Monday, August 23, 2010

நாயகன்


ஒரு விழாவை, அதுவும் பொது விழாவை நடத்தி முடிப்பது எத்தகைய சிரமம் என்பதை அது தொடர்பானவர்கள் அறிந்திருப்பர். ஆனால் எனக்கு ஒரு விழாவை திறம்பட நடத்தி முடிப்பதில் எவ்வித சிரமும் இருப்பதில்லை. காரணம் மாதத்திற்கு இரண்டு மூன்று நிகழ்வை தொடர்ந்து இரண்டு வருடங்களாக நடத்துவதால் அதில் ஏற்படும், சங்கடங்கள், தடங்கல்கள் என அனைத்தையும் யூகித்தே அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வது வழக்கம். ஆனால் அதனையும் தாண்டி ஒரு சில குழப்பங்களும், சொதப்பல்களும் நேர்ந்து விடுவதை மறுப்பதற்கில்லை.


லெனின் எனும் ஒரு மாபெரும் சகாப்தத்தை சந்திக்கும் வரை குறும்படங்கள் மீதான பார்வையும், அவரை சந்தித்த பிறகான குறும்பட பார்வையும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசங்களைக் கொண்டது. புகழின் உச்சியில் இருந்த மனிதன், ஒரு படத்தின் வெற்றியையே தனது விரல் நுனியில் நிர்னைக்கும் திறமைமிக்க ஒரு படைப்பாளி எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு குறும்படத் துறை மீது தனது பார்வையை செலுத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. அது எல்லோராலும் முடிகிற காரியமுமல்ல. ஆனால் லெனின் என்கிற சகாப்தத்தால் மட்டுமே அது முடியும். அவர் இயக்கிய நாக் அவுட் என்கிற படமே தமிழின் திரைப்படக் கல்லூரி மாணவர் அல்லாத ஒருவர் இயக்கிய முதல் குறும்படம். இது சார்ந்து நிறைய சர்ச்சைகள் இருக்கின்றன. லெனின் முதலில் குறும்படம் எடுக்கவில்லை. முன்னரே யாரோ ஒருவர் எடுத்திருக்கிறார் என்று போகிற போக்கில் திரியைக் கொளுத்திப் போட்டு செல்லும் சில சோக்காளிகள் இந்த சர்ச்சையை கிளப்பி செல்கிறார்கள்.


ஒரு கல்யாண வீட்டில் யாரோ ஒருவர் மணப் பெண்ணை பார்த்து இந்தப் பெண்ணை இதற்கு முன் எங்கேயோ பார்த்து இருக்கிறேனோ என்று கூற அவர் பக்கத்தில் இருந்தவன், தன் நண்பரிடம் யோவ் இந்த பொண்ண இந்த ஆளு இதுக்கு முன்னாடி யாரோ ஒரு பயன் கூட பார்த்து இருக்கிறாராம் யா என்று ஊதிவிட்டு அந்தப் பெண்ணின் திருமணத்தையே நிறுத்திவிடும் வித்தை தெரிந்தவர்கள் இங்கே பலர். அப்படிதான் போகிற போக்கில் எந்த அடிப்படை வரலாறும் தெரியாமல் லெனின் எடுத்தது தமிழின் முதல் குறும்படம் அல்ல என்று சொல்வதும்.. அப்படி சொல்பவர்கள் அதற்கான ஆதாராத்தோடு வந்தால் அவர்களுக்கு நிச்சயம் தமிழ் ஸ்டுடியோவின் சார்பில் வெகுமதி உண்டு.


குறும்படத் துறையை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியதும், தமிழின் குறும்பட வளர்ச்சிக்காக தன்னுடைய தொழிலை உதறித் தள்ளிவிட்டு குறும்படங்களுக்கு இலவசமாக ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்றவற்றை செய்துக் கொடுப்பதையும், மும்பை, டெல்லி, திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் நடக்கும் குறும்பட விழாக்களுக்கு ஆர்வமுள்ளவர்களை தன் சொந்த செலவிலேயே அழைத்து சென்று ராஜ மரியாதை கொடுப்பதும் லெனின் அவர்களை தவிர வேறு யாரால் முடியும். குறும்படம் சார்ந்தே இயங்கும் நாங்கலல்லாமல் அவரை வேறு யார் சிறப்பிக்க முடியும். எவ்வித புகழையோ, பணத்தையோ, எதிர்பார்க்காமல் குறும்படம் சார்ந்த ஒரு விழாவிற்கு அழைத்தால் ஆட்டோ அல்லது பைக்கில் யாருடனோ ஒட்டிக் கொண்டு வரும் எளிமை வேறு யாரிடத்தில் நீங்கள் பார்த்துவிட முடியும். எல்லாமும் தாண்டி நல்லப் படங்கள் பற்றி இங்கே மணிக்கணக்கில் நீங்கள் விவாதிக்க வேண்டுமானால், நல்ல படங்கள் சார்ந்து ஒரு புரிதல் ஏற்பட வேண்டுமென்றால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் லெனின் அவர்கள் இல்லமே.


எனவே அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுப்பது என்றும், அடுத்த வருடம் அவர் பெயரிலான ஒரு விருதை குறும்படத் துறைக்காக பாடுபடும் ஒருவருக்கு கொடுப்பது என்றும் முடிவு செய்தோம். லெனின் இதனை விரும்பமாட்டார் முன்னரே அறிந்திருந்தோம். இருந்தும் அவர் விரும்பாததால் அவருக்கு நாங்கள் செய்ய வேண்டிய மரியாதையை எப்படி செய்யாமல் இருப்பது.. துணிந்து இறங்கினோம்.


எப்படியும் அவர் பற்றிய புரிதலை குறும்படத் துறையில் இயங்கும் ஆர்வலர்களுக்கு ஏற்படுத்திவிட வேண்டும். அவரின் நிறை குறை என எல்லாவற்றையும் துறை சார்ந்த கலைஞர்களுடன் விவாதிக்க வேண்டும். என எங்கள் நிகழ்ச்சியின் நோக்கம் நீண்டுக்கொண்டே போனது.


இறுதியாக தொடர்ந்து குறும்படங்களை ஏழு நாட்கள் வெவ்வேறு வகைப்பாட்டின் கீழ் ஒளிப்பரப்புவது, ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு விருந்தினருடன், குறும்படங்கள் சார்ந்தும், லெனின் அவர்களின் ஆளுமை சார்ந்தும் விவாதிப்பது, பின்னர் எட்டாவது நாள் விருது தொடக்க விழா, மற்றும் லெனின் அவர்களுக்கு விருது கொடுக்கும் விழாவை நடத்துவது என்று முடிவு செய்தோம்.


அதற்கு முன்னர் விருதிற்காக கொடுக்கப்படும் பண முடிப்பு பத்தாயிரம் ரூபாயை எவ்வாறு திரட்டுவது என்று சிந்தனையில் உதித்தது விழா நிர்வாகக் குழு சிந்தனை. இதன் படி தமிழ் ஸ்டுடியோவின் செயல்பாட்டில் ஆர்வம் செலுத்தும் பத்து நல்ல உள்ளங்களை இணைத்து லெனின் விருது விழாவின் விழா நிர்வாகக் குழுவின் அனைத்து அவர்கள் ஒவ்வொருவரிடமுமிருந்து ஆயிரம் ரூபாய் வாங்கி பத்தாயிரம் திரட்டுவது என்று முடிவானது. அதன்படி பத்துப் போரையும், பத்தாயிரம் ரூபாயையும் திரட்டினோம். மற்ற செலவுகளை நானும் குணாவும் செய்வது என்று முடிவானது.


எல்லாம் சரி விழாவை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று யோசித்தபோது லெனின் அவர்களின் பிறந்த நாளே இதற்கு சரியான நாள் என்று முடிவு செய்து அதற்கான ஆயத்த பணிகளை முடுக்கி விட்டோம்.


தொடரும்...

Monday, February 1, 2010

வெட்டுப்புலி - புத்தக அறிமுகம்..

(திறனாய்வு அல்ல.. புத்தக அறிமுகம் மட்டுமே..)

புத்தகம்: வெட்டுப்புலி
ஆசிரியர்: தமிழ்மகன்
வெளியீடு: உயிர்மை.
விலை: ரூபாய் 220/- (நாவலின் ஆசிரியர் உழைப்புக்கு இது மிகக் குறைவு)


நீண்ட நாட்களுக்கு பிறகு மிகக் குறைந்த நாட்களில் நான் படித்து முடித்த புத்தகம் வெட்டுப்புலி. படிக்கத் தொடங்கியதும், என்னைத் தானாகவே அடுத்தடுத்த பகுதிகளுக்கு இட்டு சென்றது புத்தகத்தின் சரடுகளே.. ஒரு நாவலாசிரியரின் வெற்றியும் அதுவே. படிக்கும் வாசகனை கழுத்தை பிடித்து வெளியே தள்ளாமல், தோள் மீது கைப்போட்டு, அழைத்து சென்று ஒரு புதுப் பரவசத்தை ஏற்படுத்த வேண்டிய தன்னுடைய பொறுப்புணர்வை உணர்ந்த எல்லா நாவலாசிரியர்களும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அந்த வரிசையில் வெட்டுப்புலி நாவல் மூலம் தமிழ்மகனும் தன்னை இணைத்துக் கொள்கிறார்.


"cheeta fight" என்கிற தீப்பெட்டியில் ஒருவன் அருவாளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு சிறுத்தைப் புலியை வெட்டப்போகும் காட்சி நாம் எல்லோரும் பார்த்ததே. ஆனால் அந்த ஒற்றைக் கட்சியின் வழியாக நூற்றாண்டு கால சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்கள் பற்றிய மிக ஆழமான பதிவை தனது இந்த நாவலின் வழியாக சொல்லி இருக்கும் தமிழ் மகன் நிச்சயம் வரலாற்றில் வைத்துப் போற்றப் பட வேண்டியவர்.


எந்த விதத் திரிபும் இல்லாமல், ஒரு சாரார் பக்கம் மட்டுமே சாய்ந்துவிடாமல், இவ்வளவு நடுநிலைமையோடு ஒரு ஒரு பரப்பின் வரலாற்றை பதிவு செய்திருப்பது, அதுவும் புனைவுகளோடு, உயர்ந்த இலக்கியத் தரத்திற்கு ஈடாக உண்மைக் கலந்த கதையை, வரலாற்றோடு இணைத்து பதிவு செய்திருப்பது மிக போற்றத்தக்க முயற்சி.


ஆசிரியர் தன்னுடைய முன்னுரையிலேயே இப்படியாக சொல்லி இருப்பார். "வேறு வழியின்றி இந்த நாவலை திராவிட இயக்க நாவலாக வடிக்க நேர்ந்தது. படிப்பவர்களும் திராவிட கண்ணாடி அணிந்து படிப்பது அவசியமாக இருக்கிறது. முன் முடிவும், விரோத மனப்பான்மையும் இல்லாமல் வாசித்தால் அப்பாவித்தனமான குடும்பங்கள் ஓர் இயக்கத்தின் வேர்களாக இருந்ததை உணரலாம்."


திராவிட இயக்க நாவலாக வடிக்க நேர்ந்தாலும், இந்த நாவல் அந்தக் கால சூழ்நிலையை தழுவி செல்கிறதே தவிர, அந்தக் கட்சியின் பக்கம் சாய்ந்து செல்லவில்லை. மிக சவாலான பணியது. பூண்டி நீர்த்தேக்கம் கட்டுமானப் பணியை நாவலின் வழியாக படிக்கும்போது நாமும் அதே காலக்கட்டத்துக்கு சென்று வருவது நாவலின் காட்சிப்படுத்துதலுக்கு சிறப்பு. இந்த நாவலில் அண்ணா வருகிறார். கலைஞர் வருகிறார். பிரபாகரன் வருகிறார். பெரியார் வருகிறார். திராவிட இயக்கங்களின் வேரான திரைப்படத் துறையும் அதன் வளர்ச்சியும் இந்த நாவலின் வழியாக மிக சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.


மதுரை, திருநெல்வேலி, போன்ற தென் மாவட்டங்களைப் பற்றி ஒரு விதமான பரவசத்துடனும், சென்னை போன்ற மாநகரத்தைப் பற்றி ஒருவிதக் கீழ்த்தரமாகவும் சித்தரிக்கும் தமிழ் திரைப்பட ஜாம்பவான்கள் இந்த நாவலில் ஏதாவது ஒரு பகுதியை முழுமையாக படித்தால் (நேர்மையோடு) கூட சென்னை சார்ந்த ஒரு சிறந்தக் காவியம் உருவாகக் கூடும். சினிடோன் நாராயணன் போன்ற நிஜ மனிதர்களும் இந்த நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆறுமுக முதலியார் எனும் கதாபாத்திரம் திரைப்படம் எடுக்க ஆசைப்பட்டு சென்னை சென்ட்ரலில் வந்து இறங்குவதில் தொடங்கி, தன் முயற்சியில் தொடர் தோல்விகள் அடைவது வரை மட்டுமே யாராவது திரைப்படமாக எடுத்தால், தற்கால சூழலில் அது மிக யதார்த்தமான படமாக இருக்கும்.


"பெரிய பாளையம் வரும்போதே உச்சி பொழுது ஆகிவிட்டது. கோவில் வாசலிலேயே உட்கார்ந்துக் கொண்டு வந்திருந்த கூழையும், ஊறுகாயையும் ஒரு பிடி பிடித்துவிட்டு இருவரும் சற்று நேரம் களைப்பாறினார். வேப்பமரத்து நிழலும் நடந்த களைப்பும் சட்டென இருவரையும் உறக்கத்தில் ஆழ்த்திவிட்டது. சற்று தூரத்தில் குருவிக்காரர்கள் சிலர் உண்டிகோல் செய்துகொண்டும் மைனா, கிளி, அணில்களோடு விளையாடிக் கொண்டிருந்தனர்."


மேற்கண்ட வரிகளை மீண்டும் ஒரு முறைப் படித்துப் பாருங்கள். ஏதோ மதுரை மாசி வீதியிலோ, திண்டுக்கல் நெய்க்காரன் பட்டியிலோ, நடந்த சம்பவம் அல்ல மேற்சொன்னது. இது நடந்தது சென்னையில். சென்னைப் புறநகரான பெரியபாளையம் பகுதியில்.


சென்னையில், குருவிகள் இல்லை, மைனா என்றொரு பறவையே இங்கு இருந்திருக்குமா என்று சந்தேகம் எழுப்பும் எல்லா மேதாவிகளும் மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். நான் கூட சென்னை நகரின் மீது (நினைவிருக்கட்டும் நான் கூட சென்னையை பிறப்பிடமாக கொண்டவன் அல்ல.) கொண்ட அளவுக் கடந்த பாசத்தினால் நாவலை சென்னை சார்ந்த படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நாவலாசிரியர் அப்படி எவ்விதமான பிரக்னையுமின்ரி சென்னை சார்ந்த எல்லா விசயங்களையும், இந்த ஒற்றை நாவலில் பதிவு செய்திருக்கிறார். பிற்காலத்தில் சென்னை நகரின் வரலாறு தவறாக திரிக்கப்படுமாயின் அதற்கு இந்த நாவல் மிக சரியான பதிலாக அமையும்.


ஒரு நாவலின் மிக முக்கிய பணி, எல்லாவற்றையும் மிக தெளிவாக, மிக நுணுக்கமாக விவரிப்பது. வெட்டுப்புலி நாவலில் சென்னையில் வாழ்ந்த மனிதர்களின் பழக்க வழக்கங்களும், அவர்களின் உயர்ந்த பண்புகளும், மிக நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.


நாவல் பற்றி சொல்ல வந்த எதை விடுவது, எதை தொடுவது என்கிற குழப்பம் எனக்குள் மேலோங்கி இருப்பதால், நான் எனக்கான, சென்னை நகரின் மேன்மையைப் போற்றும் ஒரு சில விடயங்களை மட்டுமே மேற்கோள் காட்டியிருப்பேன். புனைவுக் கலந்த நாவல்தான் என்றாலும், அதன் ஆசிரியரே, எது நிஜம், எதுக் கற்பனை என்பதை முதலிலேயே சொல்லி விடுவதால் எவ்விதக் குழப்பமும் இன்றி நாவலை வாசிக்க முடிகிறது. ஆனால் நாவலின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடப்பதால், ஒவ்வொரு பகுதியும், மிக கவனமாக வாசிக்கப்பட வேண்டியிருக்கிறது. வாசிப்பு உலகிற்கு புதிதாக வந்தவர்கள் கூட எந்த வித தயக்கமுமின்றி வாசிக்க வேண்டிய நாவல் வெட்டுப்புலி. காரணம் அதன் எளிய நடையும், மொழி வடிவமும். நமக்கு புரியாத ஒரு சில சொற்களுக்கு ஆசிரியரே பொருள் கூறிவிடுவதால் நமக்கு படிப்பதும், கதையை தொடர்ந்து செல்வதும் எளிதாகி விடுகிறது.


முதல் பக்கத்தை வாசிக்க தொடங்கினால் போதும், அடுத்தடுத்த பகுதிகளுக்கு இந்த நாவல் உங்கள் கைப்பிடித்து அழைத்து செல்லும்.

வெட்டுப்புலி. - நூற்றாண்டுப் பதிவு.

எல்லோரும் அவசியம் வாசிக்க, நேசிக்க வேண்டிய நாவல்.