Monday, June 29, 2009

இன்னும் என்ன செய்யப் போகிறாய். (கல்லறை சுவடுகள்)



"எந்த ஒருப் பொருளையும் இழக்கும் வரை அதன் அருமை நமக்கு தெரியாது"
---ஆத்தங்கரையோரம் நாவலில் திரு. வெ. இறையன்பு அவர்கள்

அது டிசம்பர் மாதம். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என அனைத்து பாட ஆசிரியர்களும் எங்களை வாட்டியெடுத்த காலமது. ஒன்பதாம் வகுப்பின் காலாண்டுப் பரிட்சையில் நான் முதல் ரேங்க் எடுத்தேன். அதன் பிறகு அந்த இடத்தை வேறு யாருக்கும் விட்டுக் கொடுத்ததே இல்லை. பத்தாம் வகுப்பில் எல்லா மாணவர்களின் முகமும் ஏதோ ஒரு வித சோகத்தை வெளிப்படுத்தியவாறே இருக்கும். எப்போதும் எந்த விஷயத்திலும் மூன்று நிலைகள் உண்டு. ஒன்று முழுதும் தெரிந்தது. ஒன்று கொஞ்சம் தெரிந்தது. ஒன்று ஒண்ணுமே தெரியாதது. இதில் எல்லாம் தெரிந்தவர்களும், ஒண்ணுமே தெரியாதவர்களும் எதற்கும் கவலைப் பட மாட்டார்கள். ஆனால் கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பவர்கள்தான் எப்போதும் கவலைப் பட்டுக் கொண்டே இருப்பார்கள்.


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும் அப்படித்தான். ஆனால் பிரச்சனை என்னவென்றால் இங்கே யாருக்கும் எந்த ஒன்றும் முழுமையாக தெரியாது. அதனால்தான் எப்போதும் எதிலும் பதட்டம். சில மாணவர்கள் எதற்கும் கவலைப்படாமல் எப்போதும் போல் பெண்களை கேலி செய்துக் கொண்டு இருப்பார்கள். இவர்கள் மூன்றாவது வகை. இதே போல் தான் எனதுப் பள்ளியிலும் ஒரு சில மாணவர்களைத் தவிர மற்ற எல்லா மாணவர்களும் மிகவும் பதட்டத்தோடு படித்துக் கொண்டிருந்தார்கள். அரையாண்டுப் பரீட்சை முடிந்து மூன்றாம் இடைப் பருவத் தேர்வு என்று ஒன்று வைப்பார்கள். இந்தத் தேர்வுதான் என்னால் எப்போதும் மறக்க முடியாத தேர்வு... இந்தக் காலக் கட்டத்தில்தான் எனது குடும்பம் மிகவும் வறுமையான சூழ்நிலையில் வாழ்ந்துக் கொண்டிருந்தது.


ஆனால் எனது அக்கா திருமண வயதில் இருந்ததால் அவருக்கு கல்யாணம் செய்து வைக்க ஒரு பெரும் தொகை தேவை. எனவே அந்தத் தொகைக்காக என் தாய் நாள் தோறும் ஒவ்வொரு சொந்தக்காரரிடத்திலும், தெரிந்தவரிடத்திலும் பணம் கேட்டு அலைந்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் எனக்கு அது பற்றியெல்லாம் பெரியக் கவலை இல்லை. காரணம் என் கவனம் முழுதும் படிப்பின் மீதே இருந்தது. முதல் ரேங்க் என்கிற அந்த இடத்தை விட்டுக் கொடுக்க என் மனம் மறுத்தது. எனவே குடும்ப விசயங்களில் நான் அதிகமாக தலையிடுவது இல்லை. எனக்கு அந்த அளவுக்கு விவரமும் கிடையாது.


அன்று... அக்கா கல்யாணத்துக்காக அண்ணன் வேலை செய்யும் கம்பெனி முதலாளியிடம் கடன் கேட்க சென்று இருந்தார் என் அம்மா. எனக்கோ அன்றுதான் மூன்றாம் இடைப் பருவத் தேர்வு விடைத் தாள் கொடுக்கும் நாள். தேர்வில் நான் பெற்ற மதிப்பெண்களை அறிந்துக் கொள்ளும் ஆவலுடன் பள்ளிக்கு விரைந்து சென்றேன். எதிர்பார்த்தது போலவே எல்லா பாடங்களிலும் நான் தான் முதல் மதிப்பெண் பெற்றிருந்தேன். ஆனால் சமூக அறிவியல் பாடத்தில் நான் பெற்ற மதிப்பெண்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. காரணம் என் ஆசிரியர் எனக்குக் கொடுத்து இருந்த மதிப்பெண்கள் நூத்துக்கு நூறு. எப்போதும் எனது சமூக அறிவியல் ஆசிரியர் நாங்கள் தேர்வில் எடுத்து இருக்கும் மதிப்பெண்களுடன் பத்து மதிப்பெண்கள் அதிகமாக கொடுப்பார். அதற்காக நாம் தேர்வின் அனைத்துக் கேள்விகளுக்கும் வீட்டில் பதில் எழுதிக் கொண்டு வர வேண்டும்.


இந்த முறை நான் நூத்துக்கு நூறு மதிப்பெண் பெற்றதனால் எனக்கு அந்த மதிப்பெண் கிடைக்காது என்று சக மாணவர்கள் என்னை வெறுப்பேற்றினார்கள். மிகவும் கஷ்டப்பட்டு அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுதி வந்திருந்தேன். எனவே ஆசிரியரிடம் சென்று முறையிட்டேன். அவரோ "அதுக்கு ஏண்டா கவலைப் படறே.." அதுக்கு என்ன இப்போ.. அந்தப் பத்து மார்க்கையும் உனக்கு போட்டுடறேன் என்று கூறி நூத்துக்கு நூத்திப் பத்து மதிப்பெண் போட்டுக் கொடுத்தார். இந்த சாதனை மதிப்பெண்களுக்காக எல்லா மாணவர்களும் எழுந்து நின்று எனக்காக கைத் தட்டி என்னை உற்சாகப்படுத்த வேண்டும் என் ஆசிரியர் கேட்டுக் கொண்டார். எல்லோரும் எழுந்து நின்று கைத் தட்டி என்னை வாழ்த்தினார்கள்.


அந்த சமயம்... எனது சத்துணவு ஆசிரியர் உள்ளே வந்தார். எனது சமூக அறிவியல் ஆசிரியரிடம் ஏதோ பேசிவிட்டு "அருண் கொஞ்சம் வீட்டுக்கு போயிட்டு வா என்றார்". எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏன்.. எதற்கு என்று கேள்விகள் கேட்டுக் கொண்டு இருந்தேன். என் சமூக அறிவியல் ஆசிரியர் வீட்டுக்கு போய் எனக்கு கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா என்றார். (அப்போது எங்கள் வீட்டுத் தண்ணீர் மிகவும் ருசியாக இருக்கும். எனவே எல்லா ஆசிரியர்களும் எங்கள் வீட்டுத் தண்ணீர்தான் வாங்கிக் குடிப்பார்கள்.)


நானும் ஒன்றும் புரியாமல் வீட்டுக்கு சென்றேன். பள்ளியில் அனைத்து மாணவர்களும் என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டு அவர்களுக்காகவே ஏதோ பேசிக்கொண்டார்கள். என் வீட்டுக்கு போகும் வழியெங்கும் ஒரேக் கூட்டம். எல்லோரும் ஏதோதோ பேசிக்கொண்டிருந்தார்கள். என் உடல் ஏனோ கொஞ்சம் கொஞ்சமாக நடுங்கத் தொடங்கியது.

நான் வீட்டில் உள்ளே நுழையும்போது யாரோ ஒருவர் "ஐயோ அருணே" என்று கதறி அழுதுக் கொண்டு என்னை கட்டிப் பிடித்துக் கொண்டார். அந்தக் கதறல் அவரின் அடித் தொண்டையில் இருந்து வந்தது. இதேப் போன்றுக் கதறலை நான் இதற்கு முன்னும் கேட்டு இருக்கிறேன். அது என் அண்ணனின் மரணத்தில். இப்போதும் கேட்கிறேன். என்ன ஆனது என்றே எனக்கு தெரியவில்லை. இதயம் பட படக்க கண்கள் எனக்கும் தெரியாமல் கண்ணீர் வடிக்கத் தொடங்கியது. வீட்டின் உள்ளே சென்றேன். ஏதோ ஒரு சப்தம் ஐயோ.. எரியுதே.. ஐயோ எரியுதே..என்று எனக்கு முகம் சரியாகத் தெரியவில்லை. உற்று நோக்கினேன். தீயில் கருகிய என் அக்காதான் அந்த சப்தத்திற்கு சொந்தக்காரி.


திடுக்கென என் இதயமே நின்றுப் போய் விட்டது போன்று இருந்தது எனக்கு. காலையில் தான் என் அக்கா கையால் சாப்பாடு வாங்கித் தின்று விட்டு பள்ளிக்கு சென்றேன். இரண்டு மணி நேரத்திற்குள் என் அக்காவை இந்தக் கோலத்தில் பார்ப்பேன் என்று நான் நினைக்கவில்லை. என்ன செய்வது எனக்கு தெரியவில்லை. அப்போது என் அம்மா, அப்பா, அண்ணன்கள் யாரும் வீட்டில் இல்லை. அண்ணன் கம்பனிக்கு சென்று இருந்த அம்மாவை அழைத்து வரும்படி அருகில் இருந்தவர்கள் என்னை அனுப்பினார்கள். என் அம்மா ஹார்ட் பேசன்ட் என்பதால் விஷயத்தை நேரடியாக அவரிடம் சொல்லக் கூடாது என்று நானே எனக்குள் நினைத்துக் கொண்டேன். அண்ணன் கம்பனிக்கு சென்றேன்.


எண்ணப் பார்த்ததும் என் அம்மா இந்த நேரத்தில் இங்கே ஏண்டா வந்த.. ஏன் ஸ்கூல் இல்லையா? என்றார். நான் இல்லமா வீட்டுக்கு வா.. என்றேன். ஏன் என்றார். வீட்டுக்கு வா சொல்றேன். என்னடா ஆச்சு சின்ன அண்ணன் யாருக் கூடவாவது சண்டப் போட்டுட்டு வந்திருக்கானா என்றார். இல்ல மா நீ வீட்டுக்கு வா என்று கையைப் பிடித்து அவரை அழைத்து சென்று ஆட்டோவில் உட்கார வைத்துவிட்டு என் அண்ணனிடம் நீயும் வீட்டுக்கு வா என்றேன். ஏண்டா என்றார். "அடித்தொண்டையில் இருந்து வார்த்தை வந்தது.. தேவி செத்துப் போச்சு அண்ணா" என்றுக் கதறி, தலையில் கை வைத்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்துக் கொண்டேன்.


அண்ணனும் ஒன்னும் புரியாமல் என்னைத் தேற்றி வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தார். வீட்டில் ஆட்டோ நுழையும் முன்னரே கூட்டத்தைப் பார்த்த என் அம்மா வீட்டில் ஏதோ நடந்து விட்டது என்று அறிந்துக் கொண்டார். என் சட்டையைப் பிடித்துக் கேட்டார். என்னடா ஆச்சு.. சொல்லுடா என்றார். என் கண்கள் தாரை தாரையாய் நீர் வடித்து. வார்த்தைகள் நெஞ்சுக் குழிக்குள்ளேயே அடைத்துக் கொண்டது. ஆட்டோவை விட்டு விழுந்து அடித்துக் கொண்டு என் அம்மா உள்ளே சென்றார்.


ஐயோ தேவி அம்மா.. உன் பொண்ணு நம்மள எல்லாம் விட்டுப் போய்ட்டாளே.. என்று எல்லோரும் அம்மாவை பிடித்துக் கொண்டு அழுதனர். உள்ளே சென்று அக்காவை அந்தக் கோலத்தில் பார்த்த அம்மா................................................. மேலே சொல்லுவதற்கு எனக்கு தெம்பில்லை. நானும் மனிதன் தானே... ஒரு தீ விபத்தில் என் அக்கா சிக்கிக் கொண்டார். வீட்டில் யாரும் இல்லாததால், பக்கத்து வீட்டுக் காரர்கள் வரும் முன்னரே அவள் முற்றிலும் எரிந்துப் போய் விட்டால். ஆனால் உயிர் மட்டும் இன்னமும் இருந்தது. அது தெரியாமல் எல்லோரும் அவள் செத்து விட்டதாக எண்ணி அழுதுக் கொண்டு இருந்தார்கள். ஆனால் யாரோ ஒருவர் மட்டுமே ஆம்புலன்சிற்கு போன் பண்ணி வரச் செய்தார்.


எங்கள் நேரம் போன் செய்தவர் தீ விபத்து என்று கூறிவிட்டதால் ஆம்புலன்சிற்கு பதிலாக பையர் எஞ்சின் வந்து விட்டது. ஊரே எங்கள் வீட்டின் முன் கூடி விட்டது. பையர் என்ஜினில் என் அக்காவைத் தூக்கிக் கொண்டு நானும் என் அண்ணனும் மட்டுமே சென்றோம். செல்லும் வழியில்தான் என் பள்ளி. என் ஆசிரியர் முதற்கொண்டு மாணவர்கள் அனைவரும் என்னையே பார்த்து அழுதுக் கொண்டு இருந்தார்கள். சென்னைக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனியில் கொண்டு சேர்த்தார்கள். அங்கே தீக்காயப் பிரிவுக்கு அழைத்து செல்ல வந்திருந்த ஒரு நபர் எவ்ளோ பணம் இருக்குப்பா என்று என் அண்ணனை கேட்டார். என் அண்ணன் ஒன்றும் புரியாமல் முதலில் ஹாஸ்பிட்டலில் சேர்த்துக்குங்க.. பணம் கொண்டு வந்துடறோம்.. என்றார். ஹாஸ்பிட்டலில் சேர்க்க பணம் தேவை இல்ல தம்பி.. என்ன முதல்ல கவனி.. நூறு ருபாய் இருக்கா என்றார். என் காதுகளில் என் அக்காவின் முனகல் சப்தம் கேட்டது. நொடிந்துப் போய் நானும் என் அண்ணனும் அங்கே உட்கார்ந்துக் கொண்டோம்.


அதற்குள் எங்கள் சொந்தங்கள், ஊர் மக்கள் என அனைவரும் அங்கே வந்து விட்டனர். நூறு ரூபாய்க் கொடுத்தப் பின்னர் மட்டுமே அந்த நபர் சேர்க்கைக்கு அனுப்பினார். எந்த நோய்க்காக அரசாங்க ஆஸ்பத்திரிக்கு சென்றாலும் முதலில் க்ளுக்கோஸ் தான் ஏற்றுவார்கள். தீக்காயத்திற்கும் அப்படிதான். நாங்கள் தான் பரபரப்பாக கண்ணீரோடு அங்கும் அங்கும் அலைந்துக் கொண்டிருந்தோம். இரண்டு மணி நேரம் கழித்து ஒரு டாக்டர் வந்து பார்த்து விட்டு சென்றார். வழக்கம்போல் சிகிச்சை பலனின்றி அன்று மாலை அக்கா இறந்து விட்டாள்.


நான் எட்டாம் வகுப்புப் படிக்கும்போது இதேப் போன்று தான் பள்ளியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அண்ணனின் நண்பர் வந்து உங்கள் அண்ணன் செத்துப் போயட்டாண்டா என்று என்னை அழைத்துக் கொண்டுப் போனார். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது இதேப் போன்றுதான் என் சின்ன அண்ணன் வந்து சித்தப்பா செத்துப் போய்ட்டார் என்று என்னை அழைத்துக் கொண்டுப் போனார். நான் பத்தாம் வகுப்புப் படிக்கும்போது யாரோ ஒருவர் வந்து என் அக்கா செத்துவிட்டார் என்று என்னை அழைத்துக் கொண்டுப் போனார். வறுமை கூட என்னை சிதைக்கவில்லை. ஆனால் தொடர் மரணங்கள் என்னை நிலை குழைய செய்தது.


என்ன நடக்கிறது என்றே தெரியாமல் மூன்று வருடங்களும் தொடர்ந்து ஒவ்வொருவராக அதுவும் டிசம்பர் மாதத்தில் தான் இறந்துப் போனார்கள். இன்றும் கூட எனக்கு குடும்ப நண்பர்களோ, அல்லது தெரியாத எண்ணில் இருந்தோ யாரவது போன் செய்தால் என் இதயம் பட படக்கும். கைகள் நடுங்கும். காரணம் ஏதாவது இறப்பு செய்தியாக இருக்குமே என்று. அந்த மூன்று மரணங்களும் என்னை மனதளவில் மிகவும் பாதித்தது.


ஆனால் என் அக்காவின் மரணம் என்னை நிலை குழைய செய்தது. எனக்கு முன்னர் பிறந்தவள் என் அக்கா. அவள் இறந்த முன் தினம் அவளது பிறந்த நாள் கொண்டாடி என் குடும்பமே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தது. தொடர்ந்து ஆண் குழந்தைகள் மட்டுமே பிறந்து வந்த எங்கள் குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை என் அக்கா. பாசத்தை கொட்டி வளர்த்தார்கள். நான் மட்டும்தான் அவளிடம் எந்நேரமும் சண்டைப் போட்டுக் கொண்டிருப்பேன். ஆனால் அவள் இறப்பதற்கு முந்தைய நாள் அவளுடன் சண்டையே போடாமல் இரவு முழுதும் நானும் அவளும் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தோம். மறு நாள் இரவோ நான் மட்டும் கதறி கதறி அழுதுக் கொண்டிருதேன். இப்போதும் தொடர்ந்து சிரிக்க நேர்ந்தால் என்னையும் அறியாமல் என் மனம் என் சிரிப்பைக் கட்டுப்படுத்தும். காரணம் இன்னொரு மரணத்தை தாங்கிக் கொள்ளும் சக்தி என் மனதிற்கு இல்லை.


வறுமை சுற்றி சுற்றி அடித்தாலும் என் அக்கா கேட்டப் பொருட்களை மட்டும் மறுக்காமல் வாங்கிக் கொடுத்து அவள் மீது உயிரையே வைத்திருந்த என் தந்தை அன்று நொடிந்துப் போனார். அன்று முதல் அவர் யாரிடமும் பேசுவதே இல்லை. ஏதாவது தேவை என்றால் மட்டுமே பேசுவார். அதுவரை நண்பர்களாக இருந்த அண்ணன் தம்பிகள் அனைவரும் சரியாகப் பேசிக் கொள்வதுக் கூட இல்லை. இப்போது தான் ஏதோக் கொஞ்சம் நிலைமை மாறி அனைவரும் சரியாகப் பேசிக் கொள்கிறோம்.

ஒரு மரணம் பல மனிதர்களின் வாழ்வையே புரட்டிப் போட்டு விடுகிறது.


Sunday, June 28, 2009

தாஜ்மஹால்


புத்தகங்கள் படிப்பதும், ஏதாவது கலை சார்ந்த வேலைகள் செய்வதுமே எனது பள்ளி நாட்களில் பிரதான பொழுதுபோக்கு எனக்கு. எனது தந்தை கட்டிட ஒப்பந்தகாரர் என்பதால் இயல்பாகவே எனக்கும் கட்டிடக் கலை மீது அதிக ஈடுபாடு உண்டு. பள்ளிக்கூட நோட்டில் உள்ள அட்டைகளை பிரித்தெடுத்து அவற்றில் இருந்து வித விதமாக பல புகழ் பெற்ற கோவில்கள், கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள் என்று செய்துக் கொண்டிருப்பேன். அப்படி நான் இறுதியாக செய்தது தாஜ்மஹால்.

அப்போது நாங்கள் பாலவாக்கத்தில் இருந்த ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்தோம். நான் ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். வடக் கிழக்கு பருவ மழை காலமது. மழையை பொதுவாக ரசிக்கும் நான் அதனை வெறுத்த காலமும் இதுதான். காரணம் இறுதியில். மேலும் அது அரையாண்டு தேர்வுகள் முடிந்து வீட்டில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த நேரம். அப்போது தாஜ்மகாலின் வடிவம் மீது எனக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. தாஜ்மகாலைக் கட்டுவது மிகவும் சவால் நிறைந்தது. அதுவும் அப்போது எனக்கு இருந்த வசதி வாய்ப்புகள் மிகக் குறைவு. சோற்றுப் பருக்கைகள், நோட்டின் அட்டைகள் (பைண்டிங் சீட்), நோட்டில் உள்ள வெள்ளைத் தாள்கள், ஒரு கத்தரிக்கோல் இவைதான் எனது மூலதனம். எனவே தாஜ்மஹால் போன்ற கட்டிடங்களைக் கட்டுவது அப்போது எனக்கு மிகவும் சவால் நிறைந்த பணியாகவே பட்டது.

ஆனால் பார்த்து பார்த்து (Reference image) செய்வதற்கு என்னிடம் தாஜ்மகாலின் புகைப்படம் இல்லை. எனவே ஐம்பது பைசாவிற்கு ஒரு தீப்பெட்டி வாங்கி அதன் பின்புறம் இருந்த தாஜ்மகாலின் புகைப்படத்தை reference ஆக வைத்துக் கொண்டேன். மிக சிறிய அளவில் இருந்த அந்தப் புகைப்படம் எனக்கு பல விபரங்களை துல்லியமாக தரவில்லை. இருந்தாலும் கிடைத்த விபரங்களை வைத்து தாஜ்மஹால் கட்டும் பணியைத் தொடங்கினேன். கிட்டத் தட்ட மிகப் பெரிய கட்டிடங்கள் கட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் திட்டங்கள் போல் நானும் பல திட்டங்கள் தீட்டி கட்டுமானப் பணியை தொடங்கினேன். ஆனால் அதற்கு சிறு சிறு செலவுகள் ஆகும். எனவே எனக்கு என் பெற்றோர் கொடுக்கும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்களை முதலீடாக வைத்து திட்டம் தீட்டினேன்.

எனது நோட்டுகளில் இருந்த அட்டைகள் ஏற்கனவே தீர்ந்து போய் விட்டது. எனவே முதலில் நோட்டு அட்டைகளை சேகரிக்கத் தொடங்கினேன். குப்பைத் தொட்டிகள், சாலையோரங்கள் என கண்ணில்படும் இடங்களில் எல்லாம் நோட்டு அட்டைகளைத் தேடினேன். இந்த விஷயத்தில் எனக்கு குப்பைத் தொட்டிகள்தான் பெரிதும் உதவின. "உங்கப் பையன் குப்பை தொட்டியிலேல்லாம் குப்பை பொறுக்கிக்கிட்டு இருக்கான்" என்று யாரோ என் தந்தையிடம் சொல்லி வைக்க, நான் ஏதோ குப்பைகளைப் பொருக்கி அவற்றைக் கடையில் போட்டு தின்பண்டங்கள் வாங்கி சாப்பிடுவதாக நினைத்துக் கொண்ட என் தந்தை என்னை பின்னி எடுத்துவிடார். இருந்தாலும் சளைக்காமல் நோட்டு அட்டைகளைத் தேடினேன்.

தேவையான நோட்டு அட்டைகள் கிடைத்த உடன், அவற்றை தேவையான வடிவங்களில் கத்தரித்து சோற்றுப் பருக்கைகள் கொண்டு ஓட்டினேன். ஆனால் தாஜ்மகாலின் ஒரு சில இடங்களில் கண்ணாடி கதவுகள் இருக்கும். இவற்றை எப்படி செய்வது என்று விழி பிதுங்கி நின்றேன். சிலக் கண்ணாடித் துண்டுகளை பொருக்கி வந்து அவற்றையும் கத்திரிக்கோலால் நறுக்கி என் கைகள் முழுவது இரத்தக் கரை படிந்த நினைவுகள் இன்று இனிக்கிறதே தவிர வலிக்கவில்லை. ஆனால் அன்று வலிப் பொறுக்க முடியாமல் கதறினேன். என் கைகளில் இரத்தத்தைப் பார்த்துவிட்டு கோபத்தில் என் தந்தை அதுவரை நான் செய்து வைத்திருந்த அத்தனையும் தூக்கி எரிந்து விட்டார். மிகவும் கஷ்டப்பட்டு நான் செய்து வைத்த அந்த தாஜ்மகாலின் பாகங்கள் மீண்டும் குப்பைத் தொட்டிக்கே போனது. மனசு கேட்கவில்லை. மீண்டும் இருந்த அட்டைகளைக் கொண்டு தாஜ்மகால் செய்யத் தொடங்கினேன். இப்போது கண்ணாடி கதவுகளுக்கு மாற்றுக் கண்டுபிடித்தேன். எங்கள் வீட்டில் அப்போது டேப் ரெக்கார்டர் இருந்தது. கேசட் மூலம் பாட்டுக் கேட்கும் வழக்கமும் இருந்தது. அந்தக் கேசட் இருக்கும் பெட்டி கண்ணாடி போன்ற பிளாஸ்டிக்கால் ஆனது. ப்ளாஸ்டிக்கை சுலபமாக கத்தரிக்கோலால் வெட்ட முடிந்தது. அதுவும் தேவையான வடிவத்தில். யாருக்கும் தெரியாமல் சிலப் பல கேசட்டுகளை எடுத்து அவற்றின் பெட்டிகளை எடுத்து கத்தரித்து வைத்துக் கொண்டேன்.

முன் பகுதி, பின் பகுதி, தேவையான சுவர்கள் என அனைத்தும் தயார். ஆனால் அதன் மேற்புறம் இருக்கும் அந்தக் குண்டு வடிவம் மட்டும் நான் எவ்வளவோ முயன்றும் என்னால் செய்ய முடியவில்லை. இதற்கு மட்டுமே நான் அப்போது ஐந்து நாட்கள் சிந்தித்துக் கொண்டிருந்தேன். சரியாக சாப்பிடாமல், யாரிடமும் சரியாக பேசாமல் ஐந்து நாட்களும் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

ஆறாவது நாள் என மனதில் உதித்தது அந்த யோசனை. சிகரட் அட்டைகள் தான் அப்போது எனக்கு உதவியது. காரணம் அவைதான் எப்படியும் வளையும். பின்னர் மிக தத்ரூபமாக அந்தக் குண்டு வடிவத்தை செய்து முடித்தேன். தாஜ்மகாலின் நான்குப் புறமும் இருக்கும் அந்தத் தூண்களையும் சிகரட் அட்டைகளை வைத்துக் கொண்டே செய்து முடித்தேன்.

பின்னர் வெள்ளைத் தாள்களை வைத்துக் கொண்டு தாஜ்மஹால் முழுவதும் வெள்ளைப் பூசினேன். அதாவது வெள்ளை தாள்களை ஓட்டினேன். சோற்றுப் பருக்கைகள் மூலம் ஓட்டும்போது அவை சுருங்கி சுருங்கியே இருக்கும். அந்த சுருக்கம் போக சில மணித்துளிகள் ஆகும். அதன் பின்னர் தான் அடுத்தப் பக்கத்திற்கு வெள்ளைத் தாள்கள் ஓட்ட முடியும். இவ்வாறாக ஒரு மாதம் முழுவதும் சரியாக உணவு உண்ணாமல், நண்பர்களை மறந்து, விளையாட்டை மறந்து, வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல், மிக நேர்த்தியாக அந்த தாஜ்மகாலை கட்டி முடித்தேன். அவ்வப்போது என்னை மிரட்டினாலும், அடித்தாலும் எனது ஆர்வம் கண்டு என் தந்தை என்னை அப்படியே விட்டுவிட்டார். தாஜ்மஹால் கட்டி முடித்ததும் அதை பார்த்து என் தந்தை ஒரு சிரிப்பு செய்தார். நானும் பதிலுக்கு சிரித்தேன்.

புன்னகை மூலம் மட்டுமே நாங்கள் இருவரும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்ட நேரமது. எங்கள் தெருவில் உள்ள அனைவருமே அந்த தாஜ்மகாலைப் பார்த்து என்னை பாராட்டி விட்டு சென்றனர். நான் மிக மகிழ்ச்சியாக இருந்த நேரமது.

அன்றைய இரவுப் பொழுது.

மழை பின்னி எடுத்துக் கொண்டிருந்து. எங்கள் குடிசை காற்றி பறந்து விடும் போல் இருந்தது. அவ்வளவு அசுரக் காற்று. மரங்கள் எல்லாம் முறிந்து விழுந்துக் கிடந்தது. ஆனால் இது எதுவும் தெரியாமல் நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன்.

மறுநாள் காலை.

நான் ஆசை ஆசையாய் செய்து வைத்து அழகுப் பார்த்துக் கொண்டிருந்த தாஜ்மஹால் காணாமல் போய்விட்டது. துடி துடித்துப் போனேன். கண்களில் நீர் வடிய தாஜ்மகாலைத் தேடிக்கொண்டிருந்தேன். இறுதியாக தாஜ்மஹால் தென்பட்டது, காகிதக் கூழாக. வெளுத்து வாங்கிய மழை, எடுத்துக் கொண்டுப் போனது என் சந்தோசத்தையும் சேர்த்துதான். சோற்றுப் பருக்கை, அட்டை, வெள்ளைத் தாள் என எதுவும் மழையை தாங்கவல்ல பொருட்கள் அல்ல. மழைக் காலத்தில் இந்த பணியை செய்யக் கூடாது என்று எனக்கு தெரியவில்லை. காகிதக் கூழைப் போன என் தாஜ்மகாலை தொட்டுப் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது என் விரல்களிளின் வீக்கம். இரத்தக கரை படிந்த என் கைகள். தாஜ்மஹால் செய்ய கண்ணாடியை வெட்டும்போது, என் விரல்கள் வெட்டுப்பட்ட அந்தக் காயம் ஆறும் முன்னர் என் மனதில் ஆறா காயம் ஏற்படுத்தியது அந்த மழை.


எத்துனை நாள் உழைப்பு, எத்துனை தியாகங்கள், எவ்வளவு அடி அதனையும் வீணாய்ப் போனதே என்று அப்போது நான் சிந்திக்கவில்லை. அந்த பருவத்தில் எனக்கு அந்த இழப்பு சில மணி நேரங்கள் மட்டுமே துக்கத்தை தந்தது. பின்னர் மீண்டும் சொந்தமாக திட்டம் தீட்டி (லே அவுட்) ஒரு வீடு (நோட்டு அட்டையில்) கட்டத் தொடங்கிவிட்டேன்.


Tuesday, May 26, 2009

என் சகோதரன் (சக உதிரன்)



மரணம். மாறாத ரணத்தை எற்படுத்துவதாலேயே அதற்கு மரணம் என்று பெயர் வந்ததோ என்னவோ. ஒரு சில மரணங்கள் ஒரு சிலரது வாழ்க்கையை அப்படியேப் புரட்டிப்போடும் வல்லமை கொண்டது. ஆதிகாலத்தில் மரணம் குறித்த பயம் இருந்ததாக கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இன்றுள்ள குடும்பப் பிணைப்பு அன்று இருந்திருக்க வாய்ப்பில்லை. இந்த உறவுகள்தான், இந்த அன்புதான் நம்மை நிலைகுலைய செய்கின்றன. 

அது, நான் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த காலம். எங்கள் சொந்த வீட்டை விற்று பல வருடங்கள் கழித்து தற்போதுள்ள தரமணியில் 1400 சதுர அடி இடத்தை விலைக்கு வாங்கி சொந்தமாக குடிசைக் கட்டிக்கொண்டு குடியமர்ந்தோம். அன்றைய நாளில் எனக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத சுகம் ஏற்பட்டது. மீண்டும் சொந்த வீடு. மிக அழகான இடத்தில். நல்லக் காற்று, பக்கத்தில் கல்லுக்குட்டை எனப்படும் ஆறு, மிக ரம்மியமாக இடம். முதல் வேளையாக ஒரு செடியை வைத்து அதை வளர்க்கும் முயற்சியில் இறங்கினேன். அங்கு அப்போது தண்ணீர் வேண்டுமென்றால் அவரவர் இடத்தில் கிணறு தோன்டிக்கொள்ள வேண்டும். நாங்களும் எங்கள் வீட்டில் பின்புறத்தில் கிணறு தோண்ட ஆயத்தப்பட்டோம். என் ஆசைக்காக முன்னும் பின்னும் கொஞ்சம் இடம் விட்டு வைத்திருந்தார்கள். நான் செடி வளர்ப்பதற்காக அந்த இடத்தை விட்டு வைக்க சொன்னேன். நிறைய செடிகள் நட்டு வைத்து பக்கத்து கிணற்றில் இருந்து தண்ணீர் பாய்ச்சினேன். எங்கள் கிணறு தோண்டும் பணி பாதி நிறைவடைந்தது. அப்போது எனக்கு தெரியாது கிணறுத் தோண்டும் பணி இதோடு நின்று விடும் என்று. 

தரமணியில் இடம் வாங்கிவிட்டு குடிசைக்கட்ட அப்போது என் தந்தை ஒருவரிடம் ஐந்நூறு ரூபாய் கடன் வாங்கி இருந்தார். சில நாட்கள் கழித்து கடன் கொடுத்தவர் வந்து என் அம்மாவிடம் கடனை திருப்பி செலுத்துமாறு சத்தம் போட்டி விட்டு சென்றார். இதனை கண்ட என் மூத்த அண்ணன் எப்படியாவது அந்தக் கடனை அடைக்க வேண்டும் என்று ஒரு பெயிண்டிங் வேலைக்கு சென்றார். முதலில் சொன்னது போல் என் மூத்த அண்ணனுக்கு திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்கிற லட்சியம் இருந்தது. அதனால் அவரை யாரும் வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்தியது இல்லை. ஆனால் நிலைமையை உணர்ந்து அவரே அந்த வேலைக்கு சென்றார். 

நானும் பள்ளிக்கூடம் செல்வதற்காக கிளம்பினேன். . அதுவரை மகிழ்ச்சியாக இருந்த மனம் அன்று கொஞ்சம் துவண்டது. காரணம் எங்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து செல்ல சுமார் இரண்டு மணி நேரங்கள் ஆகும். மிக நீண்ட தொலைவு. நடந்து வரும் வழி ஒரு காடு. அங்கு மக்கள் நடமாட்டமும் குறைவு. ஒருவித பயம் என்னை ஆட்க்கொண்டிருந்தது. நடந்து நடந்து கால்கள் வலிக்க பள்ளிக்கூடம் வந்து சேர்ந்தேன். மீண்டும் சாயங்காலம் இதே தொலைவு நடக்க வேண்டுமே என்கிற பயம் என் மனது முழுதும் நிறைந்திருந்தது. ஆனால் அந்த இடத்திற்கு மீண்டும் நான் செல்ல மாட்டேன் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. 

பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு வரை எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. அன்று மதிய உணவு இடைவேளையில் சாப்பிட்டு முடித்து விட்டு நானு என் நண்பர்களும் விளையாடிக்கொண்டு இருந்தோம். கொஞ்சம் அயர்ந்த நான் பள்ளிக்கூட திண்ணையில் போய் அமர்ந்தேன். அந்த சமயம் சாலையில் சைக்கிளில் வந்த ஒருவர் (முன்னரே சொன்னது போல் பள்ளிக்கூடம் சாலைக்கு மிக அருகில் அமைந்திருந்தது.) 

"டேய் உன் பேரு அருண் தானே.. உங்க அண்ணன் பேரு வேலு தானே என்றார். ஆமாம்" என்றேன்.

உடனே என்கூட வாடா என்றார். ஸ்கூல் இருக்கு இப்ப வர முடியாது என்று சொன்னேன். அவரின் கண்கள் கலங்கியது. "டேய் உங்க அண்ணன் செத்துக் கிடக்கிறான் டா என்றார். வார்த்தைகளை சரியாக உள்வாங்காத நான் அப்படியா நான் ஸ்கூல் முடிஞ்சதும் வரேன்" என்று அப்பாவித் தனமாய் கூறி நின்ற கணம் எனக்குள் இன்றும் வலிக்கிறது. 

பிறகு அவரே என்னை சைக்கிளின் பின்புறம் உட்கார வைத்துக் கொண்டு என் அம்மாவை பார்க்க சென்றார். காரணம் புது இடம் அவருக்கு தெரியாது. எனவே நான் படிக்கும் பள்ளிக்கு வந்து என்னை எங்கள் புது வீட்டை காட்ட அழைத்துக் கொண்டு சென்றார். ஆனால் நாங்கள் முன்னர் வசித்த களத்து மேட்டுத் தெருவில் இருந்த மக்கள் என் அம்மாவிடம் விஷயத்தை சொல்ல சென்று விட்டார்கள். 

எனவே இறந்துப் போன என் அண்ணனை நான்தான் முதலில் பார்க்க சென்றேன். இன்றைய கந்தன்சாவடியில் உள்ள சுண்ணாம்புக் கால்வாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சுண்ணாம்பு அடிக்கும்போது லுங்கியை தூக்கிக் கட்ட கைகளை பின்னே எடுத்தபோது, அருகிலிருந்த மின்கம்பிகள் தாக்கி அவர் இறந்துபோனார் என்று தெரியவந்தது. ஆனால் அப்போதும் நான் ஒத்துக்கொள்ளவில்லை. இது எங்க அண்ணன் இல்லை. அவர் காலையில் ஷேவிங் செய்துக் கொள்ளவில்லை. முகத்தில் தாடி இருந்தது. என்று கேனைத்தனமாய் சொல்லிக்கொண்டிருந்தேன். பின்னர் தான் எனக்கு தெரியும் மின்சாரம் தாக்கி அவர் முகம் அவ்வாறானது என்று. 

சோகத்தின் சுவடுகள் என் நெஞ்சில் பதிய ஆரம்பித்த முதல் கணம் அது. அதுவரை பொருளாதார ரீதியில் மட்டுமே சரிவைக் கண்ட என் குடும்பம் முதன்முதலாய் ஒரு உயிரையும் இழந்து நின்றது. அண்ணனை அந்தக் கோலத்தில் கண்டதும் என் அம்மா கதறி அழுத நினைவுகள் இன்றும் என் நெஞ்சிலிருந்து அகல மறுக்கின்றன. 

விவரம் தெரியாத நான் இது அண்ணனாக இருக்கக் கூடாது என்று இறைவனை வேண்டி நின்றேன். நெஞ்சம் தேம்பி தேம்பி அழ நினைத்தாலும் கண்கள் வறண்டுப் போனதால் பிரமை பிடித்து மரம் போல் நின்றுக் கொண்டிருந்தார் என் தந்தை. சரியாக அண்ணனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய வயது. அவரது லட்சியத்தை அடைந்த பின்னர் திருமணப் பேச்சு எடுக்கலாம் என்று அம்மாவும் அப்பாவும் காத்திருந்தனர். என் காளான் காத்திருக்கவில்லை. ஒரு அனாதை விடுதியில் உள்ள பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும். அந்த பெண்ணிற்கு தான் அம்மா அப்பா பாசம் தெரியும். அப்போதுதான் வீட்டில் சண்டை சச்சரவுகள் வராது என்று என் அம்மாவிடம் அடிக்கடி சொல்வார். அவர் ஆசைப்படியே அனாதை விடுதியிலேயே பெண் பார்க்கலாம் என்று அவர்களும் நினைத்திருந்தனர். நான் விவரம் தெரிந்து என் மூத்த அண்ணனுடன் வாழ்ந்தக் காலங்கள் கொஞ்சம் தான். என் அவர்தான் எனது ரோல் மாடெல். அவர் உயரியதை மட்டுமே சிந்தித்தார். எறும்புக் கடித்தால் அதைக்கூட சாகடிக்காமல் அதற்கும் வலிக்காமல் தன் உடம்பிலிருந்து அதை அழகாக தூக்கி எறிவார். 

அவரது விழிகள் மாசுபட்டு நான் பார்த்ததே இல்லை. எப்போது ஒரு ஒளி அவரின் விழியில் குடிக்கொண்டிருக்கும். கடவுள் நல்லவர்களை மிக சீக்கிரமே தன்னுடன் இணைத்துக் கொள்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். (அப்போது எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. இப்போதும் உண்டு. ஆனால் மூட நம்பிக்கைகள் கிடையாது.)

"நீ இருந்து எனக்கு கொள்ளை வச்சி, காரியம் செய்யணும். ஆனால் நீ இறந்து உனக்கு என்ன கொல்லி வைக்க வச்சிட்டேயேடா".. என்று இறுதியில் என் தந்தை கதறி அழுத அந்த காட்சி என் மனதுக்குள் பந்தல் போட்டு குடியேறிவிட்டன. 

மிக சந்தோஷமாய் நண்பர்கள் போல் வாழ்ந்துக் கொண்டு இருந்த எங்களுக்குள் அப்போதிருந்து ஒரு இடைவெளி விழ ஆரம்பித்தது. அப்பா பேசுவதே அரிதானது. அதன் பின்னர் தரமணி வீடு என்ன ஆனது என்று எங்களுக்கு தெரியாது. ஐந்நூறு ரூபாய் கடன் கொடுத்தவர் அந்த வீட்டை எடுத்துக்கொண்டார் என்று பின்னர் கேள்விப்பட்டேன். அம்மாவும் அப்பாவும் அதை அப்படியே விட்டது விட்டார்கள் ராசியில்லாத வீடு என்று. 

இதை எழுதும் இந்த நொடியிலும் கண்களில் நீர் கசிகிறது. 

Sunday, May 10, 2009

சுதா என்கிற மந்திரச் சொல்..


ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் பெண்ணின் பங்கு மிக இன்றியமையாதது. எனது வாழ்விலும் மூன்று பெண்கள் மிக முக்கியமானவர்கள். ஒன்று எனது தாய். அடுத்து என் ஆசிரியர். மற்றோவர் என் அக்கா. இந்த மூவரையும் பற்றி பார்க்குமுன்.. நான்காவதாக ஒரு பெண் என் வாழ்வின் திசையை சற்றே மாற்றியமைத்த பெருமைக்குரியவர் அவர் திருமதி சுதா. என் அம்மா, ஆசிரியர், அக்கா போன்றோர்கள் என் வாழ்வில் வெகு தூரம் என்னோடு பயணித்து வந்தவர்கள். ஆனால் திருமதி சுதாவோ நொடிப் பொழுதில் தோன்றி மறையும் மின்னல் போன்று என் வாழ்வில் தோன்றி மறைந்தவர். ஆனால் மின்னலின் வீரியம் போன்றே அவரும் வீரியம் மிக்கவர். எந்தவித குறிக்கோளும் இன்றி மிக சாதாரணமாக சுற்றித் திரிந்த என்னை ஒரு திசை நோக்கி செலுத்தியவர். என்னை ஒருங்குப்படுத்தியவர். மிகப் பெரிய அளவில் நான் ஒன்றும் சாதித்தவன் இல்லையென்றாலும், மிக மோசமாய் வாழும் நிலையில் இருந்து என்னை மீட்டெடுத்தவர்கள் பற்றி நான் எழுத வேண்டும் என்று நினைத்ததன் விளைவே இந்தப் பதிவு. 

ஆரம்பத்தில் சொன்னது போன்று, நான் மிகப்பெரிய விஞ்ஞானியோ, தலைவனோ, ஒரு நிறுவனத்தை கட்டியாளும் மேதையோ அல்ல. மிகப் பெரிய அளவில் சாதித்தவனும் அல்ல. ஆனால் மிகப் பெரிய அளவில் சோதனைகளை சந்தித்தவன். தொடர் தோல்விகள், தொடர் துயரங்கள் என்று நான் பட்ட அவஸ்தைகள் சொல்லிமாளாது.  என்னைப் பற்றி சுயத்தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காக இந்தப் பதிவுகள் அல்ல. உங்கள் வாழ்க்கையிலும் இது போன்று துயரங்களோ, தோல்விகளோ நேர்ந்திருந்தால் அதை மறக்க செய்யும் ஆர்வமே இந்தப் பதிவு. துயரங்களோ, தோல்விகளோ ஒரு மனித வாழ்க்கையின் முடிவல்ல.. யாரோ ஒருவர் சொன்னது போல் "இதுவும் கடந்துப் போகும்" என்கிற வாசகம் எதற்கும் பொருந்தும். அளவற்ற மகிழ்ச்சியும், அளவற்ற துன்பமும் நிச்சயம் கடந்துப் போய் அடுத்த நிலைக்கு நம்மை இட்டு செல்லும். அதை நிரூபிக்கும் விதமாக நான் எழுதும் இந்தப் பதிவுகளை கருதுகிறேன். எனவே இவன் என்ன சாதித்துவிட்டான் இவன் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும் என்று எண்ணாமல், பதிவுகளில் உள்ள பாசிடிவ் அம்சங்களை மட்டுமே பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

மீண்டும் சுதாவைத் தொடர்வோம். கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு குடும்ப சூழ்நிலைக் கருதி கிடைக்கும் வேலையை செய்துக் கொண்டிருந்தேன். கொரியெர் கம்பெனி, பி. பி. ஒ. கம்பெனி, எப். எம். சி. ஜி. மார்கெடிங், என்று கிடைக்கும் வேளைகளில் எல்லாம் சில காலம் கழித்துவிட்டு, மனம் ஒன்றாமல் அனைத்து வேலைகளையும் உதறித் தள்ளிவிட்டு இறுதியாக பி.பி.ஒ தொழில் சில காலம் பணிபுரிந்தேன். திரைப்படத் துறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஏக்கக் கனவுகள் மட்டுமே என்னைத் துரத்திக் கொண்டிருந்தன. ஆனால் அதை விட குடும்ப சந்தோஷம் முக்கியம் எனக் கருதி, பணத்தேவைக்காக இது போன்ற வேலைகளை செய்துக் கொண்டிருந்தேன். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பி.பி.ஒ கம்பெனியில் வேலை செய்துக் கொண்டிருந்தக் காலமிது. மிக சாதாரணமான சம்பளம்தான். ஆனால் அதுதான் முதல் முறையாக நான் வாங்கிய மிகப் பெரிய சம்பளம். 2500/- ரூபாய். இரண்டாயிரம் ரூபாயை வீட்டில் கொடுத்து விட்டு ஐந்நூறு ரூபாயை மாதம் முழுவதும் கை செலவிற்கு வைத்துக் கொள்வேன்.

அந்தக் கம்பென்யில் நேர்காணலுக்கு சென்றபோது ஒரு பெண்மணி கையில் ஒரு பையுடன், பார்ப்பதற்கு ஒரு மத்திய வயதுப் பெண்மணியாய் காட்சியளித்தார். அப்போது நான் அவரை சரியாக கவனிக்கவில்லை. வயது அப்படி. இளம் பெண்ணாக இருந்தால் வச்சக் கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கலாம். அவரை எப்படிப் பார்ப்பது. ஆனால் சில நாட்கள் கழித்து அவரும் என் டீமில்தான் சேர்ந்தார். என்னோடுதான் பயிற்சியும் எடுத்துக்கொண்டார். திருமணமானப் பெண் என்பதனால் அவரிடம் அவ்வளவாக நான் பேசியதுக் கிடையாது. 

நாளடைவில் அவர்தான் நல்ல நட்பு ஏற்பட்டது. எப்போதும் ஏதோ புதிதாக செய்ய வேண்டும் என்கிற எனது எண்ணம் அவரை வெகுவாக ஈர்த்தது. எனக்கு ஒரு நல்ல ஆலோசகராய் மாறினார். ஒவ்வொரு நாளும் எனக்கு தன்னம்பிக்கை கதைகள் கூறியும், திசைகள் இன்றி சுற்றித் திரிந்த என் மனதை ஒரு குறிக்கோளை சுற்றித் திரிய விட்டதும் அவரது வார்த்தைகள்தான். சின்ன சின்ன விஷயங்கள்தான். ஆனால் என்னை அடுத்தக் கட்டத்துக்கு என்னை அழைத்து சென்ற நொடிப் பொழுதுகள் அவை. அவர் எனக்கு ஆதரவாய் பேசுகிறார் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் சொன்ன வார்த்தைகள் பின்னாளில் நிஜமாயின. 

நான் விரும்பியப் படிப்பை பல ஆயிரங்கள் தேவைப் பட்டது. அந்தப் படிப்பு எனக்கு ஒரு கனவாகவே இருந்தது. ஆனால் திருமதி. சுதா தொடர்ந்து எனக்கு நம்பிக்கையளித்தார். ஏதேதோ ஆலோசனைகள் கூறினார். இறுதியில் எனக்கு அந்தப் பணம் கிடைத்தது. சில வருடங்களுக்கு மின்சாரம் தாக்கி எனது மூத்த சகோதரர் இறந்துப் போனார். அதற்காக மின்சார வாரியம் கொடுத்த நஷ்ட ஈடுதான் என்னையும் என் குடும்பத்தையும் கொஞ்சம் தூக்கி நிறுத்தியது. நானும் விரும்பிய அந்தப் படிப்பை படித்தேன். முதல் முறையாக நான் கண்ட கனவு நிறைவேறியது. அதன் பின்னர் எனக்கு திருமதி சுதாவின் வார்த்தைகள் மீது பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. அவரது தம்பி, தங்கைகள் யாவரும் பெரிய மென்பொருள் கம்பெனியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். எனக்கு அடுத்து அந்தக் கம்பெனியில் வேலைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வமும் ஏற்பட்டது. தொடர்ந்து பல்வேறு சமயங்களில் என்னை ஊக்கப்படுத்தியது அவரது வார்த்தை. தொடர் தோல்விகளால் வெறுத்துப் போயிருந்த எனக்கு வாழ்வின் மீது ஒரு பிடிப்பு ஏற்பட்ட காலம் திருமதி. சுதா என்னோடு பழகியக் காலம். 

கடவும் நம்பிக்கை இல்லாவிட்டாலும் எஅன்க்குள் ஒரு மாய உணர்வு ஏற்பட்டது. தொடர் வெற்றிகள். தொடர் சந்தோசங்கள். யார் இவர் உண்மையில் எனது நாத்திகத்தை உடைக்க வந்த கடவுளா? அல்லது கடவுளின் தூதரா? குழப்பங்கள் எனக்குள் குடைப்பிடிக்கத் தொடங்கியது. வெற்றி மேல் வெற்றியாக நான் திக்குமுக்காடிப் போனேன். இறுதியாக ஆசைப்பாட்ட வண்டி, அழகிய வீடு சின்னதுதான் என்றாலும் சொந்த வீடு என்று தொட்டதெல்லாம் வெற்றியாகியது. இறுதியில் நான் ஆசைப்பட்ட அந்த பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் எனக்கும் வேலைக் கிடைத்தது. 

ஆனால் ஏனோ அவரின் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் எண்ணம் எனக்கு தோன்றவில்லை. அவரின் முகவரியோ, தொலைபேசி என்னோ நான் வாங்கிக் கொள்ளவில்லை. அவரைப் பற்றி தகல்வல்கள் எதுவுமே என்னிடம் இல்லை. ஆனால் இன்றும் சிந்திக்கிறேன்..ஏன் அவர் பற்றிய தகவல்கள் எதுவமே என்னிடம் இல்லை. உள்ளங்கைக்குள் உலகம் என்றாகிவிட்ட இந்த சூழலிலும் ஏன் என்னால் அவரைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை. தேடிக்கொண்டிருக்கிறேன் அந்த மாயத் தேவதையை..


Sunday, April 26, 2009

ஏன் படிக்க வேண்டும்?



அகன்ற சாலை. சாலையின் இருமங்கிலும் வரிசை வரிசையாய் வாகனங்கள். குண்டூசி நுழைவதற்கே இடம் தேடும் நெருக்கடியில் சாலையின் மறுபக்கத்தை அடைய நினைக்கும் பார்வையற்றோரின் கையைப் பிடித்து, சாலையின் மறுபக்கத்தை அடைய உதவினால்.. அது ஒரு நிமிட உதவி ஆயினும், அந்த நேரத்தில் அது பேருதவி. வாழ்க்கையின் ஒவ்வொரு அடர்ந்த கணத்திலும், சுற்றி இருக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட புத்தகங்கள் நமக்கு அத்தகைய உதவியை செய்கிறது. ஆனால் இன்னும் பலர் அதை சரியாக உணரவில்லை.

புத்தகம் படிப்பது என்பது ஒவ்வொரு நாளும் நிகழ வேண்டிய ஒரு சராசரியான நிகழ்வு. ஆனால் இன்றைய சமூகத்தில் புத்தகம் படிப்பவர் என்றால் மற்றவர்கள் அவருக்குக் கொடுக்கும் மதிப்பும் மரியாதையும்... என்னவென்று சொல்ல..

புத்தகம் படிப்பவர்களின் மனம், அறிவு எல்லாம் ஒரு தூய நிலையை அடைகிறது என்றால் மிகையல்ல.. குழந்தைகளின் கண்களில் உள்ளது போன்று ஒரு தெளிவு, புத்தகம் படிப்பவர்களின் அறிவிலும், மனதிலும் எப்போதும் குடிகொண்டிருக்கும். படித்தவர்கள்தான் தொடர்ந்து தவறு செய்கிறார்கள் என்றொரு வாதம் இங்கு எப்போதும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. படித்தவர்கள் என்ற சொல்லே கடந்த காலத்தைக் குறிக்கிறது. அவர்களின் அறிவும் அவர்களை விட்டுக் கடந்துப் போய்விட்டது என்றே பொருள். தொடர்ந்து படிக்கும் யாரும் பிறருக்கு தீங்கு இழைக்கும் தவறுகளை செய்வது இல்லை. அவர்கள் நிகழ்காலத்தின் விண்மீன்கள். தங்களை எப்போதும் பெரிதுப் படுத்திக் காட்டிக் கொள்வதில்லை.



ஆனால் கல்லூரிப் படிப்பை முடித்தவிட்டு, புத்தகங்களை மூட்டைக் கட்டிவைத்து கடமையை சரிபார்க்கும் சராசரி மனிதர்கள், படித்தவர்கள் எனும் உயரிய சொல்லுக்குத் தகுதியானவர்கள் அல்ல. இவர்கள் படிக்காத பாமர மக்களை விட சற்றே ஆபத்தானவர்கள். தவறான சூழ்நிலையில் தங்கள் படிப்பை அதன் பயனை வெளிப்படுத்த நினைக்கும் இவர்களின் போக்கே இந்த சமூதாயத்தை பலமுறை தவறான பாதைக்கு இட்டு சென்று விடுகின்றன.

பறந்து விரிந்த இந்த உலகின் ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப் படவேண்டியவை. என்றோ படித்து வாங்கிய பட்டம் ஒரு நாளும் உங்கள் உதவிக்கு வராது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிள்ளைகளை பெற்றோர் அவர்களுக்கு தொடர்ந்து ஒரு சில வருடம் மட்டும் உணவு கொடுத்து விட்டு பின்னர் அவர்களை பற்றி அக்கறை இன்றி திரிந்தால் அவர்கள் மனுதர்ம சட்டப்படி தண்டனைக்குரியவர்கள். அது போலத்தான் உங்கள் அறிவும் ஒரு பட்டப் படிப்போ, பட்ட மேற் படிப்போ உங்கள் அறிவிற்கு நீங்கள் கொடுக்கும் சரியான உணவல்ல.. தொடர்ந்து அதற்கான உணவு பரிமாறப் படவேண்டும். அது சரிவிகித உணவாகவும் இருத்தல் அவசியம். அனைத்து தரப்பட்ட புத்தங்களையும் வாசிக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.



புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தினை புரட்டும்போதும், வாழ்வின் ஒவ்வொரும் பக்கத்தையும் நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். இதைத் தெரிந்துக் கொண்டு நான் என்ன பண்ண போகிறேன் என்கிற எண்ணமே உங்கள் முன்னேற்றத்தின் முதல் எதிரி. கற்றுக் கொள்ளத் துடிக்கும் ஆர்வமே உங்கள் முதலீடு. உலகின் உள்ள அனைத்தையும், அனைத்தின் இயக்கங்களையும் தெரிந்து கொள்ள முயலுங்கள். அதற்கு புத்தகங்கள் உங்களுக்கு சிறு அளவிலாவது உதவும். தொடர்ந்து மூன்று மாதங்கள் புத்தகம் படிப்பதை கடமையாக கொள்ளுங்கள். அதனை ஒரு பணியாகவே நினைத்து கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு பழக்கமாகிப் போகும். ஒரு பொருளுக்கு அடிமையாவது இப்படித்தான். நீங்கள் புத்தகத்துக்கு அடிமையாகுங்கள். உலகம் உங்களுக்கு அடிமையாகும். உங்கள் அன்புக்கு அடிமையாகும்.

ஏன் படிக்க வேண்டும்?


உலகில் உள்ள ஒவ்வொரு பிரச்சனைக்கும் மூலக் காரணமே புரிந்துணர்வு இல்லாமையே. பாரம்பரியம் மிக்க பாரத தேசத்தில் கூட லட்சக் கணக்கில் விவாகரத்து வழக்குகள், கொலை, கொள்ளை, தீய எண்ணங்கள் போன்ற பல எதிர்வினை செயல்களுக்கு மூலக் காரணமே ஒரு சிலரின் மனம் பன்படாமையே. 

காய்ந்துக் கிடக்கும் களிமண்ணைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. நீருடன் அவற்றை கலந்து இலகுவாக்கி பின்னர்தான் நாம் நினைத்த வடிவில் அவற்றை கொண்டு வர முடியும். அது போலதான் களிமண்ணாய் இருக்கும் மனித மனமும் பண்பட படிப்பு எனும் நீர் கலக்க வேண்டும். 

படி (படிப்பு) என்ற சொல்லை மேலோட்டமாக பார்த்தல் அது ஒரு சாதாரண வார்த்தைதான். ஆனால் அதன் ஆழத்தை உணர்ந்துக் கொண்டால் நாமும் ஆழ உழலாம். 

சிந்தித்துப் பாருங்கள் மக்களே!!


இவ்வுலகம் எப்படி படிப்படியாய் நாகரீக வளர்ச்சி அடைந்து இன்று தொழில்நுட்பத்தில் அரக்கனாக இருக்கிறது என்றால் என்ன காரணம்? யாரோ ஒரு மேதாவி படித்ததனால். யாரோ ஒருவன் தன் அறிவை விசாலப் படுத்த விரும்பியதால். படிப்பு உங்களை மட்டுமல்ல உங்கள் சுற்றி உள்ள இந்த சமூகத்தையும் சேர்ந்தே களை எடுக்கிறது. 

படிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. ஆனால் அதற்கான நேரமும் இல்லை.. ஆர்வமும் இல்லையே?


புகைப் பிடிக்க வேண்டும் என்று ஒருவன் மனதில் தோன்றக் காரணம் அவனை சுற்றி உள்ள சமூகம். அது ஒரு தனி மனித விருப்பமல்ல. ஆனால் புகைக்க ஆரம்பித்தால் அதனை எளிதில் யாரும் விடுவதில்லை. கெடுதல் தரக் கூடிய ஒரு நஞ்சே மனித மனதில் ஆழப் பதியும்போது ஏன் படிக்க வேண்டும் என்கிற எண்ணம் பதியாது?

எந்த ஒரு செயலையும் தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்துப் பாருங்கள். அடுத்த நாள் அதற்கு நீங்கள் அடிமை. கடமையே என தினமும் ஒரு பதினைந்து நிமிடமாவது படியுங்கள். படிப்பதற்கும் ஒரு பயிற்சி தேவை. முதலில் உங்களுக்கு பிடித்த செய்திகள், திரைப்படம், அரசியல், பொது அறிவு என படியுங்கள். பின்னர் இலக்கியங்கள் மீது உங்களுக்கு தானாகவே ஆர்வம் ஏற்படும். 

படிக்க வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டால் நேரம் ஒரு பொருட்டல்ல. கழிவறையில் அமர்ந்திருக்கும் அந்த நேரத்தை படிக்க செலவிடுங்கள். உங்கள் உடலின் கழிவுகள் மட்டுமல்ல. மனதின் கழிவுகளும் சேர்ந்தே அகற்றப்படும். 

படித்துப் பாருங்கள். உங்கள் சினம் தணியும். உங்கள் மனம் பண்படும். உங்களை சுற்றியுள்ள பிரச்சனைகள் சுகமாக மாறும். எதையும் உங்கள் மனம் இலகுவாக எடுத்துக் கொள்ளும். சிறகை விரித்துப் பறக்கும் பறவைப் போல உங்கள் மனம் அந்தரத்தில் பறக்கும். உங்கள் அகம் அழகாகும். 

கொஞ்சம் படித்துதான் பாருங்களேன். உங்கள் பாரம் குறைவதை நீங்களே உணர்வீர்கள்.  இந்த உலகம் உங்களுக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கும்.


Thursday, April 23, 2009

பகுதி 6 - என் ஆசிரி(யை)யர்



சோகம் மட்டுமே புயலாய் வீசிய என் வாழ்வில் சில நேரங்களில் வசந்தமும் தென்றலாய் வந்து என்னை வருடியதுண்டு. இந்த வசந்த காலம், பனி மீது இருக்கும் மழைத்துளி போன்றது. நொடியில் கரைந்துப்போகும். 

அன்று ஆறாம் வகுப்பின் முதல் நாள். யூனிபார்ம் இல்லாமல் சுமாரான ஒரு ஆடை உடுத்திக்கொண்டு நானும் என் அக்காவும் பள்ளிக்கு சென்றோம். முதல் நாள் முதல் வகுப்பு எனக்கு பிடிக்காத ஆங்கிலப் பாடவேலை. வழக்கம் போல் அட்டெண்டன்ஸ் எடுத்துவிட்டு, ஒரு ஆங்கிலப் பாடலை (Poem) பாடம் எடுக்கத் தொடங்கினார் என் ஆசிரியர். எதேச்சையாக யாருக்காவது இந்தப் பாடல் ஆங்கிலத்தில் படிக்கத் தெரிந்தால் படியுங்கள் என்று ஆசிரியர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் எழுந்துப் படிக்கத் தொடங்கினேன். காரணம் என் பெரிய அண்ணன் விடுமுறை நாட்களிலேயே எனக்கு அந்தப் பாடலை மனனம் செய்யும் அளவிற்கு கற்றுக்கொடுத்துவிட்டார். எனவே அந்தப் பாடலை பார்க்காமலும் என்னால் சொல்ல இயலும். அப்புறம் பார்த்துப் படிக்க சொன்னால் விட்டு விடுவேனா.. துணிந்து  எழுந்து நின்று படித்தேன். 

அந்தப் பாடல்,

I know a face.. I love a face..  எந்தப் பிசிறும் இல்லாமல், தெளிந்த நீரோடைப் சொல்ல மிக அழகாக அந்தப் பாடலை பாடியாதாக பின்னாளில் என் ஆசிரியர் கூறக் கேட்டுள்ளேன்.  அந்தப் பாடல் தான் என்னை என் ஆசிரியருக்கும், என் ஆசிரியரை எனக்கும் அடையாளம் காட்டிய பாடல். இதோ இன்று வரை கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்களாக தொட்டுத் தொடரும் ஒரு தெய்வீக உறவாகத் தொடர்கிறது. எனக்கு எழுத்தரிவைத் தந்த, அறியாமைப் பிணியைப் போக்கும் கல்வி எனும் அருமருந்தைத் தந்த அந்த மா ஆசிரியரை என் நெஞ்சக் கோவிலில் அனையா தீபமாக ஏற்றி வைத்துள்ளேன். எனக்கும் அவர்களுக்கும், கருத்தில் முரண்பாடுகள் இருந்தாலும், மாணவன் ஆசிரியர் என்கிற உறவில் ஒருபோதும் முரண் ஏற்படுத்தியதில்லை. காரணம் அவர்கள் கருத்தில் நான் மாறுபடக் காரணமே அவர்கள் கொடுத்த அந்தக் கல்வியறிவு தானே.

ஆறாம் வகுப்புத் தொடங்கி கல்லூரிப் பட்டப் படிப்பு வரை என் படிப்பு செலவை ஏற்றதோடு மட்டுமல்லாமல் ஆசிரியராய் எனக்கு  வழிகாட்டியாகவும், தாயாய் என்னிடம் பரிவுக் காட்டியும், பல நேரங்களில் நண்பனாய் என்னை தட்டிக் கொடுத்தும் என்னை ஒரு சிலையாய் வடித்த சிற்பி என் ஆசிரியை. திருமதி. புஷ்பராணி. திக்குத் தெரியாமல் திரிந்துக் கொண்டிருந்த என் வாழக்கையில் என் கைப்பிடித்து போக வேண்டியப் பாதைக்கு என்ன அழைத்த் சென்றவர் அவர். இன்னும் நான் போக வேண்டிய பாதை வெகு தூரம் என்றாலும் அதற்கான ஆற்றலை, உத்வேகத்தை எனக்களித்த பெருந்தகை அவர். 

