிற்சியும் எடுத்துக்கொண்டார். திருமணமானப் பெண் என்பதனால் அவரிடம் அவ்வளவாக நான் பேசியதுக் கிடையாது. 

நாளடைவில் அவர்தான் நல்ல நட்பு ஏற்பட்டது. எப்போதும் ஏதோ புதிதாக செய்ய வேண்டும் என்கிற எனது எண்ணம் அவரை வெகுவாக ஈர்த்தது. எனக்கு ஒரு நல்ல ஆலோசகராய் மாறினார். ஒவ்வொரு நாளும் எனக்கு தன்னம்பிக்கை கதைகள் கூறியும், திசைகள் இன்றி சுற்றித் திரிந்த என் மனதை ஒரு குறிக்கோளை சுற்றித் திரிய விட்டதும் அவரது வார்த்தைகள்தான். சின்ன சின்ன விஷயங்கள்தான். ஆனால் என்னை அடுத்தக் கட்டத்துக்கு என்னை அழைத்து சென்ற நொடிப் பொழுதுகள் அவை. அவர் எனக்கு ஆதரவாய் பேசுகிறார் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் சொன்ன வார்த்தைகள் பின்னாளில் நிஜமாயின. 

நான் விரும்பியப் படிப்பை பல ஆயிரங்கள் தேவைப் பட்டது. அந்தப் படிப்பு எனக்கு ஒரு கனவாகவே இருந்தது. ஆனால் திருமதி. சுதா தொடர்ந்து எனக்கு நம்பிக்கையளித்தார். ஏதேதோ ஆலோசனைகள் கூறினார். இறுதியில் எனக்கு அந்தப் பணம் கிடைத்தது. சில வருடங்களுக்கு மின்சாரம் தாக்கி எனது மூத்த சகோதரர் இறந்துப் போனார். அதற்காக மின்சார வாரியம் கொடுத்த நஷ்ட ஈடுதான் என்னையும் என் குடும்பத்தையும் கொஞ்சம் தூக்கி நிறுத்தியது. நானும் விரும்பிய அந்தப் படிப்பை படித்தேன். முதல் முறையாக நான் கண்ட கனவு நிறைவேறியது. அதன் பின்னர் எனக்கு திருமதி சுதாவின் வார்த்தைகள் மீது பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. அவரது தம்பி, தங்கைகள் யாவரும் பெரிய மென்பொருள் கம்பெனியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். எனக்கு அடுத்து அந்தக் கம்பெனியில் வேலைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வமும் ஏற்பட்டது. தொடர்ந்து பல்வேறு சமயங்களில் என்னை ஊக்கப்படுத்தியது அவரது வார்த்தை. தொடர் தோல்விகளால் வெறுத்துப் போயிருந்த எனக்கு வாழ்வின் மீது ஒரு பிடிப்பு ஏற்பட்ட காலம் திருமதி. சுதா என்னோடு பழகியக் காலம். 

கடவும் நம்பிக்கை இல்லாவிட்டாலும் எஅன்க்குள் ஒரு மாய உணர்வு ஏற்பட்டது. தொடர் வெற்றிகள். தொடர் சந்தோசங்கள். யார் இவர் உண்மையில் எனது நாத்திகத்தை உடைக்க வந்த கடவுளா? அல்லது கடவுளின் தூதரா? குழப்பங்கள் எனக்குள் குடைப்பிடிக்கத் தொடங்கியது. வெற்றி மேல் வெற்றியாக நான் திக்குமுக்காடிப் போனேன். இறுதியாக ஆசைப்பாட்ட வண்டி, அழகிய வீடு சின்னதுதான் என்றாலும் சொந்த வீடு என்று தொட்டதெல்லாம் வெற்றியாகியது. இறுதியில் நான் ஆசைப்பட்ட அந்த பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் எனக்கும் வேலைக் கிடைத்தது. 

ஆனால் ஏனோ அவரின் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் எண்ணம் எனக்கு தோன்றவில்லை. அவரின் முகவரியோ, தொலைபேசி என்னோ நான் வாங்கிக் கொள்ளவில்லை. அவரைப் பற்றி தகல்வல்கள் எதுவுமே என்னிடம் இல்லை. ஆனால் இன்றும் சிந்திக்கிறேன்..ஏன் அவர் பற்றிய தகவல்கள் எதுவமே என்னிடம் இல்லை. உள்ளங்கைக்குள் உலகம் என்றாகிவிட்ட இந்த சூழலிலும் ஏன் என்னால் அவரைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை. தேடிக்கொண்டிருக்கிறேன் அந்த மாயத் தேவதையை..


1 comment: