Thursday, September 17, 2009

சொல்லத் துடிக்குது மனசு...


நட்பு என்னும் ஒற்றை சொல்லில் எத்துனை ஆயிரம்
அர்த்தங்கள்...அபத்தங்கள்..அற்புதங்கள்..சுகங்கள்.. சுவடுகள்..சுமைகள்..காயங்கள்..


எப்போதும், நாம் யாரும், இவருடன் தான் நட்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பி செல்வது கிடையாது. அது தானாக கனியும் மாயக் கனி. தொடக்கத்தில் எதிரும் புதிருமாக இருக்கும், இரு உள்ளங்கள் காலம் என்னும் காற்றில் கரைந்து போய்.. நட்பு எனும் சாற்றை பருக தன்னை தயார் படுத்தி கொள்கின்றன. சிறு வயதில் ஏற்பட்ட பல இழப்புகள் எனக்கு எதன் மீதும் பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது கிடையாது. கடற்கரையின் மிக அருகில் என் வீடு.. பள்ளியில் உடன் படிக்கும் சக மாணவர்கள் என் வீட்டிற்கு வந்து வாடா பீச்சுக்கு போயிட்டு வரலாம் என்று என்னை வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்தாலும் கூட ஒரு குழுவாக கடற்கரைக்கோ, அல்லது வேறு எங்கோ எனக்கு செல்வதில் அப்போது உடபாடு ஏற்பட்டதில்லை.


என் மனம் அப்போது தனிமையைத்தான் அதிகம் விரும்பியது. ஆனால் காலப் போக்கில் மனதில் ஏற்பட்ட காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மறைய மறைய, மனதுக்குள் ஏற்பட்ட அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்ய ஏதோ ஒரு புதிய உறவு தேவைப்பட்டது. அது சக மனிதர்களாக இருக்கலாம். புத்தகங்களாக இருக்கலாம். புதிய இடமாக இருக்கலாம். புதிய பள்ளியாக இருக்கலாம். ஏதோ ஒன்று மனம் புதிதாய் விரும்பியது. அந்த நேரத்தில் எனக்கு பெரிதும் கைக் கொடுத்தது புத்தகங்கள். என்னுடைய முதல் நண்பன் இவன்தான் யாராலும் அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. காரணம் சிறு வயதிலேயே நாம் பலருடன் நட்பை கொண்டாடி இருப்போம், அது நட்பு என்று தெரியாமலேயே!!


அப்படிதான் எனக்கும், ஆனால் எனக்கு நினைவுத் தெரிந்து நான் பெற்ற முதல் நண்பன் வீரா. அவன் மரணத்திற்கு பின்னர் அந்த இடம் இப்போதும் காலியாகவே இருக்கிறது. மனம் சகித்துக் கொண்ட அத்துனை துயரங்களுக்கும் பின்னாளில் மருந்தாய் அமைந்தது புத்தகங்கள் மட்டுமே. புத்தகங்கள் மட்டுமே ஓரளவிற்கு என் நண்பன் வீராவின் இடத்தை பூர்த்தி செய்தது என்று எடுத்துக் கொள்ளலாம்.


நமக்கு இருக்கும் அதே பழக்கங்கள் நாம் சந்திக்கும் வேறு யாருக்காவது இருக்குமானால் நாம் அவரை மனதளவில் நேசிக்கத் தொடங்கி விடுவோம். அதற்கு உறவு முறை பின்னாளில் தான் தெரிய வரும். அப்படி எனக்கு கிடைத்த நண்பன் அய்யனார். நான் பத்தாம் வகுப்புப் படிக்கும்போது எனக்கு ஜூனியராய் இருந்தவன். எதையோ கற்றுக் கொள்ள வேண்டும், புதிது புதிதாக தெரிந்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆவல் எங்கள் இருவரையும் இணைத்த, பிணைத்த பொருளானது.
அணுகுண்டு தயாரிப்பது, லேசர் கருவிகள் செயல்படும் விதம் என அறிவியலின் சகல பரிமாணங்களையும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் அப்போது எங்களுக்கு கட்டுக்கடங்காமல் இருந்தது. அதற்காகவே நூலகத்திற்கு சென்று பல புத்தகங்களை புரட்டி பார்த்ததுண்டு.


நான் ஒரு தலைப்பு கொடுப்பதும், அந்த தலைப்பின் கீழ் அய்யனார் ஒரு கட்டுரை எழுதி, சில நாட்கள் கழித்து என்னிடம் கொடுப்பதும், என எங்கள் அறிவுப் பசிக்கு அளவே இல்லாமல் போனது. பொதுவாக அறிவியலில் கேள்வி கேட்கும் தன்மையை ஒரு நிலைக்கு மேல் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நம்மால் எதையும் புரிந்துக் கொள்ள முடியாது. ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கே கேள்விக் கேட்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் அப்போது உணர்ந்திருக்க வில்லை. சகல விசயங்களையும் கேள்விக் கேட்டு அதற்கான விடை தேடும் பணியை முடுக்கி விடுவோம்.


வானம் என்கிற ஒன்றே இல்லையென்றும், அண்டம் என்பது எல்லைகளற்ற ஒரு வெளி என்றும் அப்போதே நாங்கள் தெளிவாக புரிந்து வைத்திருந்தோம். எரி நட்ச்சத்திரங்கள், வால் நட்ச்சித்திரங்கள் என்று பல அண்ட ஆச்சரியங்களை ஆராய்ந்துக் கொண்டே எங்களின் பல இரவுப் பொழுதுகள் கழிந்ததுண்டு.


சுஜாதாவின் அறிவியல் புத்தகங்களை அப்போது தேடி தேடித் படிக்கலானோம். ஆனால் சிலக் காலங்களில் அறிவியலின் மீது இருந்த அதிகப்படியான காதல் கொஞ்சம் குறைந்து இலக்கியங்கள் மீது கொஞ்சம் ஆர்வம் திரும்பியது. மு. வரதராசனார் எழுதிய அகல்விளக்கு நாவலை நாங்கள் இருவரும் படித்தது இன்றி பலர் படிக்கவும் காரணமாய் இருந்தோம். இன்று வரை அந்த நாவலை குறைந்த பட்சம் மூன்று, முறையாவது படித்து இருப்பேன். அப்துல் ரகுமானின் பித்தன், ஆலாபனை கவிதைகளை ஒவ்வொரு வரிகளாக சொல்லி அதன் சுவையை அள்ளி அள்ளி பருகினோம். காம உச்சத்தில் காதலியின் இதழில் வடியும் உமிழ் நீரின் சுகத்தை எங்களுக்கு இலக்கியங்கள் கொடுத்தது.


இன்றும் எங்களின் நட்பின் அடி நாதமாய் திகழ்வது புத்தகங்களுமே, நல்ல எண்ணங்களுமே..
நான் பட்டப் படிப்பு முடித்ததும், எங்களின் குடும்பத்தின் வறுமை கோடுகள் பெரிதாக ஆரம்பித்தது. இருக்க இடம் கூட இன்றி நாடோடிகளாய் கொஞ்சக் காலம் திரிந்தோம். (வீட்டுக்கு வாடகை கொடுக்க இயலாததால் வீட்டின் உரிமையாளர் வீட்டைக் காலி செய்ய சொல்லி விட்டார். போக இடமின்றி ஆளுக்கு ஒரு இடமாய் திரிந்த அந்த நொடிப் பொழுதுகள் இன்னும் மனதுக்குள் கனன்றுக் கொண்டே இருக்கிறது)


அப்போது நான் என் அக்கா வீட்டில் இருந்தேன். என் அம்மா அப்பா எல்லோரும் என் அத்தையின் வீட்டில் இருந்தார்கள். ஒரு இரவில் நான் இருக்கும் தெருவில் இரண்டு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொள்ளப்பட அந்த தெருவே போர்க்களமாய் மாறியது.
அப்போதுதான் அந்த அழைப்பு வந்தது.. நண்பன் அய்யனாரின் தந்தை ஒரு விபத்தில் இறந்து விட்டதாகவும், அந்த நேரத்தில் நான் அவன் அருகில் இருக்க வேண்டும் என்றும் அந்த அழைப்பு பணித்தது. மரணத்தின் வலிகளை, அது தரும் வேதனைகளை மிக நன்றாக அனுபவித்தவன் நான். நெஞ்சம் பட படைக்க உடனே அவனை பார்ப்பதற்காக கிளம்பினேன். ஆனால் எங்கள் தெருவில் நடந்த பிரச்சனைகளால் என்னால் இரவில் வெளியே செல்ல இயலவில்லை. மனம் முழுதும் நண்பனின் சோக முகமே நிரம்பி இருந்தது. காலை விடிந்த உடன் அவரசரமாய் கிளம்பினேன்..
அப்போதும் ஒரு அழைப்பு..


அன்று காலை பத்து மணியளவில் ஒரு நிறுவனத்தில் நேர்முகத் தேர்விற்காக வர சொல்லி பணித்தது அந்த அழைப்பு.. நிலைமையை எடுத்து கூறியும் இன்றே கடைசி நாள்.. என்று கூறி விட்டு அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது. அடுத்த வேலை உணவுக்காக அல்லல் பட்டுக்கொண்டிருந்த காலம் அது. உடனடியாக நண்பன் வீட்டிற்கு சென்றேன். மருத்துவ மணியில் இருந்து இன்னுமா வரவில்லை என்று சொன்னார்கள். சரி அதற்குள் நேர்முகத் தேர்வை முடித்து விடலாம் என்று ஓடினேன். திரும்பி வந்து பார்த்த போது, சடங்குகள் முடிந்து விட்டது. இறுதி வரை அவன் தந்தையின் முகத்தை கூட நான் பார்க்க வில்லை. துக்க நேரத்தில் என் நண்பன் சாய்ந்துக் கொள்ளும் அளவிற்கு என் தோள்கள் வரம் பெற்று வர வில்லை போல் இருக்கிறது. வாழ்க்கையின் வசீகர விளையாட்டில் நாங்க இருவர் மட்டுமே அடிக்கடி சிக்கிக் கொள்வது எனக்கு கொஞ்ச வியப்பாகவே இருந்தது.


ஆனால் எல்லா தடைகளையும் தாண்டி தன்னுடைய பட்டப் படிப்பை மிக வெற்றிகரமாய் முடித்த என் நண்பன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல சமபளத்தில் வேலைக்கு சேர்ந்தான். மிக வறுமையான சூழலில் அவன் படித்து அந்த நிலையை எட்டுவது என்பது அவ்வளவு எளிதல்ல. அவன் முடித்தான். அந்த நொடிப் பொழுது என் மனதில் நம்பிக்கை எனும் வண்ணத்து பூச்சி வெவ்வேறு வண்ணங்களுடன் சிறகடித்துப் பறந்தது. அவன் பெற்ற நான் பெற்ற வெற்றியாகவே எனக்கு பட்டது.


இக்கட்டான காலத்தில் அவனுக்கு ஆறுதல் கூட சொல்ல இயலாத நான் எப்படி இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் என்னை இணைத்துக் கொள்வது.. என்று மனம் ஒவ்வொரு முறையும் என்னை கேள்வி கேட்கும். இப்போதும் அவனைப் பார்க்கும்போதெல்லாம் மானம் கூனிக் குருகும். காரணம் மிக தேவையான ஒரு சூழ்நிலையில் நான் அவன் தேடும் நிலையில் நடந்துக் கொண்டேனே.. அவன் கரங்கள் பற்றி நானல்லாவா அவனுக்கு ஆறுதல் சொல்லி இருக்க வேண்டும்.. என்று மனம் இப்போதும் என்னை கேள்விக் கணைகளால் துளைத்து கொண்டே இருக்கும்.

எது எப்படி இருந்தாலும் என் நண்பனை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். அவன் தன்னம்பிக்கைக்கும், விடா முயர்ச்சிக்கு தலை வணங்குகிறேன்.

இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது.. இன்னொரு முறை இதே நண்பனைப் பற்றி மீண்டும் எழுதுகின்றேன்.


No comments:

Post a Comment