என் ஆசிரியர் என்னிடம் அடிக்கடி கூறும் ஒரு கதை. 

ஒரு கட்ட பொம்மை (wood doll), பஞ்சு பொம்மை, களிமண் பொம்மை, சர்க்கரை பொம்மை அதாவது அந்தந்தப் பொருட்களால் செய்த பொம்மைகள். இந்த நான்கு பொம்மைகளையும் வைத்திருப்பவன் ஒரு நாள் அந்த நான்கு பொம்மைகளையும் தெரியாமல் தண்ணீரில் போட்டுவிட்டான். கட்ட பொம்மை நீரிலேயே மிதந்தது. பஞ்சு பொம்மை அணைத்து தண்ணீரையும் உறிஞ்சிக்கொண்டது. களிமண் பொம்மை மற்றும் சர்க்கரை பொம்மை இரண்டும் அந்த தண்ணீரிலேயே கரைந்துப் போனது. இதிலிருந்து உனக்கு எண்ணத் தெரிகிறது என்று என் ஆசிரியர் கேட்பார். பொம்மைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தெரிகிறது என்று பதிலுரைத்திருக்கிறேன். பின்னர் என் ஆசிரியர் தொடர்வார். 

"அப்படி இல்லடா, கட்ட பொம்மை அந்த தண்ணீரிலேயே மிதக்குது இல்லையா, அதுக்கு தண்ணியப் பத்தியும் கவலை இல்லை. தன்னைப் பத்தியும் கவலை இல்ல. அந்த பொம்மைதான்  நீ னு நினைச்சுக்கோ, எப்பவுமோ இந்த சமூதாயம் வேற நாம வேற னு  நினைக்காம சமூதாயத்துக்கு தேவையான எல்லா நல்லதும் செய்யணும். அடுத்து பஞ்சு பொம்மை இருக்கிற தண்ணி எல்லாத்தையும் உரிஞ்சிக்கிட்டது இல்லையா.. அது மனிதர்களோட சுயநலத்தை காட்டுது. நீ அந்த மாதிரி சுயநலவாதியா இந்த சமூதாயத்திலிருந்து எல்லாத்தியும் உறிஞ்சிக்கிட்டு ஒதுங்கிவிடக்கூடாது. அடுத்ததா களிமண் பொம்மை, தீய வழியிலப் பொய் உன்னையும் கெடுத்துக்கிட்டு, இந்த சமூகத்தையும் கெடுத்துக்கிட்டு இருக்கக்கூடாது. களிமண் பொம்மை தண்ணியில கரைஞ்சி தன்னையும் அழிச்சிக்கிட்டு அந்தத் தன்னியவும் கெடுத்த மாதிரி, அடுத்து சர்க்கரை பொம்மை. இந்த மாதிரிதான் நாம வாழனும். நாம அழிஞ்சாலும் இந்த சமூதாத்துக்கு நல்ல விசயங்கள விட்டுட்டுப் போகணும். சர்க்கரை பொம்ம கரைந்தாலும், நல்ல இனிப்பானத் தண்ணிய கொடுத்துட்டுப் போன மாதிரி. என்பார் என் ஆசிரியர். 

இன்றும் இந்தக் கதை என் மனதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

நான் ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது என் ஆசிரியரின் மகள் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். காலம் சுழல்கிறது. இன்னும் பதிமூன்று நாட்களில் மகள் பதவியுடன், மனைவி என்கிறப் பதவியையும் சேர்த்து வகிக்கப்போகிறாள். மாப்பிள்ளை U.K. வில் கணினிப் பொறியாளராக இருக்கிறார். என் ஆசிரியரின் சொந்த அண்ணனின் மகன். காத்திருக்கிறேன் என் ஆசிரியரின் முகத்தில் பூக்கப் போகும் அந்தப் புன்னகைக்காக!

தொடரும்...


Tuesday, April 21, 2009

பகுதி 5 - உருண்டை சோறு



இளமையில் வறுமை கொடிது... என்றார் அவ்வையார். இளமையை எட்டிப்பார்க்காத வயதில் வறுமை கொடிதினும் கொடிது... 

அதுவரை செல்வசெழிப்பாக வாழ்ந்த எங்கள் குடும்பம் வறுமையின் கோரதாண்டவத்தை பார்க்க நேர்ந்தது. வாழ்ந்து கெட்டவன் கதையானது எங்கள் குடும்பக் கதை. தந்தையின் தொழிலில் ஏற்பட்ட நட்டம் காரணமாக எங்களுக்கு இருந்த நிலங்கள், வீடு என அனைத்தையும் விற்று கடனை அடைத்துவிட்டு, எங்கள் வீட்டின் வாசலில் என் தாயின் சேலையைப் பற்றிக்கொண்டு என்ன நடக்கிறது என்று கூட அறியாமல் நான் நின்ற அந்தக் கணங்கள் இன்றும் நெஞ்சில் கணக்கிறது. 

இருக்கும் பொருட்கள் அணைத்தையும் கையில் எடுத்துக்கொண்டு போகும் வழித் தெரியாமல், வாடகை வீட்டுக்கு போகக் கூட நாதியின்றி நிர்கதியாய் நின்ற எங்களுக்கு அந்நேரத்தில் தனது இடத்தைக் கொடுத்து உதவியது, வேறு யாருமல்ல.. தனது இரண்டு கிரவுன்ட் நிலத்தை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கிக்கொள்ள பணித்த என் தந்தையின் நண்பர்தான். அந்த நிலத்தை வாங்காததன் பலனை இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். 

அடிமேல் அடியாக கொட்டிவாக்கத்தில் ஒரு தனியார் பள்ளியின் கட்டிட வேளையில் ஈடுப்பட்ட என் தந்தை மேல் தளத்திருந்து கீழே விழுந்து விட கால் முறிந்து போனது. மருத்துவ செலவு, குடும்பத்தின் குறைந்த பட்ச உணவு செலவு என அனைத்துக்கும் மாற்று நபர் இல்லாமல் திண்டாடியது என் குடும்பம். என் பெரிய அண்ணன் படிப்பை விடுத்து கொட்டிவாக்கத்தில் இருந்த ஒரு பட்டறையில் வேலைக்கு சேர்ந்தார். சின்ன அண்ணன் பத்து வயதிலேயே கார் மெக்கானிக் செட்டில் வேலைக்கு சேர்ந்து விட்டார். இன்னொரு அண்ணன் சினிமா ஆர்வத்தில் கதை எழுதிக் கொண்டிருந்தார். எனவே அவரது ஆர்வத்தை கெடுக்க என் பெற்றோர்கள் நினைக்கவில்லை. ஆனால் வருமானம் போதாதக் காரணத்தால் என் அம்மாவும், அருகிலுள்ள சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். 

அந்நாளில் இரவு நேரத்தில் மட்டுமே எங்களுக்கு ஒரு கை சோறு கிடைக்கும். பகல் நேரத்தில் ஒரே ஒரு வாழைப்பழம் மட்டுமே. வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சமைத்து பெரிய தட்டில் சோற்றை போட்டு அதில் குழம்பை குழைத்து சிறிய உருண்டையாக உருட்டி எங்கள் அனைவருக்கும் ஒரு கை கொடுத்துவிட்டு, ஒரு வாழைப்பழத்தையும் கொடுத்துவிட்டு, இறுதியாக இருக்கும் கொஞ்சம் சோற்றை மட்டுமே என் அம்மா உண்பார். நிலவு வெளிச்சத்தில், தாயின் அன்பில் நல்ல வேப்ப மரக் காற்றில், எனக்கு கிடைத்த அந்த ஒரு கை சோற்றின் சுகம் எத்துனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது. ஆனால் இந்த அருமை அப்போது தெரியவில்லை. வறுமையில் எங்கே அருமை தெரிவது. 

கடைக்குட்டி என்பதால் எனக்கு மட்டும் சில வசதிகள் எப்போதும் உண்டு. வீட்டில் யாருக்கும் உணவு இல்லையென்றாலும், எனக்கு மட்டுமே அருகில் உள்ளவர்களிடம் கேட்டு வாங்கிக்கொடுப்பார்கள். பசி எடுத்தால், தட்டை கையில் எடுத்துக்கொண்டு, ஓங்கி மணி அடிப்பது போல் அடித்துக் கொண்டிருப்பேன். திட்டிக்கொண்டே பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சாப்பாடு வாங்கிக்கொண்டு வந்து கொடுப்பார்கள். சில நாள் எனக்கு என்று சொல்லி வாங்கி வரும் சாப்பாடே எங்கள் அணைவருக்கும் ஒரு கை உருண்டை சோறாக அமைந்துவிடும். 

மறு நாள் ஆண்டு விடுமுறை முடிந்து பள்ளித் திறக்கும் நாள். அரசாங்கப் பள்ளிதான் என்றாலும் அடிப்படை செலவுகளுக்கு கூட பணம் இல்லாததால் என் படிப்பும், அக்காவின் படிப்பும் கேள்விக்குறியானது. ஆனால் அந்த ஆறாம் வகுப்பின் முதல் நாள், முதல் வகுப்பில் நான் சந்திக்கும் ஒரு நபர்தான் என் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துவார் என்பது அப்போது எனக்குத் தெரியாது. நல்லார் ஒருவர் உளரே.. அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை.. எனக்கு 
மட்டுமே பெய்யாமால் போய்விடுமா என்ன?

தொடரும்...